Monday, June 28, 2010

செம்மொழி மாநாடு...வீணடிக்கப்பட்ட கோடிகள்!


செம்மையாக நடந்து முடித்திருக்கிறது, செம்மொழி மாநாடு... கிட்டத்தட்ட முன்னூத்தி ஐம்பது கொடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டுக்காக பல்லாயிரம் மரங்கள், கோவை நகரில் வெட்டப்பட்டுள்ளன.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்து 'தமிழை வளர்த்துள்ளனர்'.

எதற்காக இந்த மாநாடு? இந்த மாநாட்டினால் என்ன பயன்? கவியரங்குகளும் பட்டிமன்றங்களும் 'தலைவனை' துதிபாடியே துவங்குகின்றன... மாநாடு செம்மொழிக்கா? அல்லது செந்தலைவனுக்கா..? மூத்த குடும்பத்தின் பணத்தில் செம்மொழி மாநாட்டை ஒட்டி கொடிகளில்கோவையில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்பது உடன்பிறப்புகளுக்கு தெரியாமல் போனதோ?

இலங்கை போரில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் நடுவே சிக்கி சின்னா பின்னமாகி குற்றுயிராய் கிடக்கும் தமிழர்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போனதே. அங்கு ஒரு வேளை சோற்றுக்கு சிங்கி அடிக்கும் தமிழர்கள் இருக்க.. இங்கோ ஏற்கனவே வளர்ந்து விட்ட செம்மொழியான தமிழ் மொழிக்கு எதற்கு இவ்வளவு செலவில் ஒரு மாநாடு? போரினை நிறுத்த தவறிய தலைவனின் பாவ மன்னிப்பா? தமிழுக்கும் தமிழனுக்கும் செம்மொழி மாநாடு நடத்தி தான் தலைவனின் தமிழ் பாசத்தை உலகுக்கு உயர்த்த வேண்டுமா? தமிழனை காப்பாற்றினால் தானே தமிழை காப்பாற்ற முடியும்? தமிழர்கள் எல்லாம் இறந்துவிட்டால், தமிழ் பேச தலைவன், குடும்பம் தானே எஞ்சும்.

தமிழகத்தில் இருந்தால் மட்டும் தான் தமிழனா? அயல்நாட்டில் இருக்கும் தமிழன் தமிழன் இல்லையா?
அயல்நாட்டில் இருக்கும் தமிழ் மகன்கள்.. பர்கரும் பீசாவும் உண்டு தான் உயிர் வாழ்கின்றனரா? அவர்களுக்கு தமிழ் பற்றி  பேச அருகதை கிடையாதா? தமிழகத்தில் எவரும் பர்கரும் பீசாவும் உண்பதில்லையா?. தமிழகத்தில், இருக்கும் தமிழனை விட அயல்நாட்டில் இருக்கும் தமிழனுக்கு தனது மொழியின் மேல் பற்று சற்றும் குறைந்தது இல்லையே. தமிழகத்தில் தனது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசும்படி பணித்து கொண்டிருக்கிறார்கள் பெற்றோர். அயல் நாட்டில் தனது குழந்தைகள் தமிழில் பேசவேண்டும் என கவலை படுகிறார்கள்.

தலைவன் தனது தமிழ் தாகத்தை முன்னூற்றைம்பது கோடி கொடுத்து தீர்த்து கொண்டிருக்கிறார். மூன்று வேளை சோறில்லாமல் பட்டினி கிடக்கிறது தமிழனின் குடும்பம்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் இருக்கட்டும். தமிழிலேயே பெயர் பலகைகள் வைக்கவேண்டும் என்ற அதிகாரம் இருக்கட்டும். முதலில் தனது பேரன்களின் 'ரெட் ஜெயின்ட் மூவீஸ்' மற்றும் 'கிளௌட் நயன் மூவீஸ்' என்ற ஆங்கில கம்பெனி பெயர்கள் மாறட்டும். தலைவன் தமிழை தனது வீட்டிலிருந்து முதலில் வளர்க்கட்டும்.

செம்மொழி மாநாட்டால், கோவை நகருக்கு நல்ல சாலைகளும், ஏ ஆர் ரகுமானின் 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற நல்ல பாடலும் தான் மிச்சம்.
--

Friday, June 25, 2010

கிளைமாக்ஸ் கதைகள் 5-என்னைக் கொல்லப் போகிறார்கள்!

என்னைக் கொல்லப் போகிறார்கள்!.

அரிவாள்களோடு, கோடாரிகளோடு.. காத்திருக்கிறது ஒரு கும்பல். மக்கள் அனைவரும் மௌனமாக வேடிக்கை பார்க்க.. எனக்கு மரணப் பரிசை அளிக்கப் போகிறார்கள்.

