Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, August 16, 2023

பீட் (Bheed) இந்தி

 



கோவிட் சமயங்களில் புலம் பெயர் மக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி சென்ற துயரத்தை வரலாறு மறக்காது மன்னிக்காது. அந்த மக்கள் சந்தித்த வலிகளை  சிறிது சாதிய வன்மங்கள், மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களின் பேதங்கள், மத துவேஷங்கள், சிறிது காதல், சிறிது மனிதம் என அனைத்தையும் கலந்துகட்டி காக்டைல் அளிக்கிறது இந்த இந்தி படம் பீட் (Bheed). Bheed  என்றால் கூட்டம் என இந்தியில் பொருள் படுகிறது 

வெகு தூரம் நடந்து வந்து ஆயாசத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கும் மக்கள் மேல் ரயில் ஏறி 16 பேர்கள் இறந்துபோன நிகழ்வில் கருப்பு வெள்ளையில் தொடங்குகிறது படம். திரிவேதி என்ற உயர் சாதியை சேர்ந்த வாட்ச்மேன்கள் குடும்பம், சுவாரஸ்ய செய்திகளுக்கு அலையும் மீடியாவை சேர்ந்த பெண், தன் குடிகார தந்தையை சைக்கிளில் வெகுதூரம் அழைத்து செல்லும் ஒரு பெண், ஹாஸ்டலில் இருக்கும் தனது பெண்ணை மீட்டுவர முயற்சிக்கும் ஒரு பெண், தியானத்துக்கு சென்று திரும்பும் ஒரு இஸ்லாமிய குழு, இவர்களை சமாளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி (ராஜ் குமார் ராவ்) மற்றும் அவனை காதலிக்கும் உயர் சாதியை சேர்ந்த ஒரு டாக்டர் என இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்தித்தால் என்னவாகும் என்பதை நிதர்சனங்களோடு பொருந்திப்போகும் திரைக்கதை.

புலம் பெயர் மக்களின் துயர் தான் கதை என்றாலும் அதனூடே அரசியல்வாதிகளின் சாதி மத அரசியலால் மக்கள் மனதில் எழும் துவேஷங்களையும் அதன் விளைவுகளையும் காட்சிப்படுத்தி இருப்பது சமூக அக்கறை. கவுதம் லால் டிகாஸ் என தனது சாதி பெயரான டிகாஸ் என்ற தாழ்ந்த சாதி பெயரால் தாழ்வு மனப்பான்மையுடன் வலம் வரும் ராஜ் குமார் ராவ்,நடக்கும் நிகழ்வுகளால் கையறு நிலையில் செய்வதறியாது துடிக்கும் சமயத்தில், தனது உயர் சாதியை சேர்ந்த காதலி பூமி பட்நாகருடன் சாதி வித்யாசம் பார்த்து மறுகும் இடத்திலும்  நடிப்பில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்.  பலராம்  திரிவேதி யாக வரும் பங்கஜ் கபூருக்கு அற்புதமான குணசித்திர வேடம்.

ஆர்டிகிள் 15,மல்க் போன்ற சமூக சிந்தனையுள்ள படங்களை இயக்கிய அனுபவ சின்ஹா தான் இப்படத்தின் இயக்குனர். இன்றைய அரசியல் காலகட்டத்தில் இது போன்ற படம் எடுக்க பெருந்துணிவு வேண்டும். படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்திருப்பதால் உண்மைக்கு அருகே இருப்பதை போன்ற உணர்வை சவுமிக் சட்டர்ஜீ யின் ஒளிப்பதிவு தருகிறது. இசை இருப்பதாகவே தெரியாமல் இசை அமைத்திருக்கிறார் அனுராக் சைக்கியா.

கதை ஒரே இடத்தில் நிகழ்வதாக இருப்பதால் படம் மெதுவாக நகர்வதாக உணர்வை தருகிறது. இருந்தாலும் புலம் பெயர் தொழிலாளிகளின் கொரோனா கால பயணத்தை வலிகள் மாறாமல், உண்மை சம்பவங்களை கோர்த்து மாலையாக்கி  அளித்த அனுபவ சின்ஹாவின் சமூகத்தின் மீதுள்ள காதல் நன்றே தெரிகிறது.

இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது 

பீட்...ஒரு அனுபவம்.

Wednesday, February 13, 2013

பெண்களுக்கெதிரான தேசம்!




நம் தேசத்தின் ஆணாதிக்கத்துக்கு இதோ, இன்னொரு பலி. காதல் என்ற வன்முறையால், அமிலத்தில் அழுத்தப்பட்டு, தனது சிறகுகள் கருகி, உயிரை விட்டிருக்கிறது இந்த வண்ணத்து பூச்சி. புன்னகை தொலைத்துவிட்ட தேசமோ, தேவதைகளை காக்க வழி அறியாது தலை குனிந்து மௌனமாக நிற்கிறது.

ஏன் இந்த நாடு பெண்களுக்கெதிரான தேசமாக மாறிப் போனது. மொத்தம் உள்ள 135 நாடுகளில், பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவின் இடம் 113. இந்த தேசத்தில் தான் அதிக பெண் தெய்வங்கள் தெய்வமாக வழி படப் படுகிறார்கள்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆணாதிக்க தேசத்தில், பெண்களுக்கெதிரான வன்முறையை ஊடகங்களிலும், சினிமாவிலும் நய்யாண்டி செய்து கொண்டு அவர்களை அவமதித்து வாழும் தேசமிது. பெண் என்றால், காமத்துக்கு உருவாக்கப்பட்ட ஒரு வடிகாலாகத்தான் இந்த நாட்டின் ஒவ்வொரு ஊடக எந்திரமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரம், அவளது எதிர்கால நலன் கருது எழுபது விழுக்காடுகள் வெளியே வருவதே இல்லை. பெண்கள் இப்படித்தான் உடை அணியவேண்டும் எனில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த படுவார்கள் என்று சொல்லி தரும் பெரியோர்கள், தங்கள் வீடு ஆண்கள் பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை சொல்லித் தருவது இல்லை.

நேற்று ஏழு வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் பதிமூன்று வயதுக்குட்பட்ட மூன்று சகோதரிகள், கற்பழிக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

பெண்கள் பயமில்லாமல் நடமாடும் ஒரு இந்தியாவை என்று உருவாக்கப் போகிறோம்? இந்த கேடு கேட்ட நிலைமைக்கு, நம் நாட்டின் ஊடகம் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. பெரும் பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் எல்லாம், அரை குறை ஆடைகளுடன் பெண்களின் படங்களை வெளியிட்டு, மனதின் அடியே அமிழ்ந்து கிடக்கிற பாலுணர்வுகளை வெளியே கொண்டு வருகின்றன. இன்றைய திரைப்படங்களின் வசூலே பெண்களின் இடைகளிலும் தொப்புள்களிலும், மேலும் பல சாமாசாரங்களிலும் தான் இருக்கிறது.

தனக்கு கிடைக்காத பெண் வேறு எவனுக்கும் கிடைக்க கூடாது என தனது கதாநாயகனை விட்டே உலகத்துக்கு பாடம் சொல்லித் தருகிறது. காதல் மட்டுமே உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்றும் காதல் இல்லாவிட்டால் செத்து ஒழி என்றும் பாடம் புகட்டுவது திரைப்படங்கள் தான். பாலியல் வறட்சி நிறைந்த தேசத்தில், மனித அடிமன வக்கிரங்களை வெளியே கொண்டுவர, 'கலாச்சாரத்திற்காக' பாடுபட்டுக் கொண்டிருப்பதாக பீற்றிக் கொள்ளும் எழுத்தாளர்களுமே தங்கள் புத்தகம் விற்பதற்காக, அதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்தால் அடைந்துவிட கூடிய வெறியை ஒருவனுக்கு ஊட்டுவதற்கு அவனது பெற்றோர் தான் மிகப் பெரிய காரணமாக இருக்கிறார்கள். குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதற்காக ஓடி ஓடி வேலை செய்யும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கவனிக்க மறந்து அந்நியமாகிப் போக, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே அறியாமல் போக, குழந்தைகளோ, வளரும் பிராயத்தில் தங்களுக்குள் நடக்கும் ரசாயன உணர்வு மாற்றங்களை அறியாமல் குழம்பிப் பொய் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். கற்பு கற்பு என்று பிதற்றிக் கொண்டு, அதனை பெண்களுக்கு மட்டுமே பொதுவானதாக வைத்து விட்டு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால்,'யாரிடமும் சொல்லாதே மானம் பொய் விடும் ' என அவர்களை மிரட்டி, அவர்களது உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே அமிழ்த்தி புழுங்க வைத்து உயிரோடு ஒவ்வொரு நாளும் சாகடிக்கும் கொடுமை, பாலியல் பலாத்காரத்தை விட கொடுமை.

பாலியல் கல்வி, பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்கட்டும். பெண்களை மதிக்க ஆண்களுக்கு, வீடுகள் கற்றுக் கொடுக்கட்டும். ஆண்களை சிறந்த பள்ளிகூடங்களிலும், பெண்களை மோசமான பள்ளிகூடங்களிலும் சேர்ப்பதை வேறுபாடு காட்டுவதை பெற்ற மனங்கள் உணரட்டும். பெற்றோர்களின் நேரம் தினமும் கொஞ்சம் தங்கள் குழந்தைகளுக்காகவும் இருக்கட்டும். இந்த தேசத்தை நம் குழந்தைகள் தான் காப்பாற்ற வேண்டும்.

Friday, April 20, 2012

டைட்டானிக் - மரணத்தின் வயது 100!





                                               டைட்டானிக் ஒரிஜினல் படம்.

மனிதன் தனது சாதனைகளுக்கு கர்வப்படும் போதெல்லாம் அவனுக்கு மரண அடி விழுவது வரலாற்றில் பதியப் பட்டிருக்கிறது. அதற்க்கு ஒரு உதாரணமாக திகழும் சின்னம் தான் டைட்டானிக் என்ற மாபெரும் கப்பலின் வீழ்ச்சி.


வைட் ஸ்டார் லைன் (White Star Line) என்ற கம்பனியால் 1909 இல் ஆரம்பிக்கப்பட்டு 1911 ஆண்டு அந்த நாளைய மதிப்பின் படி 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டி முடிக்க பட்ட டைட்டானிக் உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.


1912 இல் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முதல் கப்பல் என்ற கர்வத்தில், எந்த ஒரு இடர்பாட்டினையும் சமாளிக்க கூடிய கப்பல் என்பதால் அறுவது உயிர் காக்கும் படகுகள் கொள்ளக் கூடிய கப்பலில் வெறும் இருவது படகுகளை மட்டுமே கொண்டு சென்றனர். கப்பலில் பெரும் செல்வந்தர்களுக்கு இடையே, ஐரோப்பாவின் அயர்லாந்தில் இருந்தும், இங்கிலாந்திலிருந்தும் மற்றும் பல ஏழை ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு பஞ்சம் பிழைக்க வந்த, பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மக்கள் இருந்தனர்.


ஏப்ரல் பதினைந்து 1912, அட்லாண்டிக் சமுத்திரத்தில், மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த வேளையில் கப்பலில் இருந்தவர்கள் , தங்கள் கப்பலின் மிக அருகே ஒரு பெரும் பனிப்பாறை இருப்பதை அறிந்து கப்பலை திருப்ப எத்தனிக்கையில் பக்கவாட்டில் மோதிய கப்பலின் எஞ்சின்கள் பழுதாகி, முழுக ஆரம்பித்தது. பெருஞ்செல்வர்கள் பெரும்பாலானோர் தப்பிவிட, பெண்களும் குழந்தைகளும் காப்பற்றப் பட ஏழை மனிதர்கள் கப்பலுடன் மூழ்கினர்.பயணித்த 2224 பேரில், உயிர் பிழைத்தவர்கள், 710 தான். 1514 பேர் அந்தப் பனியில் உறைந்து இறந்து போனார்கள்.



ஸ்ட்ராஸ் மற்றும் ஐடா.

டைட்டானிக் படத்தில் வருவது போல ரோஸ் என்றோ ஜாக் என்றோ எந்த காதல் கதையும் இல்லை. ஆனால் அதையும் மிஞ்சும் சுவாரஸ்ய நிகழ்வுகள் உண்டு என்கிறது வரலாறு.

மேசிஸ் என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தின் அதிபர் ஸ்ட்ராசும் அவரது மனைவி ஐடாவும் அந்த கப்பலில் இருந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர்காக்கும் படகில் தப்பி செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டதும், கணவரை விட்டு தான் மட்டும் தப்பிக்க எண்ணமில்லை எனக் கூறி, தனது வேலைக்காரியை தனக்கு பதிலாக ஐடா அந்தப்படகில் அனுப்பி விட்டு, தனது காதல் கணவனுடன் உயிர் கப்பலில் மூழ்கி உயிர் இழந்தார். செல்வா சீமாட்டியாக இருந்தாலும், காதல், எல்லாவற்றையும் விட மேலானது என நிரூபித்தார்.


கப்பலில் கண்ட்ரோல் அறையில் வேலைப் பார்த்த பொறியாளர்கள், கப்பலில் கடைசிவரை மின்சாரம் பழுதாகாமல் தப்பி செல்பவர்களுக்கு கப்பலில் இருந்த விளக்கொளி குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் தப்பி செல்ல கடைசி படகு காத்திருக்கிறது என்று சொல்லப்படதற்க்கு செவி சாய்க்கவில்லை அவர்கள். கடைசி வரை தங்கள் கடமைகளை நிறைவேற்றி விட்டு கப்பலுடன் சேர்ந்து மடிந்து போனார்கள்.

மார்கரெட் பிரவுன் என்ற பெண்மணி தான் ஒரு சீமாட்டியாக இருந்தாலும் அந்த நள்ளிரவில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஆறாவது எண் கொண்ட படகை செலுத்தி அதில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் கார்பெதியா என்ற இன்னொரு கப்பலுக்கு சென்று சேர்த்து கணவனை இழந்த பெண்களுக்கு, பணக்கார குடும்பத்து பெண்களிடம் இருந்து பணம் வாங்கி அந்த காலத்திலேயே 'பத்தாயிரம் ' அமெரிக்க டாலர்களை வசூலித்து அவர்களிடம் அளித்து 'அன்சிங்கபுல் மார்கரெட் பிரவுன்' என்று அவரது பெயரை வரலாறு பதித்தது. அவரை பற்றிய புத்தகங்களும் திரைப்படமும் கூட வெளிவந்தது.

