அந்த முப்பத்து மூன்று பேர்..!
உலகம் முழுக்க பிரார்த்தனையோடு, மூச்சை பிடித்தபடி காத்திருக்க.. அந்த சுரங்கத்தின் அடியில் இருந்து முதல் ஆள் வெளியே வர கர கோஷங்களும் வாழ்த்துகளும், கண்ணீர் துளிகளும், சந்தோஷங்களும் கொண்டாடங்களுமாய் நிறைந்தது அந்த சிலி நாட்டின் கிராமத்தில். முப்பத்து மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் பூமிக்கு அடியில் சுமார் ஒரு மைல் தொலைவில் மண் சரிவில் மாட்டிக்கொள்ள அறுபத்தி ஏழு நாட்கள் கழித்து அந்த முப்பத்து மூன்று சுரங்கத் தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டிருக்கிறது சிலி அரசு.
அந்தச் சுரங்கம்..!
ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி ஒரு வெடி விபத்தில், அந்த சுரங்கத்தின் வாயில்கள் நசுங்கி மூடிக் கொள்ள, உள்ளே இருந்த முப்பத்து மூன்று சுரங்க தொழிலாளர்கள், உயிரிழந்திருப்பர் என சிலி நாட்டின் நாளிதழ்கள் கதறத் துவங்கின. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என கருதிக் கொண்டிருந்த வேளையில்.. அவர்களை தேட அந்த மலையில் ஆழ்துளை போடப்பட, அந்த டிரில்லர் முனைப்பகுதி இரண்டாயிரம் அடிகள் இறங்கியப்பின் தட்டப்பட, அவசர அவசரமாக அதனை வெளியே இழுத்து பார்க்கையில், அதன் முனையில் ஒரு தாளில் சிவப்பு மையில் இருந்த வாசகம் உலகத்தையே பரபரக்க வைத்தது. ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பினரா அவசர அவசரமாக பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்பினார். மீடியாவின் முன்னிலையில் நாட்டின் அதிபர் செபஸ்டின் பினரா, கரங்கள் நடுங்க குரல் தழுதழுக்க வாசித்தார்...' நாங்கள் முப்பத்து மூன்று பேரும் நலமாக உயிருடன் உள்ளோம்'. சிலி நாட்டு
மக்கள் சந்தோஷ கூத்தாடினர். எதோ தங்களின் சொந்த சகோதரர்கள் பற்றி நற்செய்தி வந்த உற்சாகத்தில் துள்ளினர். எனினும் அவர்களை உயிருடன் மீட்பது எப்படி?
செபஸ்டியன் பிநேரா நிச்சயமாக அவர்களை உயிருடன் மீட்க என்னாலான அனைத்தும் செய்வேன் என சொன்னதோடு மட்டுமல்லாது அவர் செயல்படுத்தியும் காட்டினார்.
சுரங்கத்தின் உள்ளே...மனம் தளரா... வீரர்கள்..
அண்டை நாட்டின் உதவிகளை நாடினார். பல உலக நாடுகளும் அவருக்கு உதவிக்கு வந்தன. முதலில் ஒரு சிறிய துளை போடப்பட்டு அதன் மூலம் உணவும் மருந்தும் அனுப்பி வைக்கப் பட்டது. ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து இருநூறு கலோரிகள் கொண்ட உணவே அனுப்பப்பட்டது. அவர்கள் உடல் மெலிய வேண்டும் என்பதே அதற்க்கு காரணம் அப்போது தான் அவர்களால் சிறிய துளையிலும் வெளியே வர முடியும்.
ஒரு பைபர் ஒப்டிக் லைன் ஒன்று உள்ளே அனுப்பப்பட்டு அதன் மூலம் அவர்கள் வெளியே தொலைபேசி கொள்ளவும், வீடியோ கோன்பிரேன்சிங் மூலம் தொடர்பும் ஏற்ப்படுத்தப் பட்டது. ஐயாயிரம் வாட் மின்சார கம்பியும் மின் விளக்கும் அனுப்பப்பட்டன. உள்ளிருப்பவர்களுக்கு பகலும் இரவும் வேறுபாடு அறிய இரவு நேரத்தில் தானாக விளக்குமங்கி போகுமாறு அமைக்கப் பட்டது. சுரங்க தொழிலாளர்கள், உள்ளே இருக்கும் அமிலங்களை வைத்து ஒரு ரசாயன கழிவறையை உருவாகினர். மல ஜலங்கள் ரசாயனத்தில் கரைந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.
