Showing posts with label பெண்மை.. Show all posts
Showing posts with label பெண்மை.. Show all posts

Wednesday, February 13, 2013

பெண்களுக்கெதிரான தேசம்!




நம் தேசத்தின் ஆணாதிக்கத்துக்கு இதோ, இன்னொரு பலி. காதல் என்ற வன்முறையால், அமிலத்தில் அழுத்தப்பட்டு, தனது சிறகுகள் கருகி, உயிரை விட்டிருக்கிறது இந்த வண்ணத்து பூச்சி. புன்னகை தொலைத்துவிட்ட தேசமோ, தேவதைகளை காக்க வழி அறியாது தலை குனிந்து மௌனமாக நிற்கிறது.

ஏன் இந்த நாடு பெண்களுக்கெதிரான தேசமாக மாறிப் போனது. மொத்தம் உள்ள 135 நாடுகளில், பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவின் இடம் 113. இந்த தேசத்தில் தான் அதிக பெண் தெய்வங்கள் தெய்வமாக வழி படப் படுகிறார்கள்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆணாதிக்க தேசத்தில், பெண்களுக்கெதிரான வன்முறையை ஊடகங்களிலும், சினிமாவிலும் நய்யாண்டி செய்து கொண்டு அவர்களை அவமதித்து வாழும் தேசமிது. பெண் என்றால், காமத்துக்கு உருவாக்கப்பட்ட ஒரு வடிகாலாகத்தான் இந்த நாட்டின் ஒவ்வொரு ஊடக எந்திரமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரம், அவளது எதிர்கால நலன் கருது எழுபது விழுக்காடுகள் வெளியே வருவதே இல்லை. பெண்கள் இப்படித்தான் உடை அணியவேண்டும் எனில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த படுவார்கள் என்று சொல்லி தரும் பெரியோர்கள், தங்கள் வீடு ஆண்கள் பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை சொல்லித் தருவது இல்லை.

நேற்று ஏழு வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் பதிமூன்று வயதுக்குட்பட்ட மூன்று சகோதரிகள், கற்பழிக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

பெண்கள் பயமில்லாமல் நடமாடும் ஒரு இந்தியாவை என்று உருவாக்கப் போகிறோம்? இந்த கேடு கேட்ட நிலைமைக்கு, நம் நாட்டின் ஊடகம் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. பெரும் பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் எல்லாம், அரை குறை ஆடைகளுடன் பெண்களின் படங்களை வெளியிட்டு, மனதின் அடியே அமிழ்ந்து கிடக்கிற பாலுணர்வுகளை வெளியே கொண்டு வருகின்றன. இன்றைய திரைப்படங்களின் வசூலே பெண்களின் இடைகளிலும் தொப்புள்களிலும், மேலும் பல சாமாசாரங்களிலும் தான் இருக்கிறது.

தனக்கு கிடைக்காத பெண் வேறு எவனுக்கும் கிடைக்க கூடாது என தனது கதாநாயகனை விட்டே உலகத்துக்கு பாடம் சொல்லித் தருகிறது. காதல் மட்டுமே உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்றும் காதல் இல்லாவிட்டால் செத்து ஒழி என்றும் பாடம் புகட்டுவது திரைப்படங்கள் தான். பாலியல் வறட்சி நிறைந்த தேசத்தில், மனித அடிமன வக்கிரங்களை வெளியே கொண்டுவர, 'கலாச்சாரத்திற்காக' பாடுபட்டுக் கொண்டிருப்பதாக பீற்றிக் கொள்ளும் எழுத்தாளர்களுமே தங்கள் புத்தகம் விற்பதற்காக, அதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்தால் அடைந்துவிட கூடிய வெறியை ஒருவனுக்கு ஊட்டுவதற்கு அவனது பெற்றோர் தான் மிகப் பெரிய காரணமாக இருக்கிறார்கள். குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதற்காக ஓடி ஓடி வேலை செய்யும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கவனிக்க மறந்து அந்நியமாகிப் போக, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே அறியாமல் போக, குழந்தைகளோ, வளரும் பிராயத்தில் தங்களுக்குள் நடக்கும் ரசாயன உணர்வு மாற்றங்களை அறியாமல் குழம்பிப் பொய் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். கற்பு கற்பு என்று பிதற்றிக் கொண்டு, அதனை பெண்களுக்கு மட்டுமே பொதுவானதாக வைத்து விட்டு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால்,'யாரிடமும் சொல்லாதே மானம் பொய் விடும் ' என அவர்களை மிரட்டி, அவர்களது உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே அமிழ்த்தி புழுங்க வைத்து உயிரோடு ஒவ்வொரு நாளும் சாகடிக்கும் கொடுமை, பாலியல் பலாத்காரத்தை விட கொடுமை.

பாலியல் கல்வி, பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்கட்டும். பெண்களை மதிக்க ஆண்களுக்கு, வீடுகள் கற்றுக் கொடுக்கட்டும். ஆண்களை சிறந்த பள்ளிகூடங்களிலும், பெண்களை மோசமான பள்ளிகூடங்களிலும் சேர்ப்பதை வேறுபாடு காட்டுவதை பெற்ற மனங்கள் உணரட்டும். பெற்றோர்களின் நேரம் தினமும் கொஞ்சம் தங்கள் குழந்தைகளுக்காகவும் இருக்கட்டும். இந்த தேசத்தை நம் குழந்தைகள் தான் காப்பாற்ற வேண்டும்.

Monday, February 21, 2011

உலக சினிமா: ஆந்த்ரே நோஸ் (Entre Nos) (இஸ்பான்யோல்)


 திரைப்படங்களில் பல உண்மைகள் பேசுகின்றன. கடந்து போன கதைகளை சொல்லுகின்றன. நம்பிக்கைகளை விதைக்கின்றன. வாழ்வின் விளிம்பிற்கு சென்ற மனிதர்கள் வெற்றி பெற்ற கதைகளை சில படங்கள் உண்மைக்கு அருகே இருந்து காட்டுகின்றன. அவ்வகை திரைப்படங்களாக 'The pursuit of happyness'  போன்ற திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். அந்த திரைப் படங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு, நமது வாழ்கை அவர்களோடு மேலாக இருப்பதை உணர்ந்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களின் தன்னம்பிக்கை கண்டு நமக்கும் நமது மேல் நம்பிக்கை பிறக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கை பெண்மணியின் கதையைத்தான் ஆந்த்ரே நோஸ் திரைப்படம் பேசுகிறது.

