Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Wednesday, June 29, 2011

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் - 9

                                                                 லுசர்ன் நகரம்.
ஜூரிக் நகரிலிருந்து லுசர்ன் (LUZERN) நகருக்கு ரயிலில் ஒரு மணி நேரம் பயணப் பட வேண்டும். இந்த இடத்தில் தான் சூர்யா நடித்த 'சில்லென்று ஒரு காதல்' படத்தில் வரும் 'நியூயார்க் நகரில்' பாடம் முழுவதையும் சூட் செய்திருந்தார்கள், என்பது அந்நகரத்து வீதிகளில் நடக்கையில் புலப்பட்டது.


மற்ற நகரங்களை போல இல்லாமல், லுசேர்ன் நகரம் தனித்துவம் பெற்று மேலும் அழகாக இருந்தது. லுசர்ன் ஏரியில் கட்டப்பட்டிருந்த சாபேல்  பிரிட்ஜ்  என்ற மரத்தாலான பாலம் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என அறிந்து வாய் பிளந்தோம். அந்த மரப்பாலத்தில் ஆங்காங்கே சொருகப் பட்டிருந்த பூக்கள் அந்த அழகான பாலத்தை மேலும் அழகூட்டியது.
                                                              சாப்பல் மரப்பாலம்.
அங்கே சிறிது நேரம் சுற்றித் திரிந்துவிட்டு அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து பிளாட்ஸ் மலையின் அடிவாரம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மூன்று கேபிள் கார்களில் பயணப்பட்டால் தான் பிலாடுஸ் மலையின் உச்சியை அடைய முடியும். அதிக கனவுகளுடன் எங்கள் கேபிள் கார் பயணம் ஆரம்பம் ஆகியது. சிறிது சிறிதாக மேலே செல்ல செல்ல, லுசர்ன் நகர் கீழே செல்ல செல்ல அந்த நகரின் அழகை கண்களில் பருக இரு விழிகள் போதாது என்பது எனது எண்ணம். இரண்டாவது கேபிள் கார் நிறுத்தத்தில் உணவகங்கள் இருந்தன. பலதரப்பட்ட 'அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்' நடந்து கொண்டிருந்தது. அங்கு நாங்கள் சண்ட்விச்சுகள் வாங்கி கொண்டு உண்ண அமர, புராதன சுவிஸ் உடை அணிந்தபடி சுவிஸ் மக்களின் இசை கருவியான ஆல்ப் ஹோர்ன் (Alp horn). வாசித்தனர் பனிரெண்டு பேர். சாதாரண மௌத் ஆர்கன் வாசிக்கவே மூச்சு திணறும் எனக்கு அவ்வளவு பெரிய ஒரு கருவியை அற்புதமாக வாசிக்க எப்படி முடிகறதோ என ஆச்சர்யப் பட்டு கொண்டிருந்த நேரம் எங்களை ஏற்றி செல்ல கடைசி கேபிள் கார் வந்து சேர்ந்தது.

முதல் இரண்டு கேபிள் கார்களில் இரண்டு இரண்டு பேராக ஏற்றி சென்றது கேபிள் கார். மூன்றாவது சற்று பெரிதாய் இருக்க, இடம் கொள்ளளவு படி கிட்டத்தட்ட இருபது பேர்களை ஏற்றி சென்றது. நாங்கள் கேபிள் கார்களில் சென்று கொண்டிருக்கும் வேளையில், தரையில் குடும்பம் குடும்பமாக நடந்தபடி ட்ரெக்கிங் செய்தபடி மலை ஏறுபவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருதோம். தங்களது பெற்றோருடன் பத்து வயதே  நிரம்பிய  சிறார்களும் நடந்து சென்றது தான் ஆச்சர்யம்.
                             பிளடுஸ் மலையில் இருந்து லுசர்ன் ஏரியின் காட்சி.
நாங்கள் மவுண்ட் பிளடஸ் மலை உச்சியை அடைந்ததும் ஓடி ஓடி சென்று முகடுகளின் ஓரத்தில் நின்று பார்க்கையில், இயற்க்கை அன்னை கொட்டி கொடுத்த அழகு காட்சிகளை காண கண்கள் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைந்தோம். லுசர்ன் ஏரியும், லுசர்ன் நகரும் மவுண்ட் பிளடஸ் மலை உச்சியில் இருந்து பார்க்கையில் கொள்ளை அழகு.  அங்கேயே அமர்ந்து இயற்கையை ரசிக்க சாய்மான நாற்காலிகள் பலவற்றை போட்டு வைத்துள்ளனர். அதில் சாய்ந்தபடி நீங்கள் அந்தி சாயும் வரை இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வப்போது பஞ்சு மெத்தைகள் போல நமது காலடியில் மேகங்கள் கடந்து சென்று இயற்கையை மறைக்கிறது. வெண்பனி படர்ந்து புகை மண்டலமாக ஆகி, நாம் திரைப்படங்களில் வருவது போல எதோ சொர்க்கத்தில் இருப்பதை போல உணர்கிறோம்.


அங்கு பல மணி நேரங்கள் செலவிட்டப்பின் மலையின் கீழ் இறங்க காக் ரயில் (cog rail) என்னும் உலகின் மிக மெதுவான ரயிலில் இறங்கினோம். ரயிலே படிக்கட்டு போல அமைந்திருப்பது இதன் சிறப்பு. ரயிலில் இரண்டு ஜெர்மானிய ஜோடிகள் ஜெர்மனியில் ஏசி பேசி சண்டையிட்டு கொண்டிருந்ததை பார்க்க புதுமையாக இருந்தது. அரை மணி நேரப் பயணத்துக்கு பின்னர் நாங்கள் மலையின் மற்றொரு புறம் இறங்கி இருந்தது தெரிந்தது. அருகேயே ரயில் நிலையம் இருக்க, ரயிலில் ஏறி அரைமணி நேரப் பயணத்துக்குப் பின் லுசர்ன் நகர ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து ஜுரிக் நகர ரயில் நிலையம் சேர்ந்து தாங்கும் விடுதிக்கு வந்து சேர இரவு எட்டு மணி ஆனது. அந்த ஜெர்மானிய தம்பதியினர் எதற்காக சண்டையிட்டு இருப்பார்கள் என்று யுகம் செய்தபடியே தூங்கிப் போனோம்.


தொடரும்..

Thursday, January 27, 2011

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் -8


ஜூரிச்  ரயில் நிலையம்.
சூரிக் ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கிய பொழுது இரவு பத்தரை மணி. அங்கிருந்து நாங்கள் பதிவு செய்திருந்த விடுதிக்கு செல்ல பத்தாம் நம்பர் டிராமை நாங்கள் பிடிக்க வேண்டும். பெட்டிகளை தூக்கி கொண்டு குழந்தையையும் ஸ்ட்ராலரில் தள்ளிக் கொண்டு அங்கு இருந்த இருவரிடம் எங்கு டிராமை பிடிக்க வேண்டும் என கேட்க அவர்களுக்கு ஆங்கிலம் தெரிய வில்லை. அவர் சுவிஸ் ஜெர்மன் பேசியது எங்களுக்கு புரியவில்லை. அப்போது எங்கிருந்தோ வந்த நமது இந்தியர் ஒருவர் வழிகாட்டி நாங்கள் செல்லும் இடத்துக்கு எங்கு இறங்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு வழி காட்டினார். அவர் சுவிஸ் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார் என அறிந்தோம் நன்றி சொல்லி விட்டு டிராமில் ஏறி அமர்ந்தோம்.

நம்ம ஊரு நாலு பல்லவன் பஸ்களை இணைத்தது போல இருந்தது டிராம். கார்களும் பஸ்களும் ஓடும் சாலையின் ஓரத்தில் டிராமுக்கு என்று தண்டவாளங்கள் இருந்தன. டிராமில் ஏறுவதற்கு முன்பே டிராம் நிறுத்தத்தில் தானியங்கி எந்திரத்தில் கடவு சீட்டு வாங்கி கொள்ள வேண்டும். எங்களுக்கு நான்கு நாள் பாஸ் இன்னும் முடியவில்லை என்பதால் நாங்கள் அதையே உபயோகப் படுத்திக் கொண்டோம். டிராமில் உள்ள ஒரு திரையில், அடுத்து வரும் ஐந்து நிறுத்தத்தின் பெயர்களையும் அந்த நிறுத்தத்துக்கு சென்று சேர இன்னும் எவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்றும் காண்பித்தது. அதன் மூலம் நமது நிறுத்தம் இன்னும் வர எவ்வளவு நேரமாகும் என நம்மால் கணக்கிட முடிந்தது. நமது நிறுத்தத்துக்கு வரும் முன்பே நாம் இறங்க தயாராகி கொள்ள அது இடமும் அளித்தது.

