Monday, October 31, 2011

கோப்பை!




எதற்க்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்...?
உன் தோல்விகளில்...
நான் பங்கேற்றுக் கொள்ளவா?
என் தோள்களில்...
உன் சுமைகளை இறக்கிக் கொள்ளலாம்.
உனக்காக...
என்னால் கோப்பையில் இறங்க முடியாது.

எதற்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்..?
உன் வெற்றிகளை
நான் கொண்டாடுவதற்கா...?
என் தோள்களில் உன்னை சுமந்து
ஊர்வலம் வருவேன்.
உனக்காக
என்னால் கோப்பையை எந்த முடியாது.


எதற்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்...?
நமது நட்பை
டையாளப் படுத்திக் கொள்ளவா?
நீ உடைந்து போகும் முன்பு
என்னை உடைத்து
உன்னை ஒட்டித் தருவேன்...
உனக்காக..
என்னால் கோப்பையை பிடிக்க முடியாது


உன் வெற்றிகளுக்கும்,
உன் தோல்விகளுக்கும்,
உன் கொண்டாட்டங்களுக்கும்...
கோப்பைகளை நிரப்பி நிரப்பி,
உன் நிகழ்கால
நிமிஷங்கள்  
தொலைத்து
உனக்கான ஆயத்தங்கள்
ஆறப்போடப் படுகின்றன...

ஏந்திக் கொள்கிறேன்..
என்
கோப்பையை நான்
நிரப்பிக்கொள்ளவும்,
எனக்கான கோப்பையை
நான் கை பிடிக்கவும்
எனக்கான சுதந்திரம்
உன் கோப்பை கொடுக்குமானால்...!

Saturday, October 29, 2011

உலக சினிமா: தி கிங்க்ஸ் ஸ்பீச்.




அரசியல்வாதிக்கும், அரசாள பிறந்தவர்க்கும், தனது வாயே மூலதனம். அதாவது, மக்களை மதிமயக்க வைக்கும் பேச்சாற்றல் தான் அவர்களது பலம். அதற்க்கு , அண்ணா, கருணாநிதி, மார்டின் லூதர் கிங் என பல உதாரணங்கள் சொல்லலாம். அரசாள பிறந்தவனுக்கு பேசும்போது நாக்கு பிறழ்ந்தால் அவன் என்னவெல்லாம் சங்கடங்கள் அனுபவிக்கக் கூடும் என்பதை அழகாக சொல்கிறது சென்ற வருட சிறந்த படம், சிறந்த நடிகர்,சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதை  என்கிற மிக முக்கியமான  ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற தி கிங்க்ஸ் ஸ்பீச் திரைப்படம்.


பெர்ட்டி என்கிற ஆல்பர்ட் என்கிற ஆறாம் ஜார்ஜ் மன்னர். உண்மை புகைப்படம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில், இங்கிலாந்தை ஆண்ட மன்னன்ஆறாம்  ஜார்ஜ் நோய் வாய் பட்டிருந்த காரணத்தால், தனது முதல் மகனான டேவிட் க்கு பட்டம் சூட்ட நினைக்கிறார். டேவிடோ ஒரு விவாகரத்தான ஒரு அமெரிக்க பெண்ணிடம் காதல் கொண்டு அவளை மணக்க இருப்பதாக கூறுகிறான். அந்த காலத்தில் பிரிட்டிஷ் மன்னன் தான் கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவனாகவும் அறியப்பட்டதால், ஒரு மன்னன் இவ்வாறு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மணப்பது அப்போதைய கத்தோலிக்க மத சட்ட திட்டங்களுக்கு எதிராக இருந்ததால், அவன் மன்னனாக ஆகும் தகுதி இழக்க, சட்டப்படி அவனது தம்பி பெர்ட்டி தான் அந்த பட்டத்துக்கு ஏற்றவன். 