கொலம்பியாவின் பகோடா என்ற ஊரிலிருந்து நியூ யார்க் நகருக்கு வேலை தேடி வருகிறது ஒரு குடும்பம். கணவன், மரியானா என்ற மனைவி. அவர்களின் குழந்தைகள் காபி என்ற காப்ரியல் மற்றும் அண்ட்ரியா என்ற சிறுமி. வந்த இடத்தில் கணவன் வேறு ஒரு துணையை தேடிக் கொண்டு, தனக்கு மியாமி நகரில் வேலை கிடைத்திருப்பதாகவும், தான் அங்கு சென்று செட்டில் ஆனா பின்னர் வந்து குடும்பத்தை அழைத்து செல்வதாகவும் கூறி செல்கிறான். நம்பிக்கையுடன் அவனை வழி அனுப்பி வைக்கிறது. அவனது நண்பனின் மூலமாக, மரியானாவுக்கு அவள் கணவன் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை சொல்லப்பட அவள் உடைந்து போகிறாள். 
நமது ஊர் பப்ஸ் போல இருக்கும் எஸ்பனடா என்னும் பலகாரம் செய்து தெருவில் இறங்கி விற்கிறாள்.அதில் வருமானம் வரவில்லை.


ஒருமுறை கோக் டின்களை சேகரிக்கும் ஒருவனை கண்டு அவன் பின்னாலேயே தன குழந்தைகளுடன் தொடரும் மரியன், ரீசைக்ளிங் செய்யப்படும் ஒரு காலி கோக் டின்னுக்கு ஐந்து சென்ட்கள் கிடைக்கும் என அறிந்து கொண்டு, மறுநாள், ஒரு கடையில் இருந்து ஸ்ட்ராலரை திருடும் அந்த குடும்பம், தினமும் காலி கோக் டின்களை குப்பைகளிலிருந்து பொறுக்க ஆரம்பிக்கிறது. அதே தினம், அவளது கணவன் மூன்று மாதமாக வாடகை தராததால், அந்த சைனீஸ் வீட்டுக்காரன், அவர்களை வீட்டில் இருந்து துரத்தி விட, அந்த குடும்பம் பார்க்குகளிலும், ரயில் மேம்பாலங்களிலும் தங்குகிறது.  யாரோ சொன்ன ஒரு முகவரியை வைத்துகொண்டு, நியூ யார்க் நகரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாரத்துக்கு 150$  வாடகைக்கும் தங்குகிறார்கள். அப்போது தான் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள் மரியான். இருக்கிற கஷ்டம் போதாமல் இது வேறயா என விக்கித்து நிற்கும் வேளையில் அந்த இந்திய பெண் அவள் கருவை கலைக்க உதவுகிறாள்.  நமது ஊரு கிழங்கோ அல்லது மருந்தோ.. எதோ ஒன்றை கஷாயமாக்கி தர, அதுவாகவே கரு கலைந்து விடும் என சொல்லி அவளை பார்த்துக் கொள்கிறாள்.

கருகலைப்பு தனது மதத்துக்கு விரோதம் என தெரிந்தும் ஆலயம் சென்று கடவுளிடம் மன்னிப்பு வேண்டி அழுகிறாள். கரு கலைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பம் குப்பையில் கிடக்கும் காலி கோக் டின்களை பொறுக்கி முன்னேறுகிறது. அவளது ஒவ்வொரு கஷ்டத்திலும் அவளுக்கு துணையாக அவளது மகன் காப்ரியல் இருக்கிறான். எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதமாதிரி காட்டிக் கொள்ளும் அவன், தன தாய் கஷ்டப்படும் போதெல்லாம், தனியனாக கோக் டின்கள் பொறுக்கி குடும்பம் காக்கிறான். படத்தின் முடிவில், இந்தப் படம் ஒரு உண்மை கதை என்றும், தற்போது மரியன், காப்ரியல் மற்றும் ஆண்ட்ரியா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கார்டு போடும்போது நம் மேனி சிலிர்ப்பது உண்மை.

மரியனாக நடித்திருக்கும் பாவ்லா மண்டோசா தான் படத்தின் பிரதான பாத்திரம். தனது இயலாமையும், தன்னம்பிக்கையும் ஒரு சேர  தன முகத்தில் படம் நெடுக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தை க்ளோரியா லா மார்த்தே என்ற மற்றொரு பெண்ணோடு சேர்ந்து எழுதி இயக்கி இருப்பவரும் இவரே.

படத்தில் காப்ரியல்ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன் தான் இந்த படத்தின் கதாநாயகன். எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாதது போல முகத்தில் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு, தன அம்மாவின் சிரமம் புரிந்து அவளது கஷ்டங்களில் தோள் கொடுத்து தன்னால் இயன்ற அனைத்து செல்லும் ஒரு கதாபாத்திரம், அனைத்து அன்னைகளுக்கும் ஒரு உதாரண மகனாக சிறந்த நடிப்பு.

இந்த திரைப்படம் உலகெங்கும் பலவித விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.
                                             இந்த திரைப்படம் வாங்கிய விருதுகள்.

படம் மெதுவாக நகர்ந்தாலும், ஒரு அற்புதமான நெகிழ்வையும், எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டாலும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இந்த உலகத்தில் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை இயக்கத்துக்கு சொந்தமான பெண்கள் க்ளோரியாவுக்கும் பாவ்லா மண்டோசாவுக்கும் ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

இந்த படத்தை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் பாருங்கள்.

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி கீழே...



Saturday, May 8, 2010

மதர்!