எங்கள் நிறுத்தமான 'யுனிவெர்சிட்டி இர்க்கேல்' வந்ததும் நாங்கள் இறங்கி கொண்டோம். நாங்கள் அடுத்த 7  நாட்களுக்கு அங்குள்ள அக்காடமியா ஸ்டுடியோ அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். விலை ஒரு நாளைக்கு நூறு சுவிஸ் பிராங்குகள்.அவர்கள் ஏற்கனவே ஒரு நான்கு இலக்க எண்ணை அந்த கட்டிடத்தின் நுழைவுக்கான கடவு சொல்லை எங்களுக்கு அளித்திருந்தனர்.கட்டிடத்தின் வாசலில் இருந்த எந்திரத்தில் நாங்கள் அந்த எண்ணை அமுக்கியதும், ஒரு சாவி கொத்து  வந்து விழுந்தது. அந்த சாவியால் கட்டிடத்தின் உள்ளே நுழைந்ததும் பல்வேறு அறைகள் இருந்தன. எங்கள் அறைக்கு தனியாக சாவி போட்டு திறந்தோம். பத்துக்கு பத்து என அறை இருவர் படுக்க கூடிய படுக்கை. குழந்தைக்கு தனியே ஒரு தொட்டில், இணைக்கப்பட்ட கழிவறை, ஒரு மாற திட்டில், சமையல் செய்ய இரு அடுப்புகள் கொண்ட ஹீட்டர். சமையல் செய்ய தேவையான கரண்டி, கத்தி, பாத்திரங்கள், சாப்பிட தட்டுகள் இருந்தன. உடுப்புகள் வைக்க ஒரு அலமாரி, ஒரு மேசை நாற்காலி, டி வீ  என ஒரு குறுகிய கால தங்குதளுக்கு தேவையான அனைத்தும் அங்கு இருந்தன. இருந்த அசதியில் அப்படியே படுக்கையில் படுத்து உறங்கிப் போனோம்.

மறுநாள் கண் விழித்த போது மணி பத்து உடனே எழுந்து பக்கத்தில் கடை ஏதும் இருக்கிறதா என பார்க்க நடந்து செல்ல அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட நடைக்கு பின்னர் 'கூப்' (coop) என்ற ஒரு கடையை கண்டு அங்கு குழந்தைக்கு வேண்டிய பால், அவசர சாப்பாட்டுக்கு பிரட் முட்டை, ஜாம், வெண்ணை,தயிர், தக்காளி வெங்காயம் எல்லாம் வங்கி வந்தேன். பின்னர் அவசர அவசரமாக பிரட் ஆம்லேட் உண்டு விட்டு, பத்தாம் நம்பர் டிராம் பிடித்து ஜூரிக் ரயில் நிலையம் சென்று இறங்கினோம்.

மிக ப்ரம்மாண்டதாகவும் மிகவும் பழமையானதாகவும் இருந்தது அந்த ரயில் நிலையம். அங்கிருந்து செயின்ட் மாரிட்ஸ் என்ற இடத்துக்கு ரயிலில் பயணம் செய்து அங்கே ஒரு பஸ் டூர் எடுத்து இத்தாலி உள்ளே சென்று வர திட்டம். எங்கள் அசதியில் நாங்கள் தாமதமாக எழுந்ததால், திட்டம் மாறியது. சுவிசின் மேற்கு முனையான ஜெனீவாவை கண்ட நாங்கள், அடுத்து கிழக்கில் உள்ள செயின்ட் காலனை பார்க்கலாம் என முடிவு செய்தோம். ( மேற்கிலிருந்து கிழக்கு முழுவதும் கவர் செய்துவிடவே இந்த ஏற்பாடு.) ஜூரிக்கிலிருந்து ஒரு மணி நேர தூரத்தில் இருக்கிறது செயின்ட் காலன்.
செயின்ட் காலன் ஆலயம் 
அயர்லாந்தை சார்ந்த காலஸ் என்பவர் ஒரு தியான மையத்தை இந்த இடத்தில் கி பி 613  இல் நிறுவியதால் அவரது நினைவாக இந்த இடம் செயின்ட் காலன் என அழைக்கப் பட்டு வருகிறது. நகரத்தின் மையத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான, பழமையான கத்தோலிக்க தேவ ஆலயம் இருக்கிறது. இந்த நகரமே, அந்த ஆலயத்தை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள்ளது.
        செயின்ட் காலன் ஆலயம் - உள்ளே 
இந்த ஆலயம் பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் பல போர்களில் சிதைக்கப்பட்டு மீண்டும் பதினேழாம் நூற்றாண்டில், மிகப் பிரபலமான கட்டிடக் கலை வல்லுனர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்தை ஒட்டி உள்ள நூலகத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து ஏறக்குறைய நூற்று ஆருபது ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அதில் இரண்டாயிரத்து ஐநூறு கை எழுத்து நூல்கள் ஆகும்.

ஆலயத்தினுள், பழங்கால வேலைப்பாடுகள் அற்புதமாக  தங்க மூலத்தில் இழைக்கப் பட்டிருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு. அங்குள்ள ஒவ்வொரு பொருளும் பழங்காலத்தை நினைவு படுத்துவதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வானுயர அலமாரிகளை அண்ணாந்து நோக்கி கொண்டிருந்தேன். எனது மகனை அந்த அலமாரியின் அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதனை வைத்து அந்த அலமாரிகள் எத்துனை உயரம் என அறிந்து கொள்வீர்கள்.
                                                                 அந்த அலமாரி..!
1983  முதல் இந்த ஆலயம், யுனெஸ்கோ வின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

நாங்கள் பின்னர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து வருகையில் ஒரு புதுவித காட்சியை கண்டோம். ஒரு தெரு முழுக்க  கார்பெட்டை விரித்து வைத்திருந்தனர். மழை வந்தாலும் எதுவும் ஆகாது என எங்களுக்கு சொல்லப் பட்டது. அதனை ச்டாட்ட் லவுஞ் (Stadtlounge) என்கிறார்கள். நகரத்தின் மத்தியில் உள்ள லவுஞ் என்பது அதன் பொருளாம். அழகாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது.
                                                                   ச்டாட்ட் லவுஞ்
அதற்குள் மாலை ஆகி விட்டதால், மீண்டும் ரயில் பிடித்து கூட்டை வந்தடைந்தோம்.

மறுநாள் மலையில் வின்ச்சில் மவுண்ட் பிளாடஸ் செல்ல போகிறோம் என்ற எக்சைட்மேண்டில் பேசியபடியே அசதியில் உறங்கிப் போனோம்.

(தொடரும்)
--

Tuesday, December 28, 2010

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் - 7


                                                      யுங்க்ப்ரவ்.(jungfraujoch)
யுங்க்ப்ரவ் ரயில் நிலையம் தான் ஐரோப்பாவின் உயர்ந்த ரயில் நிலையம். கடல் அளவிலிருந்து 3471 மீட்டர்களில் அமைந்துள்ளது. சுமார் 3571 மீட்டர்களில் ஸ்பிங்க்ஸ் என்ற மலை ஸ்தலம் உள்ளது. அங்கு ஒரு வானொலி தொடர்பு நிலையம் உண்டு. உலக தட்பவெட்ப நிலை  ஆராய்ச்சி நிறுவனமும் யுங்க்ப்ரவ் இல் உண்டு. மலையை குடைந்து ஏழு மைல்கள் சென்றால் தான் யுங்க்ப்ரவ் என்ற அந்த வெள்ளை சுவர்கத்தை அடைய முடியும். 1896 ஆம் ஆண்டு சூலை மாதத்தின் 27  ஆம் தியதி, மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது. கிட்டத்தட்ட 16  ஆண்டுகள் இந்த பணி நடைபெற்றது. பருவநிலை, விபத்துகள் என பலவாறு தடைகள் ஏற்பட்டபோதும், 1912 ஆண்டில் இந்த பணி யுங்க்ப்ரவ் வரை முடிக்கப்பட்டது. அதைவிட உயர்ந்த ஸ்தலமான ஸ்பிங்க்ஸ் வரை ரயில் பாதை அமைக்க இயலவில்லை. எனினும் இதுவே மனிதகுலத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்று என கருதப்பட ஏதுவாக இருந்தது. 

