Monday, December 31, 2012

திரைசிற்பிகள் - 3 ரோமன் பொலன்ஸ்கி


உலக சினிமாவின் மறுக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் ரோமன் பொலன்ஸ்கி . அவரது படங்கள் திரை உலக ஜாம்பாவானான ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் படங்களைப் போல உள்ளது என சொல்லபட்டாலும், ஹிட்ச்காக் போலல்லாது வெவ்வேறு ஜானர்களில் இவர் படங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறார். இவர் படங்கள் பெரும்பாலும், கிரைம் த்ரில்லர் வகையை சார்ந்தவை. ஆனால் இவரது த்ரில்லர்கள், சாதரணமான கதைகளாக இல்லாது, மாடர்ன் சிந்தனைகளுடனான மாற்று சினிமாக்களாகவே இருந்திருக்கிறது.உலக வாழ்கையின் சாதாரண  நிகழ்வுகளும், அதன் அடியாழத்தில் புதைந்திருக்கும் வக்கிரங்களை இவரின் படங்கள் பேசிக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் முன் பாரிசில் பிறந்த ரோமனின் குடும்பம் பாரம்பரியமான யூத இனத்தை சார்ந்தவர்கள். ரோமன் பிறந்த பிறகு போலந்துக்கு குடி பெயர்ந்தவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது நடந்த இனப் பயங்கரவாதத்துக்கு இவரது தாய் பலியானார்.ரோமன் தனது சிறு வயதில் இனவாதத்தில் இருந்து தப்பிக்க வேறு வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தபடியே இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலவற்றை, தனது 'தி பியானிஸ்ட்' படத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னே, தனது கலை வாழ்க்கையை,'சிறுவர்களின் வானொலி நிகழ்ச்சியான 'தி மேரி காங்' மூலம் ஆரம்பித்தார். பின்னர் ஒரு நடிகனாக 'தி சன் ஒப் ரெஜிமெண்ட்' படத்தில் நடிக்க அறிமுகமாக.. பின்னர் உலக புகழ் பெற்ற லாட்ஸ் (LOTZ) பள்ளியில் திரைப்பட கல்வி பயின்றார்.

1962 இல் இவர் எடுத்த 'தி நைப் இன் தி வாட்டர் ' (The Knife In the Water')
திரைப்படம், உலக திரைப்பட அரங்கில் இவரது இருப்பை தெரியப்படுத்தியது.போலிஷ் மொழியில் எடுக்கப்பட்ட அந்தப் படம், வெளிநாட்டு பட வரிசையில் சிறந்ததென ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது. மீண்டும் இவர் ஹாலிவூட் சென்று இயக்கிய, ரோஸ் மேரிஸ் பேபி என்ற படத்துக்கு சிறந்த திரை கதை ஆசிரியருக்கு இவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டபோது ஹாலிவூட் உலகம் இவரை திரும்பி பார்த்தது.

1974 இல் இவர் இயக்கிய 'சைனா டவுன் ' என்ற திரைப்படத்திற்கு பனிரெண்டு ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டன. திரைக்கதைக்காக ராபர்ட் டவுன் ஆஸ்கார் விருது வென்றார். உலகமே இவர் ஒரு உலக திரை உலக சிற்பி என்பதை புரிந்து கொண்டது. விருதுகளுக்கான பரிந்துரை மட்டுமன்றி. இவர் இயக்கிய 'தி பியானிஸ்ட்' என்ற திரைப்படம் ஒரு இசை கலைஞனின் வழியாக இரண்டாம் உலகப்போரின் அவலங்களை உலகுக்கு உணர்த்தியது. அந்த படத்துக்காக, சிறந்த இயக்கத்துக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றார் பொலன்ஸ்கி.

திரை உலகில் வெற்றி பெற்ற இவரது சொந்த வாழ்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை. சிறு வயதில் தாயை யூதர்களுக்கெதிரான இனப்போரட்டத்துக்கு பறிகொடுத்த பொலன்ஸ்கி தான் இனக்கலவரங்களில் இருந்து தப்பிக்க, ஊர் ஊராக பயணப்படுபவராக இருந்தார். அவர் தன்னுடன் ஒரு படத்தில் நடித்த ஷரன் டேட் என்ற நடிகை மணம் புரிந்துகொண்டார்.

