Thursday, December 30, 2010

உலக சினிமா: ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி (டென்மார்க்) 18+


டென்மார்க் ஒரு சிறிய நாடு. எனினும் பசுவுக்கும், பால் சம்மந்தப்பட்ட வெண்ணை, சீஸ்,தயிர் என அனைத்துக்கும் பெயர் போனது. டென்மார்க் நாட்டின் பிரதான மொழியான  டானிஷ் திரைப்படங்களிலும் சிறந்த திரைப்படங்கள் வெளிவந்து உலக சினிமா ரசிகர்களை அவ்வப்போது கொள்ளையிட்டு போவதுண்டு. லார்ஸ் வான் டயர் (ப்ரேகிங் தி வேவ்ஸ், டாக்வில் ),சுவீடனை சேர்ந்த லூகாஸ் மூடிசன்  போன்ற உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் இந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களே. ஹான்ஸ் ஓலே பெர்னடேல் என்ற டென்மார்க் இயக்குனர் த்ரில்லர் வகை திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர். அவர் இயக்கிய டானிஷ் திரைப்படமே ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி .

காக்க காக்க சூரியாவை போல மழையில் ஒருவன் விழுந்து கிடக்க...அன்புசெல்வனைப் போலவே கதையை சொல்ல ஆரம்பிக்கிறான் யோனாஸ். 'என்னை மழை நாளில் சுட்டு போட்டிருக்கிறார்கள், மர்மக்கதை என்றாலே ஒரு அழகிய பெண் வரவேண்டுமே',யோனாஸ் யோனாஸ் என ஒரு பெண் வந்து அவன் அருகே கதற..'இதோ வந்து விட்டாள்', எனத் துவங்குகிறது கதை.


ஒரு பெண் ஒருவனை கொலை செய்ய அவன் ரத்த குளம் கட்ட கீழே விழுகிறான். அத்துடன் யோனசின் கதை. மனைவி இரண்டு அழகு குழந்தைகள் என அளவான குடும்பம். அவனுடைய வேலை, கொலை செய்யப்பட பிணங்களை போலீசுக்காக போட்டோ எடுத்து கொடுப்பது. காலை எழுந்து மனைவி குழந்தைகளை, வேலையிலும் பள்ளியிலும் விட்டு விட்டு தனது அலுவலகத்துக்கு செல்லும் ஒரு சராசரி மனிதன் யோனாஸ். அன்றும் அப்படியே, தனது குடும்பத்துடன் வேலைக்கு புறப்பட, குடும்பமே அவனது காரை எள்ளி நகையாடுகிறது. அது ஓட்டை கார் என்றும் அதனை எப்போது தான் மாத்துவானோ எனவும் கிண்டல் செய்தபடி வர கார் அதற்கேற்றார்போல நடுரோட்டில் நின்றுவிடுகிறது. அப்போது அவன் ரியர் வியூவில் வேகமாக தன காரின் பின்னே வரும் இன்னொரு கார் தன காரின் பக்கவாட்டில் மோதியபடி கண்ட்ரோல் இழந்து எதிரில் வரும் வேறொரு காரில் மோதி குட்டிகாரணம் அடிக்க. அந்தக் காரில் இருந்து தூக்கி எறியப் படுகிறாள் அந்தப்பெண். யோனாஸ் ஓடி சென்று அந்த பெண்ணை காப்பாற்ற முயல, அவள் 'செபாஸ்தியன், செபாஸ்தியன் ' என முனகியபடி மயங்கி விழுகிறாள்.

தன்னால் தான் அந்த பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டது என்று மனசாட்சி உறுத்த அவளைக் காண மருத்துவமனைக்கு செல்கிறான் யோனாஸ். அவளது குடும்ப உறுப்பினர்கள் தவிர யாரையும் உள்ளே விட மருத்துவமனை ஊழியர் மறுக்க, தான் அவளது பாய் பிரெண்ட் என பொய் சொல்லி உள்ளே நுழைய, அவள் தான் அந்தப்பெண்ணின் பாய் பிரெண்ட் என அறிந்த அவளது சகோதரன் அவனை உள்ளே கூடி செல்கிறான். அங்கே அவளது குடும்பமே சோகத்தில் மூழ்கி இருக்க, யோனசை அந்தப்பெண் ஜூலியாவின் பாய் பிரெண்ட் என அறிமுகம் செய்து வைக்கிறான், அந்தப் பெண்ணின் சகோதரன்.

அப்போது தான் அந்தப் பெண்ணின் குடும்பம் ஒரு மிகப்பெரிய பணக்கார குடும்பம் என உணர்கிறான் யோனஸ். அவள் கோமாவில் இருப்பதாகவும், அவனால் மட்டுமே அவளை நினைவுக்கு கொண்டு வரமுடியும் என அவளது மருத்துவரும், அவளது குடும்பத்தாரும் நம்ப, அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு கிளம்பி விடுகிறான்.யோனஸ்.