நான்கு ரயில்கள் மாறி யுங்க்ப்ரவ் சென்ற நாங்கள், பனி துகள்கள் பெய்வதால், வெளியே சென்று பனியில் நிற்க இயலாது என அறிவிப்பு செய்திருந்தனர்.  அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மிகுந்த பசி. அங்கே உணவு உண்ணலாம் என நினைத்த பொது பாலிவூட் என்ற நம்மூர் உணவகம் இருப்பதை கண்டு அடடா இந்த குளிருக்கு காரசாரமாய் சாப்பிடலாம் என பாய்ந்த எங்களுக்கு அங்கு வைத்திருந்த உணவுகளை பார்த்ததும், அப்படியே பின்னேறினோம். ஆமா சும்மா பருப்பு, நான் அப்புறம் ரெண்டு போரியல் ஒரு அளவு சாப்பாடு என வட இந்திய உணவு வகைகளுக்கு முப்பைதைந்து சுவிஸ் பிராங்குகள் என போட்டிருந்தது பகல் கொள்ளையாக இருந்தது. அங்கேயே இருந்த மற்றொரு சுவிஸ் உணவகத்தில் நூடுல்ஸ் வாங்கி உண்டு முடிக்கையில் அந்த அறிவிப்பு பலகையை எடுத்து விட்டு எங்கள் வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
இந்த மலையை குடைந்து தான் லிப்ட் மற்றும் ரெஸ்டாரண்டுகள் அமைத்துள்ளனர். இந்த மலையில் வலது புற அடியில் தெரியும் சிறு துவாரம் தான் இந்த வெள்ளை சுவர்கத்தின் நுழைவு வாயில்

அங்கிருந்த லிப்டின் மூலம் ஒரு இருநூறு அடி கீழ் நோக்கி சென்றதும் இறங்கி வெளியே வந்து பார்த்தால் ஒரு குகைக்குள் நின்று இருந்தோம். கடும் குளிர். நிச்சயம் இங்கு செல்லும்போது ஜாக்கெட் ஸ்வெட்டர் கை உறை எல்லாம் எடுத்து செல்வது நலம் இல்லையேல் எல்லாம் விறைத்து விடும் எச்சரிக்கை. கடும் உயரம் என்பதால், தலை கிறு கிறுத்தது. மூச்சு வாங்க ஒரு இருநூறு மீட்டார் நடந்திருப்போம். அந்த குகையில் வாயில் வர வெளியே வந்தோம்

எங்கும் பனி. வெள்ளை வெளேரென்று தரையும் தூரத்தில் தெரிந்த வெள்ளை மலைகளும் என அந்த காட்சியை நேரில் கண்டால் தான் அனுபவிக்க முடியும். பல படங்களின் பாடல்களை இங்கு ஷூட்டிங் எடுத்துள்ளனர் என்பதை உணர்ந்தோம். மக்கள் அனைவரும் அங்கு பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவி விளையாடிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவிலேயே பனி பிரதேசங்களை கண்டிருந்தாலும், இங்கு உள்ள அழகு அங்கு இல்லை. அதற்க்கு காரணம், மலைகள். மலைகள். நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது தான், அவ்வளவு நேரம் ஒரு மலையின் உள்ளே இருந்திருந்தோம் என உணர்ந்தோம்.

மலையை குடைந்து அதற்குள்,  குகை போல செய்து அதில் லிப்ட், பாதை எல்லாம் போட்டிருந்தார்கள். அங்கிருந்து ஒரு குழுவினர் நடந்தபடி இன்னோர் இடத்தில் இருந்த ஒரு ரேசொர்டுக்கு சென்று கொண்டிருந்தனர். நேரமின்மையால் எங்களால் செல்ல இயலவில்லை.
                                          ஐஸ் ம்யூசியம் செல்லும் வழி.
அங்கேயே ஐஸ் ம்யூசியம் ஒன்று இருக்கிறது. தரை சுவர் எல்லாமே ஐஸில் இருக்கும் அதனுள், ஐசிலேயே, பெங்குவின், கழுகு எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். அவை உருகிவிடாமல் இருக்க அதே தட்ப வெட்ப நிலையை அமைத்திருக்கிறார்கள்.  இந்த தரையில் ஸ்கேடிங் செய்து கொண்டே செல்லலாம். விழாமல் தப்பிப்பது உங்கள் சாமர்த்தியம்.

யுங்க்ப்ரவ் ஸ்தலத்தை அடைய இரு வழிகள் உண்டு. லாடேர்ப்ருண்ணன் வழியாக சென்றால், மலைகளையும், ஓடைகளையும் பார்த்தபடி செல்லலாம். க்லேண்டேல்வால்ட் என்ற இடம் வழியாக சென்றால் மலைகளில் தெரியும் வீடுகளையும், கன்ட்ரி சைட் எனப்படும் கிராமங்களையும் கண்டு களித்தபடி வரலாம். லாடர்ப்ருண்ணன் வழியாக யுங்க்ப்ரவ் அடைந்த நாங்கள், வரும் போது க்லேண்டேல்வால்ட் வழியாக கீழிறங்கினோம். வரும்போதும் பசுமையான மலைகளில் ஆங்காங்கே வீடுகள் அமைந்து காணும் கண்களை கொள்ளை கொண்டது.

                                                     க்லேண்டேல்வால்ட்

மீண்டும் கீழிறங்கி அன்று இரவு நாங்கள் சூரிக் சென்று சேர்ந்தோம். இருந்தாலும், எங்கள் நினைவுகள் மட்டும் யுங்க்ப்ரவ் விட்டு கீழிறங்கி வர மறுத்தன. 

(தொடரும்...)
--

Saturday, December 4, 2010

பூலோக சுவர்க்கம் - 6 சுவிஸ் பயணம்.

                                                             இண்டர்லாகன் ஏரி
அன்றைய பொழுது இனியே விடிய.. நாங்கள் ஆவலுடன் காத்திருந்த யுங்க்ப்ரவ் பயணம் செல்ல வேண்டிய நாள் வந்தது. அன்றைய இரவு நாங்கள் சூரிச் செல்ல வேண்டி இருந்ததால், எங்கள் பெட்டி படுக்கைகளை உருட்டி கொண்டு பெர்ன நகர ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நமது பெட்டிகளின் அளவுகளுக்கேற்ப (விலையும் மாறுபடுகிறது) நிறைய லாக்கர்கள் இருக்கின்றன. இரண்டு லாக்கர்களில் எங்கள் பெட்டிகளை அடைத்து விட்டு எட்டு சுவிஸ் பிராங்குகளை உண்டியல் போன்ற துவாரத்தில் போட்டால், தானியங்கி இயந்திரம் மூலம் லாக்கர்களின் சாவிகள் வந்து விழுகின்றன. இருபத்து நான்கு மணி நேரத்துக்கு எட்டு சுவிஸ் பிராங்குகள் வாங்கப்படுகிறது.

யுங்க்ப்ரவ் க்கு பெர்நிலிருந்து இண்டர்லாகன் என்னும் ஒரு மிக அழகிய ஊர் வரை ரயில் செல்கிறது. அங்கிருந்து மலை ஏற மூன்று  ரயில்களை மாறி ஏற வேண்டும். பெர்நிலிருந்து இண்டர்லாகன் செல்லும் வழியில் இரண்டு அழகிய ஏரிகள் வருகின்றன. ஒன்று பிரியன்ஸ் ஏரி . மற்றொன்று துன் ஏரி. இரண்டு ஏரிகளும் இணையும் இடத்தை தான் இண்டர்லாகன் ஏரி என சொல்கிறார்கள். இண்டர்லாகன் என்றால் இரண்டு ஏரிகள் இணையும் இடம் என்று அர்த்தம்.
                                                             இண்டர்லாகன் ஏரி

ரயிலில் செல்ல செல்ல ஸ்பீஸ் என்ற ஏரியும் சேர்ந்துகொள்ள.. அப்படியே மலைகளும் நீல வண்ண நீர்பரப்பும்... பறந்து செல்லும் பறவைகளும்.. நீரில் நீந்தி செல்லும் ஓடைகளுமாக. இயற்க்கை காட்சிகள் விரிய விரிய.. கண்கள் விரிய பார்த்துக் கொண்டு வந்த நாங்கள்.. எங்களுக்கு அதனை காண கண்கள் இருந்தமைக்காக நன்றி சொல்லிக் கொண்டோம். அப்போது தான் கண் பார்வை இல்லாத நபர்களின் மேல் ஒரு மரியாதையும் பரிதாபமும் எங்களுடன் சேர்ந்து கொண்டது. அவர்களுக்கு சுவிஸ் நகரமும் ஒன்று தான்..சுண்டைக்காமுத்தூரும் ஒன்றுதானே என்ற உணர்வு மேலிட.. அந்த இயற்க்கை காட்சிகளை.. அவதார் படத்தின் பண்டோரா கிரகத்தை பார்ப்பதை போல ஐயோ.. வாவ் ஸ்ஸ் என்று குழந்தைகள் போல குதூகலித்தபடி நாங்கள் பார்த்து ரசித்ததை கண்டு.. எங்களோடு கூட வந்த சுவிஸ் மக்கள் எங்களை ரசித்தார்கள். பாதி மூடி இருந்த ஜன்னலை.. மேலும் முழுக்க திறந்து விட்டு.. 'என்ஜாய் யுவர் விஷன்' என்று உதவி புரிந்ததோடு மட்டுமல்லாது.. 'உங்களை புகைப்படம் எடுத்து தரட்டுமா   ?' என அவர்களே எங்கள் புகைப்பட கருவியை வாங்கி எங்களை சுட்டு தள்ளினார்கள்.