பெஞ்சமின் எனும் பெரும் செல்வந்தர், 'எல்லோரும் மேல் தளத்துக்கு ஓடுங்கள், கப்பல் மூழ்கப் போகிறது' என்று அறிவித்ததும், தன அறை சென்று கோட் சூட் போட்டுகொண்டு தன்னை அழகாக்கியபடி வெளி வந்தார். ' என் மனைவியிடம் சொல்லுங்கள். நான் ஒரு ஜென்டில் மேனை போல மறித்து போனேன் என்று' என்றபடி கப்பலில் மூழ்கி இறந்து போனார். கடைசியில் அவரது உடலை கண்டுபிடித்தவர்கள் அவரது கோட்டை நினைவு சின்னமாக இன்னமும் வைத்துள்ளார்கள்.

ஜோசப் பிருஸ் இஸ்மே, டைட்டானிக் கப்பலின் முதலாளி, பெண்கள் குழந்தைகளுக்கு முன்னே படகில் ஓடி சென்று ஏறி தப்பித்தவர். அவரது வாழ்நாள் முழுக்க கோழை என லண்டன் வாழ் மக்கள் பட்டம் கட்டி அவரை மூலையில் அமரவைத்தனர்

டைட்டானிக் இப்பொது 12,415 feet (3,784 m) ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. பல குழுவினரும் பலமுறை டைட்டானிக் கப்பலுக்கு சென்று பல ஆராய்சிகளும் பல நினைவு சின்னங்களும் எடுத்து உலகில் பல இடங்களில் பல நினைவகங்களில் அவை வைக்கப்பட்டுள்ளன.


                                                  டைட்டானிக் திரைப்படத்தில்.... 

டைட்டானிக் மூன்று முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியை தழுவியது. நீரின் மேல் காதல் கொண்ட ஜேம்ஸ் காமரூன் 1997 இல் ஜாக் மற்றும் ரோஸ் என்ற காதல் கதாபாத்திரங்களையும், டெக்னாலஜி யையும் வைத்து மிரட்டி எடுத்த திரைப்படம் பதினோரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வசூலிலும் உலக சாதனை படைத்தது. டைட்டானிக் என்ற மிகப்பெரும் சோகத்தை உலகமே கொண்டாடியது.

கடந்த நூறு ஆண்டுகளாக ஆழ் கடலில் அடிமனத்தில் மர்மங்களை சுமந்தபடி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது டைட்டானிக்.

Friday, May 6, 2011

ஒபாமா வீழ்த்திய ஒசாமா விக்கெட்..!



அந்த சாந்தமான முகத்தையும் அதில் வீற்றிருக்கும் அமைதியான கண்களையும் கண்டவர்கள், அதற்க்கு பின்னே ஒரு தீவிரவாதியையும் ஒரு பயங்கரவாதியையும் கண்டிருக்கமாட்டார்கள், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் வீழும் வரை. ஒசாமா பின் லாடன். இந்த ஒரு பெயர் மட்டுமே அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இரட்டை கோபுரத்தை தகர்த்து அமெரிக்காவின் பொருளாதரத்தை நிலை குலைய வைத்ததில் இருந்து அமெரிக்கா, பல பில்லியன் கணக்கான டாலர்களை பத்து வருடங்களாக செலவழித்தது ஒசாமாவை கண்டுபிடிக்க. நட்பு நாடான பாகிஸ்தானின் துரோக நிலத்தில், பாகிஸ்தான் ராணுவ கேந்திரத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் ஐந்து வருடங்களாக வசித்து வந்ததாக ஒசாமாவின் மனைவி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஒசாமாவை அமெரிக்க கண்டு பிடித்தது எப்படி?

ஒசாமா, தனது கட்டளைகளை, போன் மூலமாகவோ, இன்டர்நெட் மூலமாகவோ அனுப்புவது இல்லை. மன்னர்கால முறைப்படி, தூதுவர்கள் மூலமாகவே தனது கட்டளைகளை தனது தளபதிகளுக்கு இடுவான். அந்த தூதுவன் ஒசாமாவின் நம்பிக்கைக்கு மிக மிக பாத்திரவானாக இருந்திருக்கவேண்டும். அவனுடைய தங்குமிடம் அவனது தளபதிகளுக்கு கூட தெரியாததாக இருந்தது. 

இரட்டை கோபுரம் இடிக்கப் பட்டபின் கைதான அல் குவைதா கைதிகளிடம் விசாரணை செய்ததில், அப்படிப்பட்ட தூதுவர்களில் ஒருவனின் பெயர், அபு அஹமத் அல் குவைடி என்றும் அவன் குவைத் நாட்டை சார்ந்தவன் என்றும் தெரியவந்தது.  பின்னர் 2004 இல் பிடிபட்ட அல் குவைதா வின் முக்கிய நபர்களில் ஒருவனான ஹசன் குல்லிடம் விசாரணை செய்ததில், அபு அஹமத் அல் குவைதாவின் மிக முக்கியமான தூதுவன் என்றும் அவன் அல் குவைதாவின் முக்கிய நபரான பாராஜ் அல் லிபி என்பவனுக்கு நெருக்கமானவன் என்றும் கூறினான்.

பின்னர் 2005  இல் பராஜ் அல் லிபியை கைது செய்தனர் அமெரிக்கர். அவன்,  அல் அஹமத் கொண்டு வந்த செய்தியின் படியே தான் புதிய கமாண்டராக பொறுபேற்றுக் கொண்டதாக கூற, அல் அஹமது நிச்சயம் ஒசாமாவுடன் தொடர்பில் இருப்பதாக நம்பியது அமெரிக்காவின் சி ஐ ஏ.

அந்த தூதுவனின் உண்மை பெயரான ஷேக் அபு அஹ்மத் என்பதை  அறிந்து கொள்வதற்கே சி ஐ ஏ வுக்கு பல ஆண்டுகள் ஆனது. அவனுக்கு நிச்சயம் ஒசாமாவின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என நம்பினர். ஒசாமா வெகு உஷாராக தனக்கு அருகே போன் கள் மற்றும் இண்டர்நெட்டை அனுமதிப்பதில்லை. எனவே வெளி தொடர்பு எல்லாம் தூதுவன் மூலமாகத்தான்.

சென்ற வருட மத்தியில், அல் குவைதாவுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவரின் போன் தொடர்பை ஒட்டு கேட்ட பொது அகமது அவருடன் பேச அவன் இருக்குமிடம் கண்டுபிடித்து அவனை அவனை அறியாமல் தொடர்ந்தது சி ஐ ஏ. 

அவனை தொடர்ந்தபோது தான் அவன் பாகிஸ்தானின் அபோட்டாபாத் என்ற இடத்தில் இருக்கும் அந்த பெரிய சுவர்களுக்குள் அடங்கிய அந்த வீட்டிற்க்கு அமெரிக்க புலனாய்வுதுறை நபர்களை அழைத்து சென்றது. முன்பே அந்த வீட்டை பற்றி சி ஐ ஏ அறிந்திருந்தாலும், ஒசாமா தனது பாதுகாவலர்களின் துப்பாக்கிகள்  புடை சூழ பதுங்கி இருப்பன் என நினைத்ததால், அமைதியான அந்த வீடு அவர்களின் சந்தேக வளையத்துள் வரவில்லை. 
                                                      ஒசாமா தங்கி இருந்த கட்டிடம்.
அந்த வீட்டில் உள்ளே வெளியே நடமாட்டமில்லை. அந்த வீட்டுக்கு போன் இல்லை இன்டர்நெட் இணைப்புகள் இல்லை. உள்ளே நுழைய இரண்டு பாதுகாப்பு அரண்கள். வெளியே பதினெட்டு அடிக்கு சுவர்கள்.  யாருக்கும் தெரியாமல் இருக்கவே அந்த வீடு கட்டப்பட்டுள்ளது என்றும் நிச்சயம் ஒசாமா அந்த வீட்டினுள் பதுங்கி இருக்க கூடும் என்றும் சி ஐ ஏ உணர்ந்து பெப்ரவரி 2011 இல் உறுதி செய்தது.

உலகின் எந்த அதிபரும் எடுக்க தயங்கும் முடிவை எடுத்தார் ஒபாமா. அந்நிய மண்ணில் எதிரியை வீழ்த்துவது. அதுவும் எதிரி அங்கே இருக்கிறான் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அவனை உள்ளே பார்த்தவர் யாரும் இல்லை. அந்த வீட்டில் தாக்குதல் நடத்தி அங்கு ஒசாமா இல்லை என்றால், தோழமை நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் பரஸ்பர நம்பிக்கை இன்மை ஏற்படும். அப்டியே தாக்குதல் நடத்தினாலும், அந்த வீடு இருக்கும் இடம் மக்கள் வாழும் அமைதியான இடம். அருகேயே ராணுவ குடியிருப்புகள், அவர்களுக்கு சேதாரமின்றி தாக்குதல் நடத்தவேண்டும். என பல சவால்கள் இருந்தாலும், துணிந்து முடிவெடுத்தார் ஒபாமா. புலனாய்வுதுறை சொல்வதை நம்பி அவர்கள் அளித்த பல திட்டங்களில், ஹெலிகாப்டரில் பறந்து சென்று இறங்கி தாக்கும் திட்டத்தை அவர் தான் தேர்ந்தெடுத்தார். நேவி சீல்ஸ் எனப்படும் கடற்படை வீரர்களில் சிறந்த வீரர்கள்( பெஸ்ட் ஒப் தி பெஸ்ட் என சொல்கிறார்கள்) ஆறு பேரை தேர்ந்தெடுத்தனர். தனது நட்பு நாடுகளான, பிரிட்டின், கனடா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கூட தெரியாமல், இந்த ஆபரேஷன் நடத்த திட்டமிடப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு தெரியாமல், அந்த நாட்டிலேயே தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு, அந்த திங்கள் கிழமையின் அதிகாலையில் ஹெலிகாப்டர்களின் மேலிருந்து குதித்த அந்த கடற்படை வீரர்கள், வெற்றிகரமாக காரியத்தை முடித்தனர். ஒசாமாவுக்கு இவர்கள் வைத்த சங்கேதப்  பெயர் ஜெரோனிமா. 

ஒசாமாவை கொல்லும்போது என்ன நடந்தது என முன்னுக்குப்பின் முரணான நிறைய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. கடைசியாக வந்த தகவலின் படி, ஒசாமா ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை. தனது மனைவியையும் தற்காப்புக்கு பிடிக்கவில்லை. ஆனால் தடுக்க நினைத்தக வெகு அருகில் இருந்து தலையில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது என சொல்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள மற்ற இரு பாதுகாபாலர்களும் சுடப்பட்டு இறந்து விட்ட நிலையில், ஒசாமாவின் மனைவியை உயிருடன் விட்டு வந்திருக்கின்றனர். ஒசமாவுடனும் அங்கிருந்த கம்புடேர்களில் இருந்த ஹார்ட் டிஸ்க் குகளும்  எடுத்தபடி பறந்து விட்டனர்.

பின்னர் இஸ்லாமிய முறைகள் செய்துவிட்டு ஒசாமாவை கடலில் புதைத்துள்ளனர்.

அரபு நாட்டின் செல்வந்தருக்கு மகனாக பிறந்த ஒசாமாவுக்கு இந்த அளவுக்கு தீவிரவாத சிந்தனைகளை விதைத்தது யார்? எங்கிருந்து வந்தது உயிர்களை கொல்லும்   எண்ணம்.? தான் நம்பிக்கை துரோகத்தால் சாகடிக்கப் படுவோம் என முன்பே ஒசாமா சொல்லி இருக்கிறான். தனக்கு பின்னே தனது பிள்ளைகள் அல் குவைதா இயக்கத்தில் சேர்ந்து விட கூடாது என்று தனது விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறான். ஒவ்வொரு குற்றவாளிக்கு பின்னும் அவனுக்கான நியாயங்கள் இருக்கும் அமெரிக்காவை வீழ்த்தவேண்டும் என்ற ஒசாமாவின் வெறிக்கு பின்னே ஒரு ஞாயம் இருக்கலாம். அது வெளி உலகத்துக்கு தெரியாமல் இப்போது அவனுடன் கடலில் மூழ்கிப் போயிற்று. எப்படி இருந்தாலும், வாளெடுத்தவன் வாளால் சாவான் என்ற பழம் சொல் மொழி மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. உயிர்களை கொல்லுதல் எந்த நியாயங்களையும் முடக்கிப் போடும். அது ஒசாமாவாக இருந்தாலும் சரி, இல்லாத அணு ஆயுதங்களுக்காக இராக்குக்கு படையெடுத்து சதாமை கொன்று அந்த நாட்டை சின்னாபின்னாபடுத்திய அமெரிக்காவானாலும் சரி.

பாகிஸ்தானை தனது சந்தேக வளையத்தில் வைத்துள்ளது அமெரிக்கா. அதனாலேயே பாகிஸ்தானுக்கு கூட தெரியாமல் அதன் மத்தியில் அமைந்துள்ள கட்டிடத்தில் கால் பதித்து ஒசாமாவை அலேக்காக கொன்று தூக்கி உள்ளது. சரிந்திருந்த தனது செல்வாக்கை இதன் மூலம் தூக்கி நிறுத்தி உள்ளார் ஒபாமா என செய்திகள் தெரிவிக்கின்றன. ஒசாமாவின் இறப்பை அமெரிக்கர்கள் கொண்டாடுவதை பார்த்தல், நரகாசுரனின் மறைவை இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளிதான் நினைவுக்கு வருகிறது.

ஒசாமாவின் மறைவுக்கு பழிவாங்கப் போவதாக சூளுரைத்திருக்கிறது அல் குவைதா. எல்லா மதத்தைப் போலவும் அன்பே இஸ்லாமும் போதிக்கிறது. இந்த தீவிரவாத செயல்களால் அப்பாவி இஸ்லாமிய சகோதரர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
 என்னவானாலும் பாதிக்கப் படப் போவதும் பழி வாங்கப்படபோவதும்... அப்பாவி பொதுமக்கள் தான்.

Saturday, April 16, 2011

தமிழக சட்டசபை தேர்தல் 2011.



அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது சட்டசபை தேர்தல். வரலாறு காணாது தேர்தல் குழுவினரின் கெடுபிடிகளால் தங்களது தகிடுதத்தங்களை அரங்கேற்ற கட்சிகள் திண்டாடியதும், எழுபத்தி ஏழு விழுக்காடுகள் வோட்டுகள் பதிவானதும் இதுவே முதல் முறை.வோட்டுக்கு பணம் என்று வோட்டு போடவே லஞ்சம் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது தி மு க. இதனை மற்ற கட்சிகளும் பின் பற்ற துவங்கவே, தனது சாட்டையை சுழற்றியது தேர்தல் கமிஷன். விளைவு கொடிகளும் லட்சங்களும் பிடிபட ஆரம்பித்தன.இதற்க்கு நேர்மையான மாவட்ட கலெக்டர்கள் பலரும் காரணமாக வாக்காளருக்கு லஞ்சம் கொடுக்க பயன் படும் பணம் பிடிபட ஆரம்பித்தன. இவ்வளவு நேர்மையாகவும் அமைதியாகவும், திராவிட கழகங்களின் வருகைக்கு பிறகு நடந்ததற்கான சரித்திர கூறுகள் இல்லை.