வணக்கம்.
இது எனது நூறாவது பதிவு. நான் பதிவு எழுத ஆரம்பித்து ஒண்ணரை ஆண்டுகளில் நான் சம்பாதித்தது இருபத்தைந்து பாலோயர்களையும் இருபதாயிரத்தை நெருங்கும் ஹிட்ஸ் களையும். என்னை வாசித்த, வாசித்து கொண்டிருக்கிற, வாசிக்க போகும் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் ஒரு சிறந்த பதிவர் என்றோ சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன் என்றோ மார் தட்டி கொள்ள வில்லை. அதற்க்கு எனக்கு தகுதியும் கிடையாது என்றும் எனக்கு தெரியும். எனினும்  சிறுகுழந்தை ஒரு பலப்பத்தில் 'அ' 'ஆ' என எழுதி பழகுதல் போல என பதிவு பயணம் இப்போது துவங்கியுள்ளது என்றே கருதுகிறேன். தோள் கொடுக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும், குறிப்பாக எனது எழுத்தை நம்பி என்னை தொடரும் அந்த இருபத்தைந்து பேர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் ஒரு வாரமாக பதிவு இடாத காரணம், அன்னையை பற்றி அன்னையர் தினம் அன்று எழுத வேண்டும் என்ற உந்துதலே. தற்செயலாக இது எனது நூறாவது பதிவாகவும் அமைந்து விட்டதால், இந்தப் பதிவை, அன்னைக்கும் உலகெங்கும் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் காணிக்கைஆக்குகிறேன்.




அன்னை என்றாலே என் நினைவுக்கு வருவது அன்னை தெரேசா தான். ஒரு துறவி எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர்.
 காரணம் அவர் இறந்த பொது அவருக்கென சொத்து எதுவும் இல்லை.
 அவரது சொத்து எல்லாம் தெருவில் கிடக்கும் ஆதரவற்றோரும் அநாதைகளும் தான்.
ஆகஸ்ட் 26 1910இல் அல்பானியா நாட்டின் குக்கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் கடைசி மகளாக பிறந்தவர் அக்னேஸ். தனது பதின்ம வயதுகளிலேயே ஒரு கத்தோலிக்க துறவியாக, பிறருக்கு சேவை செய்யும் செயல் வீரராக ஆக வேண்டும் என முடிவு செய்தவர், தனது பதினெட்டாவது வயதில் லோரெட்டோ என்ற சபையில் தன்னை ஒரு கன்னிகாஸ்த்ரியாக இணைத்து கொண்டார்.

அவரது சபையின் கிளை இந்தியாவில் இருக்க அவர் டார்ஜீலிங் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கன்னிகாஸ்த்ரியாக பட்டம் பெற்றதும் இந்தியாவில் தான். அவரை சபை ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்ய பணித்தது. கல்கத்தாவின் வறுமையும், தெருவோரத்தில் கிடக்கும் குஷ்டரோகிகளும், முடவர்களும், கை விடப்பட்டவர்களும் அவர்களின் கஷடங்களும் அவரை வாட்ட, அவர்களுக்காக தனது சபையை துறந்து மிஷனரீஸ் ஆப சாரிடீஸ் என்ற சபையை ஆரம்பித்தார். அநாதை குழந்தைகள், தெருவில் கிடந்த தொழு நோயாளிகளை அழைத்து வந்து அவர்களை சுத்தப்படுத்தி, உணவளித்து, அவர்களுக்கும் ஒரு உலகத்தை தனது பதிமூன்று பேரால் ஆரம்பிக்கப்பட்ட சபையின் மூலம் காண செய்தார்.
அவரது சேவைக்கு கோடி கொடியாக பணம் கொட்டவில்லை. அவருக்காக அவர் மாளிகை எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் பணமும் கிடையாது. பிச்சை எடுத்தார். கல்கத்தாவின் தெருக்கள் முழுக்க அவரது பாதம் பட்டிருக்கிறது. தெரு தெருவாக பிச்சை எடுத்தார்.

ஒருமுறை ஒரு கடை காரனிடம் 'எனது குழந்தைகளுக்கு ஏதாவது தாருங்கள்' என கை ஏந்தியபோது, அவன் எரிச்சலில் அவரது இடது கையில் காரி துப்பி விட்டான். சிறிதும் சஞ்சலப்படாத அன்னை,'இது நீங்கள் எனக்கு கொடுத்த பரிசு, இந்த மறு கையில் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்' என சொல்ல, தன தவறுணர்ந்த அந்த கடை முதலாளி, அவருக்கு அன்று முதல் தீவிர கொடையாளியாக மாறினான்.

இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட அந்த சேவை நிலையம் இன்று உலகெங்கும் தனது கிளைகளை பரப்பி, கைவிடப்பட்ட மக்களுக்கு, ஒரு அன்னையாக சேவை புரிந்து வருகிறது.

மதர், நாட்டின் சிறந்த முதல்வர்களுள் ஒருவராக மதிக்கப்படும் வங்காள முன்னாள் முதல்வர் ஜ்யோதி பாசுவுக்கு சிறந்த நட்பாக இருந்தார். மதரின் இல்லம், வங்காள அரசாங்கம் மூலம் அவர் வழங்கியது தான்.

உலகின் உயரிய விருதான நோபெல் பரிசு முதல் அவர் வாங்காத விருதில்லை. 'வாழும் புனிதர்கள்' என டைம்ஸ் இதழ் இவரின் அட்டைப்படத்துடன் செய்தி வெளி இட்டது.


செப்டம்பர் 5 1997 மதர் மறைந்த அதே சமயத்தில் இளவரசி டயானாவும் மறைந்ததால், டயானாவின் உலகளாவிய அழகும் புகழும் அவளுடைய செய்தியே பிரதானமாக போனது. உலகத்தை, அழகு வென்றது.


மதரின் சேவை பற்றியும் குறை சொன்னவர்கள், சொல்பவர்கள் இன்றும் உண்டு. அவர் ஒரு மதத்தின் பெயரால் இதை செய்து மதம் மாற்ற முயல்கிறார் என்று. சாகும் தருவாயில், அன்னையின் அரவணைப்பில் இருந்த ஒரு குஷ்ட நோயாளி பின்வருமாறு கூறுகிறான்.