படத்தின் துவக்கத்திலேயே தனது நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை நிகழ்த்த பெர்ட்டி முயற்ச்சிக்க, தனது திக்கு வாய் பிரச்சனையால் அவனால் சரியாக உரை நிகழ்த்த முடியாமல் போக, அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை. மக்களுக்கோ, சரியாக பேசத்தேரியாதவன் தங்களின் தலைவனாக எப்படி இருக்க முடியும் என அவன் மேல் நம்பிக்கை இன்மை. ஏற்படுகிறது. அரசாங்க காரியங்களில் தன சகோதரனை விட சிறந்து விளங்கும் பெர்ட்டி, தனது வாய் பிரச்னையால் அவனால் ஒரு சிறந்த மன்னனாக வாய்ப்பை ஏற்று நாட்டை வழிநடத்த அவனுக்கு நம்பிக்கை வராமல் போகிறது. 
லயொநெல் லோக், தனது மனைவியுடன், உண்மை புகைப்படம்.

அவனது கவலையை உணர்ந்த அவனது மனைவி எலிசபெத், தனது கணவனின் இந்த திக்கு வாய் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறாள். அப்போது அவளுக்கு ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட மருத்துவனான லியோனல் லோக் என்பவனைப் பற்றி கேள்விப் பட்டு அவனிடம் தன கணவனை யாருக்கும் தெரியாது அழைத்து செல்கிறாள். லோக், பெர்ட்டியை ஒரு மன்னனாக கருதமுடியாது என்றும் தான் அவனை 'ஹிஸ் ஹைனெஸ்' என்று அழைக்காமல் பெர்ட்டி என்றே அழைக்க முடியுமானால் அவனுக்கு உதவுவதாகக் கூறுகிறான். அதவும் போக, அரசனை தேடி தான் வர முடியாது என்றும், தனது அலுவலகத்துக்கு அவன் வந்தால் மட்டுமே உதவ முடியும் என கறாராக கூறிவிட, எலிசபெத் பெர்ட்டியை எப்படியோ சமாதனப் படுத்தி அவனை அழைத்து வந்துவிடுகிறாள். 

அரச பரம்பரையை சார்ந்த தான் ஒரு சாதாரண மருத்துவனை தேடி செல்வதா என்ற இறுமாப்பும், தன்னை பெயர் சொல்லி ஒரு சாதாரணன் அழைப்பதா என்ற திமிரும் கோவமும் சேர்ந்து புறப்பட, லோக் இன் மீது ஒரு சினத்துடன் தான் அவனைத்தேடி வருகிறான் பெர்ட்டி. அவனது முதல் சந்திப்பில், லோக் ஒரு இசைத்தட்டை சுழல விட்டபடி, அவனை ஒரு செய்தி தாள் கொடுத்து படிக்க சொல்ல, அவன் பாதி படித்து முடித்ததும் 'இதற்க்கு மேல் என்னால் உனது ஆய்வுகளுக்கு உட்பட முடியாது' என கோவத்துடன் வெளியேறி விடுகிறான். அவன் படித்ததை பதிவு செய்த லோக் அந்த பதிவு செய்த ஒலித் தட்டையும் அவனிடம் கொடுத்து அனுப்புகிறான்.
                                            காலின் பிர்த் மற்றும் ஜெப்ரி ரஷ்

அந்த சமயத்ததில், ஜேர்மனி இன் ஹிட்லரின் அட்டூழியம் போருக்க இயலாது, அந்த நாட்டின் மீது படை எடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, பெர்ட்டி  தனது பொதுமக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் வருகிறது. அப்போது லோக் தான் பேசியதை பதிவு செய்த ஒலித்தட்டை கேட்கும்போது தான் திக்கு இல்லாமல் பேசியதை கேட்டதும் லோக் இன் மீது நம்பிக்கை வர, தனக்கு திக்கு வாய் இருப்பதை நீக்க லோக் இடம் தன்னை முழுவதுமாக ஒப்புவிக்கிறான் பெர்ட்டி.