திமுகாவின் தேர்தல் அறிக்கையில் ஆரம்பித்த காமெடி தேர்தல் நாள் வரை குறையவில்லை. வோட்டுக்கு பணம் லஞ்சம் தருவது போல, மிக்சி கிரைண்டர் லாப்டாப் என இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டிருந்தன தேர்தல் அறிக்கையில். இலவசங்களும் ஒரு வகை லஞ்சமே என என் யாரும் உணர்வதில்லை. உழைக்காமல் வருவது எதுவுமே லஞ்சம் மட்டுமே என்பதை எப்போது தமிழ் மக்கள் உணர்கிறார்களோ அதுவரை நமது தமிழகம் முன்னேற்றப் பாதையில் அடிபோடுவது சந்தேகமே. திமுகாவை தொடர்ந்து அதிமுகா வும் இலவசங்களை அள்ளி தெளிக்க ஆரம்பித்தது.கவனிக்க நமது தமிழக அரசுக்கு 80000 கோடி கடன் இன்னும் நிலுவையில் உள்ளது. எவன் வீட்டுப் பணத்தை இவர்கள் இலவசமாக அள்ளி கொடுக்கிறார்கள். மக்களின் பணம் தானே. கல்லூரி வரையிலான இலவச கல்வி, இலவச மருத்துவம் கொடுங்கள். அதனை அரசின் பெயரால் கொடுங்கள். எந்த ஒரு தனிமனிதனின் பெயரும் அந்த திட்டத்துக்கு இருக்க கூடாது. வேலை வைப்பு கொடுங்கள் அப்போது தானே தமிழகம் முன்னேறும்.

அதிமுகவுடன் விஜயகாந்தின் தே மூ தீ கா மற்றும் மதிமுக இணைந்தால், தி மு க வெற்றி பெற சான்சே இல்லை என அனைவரும் ஆரூடம் சொன்ன பொது அதனை தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ளும் கதையாய், மன்னார்குடி குடும்பம் இடையில் புகுந்து  தனிச்சையாக நூற்றி அறுபது தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம் அந்த ஆரூடத்தை பாக்க பார்த்தது அதிமுக. துன்ப  நாட்களில் துணை இருந்த நண்பன் மதிமுகவை வெளியேற்றிவிட்டு புதிய நண்பனாக விஜயகாந்தை அங்கீகரித்து தனக்கு நூற்றி அறுபது சீட்டுகளை வைத்துக் கொண்டது, தன்னை தேர்தலுக்கு பின் மைனாரிட்டி கட்சி என எதிர்கட்சிகள் சொல்லி விட கூடாது என்ற கவுரவ பிரச்சனையை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

தனது கட்சியின் வேட்பாளரின் பெயரை தவறாக சொல்ல அதனை திருத்த வந்த வேட்பாளரின் தலையில் அடித்த விஜயகாந்த், அதனை எங்கேயோ நின்று படம் பிடித்து அதற்க்கு சவுண்ட் எபெக்ட் குடுத்து திரும்ப திரும்ப ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் டிவி, அவர் அடிக்கவில்லை என தே மு தி க வேட்பாளர் சொல்ல, அப்பா அடித்தல் என்ன தப்பு என விஜயகாந்த் கேட்க, தேர்தல் காமெடிகள் அளவில் அடங்கா.

தனிப்பட்ட பிரச்சனையை ஊத்தி பெருசாக்க வடிவேலு அரசியலில் இறங்கி தனிப்பட வசை பாடிய காமெடி சிரிப்பை வரவழைக்கவில்லை. அவர் மேல் வெறுப்பை தான் சம்பாதித்து கொடுத்தது. இனிமேல் அவர் திரையில் செய்யம் காமெடிகள் மக்கள் மத்தியில் எடுபடுமா என தெரியவில்லை.

இவர்கள் செய்யும் காமெடிக்கு தான் சளைத்தவனில்லை என காங்கிரசின் தங்கபாலு தன் மனைவியை வேட்பாளராகி, சரியான படிவங்கள் தராமல் தானே வேட்பாளரானது பெரும் காமெடி.தேர்தல் முடிந்ததும் எஸ் வீ சேகர், கராத்தே த்யாகராஜன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை இவர் நீக்கியது உச்சகட்ட காமெடி.

எலெக்ஷன் அன்று, ரஜினியை சுற்றி மீடியா மக்கள் சூழ்துள்ள நேரம் அவர் யாருக்கு ஒட்டு போட்டார் என்பதை துல்லியமாக காண்பித்தது தெலுகு டி வீ  சானல் ஒன்று. அதன் மூலம் அவர் ஆளுங்கட்சிக்கு வில்லனாக மாறிப் போனாலும், வரிசையில் நின்று ஓட்டு போடாமல் நேராக ஒட்டு சாவடிக்குள் நுழைய முன்ற த்ரிஷாவை அங்கு வரிசையில் நின்ற ஒருவர் ஆட்சேபிக்க இவர் ஆங்கிலத்தில் திட்ட, நிஜ வில்லியாக மாறிப்போனார் த்ரிஷா. தன்மையாக சொல்லி இருக்க வேண்டும் அவர் கூச்சல் போட்டார் அதனால் நானும் சத்தம் போட்டேன் என்ற விளக்கம் வேறு. அவ்வளவு மனிதர்கள் வரிசையில் நிற்கையில் தான் மட்டும் வரிசை தப்பி போக முயற்சித்ததே தவறு என்பதை அவர் கடைசி வரை உணரவே இல்லை. அவரை விட பெரிய நிலையில் உள்ள, சிவகுமார் குடும்பம், அஜித்குமார் இவர்களை பார்த்து இவர் பாடம் கற்று கொள்ளலாமே. 

தனது சுயமரியாதையை விட்டு விட்டு போட்டி இட விரும்பாமல் ஒதுங்கி கொண்ட வை கோவும், தன கட்சி போட்டி இடாமல், காங்கிரசை கருவறுப்போம் என முழங்கிய சீமானும் தான் கௌரவ நடிகர்கள்.

இப்படி ஒரு காமெடி திரைப்படமாக மாறிவிட்ட 2011  சட்டசபை தேர்தலின் ஹீரோ, நேர்மையாக வேலை பார்த்த எலெக்ஷன் கமிஷனும், நேர்மையான கலெக்டர்களும் தான்.

படத்தின் ரிசல்ட் தெரிய நாம் மே 13 வரை பொறுத்திருக்க வேண்டும். 

வாழ்க ஜன நாயகம்.

தேசபக்தியும் உலகக் கோப்பையும்...!



மிக மிகத் தாமதமான பதிவு தான். என்ன செய்ய. வேலை பளுவும் சுகவீனமும் என்னை இணையத்தின் எழுத்திலிருந்து சிறிது ஓய்வெடுக்கச் செத்துவிட்டது. (ஐயோ திரும்பவும் வந்துவிட்டானே என பலரது அலறல் எனக்கு கேட்கிறது). 

உலகக் கிண்ண அலசல்:
சுமாரான துவக்கமாய் இந்தியா துவங்கினாலும், நாளுக்கு நாள் அதன் எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. இந்த 2011 உலகக் கோப்பையில் எந்த ஒரு பந்தயத்தையும் இந்தியா எளிதாக வென்று விட வில்லை.கடைசி வரை நம்மை நகம் கடிக்க வைத்த பின்பே வெற்றி இல்லக்கினை தொட்டனர். முன்பு உள்ள இந்திய குழு எல்லாம் இந்த நிலைமையில் நிச்சயமாக கோப்பையை வேன்றிருக்காது. சிறிது சிக்கல் வந்த உடனேயே நம்பிக்கை இழந்து பொல பொல வென விக்கெட்டுகள் சரிந்து மிக விரைவில் தோல்வியை சந்தித்து விடுவோம். ஆனால் இந்த உலகக் கோப்பை இந்திய அணி அத்தகைய அணி அல்ல. சச்சினுக்காக கோப்பை வெல்வோம் என பந்தயம் ஆரம்பிக்கும் முன்பு சூழுரைத்தாலும், இந்திய அணி இப்போது சச்சினை மட்டுமே சார்ந்திருக்க கூடிய ஒரு அணியாக இல்லாமல், ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அழுத்தமாக பதிய வைத்தார்கள். தங்களது தனித்தன்மையை காட்டுவதற்காக ஆடாமல், அணியின் வெற்றிக்காக ஆடியது ஒன்றே நமது தேசத்திற்கு உலககோப்பையை பெற்று தந்தது.

இந்த வெற்றிக் குழுவை ஒருங்கிணைத்து சென்ற மிஸ்டர் கூல் கேப்டன் டோனி இந்த வெற்றிக்கு ஒரு முழு முதல் காரணம் என சொல்லலாம். வெற்றியை இழந்து விடுவோம் என்ற நிலை வந்தால் மற்ற அணித்தலைவர்களின் டென்ஷனை பார்க்கும் வேளையில் தோனி எவ்வளவு சிக்கலான நிலைமைக்கு அணி சென்றாலும் ஒரு யோகியை போன்றதொரு அமைதியை அவரிடம் காண முடிந்தது. அனைத்திற்கும் மேல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அடுத்தடுத்து விக்கட்டுகள் சரிந்ததும் யுவராஜ் சிங்கிற்கு முன்னாள் தான் களத்தில் இறங்கி ஒரு தலைவனுக்கு உரிய பொறுப்புணர்ச்சியுடன் ஆடி வெற்றி ரன்னை முத்தாய்ப்பாக சிக்சருக்கு அனுப்பி, உலககோப்பை கனவுடன் இருந்த நூற்றி இருபத்து சொச்சம் இந்தியர்களின் கனவை தீர்த்துவைத்தார். வெற்றியில் ஆனந்த கூத்தாடிய தன குழுவினரின் மத்தியில் அவர்களை பார்த்து அமைத்தியாக சிரித்தபடி ரசித்து கொண்டிருந்துவிட்டு சச்சினை கோப்பையை தூக்கி முன் செல்லவிட்டு தான் பின்னால் நடந்து சென்று தனது பெருந்தன்மையை நிலை நாட்டினார்.

சச்சின் இருபத்தொரு ஆண்டுகளாக காண்பித்து வரும் கன்சிஸ்டன்சியை இந்த உலக கோப்பையிலும் தக்கவைத்துக் கொண்டார். தனது ஐம்பதாவது ஒரு நாள் செஞ்சுரியை இந்த உலகக் கோப்பையில் அடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்ட வில்லை என்றாலும், இவர் அளவுக்கு தொடர்ந்து இருபத்தொரு ஆண்டுகள் கிரிக்கட் ஆடுகளத்தில் இப்படி கன்சிஸ்டன்சியை உலக அரங்கில் வேறு யாரும் கொண்டதில்லை. அவரது கிரிக்கட் வரலாற்றில் உலக கோப்பையும் கைப்பற்றி முத்தமிட்டுவிட்டார். இன்னமும் இவர் இன்னொரு செஞ்சுரியை ஒரு நாள் ஆட்டத்தில் அடித்து அந்த ரெக்கார்டையும் தக்கவைத்துக் கொள்வார். உலககோப்பை வெற்றி ஊர்வலத்தை சச்சினை தூக்கி கொண்டு வளம் வந்த இருவரில் ஒருவரான, விராட் கொஹ்லி இடம், சச்சினை தூக்கி வந்தது உங்களுக்கு வலிக்கவில்லையா என ரவி சாஸ்த்ரி வினவ...'இருபத்தொரு வருடங்களாக இந்த தேசத்தை தனது தொழில் சுமந்த சச்சினை நாங்கள் இருபது நிமிடங்கள் தானே தூக்கி வலம் வந்தோம்' என டைமிங்காக அடித்த பன்ச் உலக கோப்பை ஆவணத்தின் அழியா பதிவாக நிலைத்து நிற்கும்.

இங்கு அமெரிக்காவில் எங்கள் அலுவாலகத்தில் ப்ரொஜெக்டர் வைத்து உலக கோப்பை போட்டிகளை காண வழி செய்த என் அலுவலகத்துக்கு நன்றி. எங்கள் அலுவலகத்தின் இயக்குனர்களில் ஒருவர் ஒரு பாகிஸ்தானி. பாகிஸ்தானை இந்தியா வென்ற அன்று நடந்த மீடிங்கில் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டதை சொல்லி அவரை வம்புக்கு இழுத்த போது அவர் சொன்ன பன்ச் வசனம்,' நான் ஒரு சிரித்த முகத்தை விட ஐநூறு சிரித்த முகங்களை காணவே ஆசை படுகிறேன். எனவே நானும் இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்'; ( மீசையில் மண் ). இங்கு அமெரிக்காவில் ஆங்காங்கே இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர். பல பார்டிகள் நடந்தேறின.தொலைபேசி வாழ்த்துக்கள் குவிந்தன. இந்தியாவின் தேசபக்தியை உலகெங்கும் பறைசாற்ற கிரிக்கெட் என்ற விளையாட்டு பெரும் பங்கை ஆற்றி உள்ளது .

உலகம் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Saturday, February 19, 2011

இது எங்கள் நாடு..!

        புரட்சியாளர்களின் மத்தியில் உரையாடும்  வாயேல் கோநிம்.
 
எகிப்தில் ஆரம்பித்த புரட்சித் தீ.. இன்று, பக்ரைன்,இரான், லிபியா என கொழுந்து விட்டு எரிகிறது.காலம் காலமாக சர்வாதிகாரத்தனமாக, ஒருவரே ஆண்டு வரும் பழக்கங்களுக்கு முடிவு கட்டி மக்கள் ஜன நாயகத்தை விதைக்க விதை விழுந்திருக்கிறது.. எகிப்தில்.  

யாரும் இனி ஐ டி வல்லுனர்களுக்கு சமுதாய அக்கறை கிடையாது என குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில் இந்த விதை விழ காரணமாக இருந்தவர் ஒரு ஐ டி கம்பனியின் மார்கெடிங் மேனேஜர். ஆம் உலகப்புகழ் பெற்ற கூகிளின் மார்கெடிங் மானஜராக பணியாற்றும் வாயேல் கோநிம் (Wael Ghonim) என்ற முப்பது வயது இளைஞர் தான் முப்பது வருடங்களாக எகிப்தின் தனி பெரும் அதிபராக கோலோச்சிக் கொண்டிருந்த ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கக் காரணமாக இருந்தவர்.