 'ஒரு பிச்சைக் காரனாக வாழ்ந்தேன். அன்னையின் கருணையால், ஒரு தேவதையை போல சாகிறேன்'

இந்த மகிழ்ச்சியை எந்த மதத்தினரும் அளிக்கலாம். ஒவ்வொரு மதத்தினரும் இப்படி சேவை நிறுவனங்கள் துவங்கி கைவிடப்பட்டோருக்கு சேவை செய்ய துவங்கினால், நாட்டில் எவருமே கைவிடப்பட்டவர்களாகவும்,அநாதைகளாகவும் இருக்கமாட்டார்கள்.

நாம் ஒவ்வொருவருமே, பிறக்கும்போது கைவிடப்பட்ட குழந்தைகள் தான். நம்மை தமது அரவணைப்பில் வைத்து பாதுகாப்பது நமது தாய் தான்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Monday, March 29, 2010

சூப்பர்மேனின் தேவதை...!


அமெரிக்கர்கள் என்றாலே.. கணவர்களை, மனைவிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் என்ற கூற்று நம் நாட்டில் என்றென்றும் நிலவி வரும் செய்தி. காதல் என்பது உலகம் முழுதும் பொதுவான ஒன்றே என அறிந்து கொள்ள டானா ரீவ்ஸ் என்ற இந்த பெண்ணேசாட்சி.

டானா ரீவ்ஸ் , நடிப்பு பயிற்சி பெற்றிருந்தாலும், ஒரு கிளப்பில் பாடகி.

1987 இல் சூப்பர் மேன் பாகம் ஒன்று மற்றும் ரெண்டு படங்களில் நடித்து உலக புகழ் பெற்று சூப்பர் மேனாகவே மக்களால் மதிக்கப்பட்டார் கிறிஸ்டோபர் ரீவ்ஸ். அவர் தனது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சோகத்தில் இருந்தார். அப்போது கிளப்பில் பாடிய டானாவின் குரல் அவரை என்னவோ செய்ய, ப்ரோக்ராம் முடிந்ததும் தானாகவே வலிய தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் கிறிஸ்.அதன் பின்னர் அவர்கள் டேடிங் செய்ய ஆரம்பித்து.. தன தேவதை டானாவே என முடிவு செய்து அவளை கிறிஸ் 1992 இல் மணந்து கொண்டார்.1995 வரை தேவதை கதைகளில் வரும் இன்பமான வாழ்கை வாழ்ந்தார்கள். அவர்களின் காதலுக்கு சாட்சியாக பிறந்த மகனுக்கு வில் ரீவ்ஸ் என பெயர் வைத்தார்கள்.

1995 மே 27 தேதியில் நடந்த சம்பவம் தான் அந்த குடும்பத்தையே புரட்டி போட்டது. ஆம் குதிரையில் சென்று கொண்டிருந்த கிறிஸ் ரீவ்ஸ் குதிரையில் இருந்து தூக்கி எறியப்பட்டு தலை தரையில் முட்டி, முதுகெலும்பு உடைந்து, கழுத்துக்கு கீழே முற்றிலும் செயல் இழந்தவராக மாறிப் போனார். உலகத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய சூப்பர்மேனின் வாழ்க்கை அடுத்தவர் தயவில் என மாறிப்போனது.

முதலில் உடைந்த போதும், திருமணம் செய்தபோது செய்த சத்தியமான, 'இன்பத்திலும் துன்பத்திலும் உன்னுடையவளாய் இருப்பேன்' என்பதை செயல் படுத்த ஆரம்பித்தார் டானா. மனதளவில் உடைந்து போன கிறிஸ்சை தனது அன்பாலும், காதலாலும் தேற்றி அவரே தனது உலகமென வாழ்ந்து கிறிஸ்சை திடப்படுத்தினார்.

சூப்பர் மேன் இனிமேல் அவ்வளவுதான் என எள்ளி நகையாடியவர்கள் மத்தியில், கிறிஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நடிக்கவும், திரைப்படம் இயக்கவும் தயாரானபோது ஹாலிவூட்டே ஆச்சர்யமாக பார்த்தது. கிறிஸ்சின் தன்னம்பிக்கையும் டானாவின் காதலும் அரவணைப்புமே அதற்க்கு காரணம் என அவர்களை ஒரு ஆதர்ச தம்பதியாய் உலகமே கண்டது. அவர்களின் காதல் மேலும் இறுகியது. டானா நடிப்பு மற்றும் பாட்டு ஆகியவற்றுடன்சேர்ந்து , உடல் ஊனமுற்ற மற்றும் உடல் குறைபாடுள்ளவர்களுக்காக தனது கணவனுடன் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தார்.

1996 ஆம் வருடத்தில் தனது கணவனின் பெயரில், கிறிஸ்டோபர் ரீவ்ஸ் பௌண்டேஷன் என்ற உடல் ஊனமுற்றோருக்கான அறக்கட்டளை நிறுவி உடல் ஊனமுற்றோருக்கும், முதுகு தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவினார். Oct. 10, 2004 அவர் கலிபோர்னியா மாகணத்தில் சேவை முனைப்பில் இருந்தபோது கிறிஸ் ரீவ்ச்க்கு மாரடைப்பு வர தனது கணவன் சாகுமுன் அவனை காண பறந்து வந்தார் டானா. ஆனால் அவருக்கு அந்த தருணம் கிட்டவில்லை.

அதன் பின்னர் Care Packages: Letters to Christopher Reeve from Strangers and Other Friends. என்ற புத்தகத்தை தனது கணவனின் பெயரால் எழுதினார். அவருக்கு பல விருதுகள் கிடைத்தாலும் அவர் முக்கியமாக கருதுவது, 2005 இல் அமெரிக்கன் கான்செர் சொசைட்டி வழங்கிய 'மாதர் ஆப தி இயர்' என்ற விருதை தான்.