                                                                லாட்டர்ப்ருன்னேன் 

பெர்நிலிருந்து இண்டர்லாகன் ரயில் நிலையத்தை அடைய நாற்பது நிமிடங்கள் ஆனது. முழு பயணத்திலும்.. மூன்று ஏரிகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கண்களில் நீர் வழிய பார்த்து ரசித்து கொண்டே வந்தோம். இண்டர்லாகனில் இருந்து அடுத்த ரயில் ஏறி லாடர் பருணன் (Lauterbrunnen) என்ற இடத்துக்கு சென்றோம். விலை மிக அதிகம் நூறு அமெரிக்கன் டாலர்கள் ஆனது.போகும் வழி எல்லாம் பக்காவாட்டில் தெளிந்த நீரோடைகளும், மலைகளில் இருந்து விழும் நீர் வீழ்ச்சிகளும் என அவ்வளவு அழகு. லாடேர்ப்ருன்னானில் இருந்து அடுத்த ரயில் பிடித்து க்ளைன்-ஷேடேக் (Kleine Scheidegg)  என்ற இடம் செல்லும்போது தான் பனி போர்த்திய மலைகள் நம் உடனே ஊடாடிக்  கொண்டு வருகிறது. மலை களின் வழியே பாதை ஏற்படுத்தி பலர் கைகளில் குச்சிகளை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர். இண்டர்லாகனில் இருந்து நடைபயனமாகவே மலையின் உச்சிக்கு வருபவர்கள் இருக்கிறார்கள் என்று பிறகு கேள்விப்பட்டேன். எனக்கும் நடந்து செல்ல ஆசை தான். ஆனால் குடும்பத்துடன் அது முடியாதே.. என எனது ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.
க்ளைன் ஷேடாக்


க்ளைன் வந்து சேர்ந்ததும் அதுவே சொர்கமாக இருந்தது. அங்கேயே அமர்ந்து தெரியும் பனி போர்த்திய மலை முகடுகளை பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது. அங்கிருந்து கிளம்ப மனம் வராமல் அங்கேயே ஒரு மணி நேரம் மலைகளை பார்த்தபடி அமர்ந்துவிட்டோம். பின்னர் ஆசுவாசப்படுத்தியபடி யுங்க்ப்ரவ் போகும் அடுத்த ரயிலில் ஏறினோம். அது தான் மலையின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. உச்சிக்கு போகும்போது வயிற்றை பிசைகிறது. மயக்கம் வருகிறது. யுங்க்ப்ரவ் செல்லும் அனைவரும் மாத்திரைகள் எடுத்து செல்வது நல்லது. அங்கு ஆக்சிஜன் அளவு குறைவதால்.. இந்த மயக்கம் ஏற்படுகிறது என அறிந்தேன்.

மலைகளை குடைந்து ரயில் பாதைகளை அமைத்து இருக்கிறார்கள். மிக மிக மெதுவாகவே ரயிலும் செல்கிறது. அந்த ரயில் பாதை தான், உலகிலேயே உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள ரயில் பாதையாகும். யுங்க்ப்ரவ் என்பது தான் ஐரோப்பாவின் உச்சி அதாவது 'டாப் ஆப் யுரோப்' என்கிறார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு நான்கு ரயில்கள் மாற்றி உச்சிக்கு சென்றதும், எங்களுக்கு அந்த அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது.

--

Thursday, November 18, 2010

பூலோக சுவர்க்கம் - 5 சுவிஸ் பயணம்.

                                                     லவ்சான் நகர தெரு ஒன்று...

ஜெனீவாவிலிருந்து லவ்சான் நகருக்கு ஒரு மணி நேரப் பயணம். லவ்சான் ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது புடவை கட்டிய ஒரு இந்தியப் பெண்ணை பார்த்தேன். சென்று பேசுவதற்குள் அவரது ஆண் நண்பரோ அல்லது கணவரோ உடன் வேகமாக சென்று விட்டார்.எதோ இந்தியப் பார்டிக்கு செல்லப்போகிறார் போலும் என நினைத்துக் கொண்டோம். அங்குள்ள அனைவரும் பிரெஞ்சு தான் பேசினார்கள். ஆங்கிலம் புரியவில்லை. பின்னர் நீண்ட நேரமாக முத்தமிட்டுக்  கொண்டிருந்த ஒரு ஜோடியை, அவர்கள் முடித்ததும் அணுகி வழி கேட்க.. அவர்கள் அங்கிருந்து ஒன்றரை மைல் தொலைவில் இருப்பதாக சொல்லி வழிகாட்டினார்கள். அசதியாக இருந்தாலும், காலையில் கண்ட காட்சி மனதில் நிழலாட, நடக்க ஆரம்பித்தோம். சுமார் இருபது நிமிட நடைக்கு பின்னர் அந்த ஏரி வந்தது அதன் பெயர் லேக் அவ்ச்சி என சொன்னார்கள். நாங்கள் ஏரிக்கு செல்லும் முன்னர் அங்கிருந்த பூங்காவின் நீர் எழுச்சி காட்சியை சிறிது நேரம் கண்டு கழித்து விட்டு ஏரிக்கு சென்றோம். சாலைகளில் உள்ள மேடுகளும் பள்ளங்களும் அது மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட நகரம் என்பதை உணர்த்தின.

ஓல்ட் டவுன் எனப்படும் பழைய நகரம் ஒரு பழங்கால அழகான பிரமாண்டமான தேவாலயத்தை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த தேவாலயத்திற்கு ஆயிரம் வயது என சொன்னார்கள்.

சுவிஸ், தான் ஒரு பூலோக சொர்க்கம் என நிரூபித்தது அங்கே. அந்த ஏரியும் தொலைவில் தெரியும் மலைகளும் அவ்வளவு அழகு.மூன்று தொடர் மலைகளின் மேலே லவ்சான் நகரம் அமைந்துள்ளது. அதன் பாதத்தில் ஜெனிவா ஏரி அமைந்து அந்த நகருக்கே அழகு சேர்க்கிறது.

லவ்சான் நகரின் அழகை இங்கிருக்கும் புகைப்படங்களே எடுத்து சொல்லும்.

எட்டரை மணிக்கு இருட்டும் நேரம் வரை லவ்சான் நகர ஏரியின் அழகை பருகிவிட்டு செல்ல மனம் இல்லாமல் கிளம்பி இரவு பத்து மணிக்கு பெர்ன் வந்து சேர்ந்தோம். அகோர பசி. அருகிருந்த பர்கர் கிங் உணவகத்தில் இரண்டு பர்கர்கள் வாங்கி கொண்டு எங்கள் அறைக்கு வந்து சேரும்போது மணி பதினொன்று.

மறுநாள் நாங்கள் செல்ல இருந்தது ஐரோப்பாவின் உச்சியான யுங் ப்ராவ் என்னும் வெள்ளை சொர்க்கம். அதன் கனவுகளிலேயே உறங்கிப்போனோம்.

Friday, November 5, 2010

பூலோக சுவர்க்கம் - 4 சுவிஸ் பயணம்.

                                                                  ஜெனீவா நகரம்.
காலையில் எங்கள் விடுதியிலேயே இலவச உணவு வழங்கப்பட்டது. சுவிஸ்சில் க்ரோசாந்த் எனப்படும் ஒருவித ரொட்டியும் கோதுமை ரொட்டியும் பிரதான உணவுகள். க்ரோசாந்தை நான் அமெரிக்காவிலேயே உண்டிருந்தாலும் இங்கு அதன் வடிவமும் சுவையும் மிக அருமையாக இருந்தது. பழ சாறுகள், அவித்த முட்டை, நறுக்கிய பழத்துண்டுகள், அவித்த உருளை கிழங்கு என அருமையாக இருந்தது. சுவிஸ் தேசத்தின் வெண்ணையும் சீஸும் மிக பிரசித்தி பெற்றது. பாலுக்கு பெயர் போன டென்மார்க்கிலிருந்து வருவதாக சொன்னார்கள்.

 நாங்கள் பெர்ன் நகர ரயில் நிலையத்தை அடைந்து ஜெனீவா செல்லும் ரயிலை பிடித்தோம். அங்கிருந்து இரண்டு மணி நேரப் பயணம். ரயில் பெட்டியில் இருந்த ஒவ்வொருவரும் வந்து என் மகனை கொஞ்ச ஆரம்பித்தார்கள். அவனும் அவர்களுக்கு டாடா காட்டியும் ஒளிந்து விளையாடியும் புன்னகைகளையும் தந்து வசீகரித்துக் கொண்டிருந்தான். வயதானவர்கள் வந்து எங்கள் இருக்கையின் அருகே நின்று எதுவுமே பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ஹலோ சொன்னதும் பதிலுக்கு ஹலோ சொல்லி விட்டு அவனையே கவனிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மனதில் அவர்களின் பேரன்கள் வந்து போயிருக்கக் கூடும்.