                                        சுவிஸ்சில் தனது மனைவியுடன் முபாரக்.

பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் அடித்து துவைத்து கொன்று போடுவது, எகிப்திய காவலர்களின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. லஞ்சமும் விலைவாசி உயர்வும் தலைவிரித்து ஆடிய எகிப்த்தில் முப்பது வருடமாக ஆண்ட முபாரக்குக்கு எண்ணமுடியாத அளவில் கோடிகளில் பணம் புரண்டது. எதிர்த்து கேள்வி கேட்டவர்கள், சிறையில் அடைக்கப் பட்டனர். விசாரணை என்ற பெயரில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப் பட்டனர்.காலேத் செத் என்ற இருபத்தேழு வயது இளைஞனை எகிப்திய காவல் துறை அடித்தே கொன்ற போது, முதல் முதலில் 'நாம் அனைவருமே காலேத் சேத' என்ற முகப்புத்தக பக்கத்தை,'ஒரு சுதந்திர வீரன்' என்ற பெயரில் ஜனவரி 2011 இல்ஆரம்பித்தார் வாயேல்.  அதுவே, ஜனவரி 25  அன்று மக்கள் குழுமி, அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்ப விதையாக விளங்கியது.

ட்விட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் செய்திகள் பரிமாறப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் காவலர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு ஆஸ்பத்ரியில் மாண்டு போக, காவலர்களின் துப்பாக்கி சூட்டிலும் தடியடியிலும் முன்னூறு மக்கள் இறந்து போனார்கள். இரண்டாயிரம் பேருக்கு காயம். இதனை தொடர்ந்து ஜனவரி 27  முதல், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வித்தாக இருந்த வாயலை காணவில்லை. கடைசியாக ஜனவரி 27 அன்று அவர் எழுதிய ட்விட்டர் 'எகிப்துக்காக வேண்டிக்  கொள்ளுங்கள். நாளை அரசாங்கம், மக்களுக்கு எதிராக போர் குற்றம் புரிய இருக்கிறது. நாங்கள் நாட்டுக்காக மரணிக்க தயாராகவே இருக்கிறோம்'.

வாயலை காணாமல், அவருடைய குடும்பமும், நண்பர்களும், கூகுளின் சக ஊழியர்களும் அவரை காணமல் தவித்து விட்டனர். அவரையும் காவலர்கள் கொன்று போட்டிருப்பார்களோ என அச்சத்துடன் காத்திருந்தனர்.

பிப்ரவரி 7 இல் அவர் வெளிவந்தபோது தான் அரசாங்கம் அவரை காவலில் தடுத்து வைத்திருந்தது உலகத்துக்கு தெரிந்தது. அவர் வெளி வந்ததும் அவர் ஒரு ஹீரோவாக போற்றப் பட்டார். 'இது எகிப்திய இளைஞர்களின் சுதந்திரப் போராட்டம். நான் இதன் ஹீரோ அல்ல' என 'ட்ரீம் 2 ' என்ற தொலைகாட்சியில் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.


வாயல் கோநிம் கெய்ரோ பல்கலை கழகத்தில் கணினி துறையில் பொறியியல் பட்டமும், கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலை கழகத்தில் எம் பீ ஏ வும் படித்தவர். தற்சமயம் துபாயில் வசித்து வருகிறார். தனது ரோல் மாடல் என அவர் கருதுவது நம்ம காந்தி தாத்தாவையும், அமெரிக்காவின் மார்டின் லூதர் கிங்கையும் தான்.

மக்கள் புரட்சி வெடிக்க ஆரம்பித்த பதினெட்டு நாட்கள் கழித்து முபாரக் பதவி விலகி இருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக அசம்பாவிதங்கள் நடந்தாலும், அகிம்சைக்கு இன்னமும் சக்தி இருப்பதை இந்த புரட்சி நிரூபித்திருக்கிறது.

இப்போது எகிப்தை தொடர்ந்து, மக்களின் ஜனநாயகம் இல்லாத நாடுகளில் புரட்சி வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது வரவேற்கத்தகுந்த ஒரு விஷயம்.
தமிழர்களும், தமிழ் இயக்கங்களும் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையிலும் இது எப்போதோ நடந்திருக்க வேண்டியது.. ஹூம்..!

Tuesday, January 25, 2011

ஆஸ்கார் பந்தயத்தில் மீண்டும் ஏ ஆர் ரகுமான்!

தமிழர்கள் தலை நிமிரும் காலம் மீண்டும். இசை மூலம் உலகத்தையே கட்டி ஆண்டு கொண்டிருக்கும் ஏ ஆர் மீண்டும் இந்த வருடம் 127  அவர்ஸ் என்ற டானி பாயிலின் ஆளிவூட் திரைப்படத்திற்க்காக சிறந்த திரை இசை மற்றும் படத்தின் 'இப் ஐ ரைஸ்' என்ற திரைப்பாடலுக்கும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
மலை ஏற்றத்தில் ஈடுபடும் ஒருவன் தனது கை ஒரு பொந்தினுள் மாட்டிக்கொள்ள அவனால் வெளியேற முடியவில்லை. வெளி உலகத்துக்கும் இதை பற்றி தெரிவித்து உதவி கோர முடியாத நிலை. தனது கையை அறுத்துக் கொண்டு கையை விடுவித்தால் ஒழிய அவனால் தப்பிக்க இயலாத நிலை. தன்னிடம் உள்ள மொண்ணைக் கத்தியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக துடிக்க துடிக்க வெட்டிக் கொண்டு தப்பிப்பது தான் 127 hours படத்தின் கதை. இது ஒரு உண்மைக் கதை கூட. இப்படி ஒரு கதையை சுவாரஸ்யப் படுத்த ஒரு இசை அமைப்பாளரின் பங்கு மிக மிக முக்கியம். அப்படி ஒரு படத்துக்கு சிலிர்ப்பூட்டும் இசையை தந்து, வெற்றி பெற்றிருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

                                                                 ஆரோன் ரால்ச்டன்

உண்மை கதையின் கதாநாயகனான Aron ரல்ச்டன் படத்தின் இசையை கேட்டு ஸ்தம்பித்து ஏ ஆரை அழைத்து பாராட்டி கவுரவப் படுத்தி உள்ளார்.. அவர் தனது கைப் பட எழுதிய கடிதம் கீழே.

எனது கதைக்கு உங்கள் சிலிர்ப்பூட்டும் இசைக்கு நன்றி. உங்கள் இசையை நான் அன்று கான்யான் மலையில் மாட்டிக்  கொண்ட பொது கேட்டுக் கொண்டிருந்தால், நிச்சயமாக இன்னும் ஒரு 127  மணிகள் என்னால் வாழ்ந்திருக்க முடியும். என்பதே அந்தக் கடிதத்தில் கண்டுள்ளது. 

ஒன்று மிகவும் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இருமுறை ஏ ஆர் ரகுமானின் ஆஸ்கார் பரிந்துரையும் டானி பாயில் என்ற ஒரு ஆங்கில இயக்குனரலேயே சாத்தியமாகி உள்ளது.  

ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் பந்தயத்தில் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும்.. இந்த ஆஸ்கார் பரிந்துரையே தமிழர்களான நாம் அனைவருக்கும் பெருமை இல்லையா?

இந்த தற்பெருமை அற்ற கலைஞனை மீண்டும் ஆஸ்கார் பந்தயத்தில் ஓடி ஜெயிக்க நாம் வாழ்த்துவோம்.

127 hours  படத்தில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'if I raise'  பாடல் உங்களுக்காக...




Thursday, December 16, 2010

A.R. ரகுமான் என்ற ஆளுமை..!


அல்லா ரக்கா ரகுமான், தான் இந்த நிலை வரை வருவதற்கு காரணியான இளையராஜாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

எண்பதுகளின் இறுதியில், தமிழ் திரை உலகின், இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்,கே பாலச்சந்தரின் புது புது அர்த்தங்கள் திரைப்படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிய இளையராஜாவிற்கு  அந்தப் படத்திற்கு பின்னணி இசை வழங்க நேரமில்லை.  படம் வெளியீட்டு தேதியை அறிவித்தாகிவிட்டது. இளையராஜாவோ ஏகப்பட்ட படங்களில் பணி புரிந்து கொண்டிருந்ததால், இதற்க்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. பார்த்தார், கே பி. வேறொருவரை வைத்து பின்னணி இசை கோர்ப்பை முடித்து விட்டு சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டு விட்டனர். இதனை அறிந்த இளையராஜாவுக்கு கடும் கோபம். கலைஞனின் கர்வம் தலை தூக்க, இனி கவிதாலயாவிற்கோ கே பி கோ இசை அமைக்க போவதில்லை என முடிவெடுத்தார். கவிதாலயாவின் அடுத்தப் படத்தை மணிரத்னம் இயக்க முடிவாகி இருந்தது. அதுவரை தான் பணி புரிந்த இளையராஜாவின் இசை தன் புதிய படத்துக்கு இல்லை என்பதை உணர்ந்த மணிரத்னம், அவருக்கு இணையான ஒரு இசை அமைப்பாளர் அப்போது தமிழ் திரை உலகில் இல்லை என்பதால், ஒரு புதியவரை இறக்குமதி செய்ய முடிவு செய்தார்.  தனது நண்பனும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடம் இதை பற்றி சொல்ல, தனது விளம்பர படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருக்கும் திலீப் என்கிற அல்லா ரக்கா ரகுமானை பரிசோதித்து பார்க்குமாறு சொல்ல, மணி சின்ன சின்ன ஆசை பாடல் வரும் பகுதியை சொல்லி, அதற்க்கு ஒரு பாடல் இசை அமைத்து தருமாறு ரகுமானை பணிக்க, அரை நாளில் இசை அமைத்து மணி ரத்னத்திடம் ரகுமான் போட்டு காட்ட, சந்தோஷத்தில் அவரை அணைத்துக் கொண்ட மணி ரத்னம், அதன் பின் தான் நம்பிக்கையோடு தனது 'ரோஜா' திரைப்படத்தை இயக்க கிளம்பினார்.


அதன் பின்னர் நடந்ததெல்லாம்.. இசை உலக வரலாறு..
1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் பாடல்களை முணுமுணுக்காத தமிழ் உதடுகளே இல்லை எனலாம். அப்போது என் வீட்டுக்கு வந்த என் சகோதரனின் கல்லூரி தோழியான ஒரு யுகோஸ்லோவியா நாட்டுப் பெண்ணான கரீனா,' சின்ன சின்ன ஆசை ' என முழுதுமாக தனது மழலை தமிழில் பாடிக் காட்டியபோது, எனக்குள் உண்டான சிலிர்ப்புகளுக்கு சொந்தக் காரன் இந்த ரகுமான். தான் இதுவரை கேட்ட பாடல்களில் தனக்கு பிடித்த பாடலாக அவள் 'சின்ன சின்ன ஆசையை' கொண்டாடிய போது, ரகுமானை நினைத்து எனது மனமும் கொண்டாடியது.

ரோஜாவுக்கு பிறகு, புதிய முகம், ஜென்டில்மேன், காதலன் என அவர் கொடி தமிழில் பறந்துக் கொண்டிருந்தது .இந்த சமயத்தில் அவர் இசைமைத்த 'ரோஜா' இந்தியில் டப் செய்யப்பட்டு ஹிந்தியிலும் சக்கை போடு போட அவரை இந்திக்கு அழைத்து சென்றவர்கள் இருவர். ஒருவர் , ராம் கோபால் வர்மா, மற்றொருவர் சுபாஷ் காய். ராம் கோபால் வர்மாவின் 'ரங்கீலா'வும், சுபாஷ் காய் இன் 'தால்' லும் ரகுமானை இந்திய திரைப்பட உலகின் முதல் இலக்க எண்ணிக்கைக்கு அழைத்து சென்றது. அதன் பின் அவர் சேகர் கபூரால் ஹாலிவூடிற்கு அழைக்கப்பட்டு, பின்னர், அவர் தான் இங்கிலாந்தில் மிக சிறந்த இயக்குனர்களின் ஒருவரான டானி பாயில் லுக்கு ரகுமானை அறிமுகப்படுத்தி வைத்தார்.

டானி பாயில் 'ஸ்லம் டாக் மில்லியனர் ' என்ற இந்தியப் படத்தை உருவாக்க நினைத்தபோது , ஒரு இந்தியர் தான் அந்த படத்துக்கு இசைஅமைக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். தனது நண்பனான சேகர் கபூரிடம் ஆலோசனை கேட்டபோது, சேகர் கபூர் ஏ ஆர் ரகுமானை பரிந்துரைக்க, ரகுமானோ அந்த படத்தை ஒத்துக்கொள்ளலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்து விட்டார். காரணம் அவர் அப்போது அவ்வளவு பிசியாக இருந்தது தான். டானி தனக்கு ஒரு ஏழு இசை கோர்ப்புகள் மட்டும் வேண்டும் என கேட்டதும் ஒத்துக் கொண்டார் ரகுமான். ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் ஒரு கனமான திரைப்படம் என்பதால் படத்திற்கு அதிரடியான இசை வேண்டும் என்பது மட்டுமே டானியின் கோரிக்கை. மிகக் குறைந்த நாட்களில் இசை கோர்க்கப் பட்ட படம் அது. அது தனக்கு ஆஸ்கர் விருது வாங்கி தரும் என்றோ, அதன் மூலம் தனக்கும், தமிழகத்துக்கும், ஏன் இந்தியாவுமே பெருமைகள் கிடைக்கும் என்பதை அவர் அப்போது நினைத்து பார்த்திருக்கவில்லை.

இரண்டு ஆஸ்கார்களை அவர் வாங்கியதும் அவர் கூறிய வார்த்தைகள், அவரை மேலும் ஒரு சிறந்த மனிதராக காட்டியது.  முதல் விருதை வென்றதும், தமிழில் வழக்கம் போல 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்னது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தந்தது என்றால், இரண்டாம் விருதை வாங்கும் வேளையில், ' என் முன்னிருந்த அன்பு மற்றும் வெறுப்பு என இருந்த இரண்டு வாய்ப்புகளில், அன்பை தேர்ந்தெடுத்ததால் நான் இந்த மேடையில் இருக்கிறேன்' என்று சொன்னதும் இந்தியர்கள் அனைவருமே பெருமைப்பட்டனர்.



நான்கு வயதில் பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் ஒன்பதாவது  வயதில் தனது தந்தையை இழந்ததால், குடும்ப பாரம் சுமக்க வேண்டிய நிலை. தனது பதினொன்றாவது வயதில், இளையராஜாவின் இசை குழுவில் சேர்ந்து பணி புரிய ஆரம்பித்தார். உலகின் தலை சிறந்த தபலா வித்துவானான சாகிர் உசேனுடன் சேர்ந்து பல நாடுகள் பயணித்தார். லண்டனின் ட்ரினிட்டி இசை பள்ளியில் இசையில் பட்டம் பெற்றார்.