அவருக்கு மேலும் சோகங்கள் தொடர்ந்தன. ஆகஸ்ட் 2005 இல் அவர் தனக்கு இரப்பையில் கான்செர் இருக்கிறது என அறிவித்த பொது உலகமே அவருக்காக இரங்கியது. கீமோ தெரபி ரேடியோ தெரபி என சிகிச்சைகள் மேற்கொண்டாலும் மார்ச் 6, 2006 இல் சிகிச்சைகள் பலனளிக்காமல் தனது காதல் கணவருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஒரு டிவி பேட்டியில் 'நீங்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்துள்ளீர்கள். எங்கிருந்து உங்களுக்கு அதனை எதிர் கொள்ள பலம் கிடைக்கிறது?' என கேட்கப்பட்டபோது. அவர் கூறியபதில்...

"For years, my husband and I lived on -- and because of -- hope. Hope continues to give me the mental strength to carry on."

' என் கணவரும் நானும் இவ்வளவு நாள் வாழ்ந்ததற்கு காரணம்..நம்பிக்கை. நம்பிக்கை மட்டுமே எனக்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன பலத்தை தருகிறது...'

இறந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, அமெரிக்க ஜனாதிபதி,தலை சிறந்த ஹாலிவூட் நடிகர்கள், அவரது அறக்கட்டளையால் உதவி பெற்றவர்கள், கொடுத்தவர்கள், என வந்த கூட்டத்தை , நிச்சயம் ஒரு நட்சதிரமாகவேண்டும் என்ற உந்துதல் கொண்ட அந்த சூப்பர்மேனின் நியூ யார்க் தேவதை அறிந்திருக்கவில்லை.

'நவ் அண்ட் பாரெவர்' டானா ரீவ்ஸ் கடைசியாய் பாடிய பாடல் மற்றும் அவரது பேட்டி . உங்களுக்காக...

--

Tuesday, March 9, 2010

பெண்ணே...நீ..!


பொண்ணா பொறந்தவ தான்
பூமி ஆள பொறந்தவதான்
கண்ணா பொறந்தவதான்
கள்ளிக்கு தப்பி பொறந்தவதான்..

பூமி தாய் தான் உண்டு
பூமி தந்தை கேட்டதுண்டா..
மோதல் வார்த்தை 'அம்மா' ன்னு
சொல்லா குழந்தை பார்த்ததுண்டா..

விண்வெளிக்கும் விரைவாளே..
விளையாட்டிலும் வெல்வாளே
விருதுகளும் பல பெற்று
நாட்டின் மானம் காப்பாளே..

பெண் இல்லா துறை ஏதும்
உண்டா இவ்வுலகத்திலே..
இல்லைன்னு சொல்லுங்களே..
அதிலும் இவள் சாதிப்பாளே

உனக்குள்ளே உயிர் வளர்க்க
உனக்கு மட்டும் உரிமை உண்டு.
நீ உயிரை படைப்பதாலே..
நீயும் ஒரு கடவுளானாய்

இருபதாண்டு மேலாக
உன்னை வளர்த்த குடும்பம் விட்டு
எனை வளர்க்க வந்ததாலே
எனக்கும் நீ தாயானாய்...

பெண்கள் தினத்தில்...பெண்மையை வணங்கி... நிலா முகிலன்.

Wednesday, November 4, 2009

முக்தர் மயி - ஒரு பழங்குடிப் பெண் போராளி.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மலை கிராமம் மீர்வாலா. மச்தோய் பலோச் என்ற பழங்குடியினர் அதிகமாக வாழும் கிராமம். 2002 ஆம் வருடம். தனது பதினாலு வயது தம்பி எதிரி குடியினரின் பெண்ணுடன் சுத்துவதாக கிளம்பிய வதந்தியால் பஞ்சாயத்து கூடப்படுவதை கண்டு மனம் பதை பதைத்து பஞ்சாயத்துக் கூடத்துக்கு ஓடி வருகிறாள் அந்த முப்பது வயதுப்பெண் முக்தர் மாய். தன தம்பி ஒரு பாவமும் அறியாதவன் என்றும் அவனை விட்டு விடுமாறும் பஞ்சாயத்தினர் முன் கெஞ்சி கதறி அழுகிறாள். பஞ்சாயத்தினரோ,
'உனது தம்பி நமது குடிக்கு கேடு விளைவித்துவிட்டான். அவனை மன்னிக்கவேண்டுமென்றால் நீ அதற்க்கு பரிகாரம் செய்யவேண்டும் செய்வாயா?' என கேட்கிறது.

தனது தம்பி மேலுள்ள பாசத்தினால் வரப்போகும் ஆபத்தை அறியாத அந்த அபலைப் பெண் சரி என்பதாக தலையை ஆடுகிறாள். பஞ்சாயத்தினர் நிரூபிக்கப்படாத அந்த வதந்திக்கு அந்த அதிர்ச்சியான அபாயமான அதிரடியான தீர்ப்பை வழங்குகிறார்கள்.

'இந்த பெண்ணின் சகோதரன் தனது நடத்தையினால் நமது குடிக்கு அபகீர்த்தி விளைவித்துவிட்டான். இந்த பெண்ணின் வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ஒரு ஞாயமான தீர்ப்பை வழங்குகிறது. இந்த பெண்ணின் சகோதரனால் நம் குடிக்கு ஏற்ப்பட்ட அவமானம் மொத்தமும் இந்த குடும்பத்துக்கே செரக்கடவது எனவே நம் குடியில் உள்ள நால்வர் இந்த பெண்ணை நம் கிராமத்து மக்கள் அனைவரின் முன்னிலையில் வன்புணர்ச்சி செய்யவேண்டும். அதன் பின்னர் இந்த குடும்பத்தினர் அனைவரும் அதனை நினைத்து நினைத்து வெட்கி வாழ்நாள் முழுதும் வாழவேண்டும்.'