1970, ரோமன் போலன்ஸ்கி லண்டன் சென்றிருந்த போது, சார்லஸ் மேன்சன் பாமிலி என்ற இனவாதக் குழுவால் எட்டரை மாத நிறைமாத கர்ப்பிணியான ஷரன் டேட் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், குத்தி கொல்லப்பட்டார். 1977 இல் ஒரு பதிமூன்று வயது பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக அவரை கைது செய்ய போலீஸ் தேடியதும், ஐரோப்பா சென்று லண்டன் நகரத்தில் சென்று வசிக்க ஆரம்பித்தார். இன்றும் அந்த வழக்கினால் அவரை தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க போலீஸ். தற்போது அவர் சுவிட்செர்லாண்டில் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் சம்மததினுடனேயே அந்த உறவு ஏற்பட்டது என்பது அவர் வாதம். ஒரு படைப்பாளிக்குரிய பலவீனங்களில் அவர் மாறிக்கொண்டு பரபரப்பு செய்திகளின் குழந்தையாய் அவர் வாழ்ந்துவந்தாலும், அவரது திரைப்படங்களில் அவர் கொண்டு வந்துள்ள படைப்புத்திறன், அவரது சொந்த வாழ்கயினால் என்றும் பாதிப்படைந்ததில்லை. அவரது சில நுணுக்கமான, அற்புதமான திரைப்படங்கள் சிலவற்றை பார்க்கலாம்.


ரோஸ்மேரிஸ் பேபி.


ரோஸ்மேரி மற்றும் கய் இருவரும் நியூ யார்க்கின் அபார்ட்மெண்ட் ஒன்றில் குடி ஏறுகிறார்கள். அவர்களை சுற்றி அமானுஷ்யமாய் ஏதேதோ நடக்கிறது. கய் ஒரு நடிகன். அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு வயதான தம்பதியிடம் கய் நட்பு கொள்கிறான். இறங்குமுகத்தில் இருக்கும் அவனது மார்கெட், திடீரென உயர்கிறது. திரை உலகத்தில் இருக்கும் அவனது எதிரியின் கண் பார்வை பறிபோகிறது. இந்த சமயத்தில் ஒரு நாள் ஒரு விபரீத கனவு காணும் ரோஸ்மேரி கருவுருகிறாள். அப்போது அந்த வயதான தம்பதி அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள ரோஸ் மேரிக்கு அவர்கள்த அதீத கவனிப்பு மற்றும் அவர்களின் அதிகாரம் கண்டு மிரளுகிறாள். கடைசியில் தனது குழந்தைக்கு இருக்கும் ஆபத்தை உணர்கிறாள். ஹாலிவூடில் பொலன்ஸ்கி இயக்கிய இப்படம், பெரும் வரவேற்ப்பை பெற்றதுடன் ஒரு ஆஸ்கார் விருது மற்றும் பதினோரு இதர விருதுகளை வென்று ரோமன் போலன்ஸ்கிக்கு சிவப்பு கம்பளம் விரித்தது ஹாலிவூட்.