ஜூலியாவின் சிதைந்து போன,  கார் இருக்கும் இடம் சென்று அவள் காரில் இருக்கும் ஒரு பெட்டியை எடுத்து அந்த குடும்பத்திடம் சென்று தான் அவளது காதலன் செபஸ்தியன் இல்லை என சொல்லிவிட தீர்மானித்தபடி மருத்துவமனைக்கு செல்ல, அங்கே அவளது குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறது. ஜூலியா கோமாவிலிருந்து கண் விழித்து விட்டாள். அதற்க்கு காரணம் செபஸ்தியன் என்கிற யோனஸ் தான் என நம்பும் அவர்களிடம் தான் அவன் இல்லை என அவன் சொல்ல, அவளது தந்தையோ, அவள் விபத்தில் உருக்குலைந்து போய் இருப்பதால் தான் அவன் அப்படி சொல்கிறான் என அவர் நினைத்து அவனிடம் ஒரு பிளான்க் செக்கை திணிக்கிறார். தனது பெண் மீண்டு வருவது அவனது கையில் தான் இருக்கிறது என அவனிடம் கெஞ்ச, அவனும் மனது கேட்காமல் சம்மதித்து செபாஸ்தியான் போல நடிக்கிறான்.

விபத்தில் பார்வை மங்கி, பழைய ஞாபகங்கள் அனைத்தும் மறந்து (அம்னிசியா) கிடக்கும் ஜூலியா விடம், அவள் தாய் லாந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் அவள் விபத்து நடந்ததை வைத்து, தாங்கள் தாய் லாந்தில் எப்படி எல்லாம் சந்தோஷமாக இருந்தோம் என அவளிடம் விவரிக்கையில் அவளும் அவன் செபஸ்தியன் என்றே நம்புகிறாள். இதற்கிடையில், தனது போலீஸ் நண்பர்களை வைத்து, செபஸ்தியன் இறந்ததை உறுதிப் படுத்திக் கொள்கிறான் யோனஸ்.  சிறிது சிறிதாக அவளை காதலிக்க ஆரம்பிக்கும் யோனசுக்கும் அவனது மனைவி மெட்டிக்கும் இடையே இடைவெளி விழ ஆரம்பிக்கிறது. இடை இடையே மருத்துவமனையில் உடம்பு முழுக்க பாண்டேஜ் போடப்பட்ட ஒரு உருவம் அவ்வப்போது காண்பிக்கப் படுகிறது.

ஜூலியாவை மிகவும் அக்கறையாக பார்த்துக் கொள்ளும் யோனஸ் ஒருமுறை அவள் உடம்பு முழுதும் கழுவி விடும் வேளையில் தங்களை மறந்து அவர்கள் கலவி கொள்கிறார்கள். சிலநாட்கள் கழித்து அவன் மருத்துவமனைக்கு வரும்போது ஜூலியாவின் குடும்பம் மகிழ்ச்சியுடன் அவள் கர்ப்பமானதை அவனிடம் பகிர்ந்து கொண்டாடுகிறார்கள். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறான். அவனை தனியே அழைத்து செல்லும் ஜூலியாவின் டாக்டர்  கோமாவில் இருக்கும்போது அவளை கர்ப்பமாக்கிய  அவனை கேட்ட வார்த்தையில் திட்டுகிறார்.அப்போது தான் அவள் கோமாவில் இருக்கும்போதே கர்ப்பமாகியுள்ள விஷயம் அவனுக்கு தெரிய அவன் அதிர்ச்சி அடைகிறான்.


இடையே தன ஒரு சோகமான நிகழ்வில் மனைவி குழந்தைகளை விட்டு அவன் பிரிய, ஜூலியா மருத்துவமனயிலிருந்து, விடுவிக்கப்பட, அனைவரும்  ஜூலியாவின் அந்த மிகப்பெரிய மாளிகையில் கூட, அங்கு ஜூலியாவுக்கும், செபஸ்தியன் என்கிற யோனசுக்கும் திருமண அறிவிப்பை பெருமையுடன் செய்கிறார் ஜூலியாவின் தந்தை. இருவரும் திருமணத்துக்கு முன் சேர்ந்திருக்க கடலோரத்தில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்க்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று இருவரும் இருக்கையில் ஒரு நாள் கதவு தட்டப்பட, கதவை திறக்கும் யோனஸ் அங்கு ஒரு மனிதன் நிற்க, அந்த மனிதன் 'தான் செபஸ்தியான்' என அறிமுகம் செய்ய, யோனசுடன் சேர்ந்து நாமும் அதிர்ச்சி அடைகிறோம். அதன் பின்னர் வருவது சில்லிடவைக்கும் கிளைமாக்ஸ்.

ஒரு வினாடி கூட தொய்வில்லாமல் படம் பறப்பதற்கு ஏதுவாக இருப்பது, இப்படத்தின் திரைக்கதை. படத்தில் பல முடிச்சிகள் கிளைமாக்சில் அவிழும்போது வாவ் போட வைக்கிறார் இயக்குனர். இரண்டுக்கும் சொந்தக்காரர் ஓலே பெர்டினால். 

அடுத்து படத்தின் மிக அற்புதமான ப்ளூ டோன் ஒளிப்பதிவு (டேன் லாச்த்சன் ) திரைக்கதையும் ஒளிப்பதிவுமே இப்படத்தின் ஹீரோக்கள்.

படத்தில் யோனசாக நடித்திருக்கும் அண்டெர்ஸ் பெர்தேல்சன் மனைவிக்கும் காதலிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். நினைவுகள் மழுங்கி, பார்வையில்லாமல் தவிக்கும் தவிப்பை ஜுலியாவாக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ரேபெக்கே ஹம்சே.

ஜெட் வேகத்தில் பறக்கும் இப்படம் நிச்சயம் தமிழ் படுத்த ஏதுவான படம்.
அம்னிசியா , பிளான்க் செக்கை நிரப்ப சொல்லுதல், காதல் என தமிழ் படத்தின் பல நிகழுவுகள் இப்படத்தில் வருகின்றன.
யாராவது கூடிய சீக்கிரம் இந்தப் படத்தை சுட்டு தமிழ் படுத்துவார்கள். ( கமலஹாசன், மிஷ்கின், கே எஸ் ரவிகுமார் கவனிக்க!).

