Saturday, September 23, 2023

 உலக சினிமா: தி காங்ஸ்டர் தி காப்  தி டெவில் ( The Gangster the cop the devil) (கொரியா)


ஒரு இரவு சாலையில் ஒரு காரை இன்னொரு கார் பின்தொடர்ந்து வந்து பின்னே மெதுவாக இடித்து விடுகிறது. முதல் காரிலிருந்து இறங்கி பின்னால் இடித்த கார் ஓட்டிவந்தவரோடு இன்சூரன்ஸ் பற்றி பேச்சு கொடுக்கும் நபரை  பின்னால்  வந்த காரில் வந்தவர் கத்தி வைத்து பலமுறை குத்தி  விடுகிறார்.

இந்த கேஸை விசாரிக்க நியமிக்கப்படும் ஒரு போலீஸ் அதிகாரி Jung Tae-seok இதே போல பல கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அந்த கொலையாளி ஒரு சீரியல் கில்லர் என தனது மேலதிகாரிக்கு நிரூபிக்க படாத பாடு படுகிறார். இடையே ஒரு காங்ஸ்டர் தவறான ஒரு சூதாட்ட விடுதியை நடத்துபவரையும்  கவனிக்க வேண்டி இருக்கிறது.

அந்த காங்ஸ்டர் Cheonan Dong-soo அந்த கொலையாளியின் அடுத்த இலக்காக,  அவனுடன் சண்டை போட்டு தப்பி விடுகிறார். அந்த கொலையாளியும் தப்பி விடுகிறான்.

இந்த மூன்று பேரையும் இணைக்கும் புள்ளி தான்  தி காங்ஸ்டர், தி காப்  , தி டெவில். 

போலீசாக நடித்திருக்கும் நபர் தனது அலட்சிய நடிப்பால் மின்னுகிறார். தனது மேலதிகாரியை இடது கையால் டீல் செய்வதும் ஒரு க்ரிமினலை உபயோகித்து கிரைம் நடந்த இடத்துக்கு சென்று சேர்வது என பிரம்மாதப் படுத்தி இருக்கிறார். 

கொடூர காங்ஸ்டர் ஆக நடித்திருக்கும். Ma Dong-seok தானே ஒருவனிடம் வெட்டுப்பட்டு தப்பித்ததும், கூட இருப்பவர்கள் ஒரு ஒரு காங்ஸ்டராக  இருந்தும் குத்துப்பட்டு வந்த அவனை கேலி செய்ய அந்த கொலையாளியை தேடி கண்டுபிடித்து பழி வாங்க  வெறி கொண்டு அலைகிறார். 

படத்தின்ஆக்க்ஷன் காட்சிகள் பல இருந்தும் உறுத்தவில்லை.காட்சிகள் நம்பகத்தன்மையோடுதான் அமைக்கப்பட்டிருக்கிறது . போலீஸ் அதிகாரி தான் நிறைய அடி வாங்குகிறார். 

ஒரு நல்ல ஆக்க்ஷன் படத்துக்கு உண்டான விறுவிறுப்பான திரைக்கதை. ராக்கட் வேகத்தில் பறக்கிறது படம்.  அதற்குண்டான ஒளி அமைப்பில் உறுத்தாத ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு பரபரக்கும் இசை என ஆக்க்ஷன்  பட ரசிகர்களுக்கு விருந்து. 

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் நீதிமன்றக் காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பது குறை.

படத்தில் ரத்தம் தெறிக்கிறது. அனால் நமது தமிழ் படமான ஜெய்லருக்கு இந்தப்படத்தின் வன்முறை காட்சிகள் எவ்வளவோ பரவா இல்லை.

ஆக்சன் ரசிகர்கள் விரும்பி பார்க்கலாம்.