சைனா டவுன்


ஹாலிஸ் முல்றாய் எனும் லாஸ் ஏஞ்சலிஸ் நகர நீர் கட்டுப்பாடு வாரிய பொறியாளரின் மனைவி, துப்பறியும் நிபுணனான ஜே ஜே கிட்சை தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா என அறிந்து வர சொல்கிறாள்.கிட்சும் ஹாலிசை பின் தொடர்ந்து அவர், வேறொரு சின்ன பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டு பிடித்து புகைப்படம் எடுக்கிறான். அவனை அறியாமல் அந்த புகைப்படங்கள் செய்தி தாள்களில் வெளியே வந்துவிட, அவனை தொடர்பு கொள்கிறாள் எவெலின். அவளே ஹாலிசின் உண்மை மனைவி என்று அறிகிறான் கிட்ஸ். அவள் அந்த கேசை விட்டு விடும்படி சொல்ல, வேறொரு நாளில், ஹாலிஸ் அந்த நீர்தேக்கி மையத்தில் கொலை செய்யப்பட்டு கிடக்க, அதனை செய்தது எவெலின் தான் என கிட்ஸ் சந்தேகப்பட, பின் வரும் திடுக்கிடும் திருப்பங்களால் படம் பரபரப்பாக சென்று யாரும் எதிர்பாராத உச்சக்கட்டத்தை அடைகிறது. படத்தில் கிட்சாக நடித்திருக்கும் ஜாக் நிக்கல்சன், தனது தனிப்பிட்ட நடிப்பினால் தூள் கிளப்பி இருப்பார். இப்படம், பனிரெண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது வாங்கியது. அதை தவிர மேலும் இருவது விருதுகளை வாங்கிக் குவித்தது.

டெத் அண்ட் தி மெய்டன்.


வக்கீல் ஜெரார்டோ , அவனது மனைவி பவ்லினா எஸ்கோபார், மற்றும் டாக்டர் மிரண்டா, என்ற இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் படம் முழுக்க. ஆனால் படம் முழுவதும் நீங்கள் உங்கள் இருக்கை நுனியில் தான் அமர்ந்திருப்பீர்கள். ஒரு நாள் இரவு ஒரு புயலின் நடுவில் மாட்டிகொண்ட டாக்டர் மிரான்டாவை தனது இல்லத்துக்கு அன்றிரவு தங்க அழைத்து வருகிறான் ஜெரார்டோ.அப்போது டாக்டர் மிரண்டாவின் குரலை கேட்டதும்,அவனை துப்பாக்கி முனையில் சிறை பிடிக்கும் பவ்லினா, அவன் ஒரு கொடியவன் என்றும், அதற்க்கு முந்தய ஆட்சியில் தன்னை கண்ணை கட்டிவிட்டு டார்ச்சர் செய்தான் என்றும் வார காலமாக தன்னை கற்பழித்தவன் என்றும் குற்றம் சாட்ட, 'இல்லை' என்று டாக்டர் மிரண்டாவும்,'இருக்காது' என்று அவள் கணவன் ஜெரார்டோ வும் மறுக்கிறார்கள். உண்மை என்ன என்பதை கிளைமாக்ஸ் வரை இந்த மூன்று கதாபத்திரங்களை வைத்தே சிறிதும் தொய்வில்லாமல், சொல்லி இருக்கிறார் போலன்ஸ்கி. பவ்லினாவாக நடித்திருக்கும், சிகோர்னி வீவரும், டாக்டர் மிரண்டாவாக, காந்தக் குரலில் மயக்கும் பெண் கிங்ஸ்லீயும் கலக்கி இருக்கிறார்கள். அவர்களது நடிப்பே நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது.

தி பியானிஸ்ட்


வ்லாடிஸ்லா ஷ்பில்மன் ( Władysław Szpilman) என்ற ஒரு பியானோ இசை கலைஞனின் உண்மை கதையையும், தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் தொகுத்து ரோமன் போலன்ஸ்கி உருவாகின திரைக் காவியம் தான், 'தி பியானிஸ்ட்'. ஷ்பில்மன் போலந்தை சேர்ந்த ஒரு யூதன். உலக புகழ் பெற்ற பியானோ கலைஞன். இரண்டாம் உலகப்போரின் போது, யூதர்களை வேட்டையாடும் ஜெர்மானியர்கள், ஸ்பில்மானின் குடும்பத்தையும் விட்டு வைக்க வில்லை. யூதனல்லாத ஒரு குடும்பத்தின் உதவியுடன் ஷ்பில்மன் தப்பிப்பது தான் பதைபதைக்க வைக்கும் இந்தப் படத்தின் கதை.வ்லாடிச்லா ஷ்பில்மெனாக வாழ்ந்திருப்பார் அட்ரியன் ப்ரோடி. அவருக்கு ஆஸ்கார் விருதும், ரோமன் போலன்ஸ்கி க்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்காரும் படத்தின் திரைக்கதைக்கும் கிடைத்தது. படத்தில் உள்ள ஒவ்வொரு போர்கள காட்சியும், சிதைந்து போன ஓவியமாக காட்சி அளிக்கும் சிறப்பு இந்த திரைப்படத்துக்கு உண்டு.