இவர்களின் கொலை வெறி தாகம், என் சகோதரர்களை கொன்று குவித்தபின்பும் இவர்களுக்கு அடங்கவில்லை. இதோ என்னை நோக்கி படையெடுத்து வந்துள்ளனர்.

அப்படி நான் என்ன தவறு செய்தேன்.....? அவர்களுக்கு நான் இடையூறாக இருந்ததாக கூறுகிறார்கள்.நான் எந்த குற்றமும் புரியாமல் இருந்தால் கூட... இவர்களுக்கு இடையூறின்றி நான் ஓரமாய் நின்றால் கூட.. என்னை வெட்டுவார்கள். இவர்களுக்கு காரணம் தேவை இல்லை.

நான் பொது வாழ்வுக்கு வந்து முப்பத்தைந்து வருடங்களாகிவிட்டது. எத்தனை பேர்களுக்கு நன்மைகள் செய்திருப்பேன். என்னால் வாழ்ந்த காதலர்கள் எவ்வளவு, எத்தனை பேருக்கு களைப்புகள் தீர்த்து புத்துணர்ச்சி அளித்திருப்பேன்...எத்தனை சிறுவர்கள் என்னால் பயன் பெற்றிருக்கின்றனர்..எவ்வளவு மக்களுக்கு ஆறுதலாய் இருந்திருப்பேன்...

நான் ஒரு இயற்க்கை விரும்பி.
இயற்கையை நேசிப்பவன், தவறு செய்வானா சொல்லுங்கள்...?
மழையையும் மண் வாசனையும் விரும்புபவன், மரணத்தை விரும்புவானா? காற்றடித்தால் தலை சிலுப்பி நடனமாடும் நான் இடையூறாக இருப்பதாய் இவர்கள் கூறுவதை நம்ப முடிகிறதா...?

ஏசுவையும் காந்தியையும் இந்த கூட்டம் தானே கொன்று கூறு போட்டது..

இந்த உலகத்தில் நல்லவனாக இருப்பது மிக மிக கடினம் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன்.

இதோ என்னை வெட்டுகிறார்கள்... என் சதைகளை பிய்த்து எடுக்கிறார்கள்... எனது அலறல்களை இவர்கள் போருட்படுத்துவதாய் இல்லை... இறந்து போன என் உடலையும் பங்கு போடும் ஆட்கள் இந்த கூட்டத்தில் இருப்பதை நான் அறிவேன்.

'அங்கே வெட்டு இங்கே வெட்டு'  என ஆர்ப்பரிக்கிறார்கள்...என் உயிர் துடித்துக் கொண்டிருக்கிறது...

என் போன்ற பலரையும் இவர்கள் கொலை செய்யக் கூடும்...அதனால் இவர்களுக்குத் தான் தீமை என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்களா...?

அப்போது தான் அரவிந்த் அங்கு வந்ததை நான் பார்க்கிறேன்.. என் உயிர் நண்பன்.. எட்டு வயது தோழன். என் பார்வையில் வளர்ந்தவன். அவனது சிறு வயது முதலே எனக்கும் அவனுக்கும் இறுகிய நட்பு உண்டு. என் தாகத்திற்கு அவன் பலமுறை நீர் கொடுத்திருக்கிறான். அவன் சோர்ந்து வரும்போதெல்லாம் நான் அவனுக்கு தோள்கொடுத்திருக்கிறேன்.

என்னை வெட்டுவதை பார்த்து அலறுகிறான்...

'ஐயோ அப்பா  வெட்ட வேண்டாம்னு சொல்லுங்கப்பா...அந்த புளியமரத்தை வேட்டவேண்டாம்னு சொல்லுங்கப்பா..'

எனக்காக ஒரு ஜீவன் அழுவதை நினைத்து   புன்னகைத்தபடி மண்ணில் விழுந்து உயிர் துறக்கிறேன்..!
--

Wednesday, June 23, 2010

உலக சினிமா: கலர் ஒப் பாரடைஸ் (Color of Paradise).

மஜீத் மஜீதின் படங்களை பற்றி ஏற்கனவே ஏகப்பட்ட தடவை எழுதி விட்டேன். உலக சினிமாவில் ஒரு தனி முத்திரையை படைத்திருக்கும் இவரது படங்கள், எந்த ஒரு வணிக ரீதியான விடயங்களையும் உள்ளடக்கி இல்லாமல், மிகவும் மெலிதான உணர்வுகளை தூண்டும் திரைக்கதை அமைப்பு இவரது படங்களில் காணலாம். ஒரு எளிதான கதையா எடுத்து கொண்டு சிக்கலில்லாமல் கதை சொல்லும் இவரது பாணி உலக படைப்பாளிகளை இன்னமும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

முகமது பார்வையற்ற ஒரு சிறுவன். இரானின் தலைநகரான டேஹரானில் ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கிறான். பள்ளி விடுமுறையில், மாணவர்களின் பெற்றோர் வந்து தத்தமது குழந்தைகளை தங்களது வீடுகளுக்கு அழைத்து செல்கையில் தனது தந்தைக்காக காத்திருக்கிறான் முகமது.