சன்டான்ஸ் பிலிம் பெஸ்டிவல், ராபர்ட் பெஸ்டிவல், போடில் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது இத்திரைப்படம்.

ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி -ஜஸ்ட் கோ பார் இட்.

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி...




Wednesday, December 29, 2010

புகைப்படக் கவிதை- ஒரு விவாகரத்தை முன் வைத்து..!


நமக்குள்...
நடக்கும்
நிழல் யுத்தங்களில்..
முடிவுக்கு வந்தன,
முத்தங்கள்

நம்
கனவுகளை புதைத்து..
கல்லறைகள் கட்டிக் கொண்டோம்...

நம்
உறவுப் பாலத்தை தகர்க்க...
நம்
படுக்கை அறையில் நாமே,
வெடிகுண்டுகள் தயாரித்தோம்...

திருமணம் முன்
காத்துக் கிடந்தால்...
களவாடப்பட்டது இதயம்.
இப்போது..
காத்திருந்தால்...
களவாடப் படுகிறது
காலம்.

பறக்கும்
ஒவ்வொரு நிமிடங்களிலும்...
தொலைந்து கொண்டிருக்கிறது,
உனக்கும் எனக்குமான நொடிகள்...

மாற்றிக் கொண்ட மனங்கள்..
தேடிக் கொண்டிருக்கிறது
இளைப்பாற  இடங்கள்.

அன்று
ஒரு
குளிர்பானத்தில்
இரு குழல்களில்
உன்னை நானும்,
என்னை நீயும்
உறிஞ்சினோம்.

இன்று..
நம் கோப்பைகளில்
நிரம்பி இருப்பது..
நம் தாம்பத்ய கீறல்களில்
வழிந்த குருதி...


நீயும் நானும் சேரும்
புள்ளி
அழிந்துகொண்டிருக்கிறது..
நாம்
வேறு வேறு திசைகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்..!

--நிலா முகிலன்.
புகைப்படம்: நிர்மல்.
--

Tuesday, December 28, 2010

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் - 7


                                                      யுங்க்ப்ரவ்.(jungfraujoch)
யுங்க்ப்ரவ் ரயில் நிலையம் தான் ஐரோப்பாவின் உயர்ந்த ரயில் நிலையம். கடல் அளவிலிருந்து 3471 மீட்டர்களில் அமைந்துள்ளது. சுமார் 3571 மீட்டர்களில் ஸ்பிங்க்ஸ் என்ற மலை ஸ்தலம் உள்ளது. அங்கு ஒரு வானொலி தொடர்பு நிலையம் உண்டு. உலக தட்பவெட்ப நிலை  ஆராய்ச்சி நிறுவனமும் யுங்க்ப்ரவ் இல் உண்டு. மலையை குடைந்து ஏழு மைல்கள் சென்றால் தான் யுங்க்ப்ரவ் என்ற அந்த வெள்ளை சுவர்கத்தை அடைய முடியும். 1896 ஆம் ஆண்டு சூலை மாதத்தின் 27  ஆம் தியதி, மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது. கிட்டத்தட்ட 16  ஆண்டுகள் இந்த பணி நடைபெற்றது. பருவநிலை, விபத்துகள் என பலவாறு தடைகள் ஏற்பட்டபோதும், 1912 ஆண்டில் இந்த பணி யுங்க்ப்ரவ் வரை முடிக்கப்பட்டது. அதைவிட உயர்ந்த ஸ்தலமான ஸ்பிங்க்ஸ் வரை ரயில் பாதை அமைக்க இயலவில்லை. எனினும் இதுவே மனிதகுலத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்று என கருதப்பட ஏதுவாக இருந்தது. 

நான்கு ரயில்கள் மாறி யுங்க்ப்ரவ் சென்ற நாங்கள், பனி துகள்கள் பெய்வதால், வெளியே சென்று பனியில் நிற்க இயலாது என அறிவிப்பு செய்திருந்தனர்.  அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மிகுந்த பசி. அங்கே உணவு உண்ணலாம் என நினைத்த பொது பாலிவூட் என்ற நம்மூர் உணவகம் இருப்பதை கண்டு அடடா இந்த குளிருக்கு காரசாரமாய் சாப்பிடலாம் என பாய்ந்த எங்களுக்கு அங்கு வைத்திருந்த உணவுகளை பார்த்ததும், அப்படியே பின்னேறினோம். ஆமா சும்மா பருப்பு, நான் அப்புறம் ரெண்டு போரியல் ஒரு அளவு சாப்பாடு என வட இந்திய உணவு வகைகளுக்கு முப்பைதைந்து சுவிஸ் பிராங்குகள் என போட்டிருந்தது பகல் கொள்ளையாக இருந்தது. அங்கேயே இருந்த மற்றொரு சுவிஸ் உணவகத்தில் நூடுல்ஸ் வாங்கி உண்டு முடிக்கையில் அந்த அறிவிப்பு பலகையை எடுத்து விட்டு எங்கள் வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
இந்த மலையை குடைந்து தான் லிப்ட் மற்றும் ரெஸ்டாரண்டுகள் அமைத்துள்ளனர். இந்த மலையில் வலது புற அடியில் தெரியும் சிறு துவாரம் தான் இந்த வெள்ளை சுவர்கத்தின் நுழைவு வாயில்