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண்ணின் தந்தை பஞ்சாயத்தின் முன் கீழே விழுந்து அழுது புரள்கிறான். அவனை உதாசீனப்படுத்திவிட்டு கிராமத்தின் முன்னிலையில் அந்த அக்கிரமம் அந்த பெண்ணின் கதறலில் அரங்கேறுகிறது. ஒட்டு மொத்த கிராமமும் அந்த அட்டூழியத்தை கண்டு அமைதியாக இருக்கிறது. அந்த நால்வரும் அந்த பெண்ணை சின்னாபின்னாபடுத்தி போடுகிறார்கள். கந்தலாக கிடந்த அந்த பெண்ணை அவளது தந்தை தன பெண்ணின் நிலையை எண்ணி கதறியபடி ஒரு ஆடையை கொண்டு போர்த்தி வீட்டுக்கு தூக்கி போகிறான்.

தனக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணி எண்ணி முக்தர் அழுது தற்கொலைக்கு முயன்று தோற்க்கிறாள். அவள் தனது குடும்பத்தின் துணையோடும் நண்பர்களின் ஆதரவுடனும் உடல் நிலையிலும் மன வலிமையிலும் தேர்ச்சி பெறுகிறாள். அவளுடைய பால்ய தோழிகளான நஸ்ரீன் அக்தர்,நசீம் அக்பர் மற்றும் ஜமில் அஞ்சும் அவளுக்கு உறுதுணையாக இருந்து தோள் கொடுக்க ஒரு இஸ்லாமிய இமாமின் துணை கொண்டு காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அநீதியை அரக்க செயலை புகாராக கொடுக்கிறாள். அந்த புகார் முதலில் ஏற்றுக் கொள்ள படவில்லை. தான் கற்பழிக்கப்பட்டவள் என வெளிப்படுத்திக்கொள்ள எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டாள் என்கிற தைரியத்தில் அவளது கிராமத்து பஞ்சாயத்து மனிதர்கள் இருக்க, தனது தோழர்களுடன் அந்த இஸ்லாமிய இமாமின் உதவியுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்களின் வாயிலாக உலகுக்கு தெரிவிக்கிறாள்.

இந்த அநீதி உலகெங்கும் பறைசாற்றப்பட, பாகிஸ்தானின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு அவளுக்கு தண்டனை அளித்த கொடியவர்கள் கைது செய்யபடுகிறார்கள். நீதி மன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் மகிழ்வடைந்த முக்தர் இப்படி சொல்கிறாள்.
'இது எனக்கு உண்டான தீர்ப்பு அல்ல. இது போன்ற தீர்ப்பு எழுதும் பஞ்சாயத்தருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு. கல்வி அறிவும் உலக அறிவும் இல்லாத பெண்களை கொடுமை செய்யும் உலகத்தினருக்கு எதிரான தீர்ப்பு'
என முழங்கினாள்

அவளுக்கு அரசாங்கத்தின் பேரில் நாலு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இஸ்லாமாபாத்தின் முக்கிய இடத்தில் முக்தர் தன குடும்பத்துடன் வசிக்க ஒரு பெரிய வீடும் கொடுக்கப்பட்டது. அதனை மறுத்துவிட்ட முக்தர், அரசு தனக்கு அளித்த நாலு லட்சத்தில் தனது கிராமமான மீர்வாலாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்றை துவக்கினாள்.அவளும் அவளது தோழிகளும் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்க துவங்கினார்கள். சமுதாயத்தைச் எதிர்கொள்ளும் பக்குவம் அங்கு பெண்களுக்கு போதிக்க படுகிறது.
தானும் ஒரு மாணவியாய் அந்த பள்ளியில் கல்வி கற்றார் முக்தர். தனது பள்ளியில் மற்ற மாணவியரோடு தானும் மாணவியாய்....

அறியாமையே பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணம் என்பது முக்தர் மயி யின் முழக்கம். அந்த அறியாமை இருளை இன்றைய இளம்பெண்களிடம் இருந்து அகற்றவே அவர் பள்ளிகள் துவங்கி உள்ளார்.
உலகம் முழுதும் அவர் வரவேற்கப்படுகிறார். பல விருதுகள் அவரை தேடி வருகிறது.
அவற்றில் சில.

ஆகஸ்ட் 2 2005 பாகிஸ்தான் அரசாங்கத்தின் வீர தீர செயல்களுக்கான பாத்திமா ஜின்னா தங்க பதக்கம்.
நவம்பர் 2 2005 அமெரிக்க இதழான கிளாமர் 'இந்த வருடத்தின் சிறந்த பெண்' (woman of the year) என கெளரவம்.
ஜனவரி 2006 - அவரது கதை ஜெர்மனி இல ஜேர்மன் மொழியில் மற்றும் பாரிசிலிருந்து ப்ரென்ச் மொழியிலும் புத்தகமாக வெளி வந்தது. அதனை வெளியிட அவர் பாரிசுக்கு அழைக்கப்பட்டு அரசாங்க மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.
2 மே 2006 இல நியூ யோர்க்கின் ஐ நா சபையில் அவர் பேட்டி காணப்பட்டு அது ஒளிபரப்பானது. அவர் அங்கு சொன்னது..'தனது நீதிக்காகவும் தனது அடுத்த தலைமுறையின் நீதிக்காகவும் தான் பாடு பட போவதாக சொன்னார்'
மார்ச் 2007 இல வடக்கு தெற்கு விருது ஐரோப்பா ஒன்றியத்தால் வழங்கப்பட்டது.

பெண் இன கொடுமைகளால் மனம் புழுங்கி உள்ளுக்குள்ளேயே தவித்திருக்கும் பெண்களுக்கு மத்தியில் முக்தர் மயி ஒரு எடுத்துக்காட்டு. அவரது கல்வி பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி. தகவல் உதவி விக்கிபீடியா

Tuesday, September 29, 2009

வீரப்பெண் ருக்க்ஷானா


என்னவென்று சொல்வது... புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்பெண் என்ற காலம் பொய், பயங்கரவாதியை துப்பாக்கியால் கொன்று மீதமுள்ள பயங்கரவாதிகளை ஓட ஓட விரட்டிய காஷ்மீரிப் பெண் என்று காலம் வெகுவாக முன்னேறிவிட்டது.