இப்போது டானியின் அடுத்த திரைப்படமான 127 ஹவர்ஸ் என்ற திரைப்படத்துக்கும்  ரகுமான் தான் இசை. மலை ஏற்றத்தை பொழுதுபோக்காக கொண்ட ஒருவன் ஒரு மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கை ஒரு பொந்தினுள் மாட்டிக்கொள்ள... அவன் எப்படி நூற்றி இருபத்து ஏழு மணித் துளிகளை அவ்வாறு கழித்தான் என்பது கதை. கதையின் கடைசியில், பொந்தினுள் மாட்டிக்கொண்ட தனது கையை தானே வெட்டிக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை. அப்படி செய்தால் மட்டுமே அவன் பிழைக்க முடியும் என்கிற நிலையில் அவன் என்ன முடிவு எடுத்தான் என்பது தான் கதை. இப்படி ஒரு சிலிர்ப்பூட்டும் கதைக்கு தனது சிலிர்ப்பூட்டும் இசையை வழங்கிய ஏ ஆர் ரகுமான், இந்த ஆண்டும், ஆஸ்காருக்கு இணையான, கோல்டன் க்ளோப் என்ற விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கோல்டன் க்ளோபில் விருது வாங்குபவர்களே முக்கால் வாசி, ஆஸ்காரிலும் விருது வாங்குவார்கள். கோல்டன் க்ளோப் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதே மிகப்பெரிய காரியம். அதுவும் இவ்வளவு குறைந்த காலத்தில். .!

ரகுமான் அடுத்த உலக விருது பெரும் நாளை நினைத்து காத்திருக்கிறேன்.

பின் குறிப்பு: இசையை பற்றி எனக்கு அடிப்படை எதுவும் தெரியாது. இருந்தாலும் சமையல் ருசியாய் இருப்பதை சொல்ல சமையல் தெரிந்திருக்க தேவை இல்லை என்பதை போல, இசையை ரசிக்க, இசையின் அடிப்படை அறிவு தேவை இல்லை என்பது என் கருத்து. ஏ ஆர் ரகுமானின் அதிரடி இசை என்ன தான் அருமையாக இருந்தாலும், அந்த அந்த  காலக்கட்டங்களில்  மட்டுமே மனதில் தங்குகின்றன. இளையராஜாவின் மென்மையான மேலோடிகள் காலம் கடந்தபின்னும் மனதில் புகுந்து மயிலிறகால் வருடி  தாலாட்டுவதன் மர்மம் என்னவென்று எனக்கு இன்னமும் விளங்கவில்லை..!


--

Saturday, December 11, 2010

உண்மைத் தமிழன் சீமான்..!

சீமான்..!
தற்போதைக்கு ஈழ தமிழர்கள் தங்கள் விடிவெள்ளியாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர். சில எழுத்தாளர்களைத் தவிர்த்து பலரும் விடுதலைப் புலிகளின் மேலும் இலங்கை அரசின் மேலும் பழிகளைப் போட்டு ஈழத் தமிழர்களின் சாவுக்கு பரிதாபம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்த வேளையில்...ஈழத்தமிழர்களுக்காக ஓங்கி குரல் கொடுத்து இயக்குனர்களை ஒருங்கிணைத்து ராமேஸ்வரத்தில் தைரியமாக இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக உண்மைகளை போட்டு உடைக்க.. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஈழ மக்களை , தங்களுக்காக ஒருவர் பேசி சிறை சென்று இருக்கிறாரே என திரும்பி பார்க்க வைத்தார் சீமான்.

ஈழம் என்று ஒன்றை இருப்பதையே மறந்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள், பொதுத் தேர்தல் முடிந்த வேளையில்.. கொத்து கொத்தாக ஈழத்தில் மடிந்து கொண்டிருந்த தமிழர்களை நினைத்து பார்க்காமல், தன் குடும்பங்களின் வாரிசுகளுக்கு ஏற்ற துறையை வேண்டி சக்கர நாற்காலியில் தமிழர் தலைவராக கருதப்பட்டவர் டில்லியில் பேரம் பேசி கொண்டிருக்க, ஈழ போரில் இலங்கை அரசுக்கு உறுதுணையாக பல உதவிகளை செய்து கொண்டிருந்த இந்தியாவுக்கு எதிராக, தமிழனுக்கு ஆதரவாக  இவரும் இவரது ஆதரவாளர்களும் செய்த பிரச்சாரத்தில்... பல பெரிய காங்கிரஸ் தலைகள் மண்ணில் உருள காரணமாய் இருந்தவர்.

பல தமிழ் மீனவர்களை நிர்வாணப் படுத்தி, சித்திரவதைப்படுத்தி சின்னாபின்னமாக குத்துயிரும் குலை உயிருமாக அனுப்பிக் கொண்டிருந்தது சிங்கள ராணுவம். பலரின் உயிர்களையும் பறித்து கொண்டு வெறும் பிணங்களை திருப்பி படகில் அனுப்பி கொண்டிருக்க, அதனை எதிர்த்து  ஒரு தீர்மானம் கூட இயற்றாமல், பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார் தமிழக முதல்வர். அதனை கண்டித்தவர் சீமான்.  நீங்கள் எங்கள் மீனவர்களை அடித்தால், நாங்கள் உங்கள் மாணவரை அடிப்போம் என்று சொன்னதற்காக, சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், மீண்டும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பொதுத் தேர்தல் மிக அருகில் வருகிற நேரத்தில், இவரது பிரச்சாரத்தின் சூடு தாங்காமல் எங்கே தாங்கள் கவிழ்ந்து விடுவோமோ என எண்ணி சிறையில் அடைத்தவர்களின்  வாயில் மண். நீதி தேவதை இன்னமும் கண் விழித்துக் கொண்டிருப்பதால், சீமானை, தேசிய பாதுகாப்பின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது நீதி மன்றம்.

நம் தொப்புள் கோடி சொந்தங்களான இலங்கை தமிழர்கள் அங்கே சித்ரவதைப்படுத்தப்பட்டு , சீரழிக்கப்பட்டு கண்டந்துண்டமாய் கொந்தப்பட்டு கொல்லப்பட்டு கொண்டிருக்கையில், இங்கு முதல்வரின் சொந்தங்கள் பதவிக்காக அடித்துக் கொண்டிருந்ததை, தொலைபேசி உரையாடல்களை ஒலிபரப்பியதன் மூலம் புண்ணியம் கட்டிக் கொண்டன ஊடகங்கள். போர்குற்றங்களை இழைத்த ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து தமிழர்களின் ரோஷத்தில் ஒரு சதவிகிதம், நம் உள்ளூர் தமிழர்களுக்கு இருந்திருந்தால், இந்தியாவில் காலடி வைத்திருக்கமாட்டான் அந்த கொடுங்கோலன். கோவையில் ஒரு  சிங்கள அமைச்சர் விரட்டி அடிக்கப்பட்டார். அவரை இங்கிருந்து அழைத்தவர்களும் தமிழின துரோகிகளே. அவரையும் விரட்டி அடித்திருக்க வேண்டாமா..?

சானல் 4  போன்ற ஊடகத்துறைகள் இல்லாவிட்டால், இலங்கையில் அவர்கள் தமிழர்களுக்கெதிராக போட்ட பேயாட்டங்கள் வெளியே தெரியாமல் போய் இருக்கும். ஊடகத்துறை இல்லா விட்டால்.. பதவிக்காக எம் முதல்வரின் சொந்தங்கள் போட்ட ஆட்டங்களும் வெளியே தெரியாமல் போய் இருக்க கூடும். சில பத்திரிக்கைகளும் சில தொலைகாட்சிகளும் உண்மையாய் இருப்பதால் தான் திருவாளர் பொது ஜனம் சிறிது நம்பிக்கையோடு நடமாடிக் கொண்டிருக்கிறான்.

ஏழு மாதங்களுக்கு முன் நாம் தமிழர் என்ற இயக்கம் கண்ட சீமான் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அடுத்த பொது தேர்தலில் போட்டி இடப்போவதாய் சூளுரைத்திருக்கிறார். தன்னை சிறையில் இட்ட அரசுக்கு பழி வாங்குவதற்காக, பதட்டத்தில் திட்டங்கள் போடாமல், தமிழர்களுக்காக என திட்டங்கள் போட வேண்டும். அரசியலுக்கு வந்ததும்.. பதவிக்கு ஆசைபடாமல், இப்போது போலவே எப்போதும் போராட்ட குணத்தோடு தமிழர்களின் துணை நிற்கவேண்டும்.

இப்போது உலக தமிழர்கள் முழுமையாக நம்பி இருப்பது.. உங்களைத்தான் சீமான்!..
--

Monday, October 18, 2010

அண்டத்தின் அடியில் அறுபத்து ஏழு நாட்கள்....!

                                                     அந்த முப்பத்து மூன்று பேர்..!

உலகம் முழுக்க பிரார்த்தனையோடு, மூச்சை பிடித்தபடி காத்திருக்க.. அந்த சுரங்கத்தின் அடியில் இருந்து முதல் ஆள் வெளியே வர கர  கோஷங்களும் வாழ்த்துகளும், கண்ணீர் துளிகளும், சந்தோஷங்களும் கொண்டாடங்களுமாய் நிறைந்தது அந்த சிலி நாட்டின் கிராமத்தில். முப்பத்து மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் பூமிக்கு அடியில்  சுமார் ஒரு மைல் தொலைவில் மண் சரிவில் மாட்டிக்கொள்ள அறுபத்தி ஏழு நாட்கள் கழித்து அந்த முப்பத்து மூன்று சுரங்கத் தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டிருக்கிறது சிலி அரசு.
                                                             அந்தச் சுரங்கம்..!

ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி   ஒரு வெடி விபத்தில், அந்த சுரங்கத்தின் வாயில்கள் நசுங்கி மூடிக் கொள்ள, உள்ளே இருந்த முப்பத்து மூன்று சுரங்க தொழிலாளர்கள், உயிரிழந்திருப்பர் என சிலி நாட்டின் நாளிதழ்கள் கதறத் துவங்கின. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என கருதிக் கொண்டிருந்த வேளையில்.. அவர்களை தேட அந்த மலையில் ஆழ்துளை போடப்பட, அந்த டிரில்லர் முனைப்பகுதி  இரண்டாயிரம் அடிகள் இறங்கியப்பின் தட்டப்பட, அவசர அவசரமாக அதனை வெளியே இழுத்து பார்க்கையில், அதன் முனையில் ஒரு தாளில் சிவப்பு மையில் இருந்த வாசகம் உலகத்தையே பரபரக்க வைத்தது. ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பினரா அவசர அவசரமாக பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்பினார். மீடியாவின் முன்னிலையில் நாட்டின் அதிபர் செபஸ்டின் பினரா, கரங்கள் நடுங்க குரல் தழுதழுக்க வாசித்தார்...' நாங்கள் முப்பத்து மூன்று பேரும் நலமாக உயிருடன் உள்ளோம்'. சிலி நாட்டு
மக்கள் சந்தோஷ கூத்தாடினர். எதோ தங்களின் சொந்த சகோதரர்கள் பற்றி நற்செய்தி வந்த உற்சாகத்தில் துள்ளினர்.  எனினும் அவர்களை உயிருடன் மீட்பது எப்படி?
செபஸ்டியன் பிநேரா நிச்சயமாக அவர்களை உயிருடன் மீட்க என்னாலான அனைத்தும் செய்வேன் என சொன்னதோடு மட்டுமல்லாது அவர் செயல்படுத்தியும் காட்டினார்.
                                சுரங்கத்தின் உள்ளே...மனம் தளரா... வீரர்கள்..

 அண்டை நாட்டின் உதவிகளை நாடினார். பல உலக நாடுகளும் அவருக்கு உதவிக்கு வந்தன. முதலில் ஒரு சிறிய துளை போடப்பட்டு அதன் மூலம் உணவும் மருந்தும் அனுப்பி வைக்கப் பட்டது. ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து இருநூறு கலோரிகள் கொண்ட உணவே அனுப்பப்பட்டது. அவர்கள் உடல் மெலிய வேண்டும் என்பதே அதற்க்கு காரணம் அப்போது தான் அவர்களால் சிறிய துளையிலும் வெளியே வர முடியும்.

ஒரு பைபர் ஒப்டிக் லைன் ஒன்று உள்ளே அனுப்பப்பட்டு அதன் மூலம் அவர்கள் வெளியே தொலைபேசி கொள்ளவும், வீடியோ கோன்பிரேன்சிங் மூலம் தொடர்பும் ஏற்ப்படுத்தப் பட்டது. ஐயாயிரம் வாட் மின்சார கம்பியும் மின் விளக்கும் அனுப்பப்பட்டன. உள்ளிருப்பவர்களுக்கு பகலும் இரவும் வேறுபாடு அறிய இரவு நேரத்தில் தானாக விளக்குமங்கி போகுமாறு அமைக்கப் பட்டது. சுரங்க தொழிலாளர்கள், உள்ளே இருக்கும் அமிலங்களை வைத்து ஒரு ரசாயன கழிவறையை உருவாகினர். மல ஜலங்கள் ரசாயனத்தில் கரைந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.

அவர்கள் மன நலம் குன்றி போகாமல் இருக்க அவர்களுக்கு ஐபோட், ஒரு சிறிய ப்ரொஜெக்டர் அதில் அவர்கள் பேரும் கால்பந்தாட்ட பிரியர்களாக இருந்ததால், சிலி நாடு, உக்ரைனோடு விளையாடிய கால்பந்தாட்ட போட்டி டி வீ டி என அனுப்பி வைக்கப்பட்டது. 

ஒரு பெரிய துளை போடும் கருவி கொண்டு வரப்பட்டு, உள்ளே துளை போட, உள்ளிருந்த சுரங்க தொழிலாளர்கள், ஒவ்வொருவராக நேரம் பிரித்துக் கொண்டு துளையால் விழும் மண் மற்றும் கல்லின் துகள்கள் ஆகியவற்றை அப்புறப் படுத்தினர்.

குழுவில் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள், பல நகைச்சுவை துணுக்குகள் சொல்லி உள்ளிருக்கும் மற்றவர்கள் மனம் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்படி ஒவ்வொருவராக ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
                                                                              காப்ஸ்யூல்.