அங்கிருந்த லிப்டின் மூலம் ஒரு இருநூறு அடி கீழ் நோக்கி சென்றதும் இறங்கி வெளியே வந்து பார்த்தால் ஒரு குகைக்குள் நின்று இருந்தோம். கடும் குளிர். நிச்சயம் இங்கு செல்லும்போது ஜாக்கெட் ஸ்வெட்டர் கை உறை எல்லாம் எடுத்து செல்வது நலம் இல்லையேல் எல்லாம் விறைத்து விடும் எச்சரிக்கை. கடும் உயரம் என்பதால், தலை கிறு கிறுத்தது. மூச்சு வாங்க ஒரு இருநூறு மீட்டார் நடந்திருப்போம். அந்த குகையில் வாயில் வர வெளியே வந்தோம்

எங்கும் பனி. வெள்ளை வெளேரென்று தரையும் தூரத்தில் தெரிந்த வெள்ளை மலைகளும் என அந்த காட்சியை நேரில் கண்டால் தான் அனுபவிக்க முடியும். பல படங்களின் பாடல்களை இங்கு ஷூட்டிங் எடுத்துள்ளனர் என்பதை உணர்ந்தோம். மக்கள் அனைவரும் அங்கு பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவி விளையாடிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவிலேயே பனி பிரதேசங்களை கண்டிருந்தாலும், இங்கு உள்ள அழகு அங்கு இல்லை. அதற்க்கு காரணம், மலைகள். மலைகள். நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது தான், அவ்வளவு நேரம் ஒரு மலையின் உள்ளே இருந்திருந்தோம் என உணர்ந்தோம்.

மலையை குடைந்து அதற்குள்,  குகை போல செய்து அதில் லிப்ட், பாதை எல்லாம் போட்டிருந்தார்கள். அங்கிருந்து ஒரு குழுவினர் நடந்தபடி இன்னோர் இடத்தில் இருந்த ஒரு ரேசொர்டுக்கு சென்று கொண்டிருந்தனர். நேரமின்மையால் எங்களால் செல்ல இயலவில்லை.
                                          ஐஸ் ம்யூசியம் செல்லும் வழி.
அங்கேயே ஐஸ் ம்யூசியம் ஒன்று இருக்கிறது. தரை சுவர் எல்லாமே ஐஸில் இருக்கும் அதனுள், ஐசிலேயே, பெங்குவின், கழுகு எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். அவை உருகிவிடாமல் இருக்க அதே தட்ப வெட்ப நிலையை அமைத்திருக்கிறார்கள்.  இந்த தரையில் ஸ்கேடிங் செய்து கொண்டே செல்லலாம். விழாமல் தப்பிப்பது உங்கள் சாமர்த்தியம்.

யுங்க்ப்ரவ் ஸ்தலத்தை அடைய இரு வழிகள் உண்டு. லாடேர்ப்ருண்ணன் வழியாக சென்றால், மலைகளையும், ஓடைகளையும் பார்த்தபடி செல்லலாம். க்லேண்டேல்வால்ட் என்ற இடம் வழியாக சென்றால் மலைகளில் தெரியும் வீடுகளையும், கன்ட்ரி சைட் எனப்படும் கிராமங்களையும் கண்டு களித்தபடி வரலாம். லாடர்ப்ருண்ணன் வழியாக யுங்க்ப்ரவ் அடைந்த நாங்கள், வரும் போது க்லேண்டேல்வால்ட் வழியாக கீழிறங்கினோம். வரும்போதும் பசுமையான மலைகளில் ஆங்காங்கே வீடுகள் அமைந்து காணும் கண்களை கொள்ளை கொண்டது.

                                                     க்லேண்டேல்வால்ட்

மீண்டும் கீழிறங்கி அன்று இரவு நாங்கள் சூரிக் சென்று சேர்ந்தோம். இருந்தாலும், எங்கள் நினைவுகள் மட்டும் யுங்க்ப்ரவ் விட்டு கீழிறங்கி வர மறுத்தன. 

(தொடரும்...)
--

Thursday, December 16, 2010

A.R. ரகுமான் என்ற ஆளுமை..!


அல்லா ரக்கா ரகுமான், தான் இந்த நிலை வரை வருவதற்கு காரணியான இளையராஜாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

எண்பதுகளின் இறுதியில், தமிழ் திரை உலகின், இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்,கே பாலச்சந்தரின் புது புது அர்த்தங்கள் திரைப்படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிய இளையராஜாவிற்கு  அந்தப் படத்திற்கு பின்னணி இசை வழங்க நேரமில்லை.  படம் வெளியீட்டு தேதியை அறிவித்தாகிவிட்டது. இளையராஜாவோ ஏகப்பட்ட படங்களில் பணி புரிந்து கொண்டிருந்ததால், இதற்க்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. பார்த்தார், கே பி. வேறொருவரை வைத்து பின்னணி இசை கோர்ப்பை முடித்து விட்டு சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டு விட்டனர். இதனை அறிந்த இளையராஜாவுக்கு கடும் கோபம். கலைஞனின் கர்வம் தலை தூக்க, இனி கவிதாலயாவிற்கோ கே பி கோ இசை அமைக்க போவதில்லை என முடிவெடுத்தார். கவிதாலயாவின் அடுத்தப் படத்தை மணிரத்னம் இயக்க முடிவாகி இருந்தது. அதுவரை தான் பணி புரிந்த இளையராஜாவின் இசை தன் புதிய படத்துக்கு இல்லை என்பதை உணர்ந்த மணிரத்னம், அவருக்கு இணையான ஒரு இசை அமைப்பாளர் அப்போது தமிழ் திரை உலகில் இல்லை என்பதால், ஒரு புதியவரை இறக்குமதி செய்ய முடிவு செய்தார்.  தனது நண்பனும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடம் இதை பற்றி சொல்ல, தனது விளம்பர படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருக்கும் திலீப் என்கிற அல்லா ரக்கா ரகுமானை பரிசோதித்து பார்க்குமாறு சொல்ல, மணி சின்ன சின்ன ஆசை பாடல் வரும் பகுதியை சொல்லி, அதற்க்கு ஒரு பாடல் இசை அமைத்து தருமாறு ரகுமானை பணிக்க, அரை நாளில் இசை அமைத்து மணி ரத்னத்திடம் ரகுமான் போட்டு காட்ட, சந்தோஷத்தில் அவரை அணைத்துக் கொண்ட மணி ரத்னம், அதன் பின் தான் நம்பிக்கையோடு தனது 'ரோஜா' திரைப்படத்தை இயக்க கிளம்பினார்.