அவர்கள் மன நலம் குன்றி போகாமல் இருக்க அவர்களுக்கு ஐபோட், ஒரு சிறிய ப்ரொஜெக்டர் அதில் அவர்கள் பேரும் கால்பந்தாட்ட பிரியர்களாக இருந்ததால், சிலி நாடு, உக்ரைனோடு விளையாடிய கால்பந்தாட்ட போட்டி டி வீ டி என அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு பெரிய துளை போடும் கருவி கொண்டு வரப்பட்டு, உள்ளே துளை போட, உள்ளிருந்த சுரங்க தொழிலாளர்கள், ஒவ்வொருவராக நேரம் பிரித்துக் கொண்டு துளையால் விழும் மண் மற்றும் கல்லின் துகள்கள் ஆகியவற்றை அப்புறப் படுத்தினர்.
குழுவில் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள், பல நகைச்சுவை துணுக்குகள் சொல்லி உள்ளிருக்கும் மற்றவர்கள் மனம் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்படி ஒவ்வொருவராக ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
காப்ஸ்யூல்.
இதற்குள் துளை போடும் வேலை முடிவுக்கு வர, காப்ஸ்யூல் போன்ற ஒரு சாதனத்தை ஒரு காப்பாற்றும் வீரர் மற்றும் ஒரு சுரங்க தொழிலாளி ஆகியோர் மட்டுமே வர கூடிய அந்த கருவியை மோட்டாரின் துணை கொண்டு உள்ளே இறக்க முதல் தொழிலாளி வெளியே வர, காத்திருந்த சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பெரேரா கட்டி தழுவி முத்தமிட்டு வரவேற்ற போது உலகமே ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தது. அறுபத்து ஏழு நாட்கள் இருட்டையே கண்டவர்களுக்கு, வெளிச்சம் கண்களை பாதிக்கும் என்பதால்... பகல் நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு குளிர் கண்ணாடி கொடுக்கப்பட்டது.
உலக தலைவர்களின் முன்னோடி..சிலி அதிபர் செபஸ்டியன் பெரேரா.
இவை அனைத்தும் நடந்து முடிக்கும் வரை, செபஸ்டியன் பெரேரா ஒரு டெண்டில் இருந்து கொண்டு முழுவதுமாக உடனிருந்தார். எப்பாடு பட்டாவது தனது மக்களை காப்பேன் என்று அவர் கொண்ட உறுதியை பூர்த்தி செய்தார். உலகம் முழுமைக்கும் தான் ஒரு மாதிரி தலைவனாக இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார். சிலி என்ற தென் அமெரிக்க சிறிய தேசம் இன்று உலகம் முழுதும் புகழ் பெற காரணமாக அந்த சுரங்க நிகழ்ச்சி அமைந்து விட்டது.
ஒரு சுரங்கத் தொழிலாளியை சிலி அதிபர் வரவேற்கும் காட்சி.
புகைப்படம்: நன்றி All voices
இந்த வெற்றிக்கு காரணம், காப்பாற்றும் வீரர்களின் சாதுர்யமான யோசனைகள், அதற்கும் மேலே, தன நாடு மக்களை காப்பாற்ற அந்த மாபெரும் தலைவன் செபஸ்டியன் பெரராவின் முயற்சி, அதற்கும் மேலே அந்த முப்பத்து மூன்று பேரின் ஒற்றுமை மற்றும் மன உறுதி.
இன்னொன்றையும் சிலி வாசிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சுரங்கத்தின் அடியில் மாட்டிக் கொண்டபின் முதல் முதலில் சுரங்க தொழிலாளர்களிடம் பேசிய அதிபர்
'எவ்வளவு பேர் இருக்கிறீர்கள்?' என வினவ...
'முப்பத்து நான்கு பேர் ' என பதில் வந்திருக்கிறது.
'முப்பத்து மூன்று பெயர்கள் என்னிடம் உள்ளது. அந்த முப்பத்து நான்காவது ஆளின் பெயர் என்ன'
'கடவுள்'.
--