33 வருடங்களுக்கு முன் தான் மாட்டிகொண்ட அந்த கற்பழிப்பு குற்றசாட்டு உண்மை இல்லை என தொடர்ந்து மறுத்து வரும் போலன்ஸ்கி, அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் நடந்தது எனினும் அவளுக்கு அப்போது பதிமூன்று வயது என்பதால், அந்த குற்றத்தின் துக்கம் தன்னை தொடர்ந்து கொண்டே இருப்பதாக கூறியுள்ளார். அவரின் குற்றத்துக்கு வக்காலத்து வாங்க வில்லை. யார் கண்டது, அதனையும் கூட ஒரு படமாக அவர் எதிர்காலத்தில் எடுக்கலாம்.

ஒரு கலைஞனுக்கு சொந்த வாழ்வில், பல சோகங்கள், பல நிகழ்வுகள் இருந்தாலும், அவனது கலை பயணம் தடையில்லாமல் தொடரவே செய்கிறது. சந்திக்கும் இடர்களையும் தனது எதிர்காலப் படங்களுக்காங்க கச்சா பொருள்களாக மாற்றிக் கொள்ளும் தன்மை சில பெரும் திரைச் சிற்பிகளாக மட்டுமே முடியும் அத்தகையோரில் ரோமன் போலன்ஸ்கி க்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்

Monday, December 24, 2012

திரைச்சிற்பிகள் - 2 அலெஜாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரித்தோ


'Innocence can be more powerful than experience,
Too much knowledge and analysis can be paralysis."
-Alejandro Gonzalez Inarritu.

சென்ற வாரம் மஜீத் மஜிதி என்ற மனிதத்தின் மெல்லிய உணர்வுகளை ஊடுருவ வைக்கும் திரைசிற்பியை சிலாகித்தோம். இந்த வாரம் அதே போல மனிதத்தை சொல்லும் திரை காவியங்கள் படைத்த அலெஜாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரித்தோ என்ற மேசிக்கன் படைப்பாளியை பற்றி பேச போகிறோம். இவரது படங்கள் மஜீத்தின் படங்களை போல மனிதத்தின் மெல்லிய உணர்வுகளை தொடுவது அல்ல. மனிதத்தின் வக்கிரத்தை, வருத்தத்தை, போராட்டத்தை, தோல்விகளை இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்க்கிறது.

மெக்ஸிகோவிலிருந்து புறப்பட்ட மிகச் சிறந்த திரை மொழியாலர்களுள் ஒருவர் இன்னாரித்தோ  இவரது திரைப்படங்கள் ஒரு புதிய திரைமொழியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. என்றுமே பரீட்சார்த்த முயற்சிகளுக்கு இவர் தயங்கியதே இல்லை.இவரது படங்கள் அனைத்துமே நான் லீனியர் அல்லது பின் நவீனத்துவம் என சொல்லப்படும் வகையை சேர்ந்தவை. இவரது படங்கள் பெரும்பாலும் சோகமானவை. மிகவும் ஆழமானவை. இவரது ஒவ்வொரு படமும் நம்மை உலுக்கிப் போடும். வாழ்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் எதிர்கொள்ள வைக்கும்.