அதன் பின்னர் நடந்ததெல்லாம்.. இசை உலக வரலாறு..
1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் பாடல்களை முணுமுணுக்காத தமிழ் உதடுகளே இல்லை எனலாம். அப்போது என் வீட்டுக்கு வந்த என் சகோதரனின் கல்லூரி தோழியான ஒரு யுகோஸ்லோவியா நாட்டுப் பெண்ணான கரீனா,' சின்ன சின்ன ஆசை ' என முழுதுமாக தனது மழலை தமிழில் பாடிக் காட்டியபோது, எனக்குள் உண்டான சிலிர்ப்புகளுக்கு சொந்தக் காரன் இந்த ரகுமான். தான் இதுவரை கேட்ட பாடல்களில் தனக்கு பிடித்த பாடலாக அவள் 'சின்ன சின்ன ஆசையை' கொண்டாடிய போது, ரகுமானை நினைத்து எனது மனமும் கொண்டாடியது.

ரோஜாவுக்கு பிறகு, புதிய முகம், ஜென்டில்மேன், காதலன் என அவர் கொடி தமிழில் பறந்துக் கொண்டிருந்தது .இந்த சமயத்தில் அவர் இசைமைத்த 'ரோஜா' இந்தியில் டப் செய்யப்பட்டு ஹிந்தியிலும் சக்கை போடு போட அவரை இந்திக்கு அழைத்து சென்றவர்கள் இருவர். ஒருவர் , ராம் கோபால் வர்மா, மற்றொருவர் சுபாஷ் காய். ராம் கோபால் வர்மாவின் 'ரங்கீலா'வும், சுபாஷ் காய் இன் 'தால்' லும் ரகுமானை இந்திய திரைப்பட உலகின் முதல் இலக்க எண்ணிக்கைக்கு அழைத்து சென்றது. அதன் பின் அவர் சேகர் கபூரால் ஹாலிவூடிற்கு அழைக்கப்பட்டு, பின்னர், அவர் தான் இங்கிலாந்தில் மிக சிறந்த இயக்குனர்களின் ஒருவரான டானி பாயில் லுக்கு ரகுமானை அறிமுகப்படுத்தி வைத்தார்.

டானி பாயில் 'ஸ்லம் டாக் மில்லியனர் ' என்ற இந்தியப் படத்தை உருவாக்க நினைத்தபோது , ஒரு இந்தியர் தான் அந்த படத்துக்கு இசைஅமைக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். தனது நண்பனான சேகர் கபூரிடம் ஆலோசனை கேட்டபோது, சேகர் கபூர் ஏ ஆர் ரகுமானை பரிந்துரைக்க, ரகுமானோ அந்த படத்தை ஒத்துக்கொள்ளலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்து விட்டார். காரணம் அவர் அப்போது அவ்வளவு பிசியாக இருந்தது தான். டானி தனக்கு ஒரு ஏழு இசை கோர்ப்புகள் மட்டும் வேண்டும் என கேட்டதும் ஒத்துக் கொண்டார் ரகுமான். ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் ஒரு கனமான திரைப்படம் என்பதால் படத்திற்கு அதிரடியான இசை வேண்டும் என்பது மட்டுமே டானியின் கோரிக்கை. மிகக் குறைந்த நாட்களில் இசை கோர்க்கப் பட்ட படம் அது. அது தனக்கு ஆஸ்கர் விருது வாங்கி தரும் என்றோ, அதன் மூலம் தனக்கும், தமிழகத்துக்கும், ஏன் இந்தியாவுமே பெருமைகள் கிடைக்கும் என்பதை அவர் அப்போது நினைத்து பார்த்திருக்கவில்லை.

இரண்டு ஆஸ்கார்களை அவர் வாங்கியதும் அவர் கூறிய வார்த்தைகள், அவரை மேலும் ஒரு சிறந்த மனிதராக காட்டியது.  முதல் விருதை வென்றதும், தமிழில் வழக்கம் போல 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்னது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தந்தது என்றால், இரண்டாம் விருதை வாங்கும் வேளையில், ' என் முன்னிருந்த அன்பு மற்றும் வெறுப்பு என இருந்த இரண்டு வாய்ப்புகளில், அன்பை தேர்ந்தெடுத்ததால் நான் இந்த மேடையில் இருக்கிறேன்' என்று சொன்னதும் இந்தியர்கள் அனைவருமே பெருமைப்பட்டனர்.