இதற்குள் துளை போடும் வேலை முடிவுக்கு வர, காப்ஸ்யூல் போன்ற ஒரு சாதனத்தை ஒரு காப்பாற்றும் வீரர் மற்றும் ஒரு சுரங்க தொழிலாளி ஆகியோர் மட்டுமே வர கூடிய அந்த கருவியை மோட்டாரின் துணை கொண்டு உள்ளே இறக்க முதல் தொழிலாளி வெளியே வர, காத்திருந்த சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பெரேரா கட்டி தழுவி முத்தமிட்டு வரவேற்ற போது உலகமே ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தது. அறுபத்து ஏழு நாட்கள் இருட்டையே கண்டவர்களுக்கு, வெளிச்சம் கண்களை பாதிக்கும் என்பதால்... பகல் நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு குளிர் கண்ணாடி கொடுக்கப்பட்டது.
 உலக தலைவர்களின் முன்னோடி..சிலி அதிபர் செபஸ்டியன் பெரேரா.

இவை அனைத்தும் நடந்து முடிக்கும் வரை, செபஸ்டியன் பெரேரா ஒரு டெண்டில் இருந்து கொண்டு முழுவதுமாக உடனிருந்தார். எப்பாடு பட்டாவது தனது மக்களை காப்பேன் என்று அவர் கொண்ட உறுதியை பூர்த்தி செய்தார். உலகம் முழுமைக்கும் தான் ஒரு மாதிரி தலைவனாக இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார். சிலி என்ற தென் அமெரிக்க சிறிய தேசம் இன்று உலகம் முழுதும் புகழ் பெற காரணமாக அந்த சுரங்க நிகழ்ச்சி அமைந்து விட்டது.
                ஒரு சுரங்கத் தொழிலாளியை சிலி அதிபர் வரவேற்கும் காட்சி.
                                                        புகைப்படம்: நன்றி All voices

இந்த வெற்றிக்கு காரணம், காப்பாற்றும் வீரர்களின் சாதுர்யமான யோசனைகள், அதற்கும் மேலே, தன நாடு மக்களை காப்பாற்ற அந்த மாபெரும் தலைவன் செபஸ்டியன் பெரராவின் முயற்சி, அதற்கும் மேலே அந்த முப்பத்து மூன்று பேரின் ஒற்றுமை மற்றும் மன உறுதி.

இன்னொன்றையும் சிலி வாசிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சுரங்கத்தின் அடியில் மாட்டிக் கொண்டபின்  முதல் முதலில் சுரங்க தொழிலாளர்களிடம் பேசிய அதிபர்
 'எவ்வளவு பேர் இருக்கிறீர்கள்?' என வினவ...
'முப்பத்து நான்கு பேர் ' என பதில் வந்திருக்கிறது.
'முப்பத்து மூன்று பெயர்கள் என்னிடம் உள்ளது. அந்த முப்பத்து நான்காவது ஆளின் பெயர் என்ன'

'கடவுள்'.

--

Friday, July 16, 2010

ஒரு இந்தியப் பயணம்.-4

இந்தியாவுக்கு  வரும்போதெல்லாம், நான் ஒரு நகரத்தை பார்த்து அஞ்சுவது என்றால் அது சென்னையை கண்டு தான். அதற்க்கு காரணம் அங்குள்ள உஷ்ணம். அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து ரொம்ப அலட்டிக்கிறான் என நினைப்பவர்களுக்கு... கோவை வாசிகளை கேட்டு பாருங்கள். அங்குள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் வாழ்ந்தவர்கள், சென்னை வந்து அதன் காட்டமான தட்பவெட்பம் கண்டு அஞ்சவே செய்வார்கள். நானும் கோயமுத்தூர் காரன் தான். இந்த முறை சற்று அதிகமாகவே சூடு. நூற்றி ஐந்து டிகிரி கொளுத்தி தள்ளியது. ஐந்தடி நடந்தாலே சட்டை எல்லாம் வியர்வையில் நனைந்து போனது. இம்முறை உலகெங்கிலுமே சூடு மிக அதிகம் என படித்திருந்தேன். இந்தியாவில் தான் அப்படி என்றால், இங்கு அமெரிக்க வந்த பிறகும் வெய்யில் நூறு டிகிரியை விட்டு இறங்க மாட்டேன் என்கிறது. ஒசோன் லேயரில் ஓட்டை விழுந்ததை காரணமாக சொல்கிறார்கள்.

எனினும் சென்னை அழகாக மாறி இருந்தது. முன்பை விட அதிக சுத்தமாக இருந்தது. எங்கெங்கும் மேம்பாலங்கள்.பல திறக்கப் படாமல்.. சில கட்டி முடிக்கப் படாமல்...
உயர்ந்த கட்டிடங்கள்...நல்ல சாலைகள் என வெகுவாக உருமாறி இருந்தது. எனினும்... டிராபிக் மிக அதிகம். இரண்டு சக்கர வாகனங்களை விட இப்போது அதிகமாக நான்கு சக்கர வாகனங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

என் மனைவி ஸ்பென்சர்ஸ் பார்க்கவேண்டும் என விரும்பியதால், ஸ்பென்சர்ஸ் சென்றோம். முன்பு இருந்த சுத்தமும் அழகும் இப்போது இல்லை.. மிக மிக நெரிசலாக உரு மாறி இருந்தது. அங்கு எனது நண்பனை வர சொல்லி இருந்தேன்.

                                                              ஸ்பென்சர் பிளாசா 
போலாரிஸ் லாப்சில் வேலை பார்க்கும் அவன் ஸ்பென்சர்ஸ் வந்தபோது இருவரும் கட்டி தழுவிக் கொண்டோம். ஆம். பதினாறு வருடங்கள் கழித்து அவனைப் பார்க்கிறேன். திருச்சி செயிட் ஜோசப்ஸ் கல்லூரியில் படித்த பொது, நாங்கள் அடித்த கூத்து கொஞ்சம் நஞ்சம் இல்லை. கல்லூரியில் விடுதியில் வேறு வேறு அறைகளில் தங்கி இருந்தபோதும்.. வேறு வேறு வகுப்புகள் படித்த  போதும்...எட்டு பேர் கொண்ட எங்கள் நண்பர் பட்டாளம் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கி, ஒன்றாக சைட் அடித்து (வெள்ளிகிழமைகளில் தாவணி பெண்களை பார்க்க அனைவரும் மலைக்கோட்டை கோயில்  சென்று அமர்ந்திருப்போம்). ஒன்றாக திரைப்படங்கள் சென்று... ஒன்றாக கலாய்த்து...என ஒன்றாகவே திரிந்த காலம் அது.பின்னர் எல்லோரும் வெவ்வேறு திசைகளில் பயணப்பட்டாலும்   அவ்வப்போது ஒரு மின்னஞ்சல் என எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இம்முறை என் நண்பன்  சென்னையில் இருந்ததால், அவனை சந்திப்பது என ஏற்பாடாயிற்று. என்னை மதிய உணவுக்கு ஹோட்டல்க்கு அழைத்து செல்வதாக கூறி இருந்தான். நானோ இலை போட்டு சாப்பாடு போடும்  ஒரு சிறந்த சைவ உணவகத்துக்கு அழைத்து செல்லுமாறு கூற அவன் தனது காரில் அழைத்து சென்று நிறுத்தியது ரெசிடென்சி ஹோட்டலில். அங்கு தெரிந்த பணக்காரத்தனம் என்னை மிரள வைத்தது. அந்த உணவகத்து பரிமாறுபவர்கள்.. பஞ்சக்கச்சம் அணிந்து பழுப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினார்கள். எனது நண்பனும் அவர்களிடம் அதே நுனி நாக்கு ஆங்கிலத்தில் கதைக்க நான் தேமே என அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மகாராஜாக்கள் அந்த காலத் சினிமாக்களில் அமர்ந்திருப்பதை போல திண்டுகள் வைத்து இருந்தனர். படுக்கையை பார்த்ததும் என் மகன் வழக்கம் போல அதில் ஏறி குதிக்க ஆரம்பித்தான்.

'ரொம்ப காஞ்சி பொய் வந்திருப்பீங்க. நீங்க சாப்பிடுங்க நான் பையன பாத்துக்கறேன்' என அவன் என் மகனோடு விளையாட ஆரம்பித்தான்.

இலை போலவே இருந்த வெள்ளி தட்டின் மேல் அதே வடிவத்தில் இலையை வெட்டி வைத்து அதன் மேல் சாப்பாடு பரிமாறினார்கள். ஸ்பூன் டம்ளர் என அனைத்துமே வெள்ளி. சாப்பாடு பிரமாதம். வட்ற்றல் குழம்பு சாம்பார், மோர் குழம்பு ரசம்..புளி சாதம், தயிர் சாதம்.. நான்கு வகைப் போரியல், அப்பளம் கூட்டு என எனது கனவு சாப்பாடு என் கண்முன்னே விரிய விரிய அனைத்தும் ஒரு கை பார்த்தேன். 

அவன் அவனது காரில் கொண்டு வந்து எங்கள் வீட்டில் விட்டு டாடா காட்டியபோது...  . பெரிய கம்பனியில் பெரிய வேலையில் கை நிறைய சம்பாதித்தாலும்.. கல்லூரி காலங்களில் நாங்கள் படித்தபோது எங்கள் வீடுகளில் இருந்து வரும் மணி ஆர்டர்களுக்கு காத்திருந்தபோதும எந்த எதிர்பார்ப்பும இன்றி வளர்ந்த எங்கள் நட்பு  எங்களுக்குள் இருந்த பிணைப்பு, தற்போது எங்களுக்கென்று ஒரு தனி வாழ்க்கை, தனி குடும்பம் என  உருவாகி நாங்கள் மீண்டும் சந்தித்தபோது, கால ஓட்டத்தில்  எங்கேயோ அறுந்து போனதை போல உணர்ந்தேன்.

(பயணம் தொடரும்...)
--

Monday, June 28, 2010

செம்மொழி மாநாடு...வீணடிக்கப்பட்ட கோடிகள்!


செம்மையாக நடந்து முடித்திருக்கிறது, செம்மொழி மாநாடு... கிட்டத்தட்ட முன்னூத்தி ஐம்பது கொடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டுக்காக பல்லாயிரம் மரங்கள், கோவை நகரில் வெட்டப்பட்டுள்ளன.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்து 'தமிழை வளர்த்துள்ளனர்'.

எதற்காக இந்த மாநாடு? இந்த மாநாட்டினால் என்ன பயன்? கவியரங்குகளும் பட்டிமன்றங்களும் 'தலைவனை' துதிபாடியே துவங்குகின்றன... மாநாடு செம்மொழிக்கா? அல்லது செந்தலைவனுக்கா..? மூத்த குடும்பத்தின் பணத்தில் செம்மொழி மாநாட்டை ஒட்டி கொடிகளில்கோவையில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்பது உடன்பிறப்புகளுக்கு தெரியாமல் போனதோ?

இலங்கை போரில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் நடுவே சிக்கி சின்னா பின்னமாகி குற்றுயிராய் கிடக்கும் தமிழர்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போனதே. அங்கு ஒரு வேளை சோற்றுக்கு சிங்கி அடிக்கும் தமிழர்கள் இருக்க.. இங்கோ ஏற்கனவே வளர்ந்து விட்ட செம்மொழியான தமிழ் மொழிக்கு எதற்கு இவ்வளவு செலவில் ஒரு மாநாடு? போரினை நிறுத்த தவறிய தலைவனின் பாவ மன்னிப்பா? தமிழுக்கும் தமிழனுக்கும் செம்மொழி மாநாடு நடத்தி தான் தலைவனின் தமிழ் பாசத்தை உலகுக்கு உயர்த்த வேண்டுமா? தமிழனை காப்பாற்றினால் தானே தமிழை காப்பாற்ற முடியும்? தமிழர்கள் எல்லாம் இறந்துவிட்டால், தமிழ் பேச தலைவன், குடும்பம் தானே எஞ்சும்.

தமிழகத்தில் இருந்தால் மட்டும் தான் தமிழனா? அயல்நாட்டில் இருக்கும் தமிழன் தமிழன் இல்லையா?
அயல்நாட்டில் இருக்கும் தமிழ் மகன்கள்.. பர்கரும் பீசாவும் உண்டு தான் உயிர் வாழ்கின்றனரா? அவர்களுக்கு தமிழ் பற்றி  பேச அருகதை கிடையாதா? தமிழகத்தில் எவரும் பர்கரும் பீசாவும் உண்பதில்லையா?. தமிழகத்தில், இருக்கும் தமிழனை விட அயல்நாட்டில் இருக்கும் தமிழனுக்கு தனது மொழியின் மேல் பற்று சற்றும் குறைந்தது இல்லையே. தமிழகத்தில் தனது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசும்படி பணித்து கொண்டிருக்கிறார்கள் பெற்றோர். அயல் நாட்டில் தனது குழந்தைகள் தமிழில் பேசவேண்டும் என கவலை படுகிறார்கள்.

தலைவன் தனது தமிழ் தாகத்தை முன்னூற்றைம்பது கோடி கொடுத்து தீர்த்து கொண்டிருக்கிறார். மூன்று வேளை சோறில்லாமல் பட்டினி கிடக்கிறது தமிழனின் குடும்பம்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் இருக்கட்டும். தமிழிலேயே பெயர் பலகைகள் வைக்கவேண்டும் என்ற அதிகாரம் இருக்கட்டும். முதலில் தனது பேரன்களின் 'ரெட் ஜெயின்ட் மூவீஸ்' மற்றும் 'கிளௌட் நயன் மூவீஸ்' என்ற ஆங்கில கம்பெனி பெயர்கள் மாறட்டும். தலைவன் தமிழை தனது வீட்டிலிருந்து முதலில் வளர்க்கட்டும்.

செம்மொழி மாநாட்டால், கோவை நகருக்கு நல்ல சாலைகளும், ஏ ஆர் ரகுமானின் 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற நல்ல பாடலும் தான் மிச்சம்.
--

Thursday, May 13, 2010

ஷான் பென்னும் ஒரு டிப்தீரிய சிறுவனும்...!



ஒரு நடிகன் என்பவன் யார்?
நமக்கு தெரிந்த வரையில், நடிகன் என்பவன் ஒவ்வொரு படத்திற்கும் கோடிகளில் சம்பாதிப்பவன். படத்தில் தோன்றி ஆங்காங்கே பன்ச் டைலாக் சொல்லி கைதட்டலும் விசிலும் வாங்குபவன்,  அவன் பட வெளியீடு அன்று அவனது கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்து  ரசிகர்கள் கொண்டாடும் வேளையில் உள்ளுக்குள் மகிழ்ந்து வெளியே 'அப்படி எல்லாம் செய்ய கூடாது' என்று சொல்பவன். தனது பிறந்த நாளன்று ஒரு இருபது பேருக்கு தையல் மெசினையும், இருபது இலவச கல்யாணங்களையும் நடத்தி வைத்து தனது சமூக ஆர்வத்தை உலகுக்கு பத்திரிகைகளில் போட்டோ அனுப்பி அறிமுகப்படுத்துபவன். சில படங்களில்தலைகாட்டியதும்  தளபதி, தல, நாயகன், ஸ்டார் என்ற பட்டத்தை போட்டுக் கொள்பவன். இதுவெல்லாம் செய்தால் போதும், அடுத்த முதல்வர் தானே எனக் கனவு காண்பவன்...