                                                   குவில்லர்மொ அர்ரியாகா

ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத கதைகளை திரையில் ஓடவிட்டு ஒரு மையப் புள்ளியில் இணைக்கும் திரைக்கதை இவரிடத்தில் இருந்தே முழுமையாக துவங்கியது. குவெண்டின் டரண்டினொ இந்த உத்தியை தனது உலகப் புகழ் பெற்ற திரைப்படமான பல்ப் பிக்ஷனில் தொட்டு சென்றிருப்பார். இன்னாரித்தோவும் தனது ஆஸ்தான திரைக்கதை ஆசிரியர் குவில்லர்மொ அர்ரியாகாவும் (Guillermo Arriaga)  இணைந்து செதுக்கிய திரை சிற்பங்கள் ஒவ்வொன்றும் திரைமொழியில் வேறு வேறு பரிமாணங்களை காட்டின.

1963 வருடத்தில் மெக்சிகோவின், மெக்சிகோ சிட்டியில் பிறந்த இன்னாரித்தோ ஒரு நடத்தற வாழ்கையை வாழ்ந்தவர். இசையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர், மெக்சிகோவில் ஒரு வானொலி நிலையத்தில், டீ ஜெ வாக சில காலம் பணியாற்றினார். அவரது இசையின் மீதுள்ள ஆர்வம் அவரை அந்த வானொலி நிலையத்தின் இயக்குனராக உயர்த்தியது. வேலையில் இருக்கும்போதே ஆறு மெக்சிகன் திரைப்படங்களுக்கு இசை அமைத்த அனுபவம் அவருக்கு உண்டு. அதனாலேயே, அவரது படங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதை காணலாம். அவரது பாபேல் திரைப்படம், இசைக்காக ஆஸ்கர் விருது வாங்கியது. இசையில் சிறந்த ஞானம் இருப்பினும், அவரது எந்த திரைப்படங்களுக்கும் அவர் இசை அமைத்ததில்லை. அவரது அனைத்து படங்களுக்கும் இசை அமைத்தவர், குஸ்தாவோ சந்தாவோலல்லா (Gustavo Santaolalla) என்ற அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த சிறந்த இசை அமைப்பாளர். இவர் Brokeback mountain படத்துக்காக 2006 மற்றும் பாபேல் படத்துக்காக 2007 ஆகிய இரண்டு வருடங்களுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருதை வென்றவர்.

தொன்னூறுகளில் ஜீட்டா பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு சினிமா கம்பெனி துவங்கி, தொலைக்காட்சி சானல்களுக்கு குறும்படங்கள் எடுத்து தள்ளி கொண்டிருந்தார். அச்சமயத்தில் தான் இவரது முதல் மூன்று படங்களில் திரைக்கதை ஆசிரியராக வேலை செய்த குவில்லியர்மோர் அர்ரியாகா வின் நட்பு இவருக்கு கிடைக்க, நமக்கு அமோறேஸ் பெர்ரோஸ் (Amores Perros) என்ற அற்புத திரைக்காவியம் கிடைத்தது.

இன்னாரித்தொவின் திரைச்சிற்பங்களை சிறிது பார்க்கலாம்.

அமோறேஸ் பெர்ரோஸ்(Amores Perros):






தனது திரைகதை ஆசிரியர் குவில்லர்மொ அர்ரியாகாவோடு சேர்ந்து மூன்று வருடங்கள் உழைத்து 36 முறை மாற்றி எழுதி உருவாகிய படம் தான் அமோறேஸ் பெர்ரோஸ். மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் கதை. ஒரு விபத்து என்ற மையப் புள்ளியில் இணைகிறது. எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? ஆம். நம்ம ஊரு மணிரத்னம் இதே ஸ்டைலை காபி செய்து தான் தனது ஆய்த எழுத்தை உருவாக்கினார். இந்த படத்தில் வரும் முதல் கதை, நாய் சண்டையை பற்றியது. மெக்ஸிகோ நகரத்தில் நாய் சண்டை நடக்கும் இந்த இடம், பாதுகாப்பற்றது. ஆனால் அந்த இடத்தில் தான் தனது படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பினார் இன்னாரித்தோ.முதல் நாளில், நாய் சண்டை நடக்கும் வீட்டின் வெளியே, அவரையும் அவரது படக்குழுவினரையும் சுற்றி வளைத்தது பதின்ம வயது இளைஞர் கும்பல் ஒன்று. அவர்கள் அனைவரும் போதை இருந்தனர். போலீசுக்கும் போக முடியாது. அவர்களையும் கொன்று பட குழுவினரையும் கொன்று விடுவார்கள். பணமும் அவர்களுக்கு தேவை இல்லை. பின் என்னதான் வேண்டும் அவர்களுக்கு. 'இது எங்க ஏரியா. எங்கள் இடத்தில் நீங்கள் படம் பிடிக்க வேண்டுமானால், எங்களை கேக்க வேண்டும். கேட்டார்கள், அவர்களும் விட்டார்கள். மட்டுமல்ல, இவர்கள் படப்பிடிப்பு முடியும் வரை அவர்களே படகுழுவினருக்கும் பாதுகாவலாய் இருந்தார்கள்.