நான்கு வயதில் பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் ஒன்பதாவது  வயதில் தனது தந்தையை இழந்ததால், குடும்ப பாரம் சுமக்க வேண்டிய நிலை. தனது பதினொன்றாவது வயதில், இளையராஜாவின் இசை குழுவில் சேர்ந்து பணி புரிய ஆரம்பித்தார். உலகின் தலை சிறந்த தபலா வித்துவானான சாகிர் உசேனுடன் சேர்ந்து பல நாடுகள் பயணித்தார். லண்டனின் ட்ரினிட்டி இசை பள்ளியில் இசையில் பட்டம் பெற்றார்.

இப்போது டானியின் அடுத்த திரைப்படமான 127 ஹவர்ஸ் என்ற திரைப்படத்துக்கும்  ரகுமான் தான் இசை. மலை ஏற்றத்தை பொழுதுபோக்காக கொண்ட ஒருவன் ஒரு மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கை ஒரு பொந்தினுள் மாட்டிக்கொள்ள... அவன் எப்படி நூற்றி இருபத்து ஏழு மணித் துளிகளை அவ்வாறு கழித்தான் என்பது கதை. கதையின் கடைசியில், பொந்தினுள் மாட்டிக்கொண்ட தனது கையை தானே வெட்டிக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை. அப்படி செய்தால் மட்டுமே அவன் பிழைக்க முடியும் என்கிற நிலையில் அவன் என்ன முடிவு எடுத்தான் என்பது தான் கதை. இப்படி ஒரு சிலிர்ப்பூட்டும் கதைக்கு தனது சிலிர்ப்பூட்டும் இசையை வழங்கிய ஏ ஆர் ரகுமான், இந்த ஆண்டும், ஆஸ்காருக்கு இணையான, கோல்டன் க்ளோப் என்ற விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கோல்டன் க்ளோபில் விருது வாங்குபவர்களே முக்கால் வாசி, ஆஸ்காரிலும் விருது வாங்குவார்கள். கோல்டன் க்ளோப் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதே மிகப்பெரிய காரியம். அதுவும் இவ்வளவு குறைந்த காலத்தில். .!

ரகுமான் அடுத்த உலக விருது பெரும் நாளை நினைத்து காத்திருக்கிறேன்.

பின் குறிப்பு: இசையை பற்றி எனக்கு அடிப்படை எதுவும் தெரியாது. இருந்தாலும் சமையல் ருசியாய் இருப்பதை சொல்ல சமையல் தெரிந்திருக்க தேவை இல்லை என்பதை போல, இசையை ரசிக்க, இசையின் அடிப்படை அறிவு தேவை இல்லை என்பது என் கருத்து. ஏ ஆர் ரகுமானின் அதிரடி இசை என்ன தான் அருமையாக இருந்தாலும், அந்த அந்த  காலக்கட்டங்களில்  மட்டுமே மனதில் தங்குகின்றன. இளையராஜாவின் மென்மையான மேலோடிகள் காலம் கடந்தபின்னும் மனதில் புகுந்து மயிலிறகால் வருடி  தாலாட்டுவதன் மர்மம் என்னவென்று எனக்கு இன்னமும் விளங்கவில்லை..!


--

Saturday, December 11, 2010

உண்மைத் தமிழன் சீமான்..!

சீமான்..!
தற்போதைக்கு ஈழ தமிழர்கள் தங்கள் விடிவெள்ளியாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர். சில எழுத்தாளர்களைத் தவிர்த்து பலரும் விடுதலைப் புலிகளின் மேலும் இலங்கை அரசின் மேலும் பழிகளைப் போட்டு ஈழத் தமிழர்களின் சாவுக்கு பரிதாபம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்த வேளையில்...ஈழத்தமிழர்களுக்காக ஓங்கி குரல் கொடுத்து இயக்குனர்களை ஒருங்கிணைத்து ராமேஸ்வரத்தில் தைரியமாக இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக உண்மைகளை போட்டு உடைக்க.. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஈழ மக்களை , தங்களுக்காக ஒருவர் பேசி சிறை சென்று இருக்கிறாரே என திரும்பி பார்க்க வைத்தார் சீமான்.

ஈழம் என்று ஒன்றை இருப்பதையே மறந்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள், பொதுத் தேர்தல் முடிந்த வேளையில்.. கொத்து கொத்தாக ஈழத்தில் மடிந்து கொண்டிருந்த தமிழர்களை நினைத்து பார்க்காமல், தன் குடும்பங்களின் வாரிசுகளுக்கு ஏற்ற துறையை வேண்டி சக்கர நாற்காலியில் தமிழர் தலைவராக கருதப்பட்டவர் டில்லியில் பேரம் பேசி கொண்டிருக்க, ஈழ போரில் இலங்கை அரசுக்கு உறுதுணையாக பல உதவிகளை செய்து கொண்டிருந்த இந்தியாவுக்கு எதிராக, தமிழனுக்கு ஆதரவாக  இவரும் இவரது ஆதரவாளர்களும் செய்த பிரச்சாரத்தில்... பல பெரிய காங்கிரஸ் தலைகள் மண்ணில் உருள காரணமாய் இருந்தவர்.