நமது நடிகர்களுக்கெல்லாம்  மேலே மில்லியன் கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் ஹாலிவூட் நடிகர்கள். அவர்கள் பட்டங்கள் போட்டுக் கொள்வது இல்லை. எல்லா படங்களிலும் பன்ச் டயலாகுகள் இல்லை. அவர்களை ஒரு சக மனிதனாக மட்டுமே கருதுகிறார்கள் அவர்களது ரசிகர்கள்.(ஆட்டோக்ராபோடு நின்று விடுகிறது இவர்களின் ரசிகர்களின் அன்பு).  சில நடிகர்களிடம், நடிப்பதும் தாண்டிய ஒரு மனித நேயத்தை காண முடிகிறது. ஹைதியில் நில நடுக்கத்தில் அந்த நாடே உடைந்து வீழ்ந்த பொது, தனது விமானம் முழுவதும் மருந்துகளை வாங்கி போட்டு தானே விமானத்தை ஒட்டி ஹைதியில் தரை இறக்கினார் ஹாலிவுட் நடிகர் ஜான்  டிரவோல்டா.

டிரவோல்டா .. தனது விமானத்தில்...ஹைதிக்கு பறந்த பின்னர்...


அனைத்திற்கும் மேலாக, இருமுறை ஆஸ்கார் வென்ற கலைஞன் ஷான் பென், ஒரு அறகட்டளை ஆரம்பித்து அதன் மூலம் பல இயற்க்கை அழிவுகள் நிறைந்த இடங்களுக்கு சென்று உதவி வருகிறார். இப்போது அவர் ஹைதியில் செய்து கொண்டிருப்பது அவரது மனித நேயத்தை பறை சாற்றுகிறது. இரு முறை ஆஸ்கார் அவார்டுகளை வென்றும் மூன்று முறை ஆஸ்காருக்கு பரிந்துரையும்பெற்றிருக்கிறார்.

சமீபத்திய நிலநடுக்கத்தால் சல்லடையாக்கப்பட்ட ஹைதியில் இப்போது இந்த ஹாலிவுட் புயல் மையம் கொண்டுள்ளது. தானும், ஒரு பெண் தொழிலதிபரும் இணைந்து ஆரம்பித்த அறக்கட்டளை சார்பில் தற்போது ஹைதியில் தங்கி ஹைடி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும், அவர்களுக்கு கூடாரங்கள் அமைத்து தரவும் முனைந்துள்ளார். அவர் மாட மாளிகையில் அமர்ந்து கொண்டு சும்மா பம்மாத்து செய்துகொண்டிருக்கவில்லை. அவர் தற்போது ஹைதியின் தலை நகரமான போர்ட் ஒ பிரின்ஸ் இல் மக்களோடு மக்களாக ஒரு கூடாரத்தில் தனது அறக்கட்டளை சார்பில் வந்துள்ள தன்னார்வ தொண்டர்கள் மத்தியில் தங்கிஉள்ளார்.

                                                ஷான், தனது கூடாரத்தின் முன்...

ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு டிப்தீரியா என்ற கொள்ளை நோய் தக்க பட்டது அறிந்ததும் அவனுக்கு மருந்து வாங்க தான் பதினோரு மணி நேரம் அலைந்ததாக வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். டிப்தீரியா ஒரு தோற்று நோய் என்றும் அது வெகு விரைவில் மற்ற குழந்தைகளையும் வயோதிகர்களையும் தாக்க கூடும் என்பதால் அதனை முளையிலேயே களையவே அவர் அவ்வளவு மெனக்கெட வேண்டி இருந்தது. டிப்தீரியா சுகாதாரமற்ற சூழலும் சரியான உணவும் இல்லையென்றாலும் மக்களை தாக்க கூடும். அது வெகு விரைவில் மற்றவர்களுக்கு பரவி உயிர்பலிகள் அதிகம் ஏற்ப்பட வாய்ப்புண்டு என்பதால் அமெரிக்க ராணுவம், ரெட் கிராஸ் எவரிடமும் அந்த மருந்து இல்லாமல் பின்னர் உலக சுகாதார மையத்தை அழைத்து மருந்தை வரவழைத்து அவனை காப்பாற்றியுள்ளார் ஷான்.

டிப்தீரியா ஒரு தோற்று நோய் என்பதால் மற்றவர்களுக்கும் பரவி விடும் என்பதால், எந்த மருத்துவமனையும் முதலில் ஓரியல் என்ற அந்த சிறுவனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. ஷான், தானே கையோடு எல்லா மருத்துவ மனைகளிலும் ஏறி இறங்கி வாதாடி, பின்னர் பொது மருத்துவமனையில் சேர்த்து அவனுக்கு மருந்து வாங்கி அளித்துள்ளார்.

ஐம்பதாயிரம் மக்களை தன கட்டுப்பாட்டில் வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.  அவர் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகராக இருந்தும், மில்லியன் கணக்கில் பணம் இருந்தும், அவரை ஹைதியில் யாருக்கும் தெரியவில்லை.அவரி பற்றி கேட்டால்,   'அவர் ஒரு நல்ல மனிதர்' என்று மட்டும் சொல்கிறார்கள்.
சிலருக்கு மட்டும் அவர் பாடகி மடோன்னாவின் முன்னாள் கணவர் என்ற மட்டும் தெரிந்திருக்கிறது.

ஒரு அமெரிக்கனான அவருக்கு ஹைடி மக்கள் மேல் அக்கறை என்ன? அவர் தனது அறக்கட்ளை மூலம், கத்ரீனாவில் சீரழிந்து போன நியூ ஓர்லீன்ஸ் நகரத்திற்கும் சென்று மக்களளுக்கு உதவியுள்ளார்.அவரது சேவைகளை பற்றி யாராவது பாராட்டி பேசினால், ' நான் போடுவது ஒரு பாண்டேஜ் மட்டும் தான். ஆறாத காயங்கள் பல உள்ளன. இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியது நிறைய இருக்கிறது' என்று சொல்கிறார். மற்றும் அவருக்கு பத்திரிக்கையாளர்களையும் தன்னை படம் பிடிக்கும்பப்பராசிகளையும்  பிடிப்பதில்லை.

நமது தமிழகத்தில் சுனாமி பேரலையில் மக்கள்,தம்  வீடு உடமைகள் உறவுகள், உயிர்கள் யாவும் இழந்து நிற்கும்போது, மும்பையில் இருந்து விவேக் ஓபராய் தான் வரவேண்டி இருந்தது. நமது தலைகளும்  தளபதிகளும், நாயகன்களும் ஸ்டார்களும் எதிர்கால முதலமைச்சர் நாற்காலி கனவில் இருந்திருப்பார்கள் போலும்.

ஷான் பென்னின் நேர்முக ஒளி சுட்டி.


Saturday, May 8, 2010

மதர்!

வணக்கம்.
இது எனது நூறாவது பதிவு. நான் பதிவு எழுத ஆரம்பித்து ஒண்ணரை ஆண்டுகளில் நான் சம்பாதித்தது இருபத்தைந்து பாலோயர்களையும் இருபதாயிரத்தை நெருங்கும் ஹிட்ஸ் களையும். என்னை வாசித்த, வாசித்து கொண்டிருக்கிற, வாசிக்க போகும் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் ஒரு சிறந்த பதிவர் என்றோ சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன் என்றோ மார் தட்டி கொள்ள வில்லை. அதற்க்கு எனக்கு தகுதியும் கிடையாது என்றும் எனக்கு தெரியும். எனினும்  சிறுகுழந்தை ஒரு பலப்பத்தில் 'அ' 'ஆ' என எழுதி பழகுதல் போல என பதிவு பயணம் இப்போது துவங்கியுள்ளது என்றே கருதுகிறேன். தோள் கொடுக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும், குறிப்பாக எனது எழுத்தை நம்பி என்னை தொடரும் அந்த இருபத்தைந்து பேர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் ஒரு வாரமாக பதிவு இடாத காரணம், அன்னையை பற்றி அன்னையர் தினம் அன்று எழுத வேண்டும் என்ற உந்துதலே. தற்செயலாக இது எனது நூறாவது பதிவாகவும் அமைந்து விட்டதால், இந்தப் பதிவை, அன்னைக்கும் உலகெங்கும் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் காணிக்கைஆக்குகிறேன்.




அன்னை என்றாலே என் நினைவுக்கு வருவது அன்னை தெரேசா தான். ஒரு துறவி எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர்.
 காரணம் அவர் இறந்த பொது அவருக்கென சொத்து எதுவும் இல்லை.
 அவரது சொத்து எல்லாம் தெருவில் கிடக்கும் ஆதரவற்றோரும் அநாதைகளும் தான்.
ஆகஸ்ட் 26 1910இல் அல்பானியா நாட்டின் குக்கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் கடைசி மகளாக பிறந்தவர் அக்னேஸ். தனது பதின்ம வயதுகளிலேயே ஒரு கத்தோலிக்க துறவியாக, பிறருக்கு சேவை செய்யும் செயல் வீரராக ஆக வேண்டும் என முடிவு செய்தவர், தனது பதினெட்டாவது வயதில் லோரெட்டோ என்ற சபையில் தன்னை ஒரு கன்னிகாஸ்த்ரியாக இணைத்து கொண்டார்.

அவரது சபையின் கிளை இந்தியாவில் இருக்க அவர் டார்ஜீலிங் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கன்னிகாஸ்த்ரியாக பட்டம் பெற்றதும் இந்தியாவில் தான். அவரை சபை ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்ய பணித்தது. கல்கத்தாவின் வறுமையும், தெருவோரத்தில் கிடக்கும் குஷ்டரோகிகளும், முடவர்களும், கை விடப்பட்டவர்களும் அவர்களின் கஷடங்களும் அவரை வாட்ட, அவர்களுக்காக தனது சபையை துறந்து மிஷனரீஸ் ஆப சாரிடீஸ் என்ற சபையை ஆரம்பித்தார். அநாதை குழந்தைகள், தெருவில் கிடந்த தொழு நோயாளிகளை அழைத்து வந்து அவர்களை சுத்தப்படுத்தி, உணவளித்து, அவர்களுக்கும் ஒரு உலகத்தை தனது பதிமூன்று பேரால் ஆரம்பிக்கப்பட்ட சபையின் மூலம் காண செய்தார்.
அவரது சேவைக்கு கோடி கொடியாக பணம் கொட்டவில்லை. அவருக்காக அவர் மாளிகை எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் பணமும் கிடையாது. பிச்சை எடுத்தார். கல்கத்தாவின் தெருக்கள் முழுக்க அவரது பாதம் பட்டிருக்கிறது. தெரு தெருவாக பிச்சை எடுத்தார்.

ஒருமுறை ஒரு கடை காரனிடம் 'எனது குழந்தைகளுக்கு ஏதாவது தாருங்கள்' என கை ஏந்தியபோது, அவன் எரிச்சலில் அவரது இடது கையில் காரி துப்பி விட்டான். சிறிதும் சஞ்சலப்படாத அன்னை,'இது நீங்கள் எனக்கு கொடுத்த பரிசு, இந்த மறு கையில் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்' என சொல்ல, தன தவறுணர்ந்த அந்த கடை முதலாளி, அவருக்கு அன்று முதல் தீவிர கொடையாளியாக மாறினான்.

இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட அந்த சேவை நிலையம் இன்று உலகெங்கும் தனது கிளைகளை பரப்பி, கைவிடப்பட்ட மக்களுக்கு, ஒரு அன்னையாக சேவை புரிந்து வருகிறது.

மதர், நாட்டின் சிறந்த முதல்வர்களுள் ஒருவராக மதிக்கப்படும் வங்காள முன்னாள் முதல்வர் ஜ்யோதி பாசுவுக்கு சிறந்த நட்பாக இருந்தார். மதரின் இல்லம், வங்காள அரசாங்கம் மூலம் அவர் வழங்கியது தான்.

உலகின் உயரிய விருதான நோபெல் பரிசு முதல் அவர் வாங்காத விருதில்லை. 'வாழும் புனிதர்கள்' என டைம்ஸ் இதழ் இவரின் அட்டைப்படத்துடன் செய்தி வெளி இட்டது.


செப்டம்பர் 5 1997 மதர் மறைந்த அதே சமயத்தில் இளவரசி டயானாவும் மறைந்ததால், டயானாவின் உலகளாவிய அழகும் புகழும் அவளுடைய செய்தியே பிரதானமாக போனது. உலகத்தை, அழகு வென்றது.


மதரின் சேவை பற்றியும் குறை சொன்னவர்கள், சொல்பவர்கள் இன்றும் உண்டு. அவர் ஒரு மதத்தின் பெயரால் இதை செய்து மதம் மாற்ற முயல்கிறார் என்று. சாகும் தருவாயில், அன்னையின் அரவணைப்பில் இருந்த ஒரு குஷ்ட நோயாளி பின்வருமாறு கூறுகிறான்.

 'ஒரு பிச்சைக் காரனாக வாழ்ந்தேன். அன்னையின் கருணையால், ஒரு தேவதையை போல சாகிறேன்'

இந்த மகிழ்ச்சியை எந்த மதத்தினரும் அளிக்கலாம். ஒவ்வொரு மதத்தினரும் இப்படி சேவை நிறுவனங்கள் துவங்கி கைவிடப்பட்டோருக்கு சேவை செய்ய துவங்கினால், நாட்டில் எவருமே கைவிடப்பட்டவர்களாகவும்,அநாதைகளாகவும் இருக்கமாட்டார்கள்.

நாம் ஒவ்வொருவருமே, பிறக்கும்போது கைவிடப்பட்ட குழந்தைகள் தான். நம்மை தமது அரவணைப்பில் வைத்து பாதுகாப்பது நமது தாய் தான்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Sunday, April 18, 2010

காந்தி தேசமே... ஈரம் இல்லையா...?!!!



எங்கிருந்தோ பத்துக்கு மேற்பட்ட தீவிரவாதிகள், விசா பாஸ்போர்ட் எதுவும் இன்றி, பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு திருட்டு தோணி மூலம் மும்பை வந்து இருநூறு பேரின் உயிரை உருவி நாட்டின் பாதுக்காப்பையே எள்ளி நகையாடிவிட்டு செல்லலாம். ஒரு எண்பது வயது மூதாட்டி, ஆறு மாத விசாவோடு மருத்துவத்திற்காக தமிழகத்தின் மண்ணை மிதிக்க கூடாதாம். 