 ரயிலில் இரண்டு அடுக்குகள் இருந்தன. நமது ஊரைப் போல ஒரு பெட்டியில் சமையல் நடக்கிறது. அங்கு ரொட்டி, பழசாறு, தேநீர் பாஸ்தா என சகல ஐரோபிய உணவு வகைகளும் இருந்தன.  எனினும் விலையை கருதி நாங்கள் வாங்கவில்லை. கையோடு எடுத்து சென்றிருந்த தண்ணீர் பாட்டில்களையும் பழ சாறுகளையும்  காலி செய்தோம்.
ரயிலின் வெளியே தெரிந்த காட்சிகளில் நான் முன்பே சொன்னது போல அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு மிக அழகாக தெரியலாம்.ஆனால் அமெரிக்காவிலும் இதை போலவே பசுமை தெரியும் ஆதலால், அவ்வளவாக வேறுபாடு இன்றி தெரிந்தது. ஆங்காகே மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மிகவும் புஷ்டியாக இருந்தது. ஒரு மணி நேரப் பயணத்துக்கு பின் தான் அந்த பரவசமூட்டும் காட்சியை கண்டோம்.
பெர்நிலிருந்து ஜெனீவா செல்லும் வழியில் லவ்சான் நகர் இருக்கிறது. அதனை தாண்டி செல்லும் வேளையில், அந்த ஜெனீவா ஏரியின் அழகு.. அப்பா..சொல்லி மாளாது. (காண்க புகைப்படம்)

ஜெனீவா ஏரி லவ்சான் நகரத்திலிருந்து...
எந்த புகைப்பட காரனும் ஒரு நிமிடம் அந்த அழகு காட்சியை கண்டு ஸ்தம்பித்து தான் போய்விடுவான். அவ்வளவு அழகு. உண்மையாக சொல்கிறேன், அந்த காட்சியை காண எனக்கு கண்கள் இருந்ததற்காக அந்த ஒரு நொடி மிகவும் பெருமையாக இருந்தது. என்ன புகைப்படம் எடுத்தாலும், நேரில் காண்பது போல வராது. அப்போது தான் நான் சுவிஸ்சில் இருப்பதையே உணர்ந்தேன். சுவிஸ் ஒரு பூலோக சொர்க்கம் என மற்றவர்கள் கூறுவதை அப்போது தான் என் மனம் ஏற்றுக் கொண்டது.  என் மனைவியிடம் கூறினேன்.'சுவிஸ் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தினமும் இந்த அழகு காட்சிகளை அவர்கள் கண்டு கொண்டே இருக்கலாமே' என.ஜெனீவா பார்த்து திரும்பி செல்லும் வேளையில் நிச்சயமாக லவ்சான் நகருக்கு செல்ல வேண்டும் என பேசி கொண்டோம்.



                                                  ஜெனீவா ஏரியின் நீர் எழுச்சி...
ஜெனீவா சென்று இறங்கியதும் அது எங்களுக்கு வேறுவிதமான நகராக தெரிந்தது. மக்கள் அனைவரும் மெர்சி மெர்சி என பிரெஞ்சு பேசிக் கொண்டிருந்தார்கள். நிறைய மக்கள் தலைகள். சுவிஸ்சிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். (முதலாவது சூரிக்). டிராம்களும் பேருந்துகளும் தங்கள் ஹைட்ராலிக் பெருமூச்சோடு மக்களை உண்டும் துப்பிக்கொண்டும் இருந்தன.

ஜெனிவா என்று நினைத்தாலே நமக்கு ஐக்கிய நாடுகள் சபையும், செஞ்சிலுவை சங்கமும் தான் நினைவுக்கு வரும். ஆம். செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகமும், ஆஸ்திரியாவின் விஎன்னாவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமும் இங்கு தான் இயங்குகின்றன. பிரான்ஸ் தேசத்தின் எல்லையில் இருப்பதால், ஜேர்மன் மொழியே பிரதான மொழியாக இருந்தாலும், ஜெனிவாவில் அதிகமாக பிரெஞ்சு தான் பேசுகிறார்கள். நாங்கள் இன்போர்மஷன் சென்டர் சென்று ஜெனீவா டூர் என ஏதாவது பஸ் இருக்கிறதா எனக்கேட்க, அவளோ பிரெஞ்சில் பதில் கூறினாள். எனக்கு பிரெஞ்சு தெரியாது என்றாலும் அவளது உடல் மொழியிலும் அவள் கூறியதில் இருந்து நேரே சென்றால், ஜெனீவா ஏரியில் போட் டூர் இருக்கிறது என புரிந்து கொண்டேன். 

அந்த போட் டூர் சரியான மொக்கை. இருந்தாலும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கூறிய ஜெனீவா நகர வரலாறு பிடித்தமாக இருந்தது. படகில் இருந்தபடியே ' அதோ பார் ஐக்கிய நாடுகள் சபை, அதோ பார் பறவை' என்கிற ரேஞ்சில் இருந்தது.  ஏரியில் ஒரு ராட்சச நீர் எழுச்சி (அது தாங்க வாட்டர் பௌண்டன்)  இருந்தது. அது தான் உலகிலேயே மிக உயரமான வாட்டர் பவுண்டன் என சொன்னார்கள். ஒரு மணி நேரம் போட் அதனையே சுற்றி சுற்றி வந்தது. மக்கள் பலர் தாங்கள் சொந்தமாக வைத்திருந்த போட்டில் அந்த ஏரியில் பவனி வந்து கொண்டிருந்தனர். போட் டூர் முடிந்ததும் பசி எடுக்க அங்கிருந்த ஒரு லெபனான் தேசத்து உணவகத்தில் பலாபல்(falafal) ராப் உண்டோம். நம்ம ஊரு வடை போல இருக்கும் பலாபல். அனால் இதனை கொண்டைகடலை மசித்து செய்கிறார்கள். வடை போல செய்தது அதனை மசித்து சிறிது லேட்ட்யுஸ், தக்காளி, வெங்காயம் சிறிது தயிர் எல்லாம் வைத்து தருகிறார்கள்.  பக்கத்திலேயே இருந்த இந்திய உணவகத்தில் ஒரு பிரியாணி நாற்பது பிராங்குகள் என எழுதி இருந்ததை வயிற்றெரிச்சலோடு பார்த்து கொண்டே உண்டோம். பசிக்கு அமிர்தமாக இருந்தது. உங்கள் ஊரில் மெடிடரேனியன் அல்லது லெபனீஸ் உணவகம் இருந்தால் பலாபல்லை முயற்சித்து பாருங்கள்.


                                  மிகப் பழமையான கத்தோலிக்க தேவாலயம்.   

பின்னர் அங்கு சிறிது நேரம் சுற்றி விட்டு, லவ்சன் நகருக்கு செல்ல ஒரு பரவசத்தோடு காத்திருந்தோம். அன்றைய மாலை ஒரு மறக்கமுடியாத மாலையாக அமையப்போகிறது என்பதை நாங்கள் அப்போது உணர்ந்திருக்க வில்லை.

--

Tuesday, November 2, 2010

பூலோக சுவர்க்கம் - 3 சுவிஸ் பயணம்.

                                       ஆர் நதியின் அணைப்பில் பெர்ன் நகரம்.
சூரிக்கில் இருந்து ஒரு மணி நேர ரயில் பயணத்தில்,நாங்கள் பகல் இரண்டு மணிக்கு பெர்ன் சென்று சேர்ந்தபோது, அங்கு இருந்த கட்டடங்களும், சாலைகளும், அது ஒரு மிகப்பழமையான ஒரு நகரம் என்பதை உணர்ந்தேன். காண்டினெண்டல் என்ற விடுதியின் அறையை நான் முன்பே முன்பதிவு செய்திருந்தேன். இருவர் படுக்க கூடிய ஒரே ஒரு படுக்கை, ஒரு மேசை மற்றும் ஒரு சோபா என எட்டுக்கு எட்டு அளவில் இருந்த அறை. சிறிது ஓய்வு எடுத்து விட்டு பெர்ன நகரில் நடை பயணம் செய்தோம். பெர்ன நகரத்தின் தெருக்களை அடித்தபடி மேசை சேர்கள் போடப்பட்டு மக்கள் குடித்துக் கொண்டோ, உண்டு கொண்டோ இருந்தனர். நான் விசாரித்த பொது, வெயில் காலங்களில் மக்கள் வெளியில் மட்டுமே அமர்ந்து உண்ணவும் குடிக்கவும் விரும்புவர் என நான் அறிந்தேன். சாலை முழுவதும் நமது ஊரைப் போல தார் சாலையாக இல்லாமல் கற்களாக பதிக்கப் பட்டு இருந்தது. பெர்ன் நகரம் பழமையான நகரமாதலால் யுனெஸ்கோவின் பராமரிப்பின் கீழ் வருகிறது என உணர்ந்தேன். மக்கள் அனைவரும் நட்பாக புன்னகைத்தனர்.
                                            புராதனமான 'ட்சீட்கிலோக்' (Zytglogge)
வலை தளங்களை ஆய்வு செய்த பொது பெர்ன நகர வரலாறு, என்னை கி பி பனிரெண்டாம் நூற்றாண்டுகளுக்கு அழைத்து சென்றது.
  1196 ஆம் ஆண்டு பெர்தோல்ட் என்பவர் 'ஆர்' என்ற ஆற்றின் படுகையில் இந்த நகரை கண்டுபிடித்து தான் வேட்டையாடிய ஒரு கரடியின் நினைவாக 'பெர்ன் ' என இந்நகரை பெயரிட்டார். ஆர் என்ற அந்த ஆறு நகரின் குறுக்கே வளைந்து வளைந்து ஓடுகிறது. நகரின் மத்தியில் வீற்றிருக்கும் 'ட்சீட்கிலோக்' (Zytglogge) (அப்படித்தானே சொல்லவேண்டும்?) என்ற மணிகூண்டு க்கு வயது பனிரெண்டு நூற்றாண்டுகள்.
                                                  பெர்ன் நகர தெரு ஒன்றில்...
தடுக்கி விழுந்தால் வங்கிகள். டென்னர், கூப் என காய்கறி கடைகள். பெர்ன நகர தெருக்கள் எப்போதும் திருவிழா பூண்ட நகரமாகவே இருக்கின்றன. மக்கள் அனைவரும் கொண்டாட்டமாகவே இருக்கின்றனர். எவர் முகத்திலும் எந்த ஒரு கவலையோ, டென்ஷனோ பாக்க முடியவில்லை. அனைவரின் முகத்திலும் புன்னகை. உங்களுக்கு எப்போதும் அவர்களின் 'ஹலோ' உண்டு.