Wednesday, August 16, 2023

பீட் (Bheed) இந்தி

 



கோவிட் சமயங்களில் புலம் பெயர் மக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி சென்ற துயரத்தை வரலாறு மறக்காது மன்னிக்காது. அந்த மக்கள் சந்தித்த வலிகளை  சிறிது சாதிய வன்மங்கள், மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களின் பேதங்கள், மத துவேஷங்கள், சிறிது காதல், சிறிது மனிதம் என அனைத்தையும் கலந்துகட்டி காக்டைல் அளிக்கிறது இந்த இந்தி படம் பீட் (Bheed). Bheed  என்றால் கூட்டம் என இந்தியில் பொருள் படுகிறது 

வெகு தூரம் நடந்து வந்து ஆயாசத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கும் மக்கள் மேல் ரயில் ஏறி 16 பேர்கள் இறந்துபோன நிகழ்வில் கருப்பு வெள்ளையில் தொடங்குகிறது படம். திரிவேதி என்ற உயர் சாதியை சேர்ந்த வாட்ச்மேன்கள் குடும்பம், சுவாரஸ்ய செய்திகளுக்கு அலையும் மீடியாவை சேர்ந்த பெண், தன் குடிகார தந்தையை சைக்கிளில் வெகுதூரம் அழைத்து செல்லும் ஒரு பெண், ஹாஸ்டலில் இருக்கும் தனது பெண்ணை மீட்டுவர முயற்சிக்கும் ஒரு பெண், தியானத்துக்கு சென்று திரும்பும் ஒரு இஸ்லாமிய குழு, இவர்களை சமாளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி (ராஜ் குமார் ராவ்) மற்றும் அவனை காதலிக்கும் உயர் சாதியை சேர்ந்த ஒரு டாக்டர் என இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்தித்தால் என்னவாகும் என்பதை நிதர்சனங்களோடு பொருந்திப்போகும் திரைக்கதை.

புலம் பெயர் மக்களின் துயர் தான் கதை என்றாலும் அதனூடே அரசியல்வாதிகளின் சாதி மத அரசியலால் மக்கள் மனதில் எழும் துவேஷங்களையும் அதன் விளைவுகளையும் காட்சிப்படுத்தி இருப்பது சமூக அக்கறை. கவுதம் லால் டிகாஸ் என தனது சாதி பெயரான டிகாஸ் என்ற தாழ்ந்த சாதி பெயரால் தாழ்வு மனப்பான்மையுடன் வலம் வரும் ராஜ் குமார் ராவ்,நடக்கும் நிகழ்வுகளால் கையறு நிலையில் செய்வதறியாது துடிக்கும் சமயத்தில், தனது உயர் சாதியை சேர்ந்த காதலி பூமி பட்நாகருடன் சாதி வித்யாசம் பார்த்து மறுகும் இடத்திலும்  நடிப்பில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்.  பலராம்  திரிவேதி யாக வரும் பங்கஜ் கபூருக்கு அற்புதமான குணசித்திர வேடம்.

ஆர்டிகிள் 15,மல்க் போன்ற சமூக சிந்தனையுள்ள படங்களை இயக்கிய அனுபவ சின்ஹா தான் இப்படத்தின் இயக்குனர். இன்றைய அரசியல் காலகட்டத்தில் இது போன்ற படம் எடுக்க பெருந்துணிவு வேண்டும். படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்திருப்பதால் உண்மைக்கு அருகே இருப்பதை போன்ற உணர்வை சவுமிக் சட்டர்ஜீ யின் ஒளிப்பதிவு தருகிறது. இசை இருப்பதாகவே தெரியாமல் இசை அமைத்திருக்கிறார் அனுராக் சைக்கியா.

கதை ஒரே இடத்தில் நிகழ்வதாக இருப்பதால் படம் மெதுவாக நகர்வதாக உணர்வை தருகிறது. இருந்தாலும் புலம் பெயர் தொழிலாளிகளின் கொரோனா கால பயணத்தை வலிகள் மாறாமல், உண்மை சம்பவங்களை கோர்த்து மாலையாக்கி  அளித்த அனுபவ சின்ஹாவின் சமூகத்தின் மீதுள்ள காதல் நன்றே தெரிகிறது.

இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது 

பீட்...ஒரு அனுபவம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...