Saturday, November 8, 2008

கடவுளும் நானும்...


கடவுள் யார்?...கடவுள் இருக்கிறாரா..?
கடவுளை யாரும் கண்டதுண்டா?..
எதற்காக மதத்தின் பெயரால் குண்டுகள் வெடிக்கின்றன?
எதற்காக மதத்தின் பெயரால் வீடுகள் பற்றி எரிகின்றன?
எதற்காக பல உயிர்கள் மதத்தினால் மதம் பிடித்தவர்களால் பறிக்கப்படுகின்றன?

கடவுள் தனக்காக தான் படைத்த மனிதனின் உயிர்களை காவு கேட்டாரா?தான் படைத்த மனிதர்களின் உயிர்களை, தனது பெயரால் சிதைக்கும்போது...கடவுளுக்கு கோவம் வராதா..?


எனக்கு நினைவு தெரிந்த நாளில் எனக்கு 'தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்' என சொல்லி தரப்பட்டிருக்கிறது. தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்துமா? இன்னமும் அப்படி தான் நம்பி கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஏதாவது துன்பம் நேரும்போதெல்லாம், நான் முன்பு செய்த தப்புக்காக தான் எனக்கு தண்டனை கிடைக்கிறது என நினைத்து கொள்வேன். ஏதாவது தப்பு செய்யும்போதெல்லாம் 'ஐயோ இப்படி செய்கிறோமே.. இதனால் நமக்கு என்ன துன்பம் நேர போகுதோ' என எண்ணி இருப்பேன். எனக்கு துன்பம் வரும் வேளையில் ' ஒ அன்று செய்த தப்புக்கு இன்று நமக்கு தண்டனைக் கொடுத்தான் ஆண்டவன் என்றே நினைத்து கொள்வேன்.

சரி தண்டனை கொடுத்தது ஆண்டவன் தான் என எப்படி எனக்கு தெரிந்தது? எனக்கு அந்த கடவுள் மேல் ஆணையாக தெரியாது. என் என்றால் நான் கடவுளை கண்டதில்லை. ஆனால், கடவுள் நமது செயல்கள் ஒவ்வொன்றும் பார்த்து கொண்டிருக்கிறார் என்ற நினைவே என்னை பல சமயங்களில் தப்பு செய்ய விடாமல் தடுத்திருக்கிறது. அப்படி என்றால் கடவுள் தேவை தானா?

என்னை பொறுத்தவரை.. கடவுள் நிச்சயமாக தேவை.. ஆனால் அது அடுத்தவனின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்காதவரையில்...? எனது சாமியை கும்பிடாதவனை நான் பழித்ததும் இல்லை, அடுத்தவன் சாமியை நான் பழித்ததும் இல்லை.


எது ஒன்று நம்மை தப்பு செய்ய விடாமல் தடுக்கிறதோ அது நமக்கு தேவையா இல்லையா? சிலர் ' மனசாட்சிக்கு பயந்தா போதும் ' என்று சொல்வார்கள். அவர்களுக்கு தெரியாதா 'மனம் ஒரு குரங்கு ' என்று. ஆசை என்ற சொல்லே மனசு என்பதில் இருந்து தானே வந்தது. ஆசை அளவுக்கு மீறும்போது தானே தப்பு செய்யவே செய்கிறோம். எனவே மனசாட்சிக்கு பயப்படுவது என்பது அங்கேயே அடிபட்டு போகிறது. உதாரணமாக ஐஸ்வர்யா ராயை பார்க்க ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கே ஆசைப்படுவது தப்பு தானே. அதையும் மனசு தானே படுகிறது?

சரி ஆனால் தான் கண்டிராத கடவுளை, படங்களிலும் சித்திரங்களிலும், கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளிலும் மட்டுமே பார்க்கப்பட்ட கடவுளுக்காக, எதற்காக இந்த போராட்டம்? தங்களது உயிர்களை பணயம் வைக்கும் அளவுக்கு கடவுள் என்ன செய்துவிட்டார் இவர்களுக்கு... தனது இனத்தையே அழிக்கும் அளவுக்கு இவர்களின் வெறி ஏன் உச்சத்திற்கு போகிறது? இதனால் இவர்களது கடவுளின் அந்தஸ்த்து பெருகி விடுமா? அல்லது கடவுள் இவர்களின் தியாகங்களையும் தீவிரவாதத்தையும் பார்த்து ஆனந்த கூத்தாடுவாரா?( நான் எல்லா மதங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்) பணம் கொடுத்து மதம் மாற்றம் பண்ண கடவுள் சொல்கிறாரா? ...

கடவுளுக்கு நான் பயப்படுகிறேன் என்று கூறினது போல.. மனித வடிவங்களில் கடவுள்களை நான் வணங்குகிறேன். பாபா ஆம்தே, அன்னை தெரசா போன்றவர்கள்..தங்கள் செய்கைகளால் கடவுளை காக்கவில்லை. கடவுளுக்காக துப்பாக்கி ஏந்தவில்லை. கடவுளுக்காக சூலாயுதம் தரிக்கவில்லை. கடவுளுக்காக வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு மனிதர்களை ரத்த சகதிக்குள் பிணங்களாக மற்ற வில்லை. தங்கள் செய்கைகளால் அவர்களே கடவுளாக மாறிவிட்டனர் என்பது தான் உண்மை.


கடவுள் படைத்ததாக சொல்லப்படும் உயிர்களை காவு வாங்குவதன் மூலம் நீ கடவுளை முட்டாளாக்கி கொண்டிருக்கிறாய். அந்த கடவுளை விட்டு வெகு தூரம் சென்று கொண்டிருக்கிறாய்...
கடவுளை காக்கும் வேலை உனக்கு வேண்டாம். உலகத்தையே காக்கிற கடவுள் தன்னை காப்பாற்றிக்கொள்ளமாட்டாரா? தன்னையே காப்பாற்றிக்கொள்ள தெரியாத கடவுள், கடவுள் தானா? நீ உன்னையும் உன் தாய் தகப்பனையும் உன் பொண்டாட்டி புள்ளைகுட்டியையும் காப்பாற்றிகொள். உலகத்தை காக்கும் கடவுள், தன்னை காப்பாற்றி கொள்வார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...