சுவிஸ்சிலேயே பெரிய நகரங்களாக ஜுரிச் மற்றும் ஜெனீவா இருந்தாலும் பெர்ன் நகர் தான் தலைநகரம். பெர்ன சிறிய நகரமாக இருந்தாலும், கனஅளவில் இங்கு மக்கள் பெருக்கம் அதிகம்.பெர்ன நகர தெருக்களில் மக்கள் முழங்கால் உயர செஸ் காய்களுடன், செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். டூரிஸ்டுகள் மிக அதிகமாக காணப்பட்டனர். சுவிஸ் தேசத்தின்  பாராளுமன்றம் இங்கு தான் உள்ளது( காண்க படம்.).
                                           சுவிஸ் தேசத்தின் பாராளுமன்றம்.
எங்கள் பயண அட்டவணைப்படி நாங்கள் செல்ல இருந்த நகரங்களான ஜெனீவா மற்றும் இண்டர்லாகன் பெர்னின் அருகே இருந்ததால், இந்த நகரில் தங்கினோம்.  மாலை பெர்ன நகரம் சுற்றி வந்தந்தால் அகோரப் பசி. அங்கே இருந்த ஒரு தென் தமிழ் உணவகம் கண்டு பிடித்து இட்லி சாம்பார் உண்டோம் .இட்லி குளிர் பதன பெட்டியில் இருந்து வந்ததால், சுவை குறைந்திருந்தாலும், விமானத்திலிருந்து சரியான உணவு எங்களுக்கு இல்லாததால், அமிர்தமாக இருந்தது சாம்பார். அனால் விலை எவ்வளவு தெரியுமா?. நான்கு இட்லி பதினைந்து சுவிஸ் பிராங்குகள். நமது இந்திய மதிப்பின் படி எழுநூறு ருபாய். இருந்தாலும் பசியில் விலை பெரிதாக தெரியவில்லை. ( அமெரிக்காவில் நான்கு இட்லி ஐந்து டாலர். சுவிஸ்சில் அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம். பயண அசதியையும் பொருட் படுத்தாது பெர்ன் நகரை நடை வலம் வந்து அறையில் அடைந்தோம்.



                    ஆறு மணிக்கெல்லாம் உறங்கிவிடும் பெர்ன் நகர தெருக்கள்...
இரவு எட்டு மணி வரை வெளிச்சம் இருந்தாலும்,சுவிஸ் தெருக்கள் மாலை ஆறு மணிக்கெல்லாம் அமைதி ஆகி விடுகிறது. ஏழு மணிக்கு பிறகு திறந்திருப்பது உணவகங்களும் பார்களும் தான். சரியான சோம்பல் நகரம் என நாங்கள் பேசிக் கொண்டோம்.

வெளியே தெருவில் இரவு ஒரு மணி வரி லியோபாலத் என்ற பாரிலிருந்து திடும் திடும் என இசையும் கேளிக்கையும் நடந்து கொண்டிருந்ததை அரை தூக்கத்தில் கவனித்தவாறே உறங்கிப் போனோம்.

மறுநாள், ஜெனீவாவை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது.


பயணம் தொடரும்...
--

Wednesday, October 20, 2010

பூலோக சுவர்க்கம்: சுவிஸ் பயணம்-2( படங்களுடன்...)

                                                                  ஜூரிச் ஏர்போர்ட்.

சுவிஸ் சென்று இறங்கியதும், அமெரிக்கன் டாலரை சுவிஸ் பிராங்க்ஸ் ஆக மாற்ற வேண்டுமே..!. நாங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பும்போது சுவிஸ் பிராங்கை விட அதிகமாக இருந்த அமெரிக்க டாலர், நாங்கள் சுவிசில் இறங்கி பணத்தை மாற்றும்போது சுவிஸ் பிராங்கை விட மதிப்பு குறைவாக இருந்தது.  ஒரே இரவில் நடந்த இந்த மாற்றம் எங்களின் முதல் ஆச்சர்யம்.

உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் ஆகையால், ஒரு பிரம்மாண்டமான விமான நிலையத்தை எதிர்பார்த்து போன எங்களுக்கு அந்த சிறிய விமான நிலையம் இரண்டாவது ஆச்சர்யம்.

அமெரிக்காவை விட ஐரோப்பா தான் சுத்தமானது என பலரும் கூற கேட்டு இருந்த எங்களுக்கு, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், கால் வைக்க கூட இடமின்றி எங்கெங்கு காணினும் சிகரெட் துண்டுகள். யாரை பார்த்தாலும் சிகரட் புகைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இது எங்களுக்கு மூன்றாம் ஆச்சர்யம்.

                                                                   சுவிஸ் ரயில்
விமான நிலையத்தின் முன்னாடியே ரயில் நிலையம் இருக்கிறது. சுவிசில் எந்த ரயில் நிலையம் சென்றாலும் தகவல் தரும் அலுவலகம் உள்ளது. நல்ல உதவியாக இருக்கிறார்கள். நாம் எங்கு செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும் என்பதை அவர்கள் எளிதாக விளக்குகிறார்கள்.

சூரிச் விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் சென்று தகவல் தரும் நிலையத்திற்கு சென்று நான்கு நாள் பாஸ் வாங்கி கொண்டோம். மிக அதிகம் தான். ஒரு ஆளுக்கு இரண்டாம் வகுப்பு பாஸ், இருநூற்று இருபது சுவிஸ் பிராங்குகள். நான்கு நாட்களுக்கு எந்த ரயிலில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். சுவிஸ் ஒரு சிறிய நாடு என்பதாலும், நான்கு மணி நேர பயணத்தில், சுவிசின் கிழக்கு ஓரத்தில் இருந்து மேற்கின் ஓரத்துக்கு சென்று விட முடியும் என்பதால் நான்கு நாட்களுக்கு பாஸ் எடுத்துக் கொண்டோம். இந்த பாசின் வசதி என்னவென்றால் ரயில்கள்  மட்டும் அல்லாது, டிராம்கள், பேருந்துகள், படகுகள், என அனைத்திலும் கட்டணம் இன்றி அந்த நான்கு நாட்களில் பயணம் செய்து கொள்ளலாம். தனி தனியாக பயண சீட்டு எடுக்கவேண்டுமென்றால், நமது சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.
                                                                    ரயிலின் உள்ளே..!
நாங்கள் சென்று சேர்ந்த நாளின் மறுநாளில் இருந்து நான்கு நாட்களுக்கு பாஸ் எடுத்து வைத்துக் கொண்டோம். ரயில் நிலையம் சுத்தமாக இருந்தது என்றாலும் அமெரிக்க ரயில் நிலையங்களின் பளபளப்பு இங்கு இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் சூரிச் நகரில் தங்கும் அறை முன்பதிவு செய்யும் போது, எனக்கு செப்டம்பர் மூன்றில் இருந்து தான் கிடைத்தது. நாங்கள் சூரிச் சென்று சேர்ந்த நாளோ செப்டம்பர் ஒன்று. எனவே முதல் இரண்டு நாட்களுக்கு சுவிஸ் நகரின் தலை நகரான பெர்ன் நகரில் அறை முன் பதிவு செய்திருந்தோம். நாங்கள் மறுநாள் செல்ல திட்டமிட்டிருந்த ஜெனீவா நகரம் சூரிச்சிலிருந்து மூன்று மணி நேரம். அனால் பெர்நிலிருந்து இரண்டு மணி நேரம். மற்றும் இண்டர்லாகன் என்ற நகரம் நாற்பது நிமிடங்கள் மட்டுமே என்பதால், பெர்னில் அறை எடுத்திருந்தோம்.

நான் முன்பே கூறியதை போல சுவிஸ் நாட்டில் எல்லாவற்றிற்கும் விலை மிக மிக அதிகம். பெர்ன் நகரத்தில் நாங்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை நூற்றி ஐம்பது டாலர்கள். அது தான் அங்கு இருந்ததிலே மிகவும் குறைவு. (ஹாஸ்டல்கள் உண்டு என்றாலும், குடும்பத்துடன் அங்கு சென்று தங்க வசதிப்படாது. முக்கியமாக அங்கு பொதுக்கழிப்பிடங்கள் தான் உண்டு. மற்றும் குழந்தையுடன் சென்றால் அங்கு தங்குவது மிகவும் கடினம். தனியாக செல்பவர்களுக்கு ஐம்பது சுவிஸ் பிராங்குகளுக்கு ஹாஸ்டல்கள் உண்டு.)
                                                                   சூரிச் ரயில் நிலையம்.
சூரிச்சிலிருந்து பெர்ன் நகருக்கு அன்று தனியாக டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறி எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். ரயில் மிக சுத்தமாக அழகாக இருந்தது. விமானத்தில் இருக்கும் இருக்கைகளை விட மிக வசதியாக இருந்தது.