செய்தியை படித்தபோது உடம்பெல்லாம் புல்லரித்தது. அந்த பெண் இருக்கும் திசை நோக்கி கைகள் கூப்பி நின்றது. அவளது வீரம் நிச்சயமாக வணக்கத்திற்க்குரியது.

காஷ்மீர் மாநிலத்தில் 27 செப்டம்பர் இரவு ஒன்பதரை மணியளவில் ஜம்முவின் ரசூரி மாவட்டத்தில் உள்ள கிராமமான தனமண்டி கிராமத்தின் ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது.
வெளியில் மூன்று தீவிரவாதிகள், ஏ கே ரக ஆயுதங்களுடன், ருக்க்ஷானாவை வீட்டின் வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டது அவர்கள் குரல். ருக்ஷானாவின் பெற்றோர் அவளை மறைத்து வைத்துவிட்டு அவர்களுடன் அனுப்ப மறுக்க, அவர்களை தாக ஆரம்பித்தனர் தீவிரவாதிகள். ருக்ஷானாவின் தம்பி தங்கள் பெற்றோரை காக அவர்களை நோக்கி ஒரு கோடாலி எடுத்து வீச தடுமாறி விழுந்த தீவிரவாதியின் ஏ கே ரக துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி சுட்டாள் ருக்க்ஷானா. அங்கு வந்த குழுவின் தலைவனான அவன் அதே இடத்தில் மாண்டு போனான். எஞ்சி இருந்தவர்களை நோக்கி சுட்டு அவர்களை காயமுற செய்து அவர்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு ஓட ஓட விரட்டி உள்ளனர், ருக்ஷனாவும் அவளது குடும்பத்தினரும். இறந்து போன தீவிரவாதி லஸ்கர் எ தோய்பா குழுவை சேர்ந்த பாகிஸ்தானை சேர்ந்த உஸப்ப ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிராம பாதுகாப்பு குழு தந்த பயிற்சியே தனக்கு துப்பாக்கியை இயக்க மிகவும் உதவியது என கூறி இருக்கிறார் ருக்ஷானா. அவருக்கும் அவரது தம்பிக்கும் அவர்களது தைரியத்தை மெச்சி போலீஸ் வேலை தர உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாம். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளதாம். இது போதாது . தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டி மற்ற காஷ்மீரி மக்களுக்கு, உதாரண பெண்மணியான ருக்ஷனாவுக்கு மேலும் விருதுகள் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் மற்ற மக்களுக்கும் கிராம பாதுகாப்பு குழுவின் பயிற்ச்சி அவசியம். மக்கள் வெகுண்டெழுந்தால், தீவிரவாதம் தலை தூக்காது. ஏன் எந்த எதிரி நாடும் நம்மிடையே வாலாட்ட துணியாது.

பயங்கரவாதிகளை கண்டு நடுங்கும் நமக்கு முன்னால் ஒரு உதாரண பெண்மணியாக, தைரிய லட்சுமியாக விளங்கும் ருக்ஷானாவையும் அவளது குடும்பத்தையும் இருகரம் குவித்து வாழ்த்தி வணங்குகிறேன்.
-----

Tuesday, September 15, 2009

ஒரு தாயின் தாகம்!


குழந்தை பிறந்தால் போதும்.நமது பெண்களுக்கு கவனம் எல்லாம் குழந்தையின் மீது. தங்களது கடந்தகால சாதனைகளை மறந்து விடுவார்கள். உடல் மேல் அக்கறை இல்லாமல் பெருத்து விடுவார்கள். தாங்கள் பெரிய நடன கலைஞராக இருப்பார்கள். பெரிய விளையாட்டு வீராங்கனையாக இருப்பார்கள். அலுவலகங்களில் மேலதிகாரியாக இருப்பார்கள்.ஆனால் குழந்தை பிறந்ததும் அனைத்தும் குழந்தைக்காக என தங்களது வாழ்கையை, சிந்தனையை அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்கையையே மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.அத்துடன் அவர்களது லட்சியம் எல்லாம் தொலைந்து விடும்.

2005 இல யு எஸ் ஓபன் சாம்பியன். உலக டென்னிஸ் தரப்பட்டியலில் முதலிடம் என இருந்த பெல்ஜியத்தின் கிம் க்ளைட்ஜெர் முதுகு வலி மற்றும் காயம் காரணமாக டென்னிஸ் இலிருந்து ஓய்வு பெற்றார். ஜூலை 2007 இல் அமெரிக்காவின் கூடைபந்து வீரரான ப்ரியன் லிஞ்சை மனம் முடித்த கிம் 2008 பிப்ரவரியில் ஜடா எல்லீ என்ற பெண் பெற்றெடுத்தார்.
மணக்கோலத்தில் கிம்.

டென்னிஸ் விளையாட்டின் மேல் உள்ள காதலும், மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் உந்தி தள்ள, தன கணவனின் ஊக்குவிப்புடன் மீண்டும் டென்னில் விளையாட்டு பயிற்சிகளை ஆரம்பித்தார். ஜனவரி 2009 இல் தனது தந்தையை இழந்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு வெறியுடன் போராடினார். தரபட்டியலில் இல்லாத ஒரு வீராங்கனையான கிம் கிளைட்ஜெர்ஸ் நிச்சயம் இறுதி போட்டி வரை தாக்குபிடிக்க கூடும் என்றே டென்னிஸ் வல்லுனர்கள் யாரும் நினைக்க வில்லை.

டென்னிசில் அசைக்க முடியாத சக்தியான வில்லியம்ஸ் சகோதரிகள் நேர் செட் கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். டென்னிஸ் தரப் பட்டியலில் பத்தாவதாக இருந்த டென்மார்க்கை சேர்ந்த வோஜ்நியாகியை புலி போல எதிர் கொண்டார்.ஆடுகளத்தின் ஓரங்களுக்கு ஓடி ஓடி இவர் பந்தெடுத்து அடித்து ஆடிய விதம் வோஜ்நிஆகியை திண்டாட செய்தது. கிம்மின் புலி பாய்ச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பதினேழு வயதான வோஜ்நியாகி அந்த இருபத்தி ஆறு வயது தாயிடம் தோற்றுப் போனார்.
ஜடா மற்றும் வெற்றிக் கோப்பையுடன் கிம்.