பல தமிழ் மீனவர்களை நிர்வாணப் படுத்தி, சித்திரவதைப்படுத்தி சின்னாபின்னமாக குத்துயிரும் குலை உயிருமாக அனுப்பிக் கொண்டிருந்தது சிங்கள ராணுவம். பலரின் உயிர்களையும் பறித்து கொண்டு வெறும் பிணங்களை திருப்பி படகில் அனுப்பி கொண்டிருக்க, அதனை எதிர்த்து  ஒரு தீர்மானம் கூட இயற்றாமல், பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார் தமிழக முதல்வர். அதனை கண்டித்தவர் சீமான்.  நீங்கள் எங்கள் மீனவர்களை அடித்தால், நாங்கள் உங்கள் மாணவரை அடிப்போம் என்று சொன்னதற்காக, சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், மீண்டும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பொதுத் தேர்தல் மிக அருகில் வருகிற நேரத்தில், இவரது பிரச்சாரத்தின் சூடு தாங்காமல் எங்கே தாங்கள் கவிழ்ந்து விடுவோமோ என எண்ணி சிறையில் அடைத்தவர்களின்  வாயில் மண். நீதி தேவதை இன்னமும் கண் விழித்துக் கொண்டிருப்பதால், சீமானை, தேசிய பாதுகாப்பின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது நீதி மன்றம்.

நம் தொப்புள் கோடி சொந்தங்களான இலங்கை தமிழர்கள் அங்கே சித்ரவதைப்படுத்தப்பட்டு , சீரழிக்கப்பட்டு கண்டந்துண்டமாய் கொந்தப்பட்டு கொல்லப்பட்டு கொண்டிருக்கையில், இங்கு முதல்வரின் சொந்தங்கள் பதவிக்காக அடித்துக் கொண்டிருந்ததை, தொலைபேசி உரையாடல்களை ஒலிபரப்பியதன் மூலம் புண்ணியம் கட்டிக் கொண்டன ஊடகங்கள். போர்குற்றங்களை இழைத்த ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து தமிழர்களின் ரோஷத்தில் ஒரு சதவிகிதம், நம் உள்ளூர் தமிழர்களுக்கு இருந்திருந்தால், இந்தியாவில் காலடி வைத்திருக்கமாட்டான் அந்த கொடுங்கோலன். கோவையில் ஒரு  சிங்கள அமைச்சர் விரட்டி அடிக்கப்பட்டார். அவரை இங்கிருந்து அழைத்தவர்களும் தமிழின துரோகிகளே. அவரையும் விரட்டி அடித்திருக்க வேண்டாமா..?

சானல் 4  போன்ற ஊடகத்துறைகள் இல்லாவிட்டால், இலங்கையில் அவர்கள் தமிழர்களுக்கெதிராக போட்ட பேயாட்டங்கள் வெளியே தெரியாமல் போய் இருக்கும். ஊடகத்துறை இல்லா விட்டால்.. பதவிக்காக எம் முதல்வரின் சொந்தங்கள் போட்ட ஆட்டங்களும் வெளியே தெரியாமல் போய் இருக்க கூடும். சில பத்திரிக்கைகளும் சில தொலைகாட்சிகளும் உண்மையாய் இருப்பதால் தான் திருவாளர் பொது ஜனம் சிறிது நம்பிக்கையோடு நடமாடிக் கொண்டிருக்கிறான்.

ஏழு மாதங்களுக்கு முன் நாம் தமிழர் என்ற இயக்கம் கண்ட சீமான் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அடுத்த பொது தேர்தலில் போட்டி இடப்போவதாய் சூளுரைத்திருக்கிறார். தன்னை சிறையில் இட்ட அரசுக்கு பழி வாங்குவதற்காக, பதட்டத்தில் திட்டங்கள் போடாமல், தமிழர்களுக்காக என திட்டங்கள் போட வேண்டும். அரசியலுக்கு வந்ததும்.. பதவிக்கு ஆசைபடாமல், இப்போது போலவே எப்போதும் போராட்ட குணத்தோடு தமிழர்களின் துணை நிற்கவேண்டும்.

இப்போது உலக தமிழர்கள் முழுமையாக நம்பி இருப்பது.. உங்களைத்தான் சீமான்!..
--

Saturday, December 4, 2010

பூலோக சுவர்க்கம் - 6 சுவிஸ் பயணம்.

                                                             இண்டர்லாகன் ஏரி
அன்றைய பொழுது இனியே விடிய.. நாங்கள் ஆவலுடன் காத்திருந்த யுங்க்ப்ரவ் பயணம் செல்ல வேண்டிய நாள் வந்தது. அன்றைய இரவு நாங்கள் சூரிச் செல்ல வேண்டி இருந்ததால், எங்கள் பெட்டி படுக்கைகளை உருட்டி கொண்டு பெர்ன நகர ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நமது பெட்டிகளின் அளவுகளுக்கேற்ப (விலையும் மாறுபடுகிறது) நிறைய லாக்கர்கள் இருக்கின்றன. இரண்டு லாக்கர்களில் எங்கள் பெட்டிகளை அடைத்து விட்டு எட்டு சுவிஸ் பிராங்குகளை உண்டியல் போன்ற துவாரத்தில் போட்டால், தானியங்கி இயந்திரம் மூலம் லாக்கர்களின் சாவிகள் வந்து விழுகின்றன. இருபத்து நான்கு மணி நேரத்துக்கு எட்டு சுவிஸ் பிராங்குகள் வாங்கப்படுகிறது.