அறிக்கைகளை ஏற்ற இறக்கத்துடன் படிக்க கொஞ்சம் கொஞ்சமாக படிக்க லோக் பெர்டிக்கு பயிற்சி தருகிறான். வார்த்தைகளின் இடையே விழும் இடைவெளிகளில் அவனுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் சொல்லி நிரப்ப சொல்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் எப்படி தன்னை முழுதுமாக தயாரித்து அவன் பொதுமக்களுக்கான தனது வானொலி உரையை வெற்றிகரமாக முடித்தானா என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது திரைப்படம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் வாழ்ந்த ஆறாம் ஜார்ஜ் மன்னன் என்கிற பெர்ட்டியின் உண்மை கதை இது. இப்போது வாழ்ந்து வரும் இரண்டாம் எலிசபெத்தின் தந்தை தான் இந்த பெர்ட்டி 

படத்தில் பெர்ட்டி யாக நடித்திருக்கும் காலின் பிர்த்க்கும்(Colin Firth), டாக்டர் லோக் ஆகா நடித்திருக்கும் ஜெப்ப்ரி ரஷ் க்கும்(geoffrey rush) தான் நடிப்பில் போட்டி.

ஒரு அரச பரம்பரையின் வாரிசுக்கு உரிய கம்பீரத்தையும், தனக்கு திக்கும் வாய் பிரச்னையினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும், தனது மக்களின் மேல் இருக்கும் பிரியத்தையும், தனது மரியாதையை விட்டு கொடுக்க தயங்கும் தயக்கத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கும் காலின் பிர்தின் நடிப்பு ராஜ கம்பீரம். அதற்க்கு இணையான  மென்மையான நடிப்பு லோக் ஆக நடித்திருக்கும் ஜெப்ரி ரஷ். தனது சட்ட திட்டங்களுக்கு பெர்ட்டியை உடன்படுத்த அவர் கை யாளும் மென்மையான ஆனால் உறுதியான நிலைப்பாட்டை அலுவலக மேலாளர்கள் அனைவரும் கடைப் பிடித்தால் நிச்சயமாக அலுவலகங்களில் உற்பத்தி கூடும். மிகவும் நுணுக்கமான பாத்திரப்படைப்பான லோக் ஆக அற்புதமான அண்டர் ப்ளே நடிப்பில் மின்னுகிறாள் ஜெப்ரி ரஷ.

திக்கு வாயால் கஷ்டப்படும் ஒரு மன்னன் அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வருகிறான் என்ற நூலிழை போன்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு, அற்புதமான திரைக்கதை வடித்த டேவிட் செயட்லருக்கும் (David Sidler) ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கும் இயக்குனர் டாம் ஹூப்பருக்கும் ஒரு ராயல் சல்யுட்.
நம்மை கதை நடக்கும் ஆயிரத்து தொள்ளயிரத்து முப்பதுகளுக்கு அழைத்து சென்ற ஒளிப்பதிவாளர் டானி கோஹேன் மற்றும் இசை அமைப்பாளர் அலேசான்டரே டெஸ்பிளாட் ஆகியோரின் உழைப்பு படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது. 

தி கிங்க்ஸ் ஸ்பீச் - ராஜ கம்பீரம். 

Thursday, October 6, 2011

ஸ்டீவ்...!!!





இவ்வுலகில் டெக்னோலஜி பற்றி எந்த மூலையில் பேச்சு எழுந்தாலும் ஸ்டீவ் ஜாப்ஸின் பெயரை உச்சரிக்காமல் அந்த பேச்சு முழுமை அடைவதில்லை. ஆப்பிள் கம்ப்யுடரின் அதிபரான ஸ்டீவின் ஆளுமை அப்படி.