மனைவியை இழந்த முகமதுவின் தந்தை ஹாஷேம், தான் மறுமணம் புரிய இருக்கும் வேளையில் முகமதுவுக்கு விடுமுறை விட்டு விட்டதால் அவனால் தனது திருமணம் தடை படுமோ என அஞ்சி அவனை பள்ளியிலேயே விடுமுறை முழுவதும் வைத்திருக்குமாறு வேண்ட.. பள்ளி முதல்வரோ அது தங்கள் பள்ளியின் விதிமுறைக்கு மாறானது என சொல்லி முகமதுவை அழைத்து செல்லுமாறுகூறுகிறார்.


வேண்டா வெறுப்புடன் தனது மகனை தனது ஊருக்கு அழைத்து செல்கிறான் ஹஷேம். அவனைக் கண்டு ஆனந்த கூத்து அடைகிறார்கள் அவனது பாட்டியும் அவனது சகோதரிகளும். தனது சகோதரிகளுடன் தானும் அவர்களது பள்ளி செல்ல வேண்டும் என அடம் பிடிக்க பாட்டி அனுப்பி வைக்க பள்ளியில் தான் ப்ரைலரில் எழுதி படித்த பாடங்களை சொல்லி பள்ளி ஆசிரியரிடம் சபாஷ் வாங்குகிறான் முகமது.

தான் மறுமணம் முடிக்கும் நேரம் முகமது இருந்தால் தடையாக இருக்கும் என எண்ணி அவனை அவனது பாட்டிக்குத்  தெரியாமல் ஒரு கண் பார்வையற்ற தச்சனிடம் சென்று சேர்த்து விடுகிறான் ஹஷேம்.

பேரனைக் காணாத துக்கத்தில் பாட்டி அவனது நினைவாகவே இருந்து மரித்து போக, ஹாஷேம் திருமணம் இந்த கேட்ட அறிகுறியால் நின்று போகிறது. தாயையும் திருமணத்தையும் தொலைத்து விட்ட ஹாஷேம், தனது மகனை மீட்டு வரப் புறப்படுகிறான் ஹாஷேம். முகமதுவை அழைத்து வரும் வழியில் ஒரு மரப்பலத்தை கடக்கையில் அது இடிந்து விழ முகமது ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்படுகிறான். முகமதுவை ஹாஷேம் காப்பாற்றினானா என்பது கிளைமாக்ஸ்.

திரைப்படம், கண் பார்வையற்ற முகமதுவின் பார்வையில் சொல்லப் படுகிறது. அவனது அறிமுக காட்சியும், கூட்டிலிருந்து தவறி விழுந்து விட்ட பறவை குஞ்சை அது எழுப்பும் ஒலியை வைத்து கண்டுபிடித்து அதனது கூட்டில் விடும் ஆரம்ப காட்சி அசத்துகிறது.

ஒளிப்பதிவாளரின் பார்வையில் வடக்கு டேஹரானின் அழகான மலைப்பகுதியை அற்புதமாக அள்ளி வந்திருக்கிறது காமெரா.

முகமதுவின் சகோதரிகளாக வரும் அந்த சின்னஞ்சிறு பாப்பாக்கள் அவ்வளவு அழகு.

முகமதுவாக வாழ்ந்திருக்கும் அந்த சிறுவனான மோசென் ராமெசானியின் நடிப்புக்கு நம்ம ஊர் சிவாஜியும் கமலும் கூட இணை இல்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. அவன் தன்னை வேலைக்கு சேர்த்த கண்பார்வையற்ற தச்சனிடம் கேட்கும் கேள்விகள் நிச்சயம் நம்மை கரைய செய்யும்.

'கடவுள் நல்லவரென எல்லாரும் சொல்கிறார்கள். அப்படி இருந்தால் அவர் ஏன் என் கண்களை பறிக்க வேண்டும்? கண்கள் இல்லாமல் அவரை எப்படி நான் காண முடியும்?. நான் என டீச்சரிடம் கேட்ட பொது, அவர் சொன்னார் 'இறைவன் எங்கும் இருக்கிறான். உன் விரல் நுனியில் கூட இருக்கிறான்'. நான் என விரல் நுனிகளை வைத்து தேடி கொண்டே இருக்கிறேன் அவன் அகப்படவில்லை.'

கலர் ஒப் பாரடைஸ் மஜித்தின் மற்றொரு மாஸ்டர் பீஸ்.

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இங்கே..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...