அங்குள்ள ரயில் நிலையங்களை பான்ஹோப்ப் (bahnhoff) என்றும் விமான நிலையங்களை ப்லாகபான்(flughafan) என்றும் சொல்கிறார்கள். அவர்கள் பேசுவது சுவிஸ் என்ற மொழி. ஜேர்மன் மொழிக்கும் சுவிஸ் மொழிக்கும் ஒற்றுமைகள் உண்டு என்றாலும் பல வேறுபாடுகள் உண்டு என்பதை பின்னாளில் எனக்கு நண்பனான பீட்டர் பக்மான் என்ற எனது சுவிஸ் வாழ் நண்பனின் மூலம் தெரிந்து கொண்டேன்.

சூரிச்சிலிருந்து பெர்ன் செல்ல ஒன்னேகால் மணி நேரம் ஆனது. ஒரு ஆளுக்கு அறுபத்தியொரு அமெரிக்க டாலர்கள். வழக்கமாக ரயில் பயணங்களில் சுவிஸ் மிக அழகாக இருக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் எங்களுக்கு அமெரிக்காவுக்கும் சுவிஸ் நாட்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை.  சுவிஸ் மிக அழகு என்று சொல்கிறார்கள் ஆனால் அமெரிக்காவும் இப்படித்தானே இருக்கிறது என பேசிக் கொண்டோம்.

சுவிஸ் எங்களுக்கு ஆச்சர்யங்களையும் அதிசயங்களையும் காட்டவில்லை, மறுநாள் மாலை வரை. அதற்க்கு அப்புறம் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

(பயணம் தொடரும்).
--

Monday, October 11, 2010

பூலோக சுவர்க்கம்: சுவிஸ் பயணம்-1( படங்களுடன்...)

                                    நியூ யோர்க்கின் ஜ எப் கே விமான நிலையம்.

ஐரோப்பிய  பயணம் என்பது எனது சிறுவயது கனவாகவே இருந்தது. நான் அமெரிக்காவில் வசித்தாலும் எப்பொழுதும் ஐரோப்பாவில் அதுவும் குறிப்பாக சுவிஸ் நாட்டில் பயணம் கொள்ள வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவாவாக இருந்தது. அதற்க்கு எனது எம் பி ஏ படிப்பு உதவியதற்காக அதற்க்கு ஒரு வந்தனம்.சுவிஸ் நாட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் நான் எம். பி ஏ சேர்ந்ததற்கு காரணம், ஒரு சப்ஜெக்டுக்கு நான் அங்கு சென்று ஐந்து நாட்கள் பயில வேண்டும் என்ற காரணமும் ஒன்று. எனது பயண திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்னரே துவங்கி விட்டது. சுவிஸ்சில் எங்கு தங்குவது, எப்படி பயணப் படுவது என.

முதல் நான்கு நாட்கள் முழுக்க சுவிஸ்ஸை சுற்றிப் பார்ப்பது, அடுத்த ஐந்து நாட்கள் எம் பி ஏ படிப்பிற்கு, அடுத்த நான்கு நாட்கள் ஆஸ்திரியாவை சுற்றிப் பார்ப்பது என முடிவானது. முதல் நான்கு நாட்களுக்கு சுவிஸ்சில் எங்கெங்கு சுற்றிபார்ப்பது என ஒரு அட்டவணை தயாரித்தோம். ஐரோப்பிய பயணத்துக்கு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி முதல் செப்டம்பர் மாத நடுவாந்திர   நாட்கள் வரை பயணம் செய்வது சிறந்தது என கண்டோம். அப்போது பயணச் சீட்டின் விலையும் குறைவாக இருக்கிறது. சீதோஷ்ண நிலையும் அங்கு கடும் வெயிலும் கடும் குளிரும் இல்லாத ஒரு இலகுவான நிலையில் இருப்பதை பழைய பருவ நிலைகளை வைத்து ஒப்பிட்டு அப்போது செல்வது என முடிவாயிற்று.முதலில் விமானத்தில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தோம். 

                                       ஜூரிச் நகரம். பறவையின் பார்வையில்...
 அந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதி நாளில் மாலை ஐந்தரை மணி அளவில் அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் டெல்டா விமானத்தில் துவங்கியது அந்தக் கனவுப் பயணம். நியூ யார்க் சென்று சேரும்போது மணி ஏழரை. அங்கிருந்து அடுத்து சுவிசின் பெருநகரமான சூரிச் க்கு இரவு பத்தரை மணிக்கு தான் புறப்பாடு. நியூ யார்க்கின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தை 'தி டெர்மினல்' என்ற ஆங்கிலப் படத்தில் பார்த்தது. அது  தான் எனக்கு முதல் தடவை. மிகப்பெரிய விமான நிலையம். அங்குள்ள வணிக வளாகங்களை சுற்றி சோர்வடைந்து பத்து மணிக்கு அந்த பெரிய விமானத்தில் ஏறி அமர்ந்தோம். சரியாக பத்தரை மணிக்கு எங்களை சுமந்தபடி வானில் எழும்பியது அது டெல்டா விமானம். என் மகன் அவனது இருக்கையின் முன்னால் இருந்த தொடு திரையில் விரல் வைத்து விளையாட ஆரம்பித்தான்.  பணிரெண்டு மணி அளவில் விமானப் பணிப்பெண் வந்தளித்த ஸ்பினாச் பாஸ்தாவை வாயில் வைக்க முடியவில்லை. இருந்தாலும் இருந்த அகோர பசியில் தின்று தீர்த்து உறங்கிப் போனோம்.
                                                                   
காலையில் கண் விழித்த பொது சுவிஸ் நகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தோம். பூமியில் தெரிந்த மலைகளும், குளங்களும் ஆறுகளும்.. இது வேறு நகரம் என உணர்த்திக் கொண்டே இருந்தது.
                           ஆல்ப்ஸ் மலை.. ஒரு பறவையின் பார்வையில்...

நான் கண்ட கனவு என் கண்முன்னே நனவாக விரிந்து கொண்டிருந்தது. பரந்து விரிந்திருந்த சின்ன சின்ன மலை தொடர்களும், ஏரிகளும்.. பச்சை பசேல் புல்வெளிகளும் என விரிந்த பூமியின் வரைபடத்தில், தொடுவானம் முடிகிற தொலைவில் ஒரு மலை முகடுகளில் கொட்டி வைத்த ஐஸ் கிரீம் போலத் தெரிந்த ஆல்ப்ஸ் மலை பரவசப் படுத்தியது.   பூமியில் நாங்கள் ஒரு சொர்க்கத்தை காணப் போகிறோம் என்ற ஆவல் எங்களை உந்தித் தள்ளியது.

                                                              சூரிச் விமான நிலையம்.

விமானம் தரையை தொட்டதும் உள்ளிறங்கி நடந்தோம். இம்மிக்ராஷனில் எந்த கேள்வியும் கேட்கவில்லை. விசா இருக்கிறதா என பார்த்து விட்டு 'வெல்கம் டு சுவிட்சர்லாந்த்' என கூறி அனுமதித்தார்கள்.

விமான நிலையத்தில் தான் எங்களுக்கு முதல் ஆச்சர்யம் காத்திருந்தது!
--

Saturday, September 18, 2010

ஒரு இந்தியப் பயணம் -7


                                             கெம்மனகுண்டி  செல்லும் வழியில்...

உலக மயமாக்கலால் அழகாயின பல பெருநகரங்கள். ஆனால் அதுவே பெங்களூரின் அழகை சிதைத்துள்ளன என்பது தான் உண்மை. சாலையோரப் பூங்காக்களும், பசுமைகளும் சற்றே குளிரான சீதோஷ்ண நிலையும் அழகு பெண்கள் நடமாடும் எம் ஜி ரோடு மற்றும் பிரிகேட் ரோடு என பெங்களூரு ஒரு அழகான பசுமையான நகராக இருந்தது. இப்போது எங்கும் கான்க்ரீட் காடுகளாக அழகான நீளமான எம் ஜி ரோடு குறுக்கப்பட்டு மெட்ரோ பாலம் என பழைய அழகு குலைந்து பொய் தனது முகவரியை தொலைத்து விட்டிருந்தது வருத்தம் அளித்தது. என்றாலும் இந்த முறை, பெங்களூரு பயணம் மறக்க முடியாததாய் அமைந்ததற்கு காரணம் எங்களது ஹளபீடு மற்றும் பேலூர் பயணம் தான்.