கல்லூரி படிப்புக்கு ஆறு மாதத்தில் முற்றுபுள்ளி, தான் உருவாக்கிய கம்பனியில் இருந்து வெளி ஏற்றம், மோசமான வியாபாரி என பல மைனஸ்களை சுமந்தவர் தான் பிற்காலத்தில் உலகம் போற்றும் வகையில் தனது எதிர் கால கூர் பார்வை மூலமும், பயனாளிகளின் தேவைகளை விரல் நுனிகளில் வைத்திருந்து அதற்கேற்றவாறு தனது கம்பனியை முன்னேற செய்து உலகம் முழுதும் ஆப்பிள் கம்ப்யுடர்ஸ் நிறுவனத்தின் பொருட்களுக்காக ஏங்கும் வகையில், புதிய புதிய டெக்னாலஜிக்களை, புதிய புதிய அறிமுகங்கள் செய்தார்.

ஜன்டாலி என்ற சிரியா நாட்டு தகப்பனுக்கும் சுவிஸ் நாட்டை சேர்ந்த சிம்ப்சனுக்கும் மகனாக பிறந்த ஸ்டீவ் க்கு தனது பிறப்பு முதலே போராட்டம் தான். சிம்ப்சனின் பெற்றோர் ஒரு சிரியா நாட்டை சேர்ந்தவனுக்கு தனது மகளை மணம் முடிக்க விருப்பம் இல்லாததால், அவன் மூலமாக பிறந்த குழந்தையான ஸ்டீவ் ஜாப்சை தத்து கொடுத்து விட, கலிபோர்னியா மாகணத்தை சேர்ந்த ஒரு மத்திய தர குடும்பமான பால் மற்றும் கிளாரா ஜாப்ஸ் ஸ்டீவை வளர்த்து வந்தார்கள்.

மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் அதிபர் மார்க் சுக்கர்புர்க் போல இவரும் எந்த கல்லூரியிலும் பட்டம் வாங்கியவரல்ல. அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் உள்ள ரீட்ஸ் கல்லூரியில் ஆறு மாதங்கள் சேர்ந்து பயின்ற அவர், தனது மத்திய தர பெற்றோருக்கு தனது கல்லூரி செலவு மிகப்பெரும் பாரமாக இருப்பதை உணர்ந்து கல்லூரி செல்வதை நிறுத்திக் கொண்டார்.

தனது நண்பர்களின் வீட்டின் தரையில் படுத்துக் கொண்ட அவர், கோக் பாட்டில்கள் சேகரித்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது சாப்பாடு செலவுக்கு வைத்து கொண்டார். அது தவிர , ஹரே ராத ஹரே கிருஷ்ணா கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தையே உணவாக உட்கொண்டு காலத்தை ஓட்டினார். அந்த சமயத்தில் காலிக்ராபி என்ற கை எழுத்து பற்றிய படிப்பை படிக்கையில் தான் மாக் கம்ப்யூட்டர் பற்றிய எண்ணம் அவர் மனதில் உதயமானது.

ஸ்டீவ் ஜொப்ஸ், ரொனால்ட் வெயின்  மற்றும் ஸ்டீவ் வோஜ்நியாக் 


தனது நெருங்கிய நண்பனான ஸ்டீவ் வோஜ்நியாக் மற்றும் ரொனால்ட் வெயின் உடன் ஒரு கார் கராஜில் ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் துவங்கப் பட்டது. அப்போது கம்ப்யுடர் என்றாலே ஒரு மிகப்பெரிய கருவியாக இருந்தது அதனை உடைத்து சிறிய அளவில் மாகின்டோஷ் என்ற கம்ப்யுடரை வடிவமைத்து வெளி இட்டது ஆப்பிள் நிறுவனம். அது சக்கை போடு போட, பெப்சி நிறுவனத்தில் இருந்து ஜான் ஸ்கல்லி என்பவரை கொண்டு வந்து ஆப்பிள் நிறுவனத்தில் சி இ ஓ ஆக்கினார் ஸ்டீவ். அப்போது ஆப்பிள் கம்ப்யுடர்களின் நிகர லாபம் சரிய, ஆப்பிள் நிறுவனதினுள்ளே நிர்வாக அரசியலும் சேர்ந்து தன்னால் சி இ ஓ ஆக ஆக்கப்பட்ட ஜான் ஸ்கல்லி மூலமாகவே ஸ்டீவ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


பின்னர் வால்ட் டிஸ்னியின் கிராபிக்ஸ் கம்பனியை வாங்கிய ஸ்டீவ், அதற்க்கு பிக்சர் என பெயர் மாற்றம் செய்து வால்ட் டிஸ்னியின் கார்டூன் கிராபிக்ஸ் படங்களை உருவாக்கும் வகையில் அந்த கம்பனியை உருமாற்றினார்.