அந்த முழு போட்டியையும் தனது கணவன் மற்றும் தன் குழந்தையும் பார்க்கதான் ஆடி வெற்றி கொண்டார். போட்டியின் வெற்றி கோப்பையை அவர் கையில் வாங்கும்போது தனது குழந்தை ஜடாவையும் அழைத்து அந்த கோப்பையை அவளிடம் கொடுத்து அக்குழந்தை அந்த கோப்பையை வைத்து விளையாடியது ரசிக்கத்தகுந்த காட்சி.

இறுதியில் அவர் தொலைக்காட்சி நிருபருக்கு பதில் அளிக்கையில் அவர் கூறியது.....

'என் குழந்தை ஜடாவுடன் நான் முழுக்க நேரம் செலவு செய்து நாட்காளாகிவிட்டது.இனி வரும் சில மாதங்கள் எனது நேரம் அவளுக்கும் எனது கணவனுக்கும் மட்டும் தான்.'

சாதனைகள் செய்யத்துடிக்கும் தாய்மார்களுக்கு கிம் கிளைட்ஜெர்ஸ் ஒரு முன்னோடி.

வாழ்த்துக்கள் கிம்!

-----------

Thursday, September 11, 2008

வாஜ்பாயியை காலில் விழுந்து வணங்க வைத்த சின்னப்பிள்ளை



முன்னாள் பிரதமர் வாஜ்பாயியே காலில் விழுந்து வணங்கும் அளவுக்கு அந்த கிராமத்து பெண்மணி சின்னப்பிள்ளை அப்படி என்ன சாதித்து விட்டார்?
கண்டாங்கி சேலை கட்டி... காலில ஒரு ரப்பர் செருப்பு. முகத்தில் ஒரு வெகுளித்தனம். இது தான் சின்னப்பிள்ளை. மதுரை அருகே உள்ள புலிசெரியில் கூலி வேலை செய்யும் ஐம்பது வயது பெண்மணி. 'ஸ்த்ரீஷக்தி' விருதை முன்னால் பிரதமர் வாஜ்பாய் கைய்யால் வாங்கி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது, வாஜ்பாயீ இந்த பெண்மணியின் சாதனையை பாராட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்.

புலிசெரியில் கூலி வேலை செய்து வரும் சின்னப்பிள்ளை, தனது குடிசை வீட்டில் இருந்தபடி தனது சக தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஞாயமான கூலியையும் நல்ல வேலை தரத்தையும் பெற்று தந்ததில் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார்.

தனது கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசி அவர்களையும் ஆமொதிக்கவைத்து நல்ல கூலியை பெற்று தந்திருக்கிறார். முதலில் மறுத்த முதலாளிகளை ஒத்துக்கொள்ள வைக்க கடுமையாக சாத்வீகமாக போராடி அதில் வெற்றியும் பெற்றார்.
'தன்' என்ற நிதி நிறுவனம் நடத்திய 'களஞ்சியம்' என்ற இயக்கத்தில் 1989 இல் இணைந்தார் சின்னப்பிள்ளை. கிராமங்களில் 'களஞ்சியம்' என்ற சிறுசேமிப்பு முறை பற்றி எடுத்துகூறி அவர்களை இணைய வைத்திருக்கிறார். அவரது திறமை அவரை 'களஞ்சியத்தின்' நிர்வாக பொறுப்பில் ஒரு நிர்வாகியாகியது.
எழுதப்படிக்க தெரியாத சின்னப்பிள்ளை, ஒரு தேர்ந்த நிர்வாகியாக செயல்பட்டு 'களஞ்சியம்' இயக்கத்தை வழி நடத்தினார். இப்போது 'களஞ்சியத்தில்' ஏறக்குறைய எழுபதாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.அனைவரும் பின்தங்கிய, ஏழை விவசாய மற்றும் கூலி தொழிலாளர்கள். ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்தவர்களும் ஒரு சிறு குழு ஏற்ப்படுத்தி அவர்களது வருவாயில் ஒரு சிறு பகுதியை களஞ்சியத்தில் சேமிக்க தொடங்க.. களஞ்சியம் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கப்பட.. ஏழைகளின் ரத்தத்தை வட்டி மூலம் உறிஞ்சும் பண முதலைகளை அடக்கி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கைப்பிடி அரிசியை சேமித்து உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்து உதவினர்.

இப்போது களஞ்சியத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய் சேர்ந்து , தமிழ் நாடு, ஆந்திரா கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களில் தனது கிளைகளை பரப்பி சிறந்த சிறுசேமிப்பு வங்கியாக ஏழை மக்களின் கஜானாவாக திகழ்கிறது. இந்த பணத்தை கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்பது..உறுப்பினர்களுக்கு குடிசை வீடு கட்டி கொடுப்பது, சிறு தொழில்களுக்கு உதவி செய்வது போன்ற சேவைகளை 'களஞ்சியம்' செய்து வருகிறது.
இவ்வளவு நாட்களாக வசதி படைத்தவர்களுக்கு உண்டான குளத்தில் மீன் பிடிக்கும் காண்ட்ராக்டை ஏழைகளுக்கு பெற்று தந்தது, உயர் சாதி இருக்கும் வழியாக சென்ற விஷ்ணு பகவானின் தேரை ஏழைகள் மற்றும் பிற்படுத்த பட்ட சாதி இருக்கும் தெரு வழியாக செல்ல வழி செய்தது என சின்னப்பிள்ளையின் சாதனைகள் நீளும்.
ஐம்பது வயதிலும் அயராது உழைத்து..விளம்பரங்களை தேடி செல்லாது உதவி செய்ய ஏழை மக்களை தேடி செல்லும் சின்னப்பிள்ளையின் காலில் நாமும் விழுந்து வணங்குவோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...