பெங்களூருவிலிருந்து ஐந்தரை மணி நேரப் பயண தூரத்தில் இருக்கிறது சிக்மகளூர். பெங்களூரிலிருந்து ஒரு க்வாலிஸ் அமர்த்தி கொண்டோம். பயணம் செய்ய செய்ய விரிந்த கர்னாடக வெளியில், தெரிந்த கன்னட எழுத்துக்களில்.. வேறொரு க்ரகுஅத்தில் பயணம் செய்யும் உணர்வை கொடுத்தது. ( அமெரிக்காவில் இப்படி உணர்ந்ததில்லை. காரணம் ஆங்கிலம். மொழி என்பது அந்த அந்த ஊரை நமக்கு நெருக்கம் ஆக்குகிறது). இரவு மழைத தூறல்களுக்கிடையே சிக்மகளுறு சென்று பிளான்டர்ஸ் கோர்ட்  என்ற விடுதியில் அடைந்தோம். சிக் மகளூரில் இருந்து ஒருமணி  நேரப் பயணத்தில் தொடங்கும் மலை பிரதேசம், பச்சை கம்பள தரைகள், தொட்டு பிடித்தபடி ஓடும் மூடு பனிகள், சாலையோர செடிகளில் தேங்கி இருக்கும் மழை நீர் என அந்த மலை தொடர் சுகமான அனுபவங்களை தேக்கி வைத்திருந்தது.

முதலில் நாங்கள் சென்று சேர்ந்த இடம் முள்ளியன்கிரி. அது தான்
 கர்நாடகாவின் மலைகளிலேயே உயர்ந்த இடம்
என சொன்னார்கள். நாங்கள் சென்று சேர்ந்த பொது, ஆளை தள்ளி விடும் காற்றும் குளிரும், எதிரில் நிற்கும் ஆள் கூட தெரியாது குரல்களை வைத்து தான் எங்களால் மற்றவர்களை கண்டு பிடிக்க முடிந்தது.

                                                                   முள்ளியணகிரி
சிறிது தூரம் தட்டு தடுமாறி நடந்த போது சில படிக்கட்டுகள் மேல் நோக்கி சென்றது. சில படிகள் மட்டுமே தெரிந்தது. மீதி படிக்கட்டுகளை மஞ்சு மறைத்துக் கொண்டது, எதோ சொர்க்கத்துக்கு அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் போல ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியது. படிகளில் இறங்கி வந்த பெரியவரை கேட்டேன். படிகளின் முடிவில் என்ன இருக்கிறது என்று. ராமர் கோவில் ஒன்று உள்ளதாக கூறினார். படிகள் செங்குத்தாக ஏறியதாலும் நேரம் இல்லாமையாலும், எங்கள் பயணத்தை தொடர ஆரம்பித்தோம். பச்சை போர்வைகள் போர்த்திய மலைகளில் சுற்றி திரிந்த பின்னர், கெம்மனகுண்டி(பெயரே அது தான்).செல்ல முயற்சித்த போது, சில நாட்களாகவே தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் சேதமாக இருக்கிறது என்றும் மேலும் மழை தூறி கொண்டே இருந்ததால், மேலும் செல்வது உசிதமல்ல என்றும், கெம்மனகுண்டி செல்ல முயற்சித்து முயற்சி தோல்வி உற்றவராய் பாதி வழியில் திரும்பிய ஒரு இளைஞர் பட்டாளம் தெரிவித்ததால் எங்களது பயணத்தை அன்று அத்துடன் முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

அன்று முழுதும் மழை தூறி கொண்டே இருந்ததால், பச்சை போர்த்திய அந்த மழையின் இலைகளில், துளிர்த்த மழை துளிகள், ஈரமான சாலைகள் , வண்ணகுடைகள் பிடித்து திரிந்த பள்ளி குழந்தைகள், அந்த மாலை நேரத்தில் சிக்மகளூர் ரம்மியமாக இருந்தது. அன்றைய இரவு, நிலவு ஒளியில் மழையின் துளிகளில்  கழிந்தது.


                                                                      ஹளபீடு 

மறுநாள் காலையில் எங்கள் பயணம், நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஹளபீடு நோக்கி துவங்கியது. பணிரெண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தின் ஒரு பகுதியை ஆண்டிருந்த ஹொய்சாலா அரசின் தலை நகராக விளங்கியது ஹளபீடு. ஹளபீடு என்றால், சிதைந்த நகரம் என்று பொருள். அன்றைய காலத்தில் அடுத்தடுத்த  இஸ்லாமிய மன்னனான மாலிக் கபூரின் படையெடுப்பில் சிதைந்தது அந்த நகரம்.

ஹலபீடுவில் இரண்டு கோவில்கள் உண்டு.ஹோய்சலேஸ்வரா மற்றும் சாந்தலேஸ்வரா. அந்த கோவில்களை கட்டியது அந்த காலத்தில் ஆட்சி செய்த ஹோய்சால மன்னன் விஷ்ணுவர்த்தனன் ஹொய்சாலா. அவனது பெயரிலும் அவனது மனைவியான சாந்தலாவின் பெயரிலுமே அந்த கோவில்கள் அழைக்கப்பட்டன. ஹோய்சாலாவிலிருந்து இருபது நிமிட பயண தூரத்தில் பேலூர் கோவில் இருக்கிறது. இத்தனையும் விஷ்ணுவர்தன ஹொய்சாலா தான் கட்டினார்.
                                              சிற்பியின் ஏவுகணை சிந்தனை.

                                                           சிவன் மற்றும் பார்வதி.

ஹளபீடுவின் கோவிலை கண்டதும் அப்படியே பிரம்மித்து நின்று விட்டேன்.அந்த கட்டமைப்பும் கலை நேர்த்தியும், நான் உலகில் வேறெங்கும் காணாதது. அதுவும் பணிரெண்டாம் நூற்றாண்டில், சிற்பிகளுக்கு எந்த அளவுக்கு கற்பனை திறன் இருக்கிறது என்றால், நான் உபயோகிக்கும் ஹெல்மெட் என்கிற தலை கவசம் மற்றும் மிசைல் என்கிற ஏவுகணைகளை செதுக்கி இருந்தார்கள். சிவா பார்வதி சிலைகளுக்கு அவர்கள் கல்லால் செதுக்கி இருந்த ஆபரணங்களை பார்த்து பெண்களுக்கே சபலம் வந்து விட்டது. அப்படி ஒவ்வொன்றாக பார்த்து செதுக்கி இருந்தார்கள்.
                                                                      கம்பீர நந்தி.
அங்கு இருந்த நந்தி சிலைகள் உயிருடன் இருப்பதை போலவே கம்பீரமாக ஆண்மையுடன் வீற்றிருந்தது, நந்தியின் ஒவ்வொரு உருப்புமே அச்சு அசலாக உண்மயாகவே இருந்தது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்று எங்கள் வழிகாட்டி கூற எனது பிரமிப்பு அதிகமானது. கோயிலின் ஒவ்வொரு சிலையையும் எனது கரங்கள் ஆசையுடன் தடவிப் பார்க்க உள்ளுக்குள் பரவசம் கலந்த சிலிர்ப்பு எனது முதுகு தண்டுவடத்தை சில்லிட்டது. ஹளபீடுவை கலை பொக்கிஷம் என உணர்ந்த உநேஸ்கோ இதனை தனது குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. 

'என்ன இல்லை நமது திருநாட்டில்' என்று சொல்வது முற்றிலும் உண்மை, எல்லா வளங்களும் பெற்ற நமது நாட்டில் நமது சின்னங்களை பாதுகாப்பது தான் மிக முக்கியமான விடயமாக இருக்கிறது. ஹளபீடு அளவுக்கு எங்களை பேலூர் ஈர்க்கவில்லை என்றாலும், ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

                                                                                                                                                                                
இரண்டு நாட்களில் நாங்கள் பெங்களூரு திரும்பி விட்டோம்  அடுத்த நாள் நான்  எனது கல்லூரி நண்பர்கள் சிலரை சந்திப்பதாக ஏற்பாடு. இந்திரா நகரில் உள்ள பார்பக்யு நேஷன் என்ற உணவகத்தில் சந்தித்தோம். பதினாறு வருடங்களுக்கு பின்னர் சந்திக்கும் வேளையில் எங்கள் கல்லூரி நாட்களை அசைபோட்டது சுகமாக இருந்தது. அந்த உணவகத்தில் அன்லிமிடெட் துவக்க உணவு நாம் போதும் என்று சொல்லும் வரை, நமது மேசையிலேயே தீ மூட்டி,  வித விதமாக வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பின்னர் மெயின் உணவு வேறு. அனைத்தும் முடித்து விட்டு நாங்கள் அமெரிக்க செல்ல விமானத்தில் ஏறி அமர்ந்த போது.. எதையோ விட்டு விட்டு செல்வது போல மனம் பிசைந்தது. கண்களில் நீர் கோடிட்டன.
வழக்கம் போல என் மனைவியிடம் சொன்னேன்...
'சீக்கிரமே இந்தியா திரும்பி செட்டில் ஆகிவிட வேண்டும்.'
'ஆமாம் நானும் அதை தான் எண்ணிக் கொண்டிருந்தேன்' என்றாள் அவள்.

சுகமான நினைவுகளையும் கனத்த இதயங்களையும்  சுமந்த எங்களை சுமந்த படி உயர உயர பறக்க ஆரம்பித்தது அந்த அலுமினியப்  பறவை..

முற்றும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...