அதே சமயத்தில் நெக்ஸ்ட் கம்ப்யுடர்ஸ் என்ற கம்பனியை உருவாக்கி அதன் மூலம் புதியவகை கம்ப்யுடர்களை உருவாக்கினார். பிக்ஸார் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி வாங்கிக் கொள்ள, நெக்ஸ்ட் கம்ப்யுடர்சை ஆப்பிள் நிறுவனம் வங்கிக் கொள்ள, ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் சி ஈ ஓ ஆனார் ஸ்டீவ்.

அதன் பின்னர் அவரது சிந்தனையில் உருவான ஐ மாக் கம்ப்யுடர்கள், ஐ போன் ஐ பாட் அனைத்தும் அனைவரும் அறிந்த வரலாறு.


2004 ஆம் ஆண்டு அவருக்கு மிக அரிதான ஆனால் இன்னமும் மருந்து கண்டுபிடிக்கபடாத பான்க்ரியாடிக் கான்செர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
எனினும் அதன் பின்னர் தான் ஸ்டீவின் கனவுகளான ஐ போன் ஐ பாட் என ஒவ்வொன்றாக வெளி வந்தது.

அக்டோபர் ஐந்து 2011 அவரது குடும்பம் அவர் நிம்மதியாக உயிர் நீத்தார் என உலகத்துக்கு அறிவிக்க, அறிவியல் உலகத்தில் மட்டும் அல்லது பூவுலகமும் அவருக்காக வருத்தப்பட்டது. அவரது கனவு ப்ராடக்டுகள் அனைத்தும் இப்பொது பரவலாக மக்களால் உப்யோகப்படுத்தபடுவது முதல் காரணம். ஆப்பிள் எந்த ப்ராடக்டை வெளி இட்டாலும் அது எவ்வளவு விலை இருந்தாலும் முதல் நாளே வாங்கி விட ஒரு பெரும் கூட்டம் கடைகளில் முண்டி அடிக்கிறது. அடித்து ஆப்பிள் ப்ரொடக்ட் எப்போது வெளி வரும் என தவம் கிடக்கிறது கூடம். அதற்க்கு காரணம், ஆப்பிளின் ப்ராடக்டுகளில் நிச்சயம் மட்டற்ற புதுமைகள் இருக்கும் என அவர்கள் நம்புவதே.

தோல்விகளில் இருந்து மீண்டு வரும் பீனிக்ஸ் பறவையை போன்ற வாழ்கையே ஸ்டீவ் வாழ்ந்தார். அவருக்கு வாழ்க்கை ரோஜா படுக்கைகளை அமைத்து தரவில்லை. அவரது பிறப்பின் முதலே போராட்டம். தான் உருவாக்கிய ஆப்பிள் கம்ப்யுடர்சில் இருந்து அவர் வெளி ஏற்றப்பட்டபோதும் அவர் துவண்டு விடவில்லை. 'அது மீண்டும் எனது வாழ்கையை புதிதாக துவங்க ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தது ' என சொல்கிறார்.

அவர் அனைத்தையும் ஜெயம் கொண்ட பொது அவரை தாக்கியது அந்த உயிர்கொல்லி புற்றுநோய். இருந்தாலும் தனது கனவுகளை நனவாக்கி விட்டு ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது பொறுப்புகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்க ஆரம்பித்தார். அவர் உயிர் பிரிந்த நாளில் அவரது மரணத்தை அறிவிக்க எத்தனை ஐ போன்கள் அலறி இருக்கும்?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...