யுங்க்ப்ரவ் க்கு பெர்நிலிருந்து இண்டர்லாகன் என்னும் ஒரு மிக அழகிய ஊர் வரை ரயில் செல்கிறது. அங்கிருந்து மலை ஏற மூன்று  ரயில்களை மாறி ஏற வேண்டும். பெர்நிலிருந்து இண்டர்லாகன் செல்லும் வழியில் இரண்டு அழகிய ஏரிகள் வருகின்றன. ஒன்று பிரியன்ஸ் ஏரி . மற்றொன்று துன் ஏரி. இரண்டு ஏரிகளும் இணையும் இடத்தை தான் இண்டர்லாகன் ஏரி என சொல்கிறார்கள். இண்டர்லாகன் என்றால் இரண்டு ஏரிகள் இணையும் இடம் என்று அர்த்தம்.
                                                             இண்டர்லாகன் ஏரி

ரயிலில் செல்ல செல்ல ஸ்பீஸ் என்ற ஏரியும் சேர்ந்துகொள்ள.. அப்படியே மலைகளும் நீல வண்ண நீர்பரப்பும்... பறந்து செல்லும் பறவைகளும்.. நீரில் நீந்தி செல்லும் ஓடைகளுமாக. இயற்க்கை காட்சிகள் விரிய விரிய.. கண்கள் விரிய பார்த்துக் கொண்டு வந்த நாங்கள்.. எங்களுக்கு அதனை காண கண்கள் இருந்தமைக்காக நன்றி சொல்லிக் கொண்டோம். அப்போது தான் கண் பார்வை இல்லாத நபர்களின் மேல் ஒரு மரியாதையும் பரிதாபமும் எங்களுடன் சேர்ந்து கொண்டது. அவர்களுக்கு சுவிஸ் நகரமும் ஒன்று தான்..சுண்டைக்காமுத்தூரும் ஒன்றுதானே என்ற உணர்வு மேலிட.. அந்த இயற்க்கை காட்சிகளை.. அவதார் படத்தின் பண்டோரா கிரகத்தை பார்ப்பதை போல ஐயோ.. வாவ் ஸ்ஸ் என்று குழந்தைகள் போல குதூகலித்தபடி நாங்கள் பார்த்து ரசித்ததை கண்டு.. எங்களோடு கூட வந்த சுவிஸ் மக்கள் எங்களை ரசித்தார்கள். பாதி மூடி இருந்த ஜன்னலை.. மேலும் முழுக்க திறந்து விட்டு.. 'என்ஜாய் யுவர் விஷன்' என்று உதவி புரிந்ததோடு மட்டுமல்லாது.. 'உங்களை புகைப்படம் எடுத்து தரட்டுமா   ?' என அவர்களே எங்கள் புகைப்பட கருவியை வாங்கி எங்களை சுட்டு தள்ளினார்கள்.

                                                                லாட்டர்ப்ருன்னேன் 

பெர்நிலிருந்து இண்டர்லாகன் ரயில் நிலையத்தை அடைய நாற்பது நிமிடங்கள் ஆனது. முழு பயணத்திலும்.. மூன்று ஏரிகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கண்களில் நீர் வழிய பார்த்து ரசித்து கொண்டே வந்தோம். இண்டர்லாகனில் இருந்து அடுத்த ரயில் ஏறி லாடர் பருணன் (Lauterbrunnen) என்ற இடத்துக்கு சென்றோம். விலை மிக அதிகம் நூறு அமெரிக்கன் டாலர்கள் ஆனது.போகும் வழி எல்லாம் பக்காவாட்டில் தெளிந்த நீரோடைகளும், மலைகளில் இருந்து விழும் நீர் வீழ்ச்சிகளும் என அவ்வளவு அழகு. லாடேர்ப்ருன்னானில் இருந்து அடுத்த ரயில் பிடித்து க்ளைன்-ஷேடேக் (Kleine Scheidegg)  என்ற இடம் செல்லும்போது தான் பனி போர்த்திய மலைகள் நம் உடனே ஊடாடிக்  கொண்டு வருகிறது. மலை களின் வழியே பாதை ஏற்படுத்தி பலர் கைகளில் குச்சிகளை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர். இண்டர்லாகனில் இருந்து நடைபயனமாகவே மலையின் உச்சிக்கு வருபவர்கள் இருக்கிறார்கள் என்று பிறகு கேள்விப்பட்டேன். எனக்கும் நடந்து செல்ல ஆசை தான். ஆனால் குடும்பத்துடன் அது முடியாதே.. என எனது ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.
க்ளைன் ஷேடாக்


க்ளைன் வந்து சேர்ந்ததும் அதுவே சொர்கமாக இருந்தது. அங்கேயே அமர்ந்து தெரியும் பனி போர்த்திய மலை முகடுகளை பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது. அங்கிருந்து கிளம்ப மனம் வராமல் அங்கேயே ஒரு மணி நேரம் மலைகளை பார்த்தபடி அமர்ந்துவிட்டோம். பின்னர் ஆசுவாசப்படுத்தியபடி யுங்க்ப்ரவ் போகும் அடுத்த ரயிலில் ஏறினோம். அது தான் மலையின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. உச்சிக்கு போகும்போது வயிற்றை பிசைகிறது. மயக்கம் வருகிறது. யுங்க்ப்ரவ் செல்லும் அனைவரும் மாத்திரைகள் எடுத்து செல்வது நல்லது. அங்கு ஆக்சிஜன் அளவு குறைவதால்.. இந்த மயக்கம் ஏற்படுகிறது என அறிந்தேன்.

மலைகளை குடைந்து ரயில் பாதைகளை அமைத்து இருக்கிறார்கள். மிக மிக மெதுவாகவே ரயிலும் செல்கிறது. அந்த ரயில் பாதை தான், உலகிலேயே உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள ரயில் பாதையாகும். யுங்க்ப்ரவ் என்பது தான் ஐரோப்பாவின் உச்சி அதாவது 'டாப் ஆப் யுரோப்' என்கிறார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு நான்கு ரயில்கள் மாற்றி உச்சிக்கு சென்றதும், எங்களுக்கு அந்த அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது.

--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...