
இந்தி பட உலகில் குப்பைகளை கிளறி பார்த்தால் முத்துக்களாக சில கொட்டுவதுண்டு அப்படிப்பட்ட அற்புதமான திரைப்படம் தான் 'அந்த புதன் கிழமை'. எ வெட்நெஸ்டெ என்ற திரைப்படம்.
இந்தி திரை உலகின் நடிப்பு திலகங்கள் நசீர் உதின் ஷா மற்றும் அனுபம் கேர் தவிர தெரிந்த முகங்கள் படத்தில் காணோம். படத்தில் கதாநாயகன் கதாநாயகி, பாடல்கள் ,சண்டைகள் எதுவும் இல்லாமல் இருக்கை
நுனியில் அமர வைத்து, பல திடுக்கிடும் திருப்பங்கள் வைத்து தீவிரவாதத்தை பற்றி படமாக்கி இருக்கிறார்கள்.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, படத்தின் மிக வேகமான விறுவிறுப்பான ஒரு நொடி கூட போர் அடிக்காத திரைக்கதை அமைப்பு. கடைசி வரை வசனங்கள் அவ்வளவாக இல்லாமல் இறுதியில் நசீர் பொங்கி வெடிப்பது கைதட்டல்களை அள்ளுகிறது.

50 வயதை ஒத்த நசீர் ஒரு காவல் நிலையத்தில் புகுந்து தனது தொலைந்து போன பர்சுக்காக கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். ஒன்றுக்கு போகவேண்டும் என கூறி பாத்ரூமில் தான் கொண்டு வந்த பையை மறைத்துவிட்டு போகிறார். பின்னர் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து தனது மொபைல் போனை ஒரு லேப்டாப்பில் பொருத்தி மும்பை போலீஸ் கமிஷனர் க்கு போன் செய்து தான் நகரில் பல இடங்களில் வெடிகுண்டுகள் பொருத்தி இருப்பதாகவும் தான் குறிப்பிடும் தீவிர வாதிகளை விடுவிக்க வில்லை என்றால் அந்த வெடிகுண்டுகள் வெடிக்கும் என்றும் கூறி தான் ஒரு தீவிர வாதி என தெரிவிக்க அந்த காவல் நிலையத்தில் தான் குண்டு வைத்திருப்பதாக கூறுகிறார்.
காவல் நிலையத்தில் தேடி பார்க்கும் போலீஸ் பாத்ரூமில் அவர் ஒளித்து வைத்திருக்கும் பையில் வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கிறது. அவர் சொல்வதை உண்மை என நம்பும் அரசாங்கம் மற்றும் காவல் துறை அவர் கேட்டபடி தீவிரவாதிகளை அவர் சொல்லும் இடத்திற்கு கொண்டு விட்டு விட்டு வர அவர்களை காப்பாற்றவே அவர் அவர்களை அங்கு கொண்டு வர சொல்கிறார் என நாம் நினைக்க அங்கு திடுக்கிடும் திருப்பம்.
அதன் பின்னர் தீவிரவாதத்தை பற்றி பேசும் நசீரின் வசனங்களில் வாளின் கூர்மை. ஒவ்வொரு இந்தியன் மனதினுள்ளும் இருக்கும் குமைச்சல்களை கொப்பளிக்க வைக்கிறார் வசனகர்த்தா .
இப்படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே விற்கு இது முதல் படமாம். நம்ப முடிகிறது. என் என்றால் தனது முதல் திரைப்படத்தை செதுக்கி செதுக்கி உருவாக்கும் புதிய இயக்குனர்கள் தங்களது அடுத்த படங்களில் அந்த அளவு ஆர்வம் காட்டுவதில்லை. இருந்தாலும் தனது முதல் படத்தில் எந்த விதமான சினிமாத்தனங்கள் இல்லாமல் இவ்வளவு அற்புதமான படத்தை கொடுத்த அவரை கை குலுக்கி பாராட்டி கொண்டே இருக்கலாம்.
இந்த வருடம் தாரே ஜாமீன் பார் திரைப்படத்திற்கு பதிலாக 'எ வெட்நெஸ்டெ ' திரைப்படத்தை ஆஸ்கார் விருதுகளுக்கு அனுப்பி இருக்கலாம். தீவிரவாதம் உலகம் முழுக்க ஒரு வியாதியாக தானே வ்யாபித்து உள்ளது.
எ வெட்நெஸ்டெ ஒவ்வொரு இந்தியனும், இந்தியாவை கூறு போட நினைக்கும் ஒவ்வொரு தீவிரவாதியும் பார்க்க வேண்டிய படம்.