பல நாடுகளில் இருந்து பல ஊர்களில் இருந்து வந்து இங்கு வாழலாம்.  வந்தாரை வாழ வைக்குமாம் தமிழ் நாடு...ஆனால் தமிழ் தாயை மட்டும் திருப்பி அனுப்பி விடுமாம். காரணம். பாதுகாப்பாம்.உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது. தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு பூரண கும்ப மரியாதை. போர் வாசனை அறியாத ஒரு தமிழ் மூதாட்டிக்கு தமிழகத்தில் கால் வைக்க மறுப்பு. 

தமிழர்களின் மேல் உள்ள மத்திய அரசின் வெறுப்பும், தமிழகத்தை ஆள்வோரின் பச்சோந்தி தனமுமே இதற்க்கு காரணம்.

ஒரு இந்தியனாக, ஒரு  தமிழனாக இருப்பதற்கு வெட்கி தலை குனிகிறேன்.

Monday, April 12, 2010

ஆப்பிள் ஐ பேட்.

அதென்னவோ, பலருக்கு ஆப்பிள் மீது தீராத மோகம். நான் சொல்வது உண்ணும் ஆப்பிள் அல்ல. ஆப்பிள் என்னும் பிராண்ட் கம்பெனி பற்றி. ஸ்டீவ் ஜாப்ஸ். இந்த பெயரை கேட்காத டெக்னாலஜி மக்கள் ரொம்ப கம்மி. ஆப்பிள் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, மைக்ரோசாப்ட் க்கு எதிராக புதிய ஒபெரடிங் சிஸ்டம் கொண்டு வந்தது முதல் இவரை டெக்னாலஜி உலகம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. பின்னர் இவர் பிக்ஸார் ஸ்டூடியோ, நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என அங்கு இங்கு என அல்லாடி கொண்டிருக்கும் வேளையில், தான் ஆரம்பித்த ஆப்பிள் நிறுவனம் தள்ளாடி கொண்டிருப்பதை கண்டு, மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்து புதிது புதிதாய் எலேக்ட்ரோனிக் சாதனங்களை சந்தையில் இறக்க... சூடு பிடித்து கொண்டது ஆப்பிள். எப்போடா அடுத்த சாதனத்தை இவர் அறிமுகபடுத்துவார் என உலகம் முழுக்க ஆப்பிள் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.


முதலில் காசெட் வாக் மான், பின்பு சி டீ பிளேயர், என வந்திருந்த காலத்தில், புதிதாக, பாடல்களை அதிலேயே சேமித்து வைத்து கொள்ளும் ஐ பாட் அறிமுகபடுத்தி, ஆப்பிள் தனது ஏறு முகத்தை ஆரம்பித்தது. ஐபாட் சக்கை போடு போடா, அடுத்து செல் போன்களில் கவனம் வைத்து ஐ போனை இறக்கியது. எதிராளிகளின் அனைத்து போன்களையும் ஓரக்கட்டியது. ஆப்பிள் ஏர் லேப்டாப், ஐ பாட் டச் என தனது புதிய கண்டுபிடிப்புகளை இறக்கி, மக்களை பைத்தியம் கொள்ள வைத்த ஆப்பிள் இப்போது இறக்கி இருப்பது, இணையத்தின் வசதிகளுடன் கூடிய போன் இல்லாதஒரு பெரிய சைஸ் ஐபோன்  தான் ஐ பேட் .

ஐ பேட் அறிமுகமான மார்ச் 26  மட்டுமே  மூன்று லட்சம் விற்று தீர்ந்தது. அறிமுகமான மூன்று நாட்களில் ஒரு மில்லியன் ஐ பேட்கள் விற்று விட்டது. மக்கள் அமெரிக்காவில் கியூவில் நிற்கிறார்கள், இதனை வாங்குவதற்கு.

சரி அப்படி ஐ பேடில் என்ன என்ன பயன்கள் இருக்கு? அதுல என்ன எல்லாம் செய்யலாம்?
1. ஐ பேட்க்கு மௌஸ் தேவை இல்லை. ஐ பேட்டின் மௌஸ் உங்கள் விரல்கள் தான். ஆம். விரலை ஐ பேடில் வைத்து கீழே இழுத்தால் திரை கீழே போகிறது. மேலே இழுத்தால் மேலே, பக்கவாட்டில் இழுத்தால் பக்கவாட்டில். உலகம் இனி உங்கள் விரல் நுனியில் என்றால், அது ஐ பேடை பொறுத்தவரை உண்மை.
2.  ஈ மெய்ல் அனுப்பவேண்டுமேன்றால், ஐ பேட் திரையிலேயே ஒரு கீ போர்டு வருகிறது. அதில் தட்டச்சு செய்து ஈ மெயில் அனுப்பலாம். ப்ளாக் எழுதலாம். தனியாக கீ போர்டு பொருத்தி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

3. ஐ பேட்டின் திரை, ஹை டெபானிஷனில் இருப்பதால், படங்கள் அவ்வளவு தெளிவு. இதில் உங்கள் புகைப்படங்கள் மற்றும் இணையத்தில் உள்ள திரைப்படங்கள், ஒளியும் ஒலியும் ஆகியவை தெள்ளதெளிவாக காணலாம்.
4. ஐ போட் ஆகவும் இது வேலை செய்கிறது. உங்களுக்கு தேவையான  பாடல்களை கேட்டு மகிழலாம்.
5.  வீடியோ கேம்ஸ் விளையாடி கொள்ளலாம்.
6. ஐ புக்ஸ் எனும் ஆபிளின் ஆன்லைன் வர்த்தக இணையத்தில் உங்களுக்கு தேவையான புத்தகத்தை வாங்கி அதனை தரவிறக்கம் செய்து ஐ பேடில் படித்து கொள்ளலாம்.

7. கூகிளின் மாப்ஸ் காண வழி வகை உண்டு என்பதால், உங்கள் நண்பனின் வீட்டுக்கு வழி தெரியாமல் அல்லாட வேண்டியதிலை.( இதற்க்கு 3G தொழில் நுட்பம் அவசியம். இந்தியாவில் எப்போது வருமென தெரியவில்லை.)
8.வீட்டம்மணி சொல்லும் கறி காய் மற்றும் பல சரக்கு சாமான்களை ஐ பேடில் எழுதி வைத்து, வரும்போது அவள் சொன்ன சாமான்கள் அதனையும் மறக்காமல் வாங்கி வந்து..'இந்த மனுஷனுக்கு எத்தன தடவ சொன்னாலும்...' போன்ற அர்ச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
9. உங்கள் நாட்குறிப்புகளை தடவி(எழுதி) வைக்கலாம்.
10. ஐ பேட் வாங்கி தடவல் மன்னன் என்ற பெயர் வாங்கலாம்.
11. லாம்.. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...

ஐ பேட் சந்தைக்கு வந்தபின் அதனை சுற்றி பிரச்சனைகளும் வந்தாச்சி. வொயர்லெஸ் சரியாக வேலை செய்யவில்லை, எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிரைவ் பொறுத்த இயலவில்லை, யு எஸ் பீ போர்ட் இல்லை என பல இல்லைகள்.

ஆப்பிள் இன் ஐ பேட் க்கு போட்டியாக இப்போது எச் பீ நிறுவனம் புதிய டேப்லெட் பீ சி யுடன் களமிறங்கி இருக்கிறது. சரியான போட்டி இருக்கும் என தெரிகிறது.

இருந்தாலும் ஆப்பிள் இன் வெறி பிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில், ஆப்பிள் எந்த சாதனத்தை புதிதாக அறிமுகப்படுத்தினாலும் அதனை வாங்கி சந்தோசம் அடையும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும், ஒரு ஆப்பிள் ஸ்டோரில் சந்தித்து காதலித்து ஒரு ஆப்பிள் ஸ்டோரிலேயே மணம் முடித்த கதையும் உண்டு.

ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்த போகும் அடுத்த ஆப்பிள் இன் சாதனத்துக்கு டெக்னாலஜி உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
--

Monday, March 29, 2010

சூப்பர்மேனின் தேவதை...!


அமெரிக்கர்கள் என்றாலே.. கணவர்களை, மனைவிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் என்ற கூற்று நம் நாட்டில் என்றென்றும் நிலவி வரும் செய்தி. காதல் என்பது உலகம் முழுதும் பொதுவான ஒன்றே என அறிந்து கொள்ள டானா ரீவ்ஸ் என்ற இந்த பெண்ணேசாட்சி.

டானா ரீவ்ஸ் , நடிப்பு பயிற்சி பெற்றிருந்தாலும், ஒரு கிளப்பில் பாடகி.

1987 இல் சூப்பர் மேன் பாகம் ஒன்று மற்றும் ரெண்டு படங்களில் நடித்து உலக புகழ் பெற்று சூப்பர் மேனாகவே மக்களால் மதிக்கப்பட்டார் கிறிஸ்டோபர் ரீவ்ஸ். அவர் தனது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சோகத்தில் இருந்தார். அப்போது கிளப்பில் பாடிய டானாவின் குரல் அவரை என்னவோ செய்ய, ப்ரோக்ராம் முடிந்ததும் தானாகவே வலிய தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் கிறிஸ்.அதன் பின்னர் அவர்கள் டேடிங் செய்ய ஆரம்பித்து.. தன தேவதை டானாவே என முடிவு செய்து அவளை கிறிஸ் 1992 இல் மணந்து கொண்டார்.1995 வரை தேவதை கதைகளில் வரும் இன்பமான வாழ்கை வாழ்ந்தார்கள். அவர்களின் காதலுக்கு சாட்சியாக பிறந்த மகனுக்கு வில் ரீவ்ஸ் என பெயர் வைத்தார்கள்.

1995 மே 27 தேதியில் நடந்த சம்பவம் தான் அந்த குடும்பத்தையே புரட்டி போட்டது. ஆம் குதிரையில் சென்று கொண்டிருந்த கிறிஸ் ரீவ்ஸ் குதிரையில் இருந்து தூக்கி எறியப்பட்டு தலை தரையில் முட்டி, முதுகெலும்பு உடைந்து, கழுத்துக்கு கீழே முற்றிலும் செயல் இழந்தவராக மாறிப் போனார். உலகத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய சூப்பர்மேனின் வாழ்க்கை அடுத்தவர் தயவில் என மாறிப்போனது.

முதலில் உடைந்த போதும், திருமணம் செய்தபோது செய்த சத்தியமான, 'இன்பத்திலும் துன்பத்திலும் உன்னுடையவளாய் இருப்பேன்' என்பதை செயல் படுத்த ஆரம்பித்தார் டானா. மனதளவில் உடைந்து போன கிறிஸ்சை தனது அன்பாலும், காதலாலும் தேற்றி அவரே தனது உலகமென வாழ்ந்து கிறிஸ்சை திடப்படுத்தினார்.

சூப்பர் மேன் இனிமேல் அவ்வளவுதான் என எள்ளி நகையாடியவர்கள் மத்தியில், கிறிஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நடிக்கவும், திரைப்படம் இயக்கவும் தயாரானபோது ஹாலிவூட்டே ஆச்சர்யமாக பார்த்தது. கிறிஸ்சின் தன்னம்பிக்கையும் டானாவின் காதலும் அரவணைப்புமே அதற்க்கு காரணம் என அவர்களை ஒரு ஆதர்ச தம்பதியாய் உலகமே கண்டது. அவர்களின் காதல் மேலும் இறுகியது. டானா நடிப்பு மற்றும் பாட்டு ஆகியவற்றுடன்சேர்ந்து , உடல் ஊனமுற்ற மற்றும் உடல் குறைபாடுள்ளவர்களுக்காக தனது கணவனுடன் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தார்.

1996 ஆம் வருடத்தில் தனது கணவனின் பெயரில், கிறிஸ்டோபர் ரீவ்ஸ் பௌண்டேஷன் என்ற உடல் ஊனமுற்றோருக்கான அறக்கட்டளை நிறுவி உடல் ஊனமுற்றோருக்கும், முதுகு தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவினார். Oct. 10, 2004 அவர் கலிபோர்னியா மாகணத்தில் சேவை முனைப்பில் இருந்தபோது கிறிஸ் ரீவ்ச்க்கு மாரடைப்பு வர தனது கணவன் சாகுமுன் அவனை காண பறந்து வந்தார் டானா. ஆனால் அவருக்கு அந்த தருணம் கிட்டவில்லை.

அதன் பின்னர் Care Packages: Letters to Christopher Reeve from Strangers and Other Friends. என்ற புத்தகத்தை தனது கணவனின் பெயரால் எழுதினார். அவருக்கு பல விருதுகள் கிடைத்தாலும் அவர் முக்கியமாக கருதுவது, 2005 இல் அமெரிக்கன் கான்செர் சொசைட்டி வழங்கிய 'மாதர் ஆப தி இயர்' என்ற விருதை தான்.

அவருக்கு மேலும் சோகங்கள் தொடர்ந்தன. ஆகஸ்ட் 2005 இல் அவர் தனக்கு இரப்பையில் கான்செர் இருக்கிறது என அறிவித்த பொது உலகமே அவருக்காக இரங்கியது. கீமோ தெரபி ரேடியோ தெரபி என சிகிச்சைகள் மேற்கொண்டாலும் மார்ச் 6, 2006 இல் சிகிச்சைகள் பலனளிக்காமல் தனது காதல் கணவருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஒரு டிவி பேட்டியில் 'நீங்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்துள்ளீர்கள். எங்கிருந்து உங்களுக்கு அதனை எதிர் கொள்ள பலம் கிடைக்கிறது?' என கேட்கப்பட்டபோது. அவர் கூறியபதில்...

"For years, my husband and I lived on -- and because of -- hope. Hope continues to give me the mental strength to carry on."

' என் கணவரும் நானும் இவ்வளவு நாள் வாழ்ந்ததற்கு காரணம்..நம்பிக்கை. நம்பிக்கை மட்டுமே எனக்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன பலத்தை தருகிறது...'

இறந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, அமெரிக்க ஜனாதிபதி,தலை சிறந்த ஹாலிவூட் நடிகர்கள், அவரது அறக்கட்டளையால் உதவி பெற்றவர்கள், கொடுத்தவர்கள், என வந்த கூட்டத்தை , நிச்சயம் ஒரு நட்சதிரமாகவேண்டும் என்ற உந்துதல் கொண்ட அந்த சூப்பர்மேனின் நியூ யார்க் தேவதை அறிந்திருக்கவில்லை.

'நவ் அண்ட் பாரெவர்' டானா ரீவ்ஸ் கடைசியாய் பாடிய பாடல் மற்றும் அவரது பேட்டி . உங்களுக்காக...

--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...