கதை ஒன்று:
அக்டோவியோ, ராமிரோ இருவரும் சகோதரர்கள். ரோமிரோவின் மனைவி சூசனின் மீது அக்டோவியாவுக்கு காதல். ரோமிரோவின் நாயை நாய் சண்டைக்கு பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான பணம் வெல்கிறான் அக்டொவியோ. சூசனிடம். எல்லாவற்றையும் விட்டு விட்டு தன்னுடன் வந்து விடும்படி வேண்டுகிறான் அக்டோவியோ. சூசனோ, தான் ரோமிரோவை மட்டுமே விரும்புவதாகவும் அவனை விட்டு வர விருப்பம் இல்லை என்றும் சொல்லி விடுகிறாள். ரோமிரோவின் நாயிடம் தனது நாய்களை தோல்வியை தழுவ, கடைசியாக ஒரு நாய் சண்டைக்கு அழைப்பு விடுகிறான், ஜராக்கோ. அந்த சண்டையிலும் தனது நாயை குதறிப்போடும் அக்டோவியோவின் நாயை சுட்டுவிடுகிறான் ஜராகோ. அவனை கத்தியால் குத்திவிட்டு, நாயை எடுத்துக் கொண்டு ஒரு காரில் தனது நண்பனுடன் தப்பிக்கும் ஆக்டோவியோ அந்த கோரமான கார் விபத்தில் சிக்கிக் கொள்கிறான்.

கதை இரண்டு:
டேனியல் தன்னை விட வயது குறைந்த வலேரியா என்ற ஒரு அழகான மாடலுக்காக, தனது மனைவி குழந்தையை விட்டு பிரிந்து வருகிறான். வலேரியாவுக்காக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி பரிசாக அளிக்கிறான். அந்த அப்பார்ட்மெண்டின் ஜன்னல் வழியே உள்ள ஹோர்டிங்கின்ல், தனது அழகான கால்கள் தெரிய வலேரியா புகைப்படம் தரித்த ஒரு விளம்பரம். அத்துடன் ஒரு அழாகான குட்டி நாயையும் பரிசாக அளிக்கிறான் டேனியல் அதனை அவள் கொஞ்சி தள்ளுகிறாள். இந்த அழகான நாளை கொண்டாட அவனுக்காக வைன் வாங்க செல்லும் வலேரியா அந்த விபத்தில் சிக்க அவளது கால் சிதைந்து விடுகிறது. அவளை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறான் டேனியல். அவளோ உந்து கட்டைகள் வைத்தபடி அப்பார்ட்மெண்டயெ  சுத்தி சுத்தி வருகிறாள். அவர்களது புதிய அபார்ட்மெண்டின் தரையில் இருக்கும் ஓட்டை வழியே அவளது நாய் ரிச்சி கீழே சென்று மாட்டிக்கொள்ள, டேனியல் வேலைக்கு சென்றதும், தனக்கு இருக்கும் ஒரே துணையான ரிச்சியை தேடி தருமாறு டேனியல்லை கேட்க அவனோ வேலை பளுவில் அதனை கவனிக்காமல் விட்டு விட, தன்னை உதாசீனப்படுத்துவதாக அவள் நினைக்க, அவனோ தனது பழைய மனைவியை தேடி போக நினைக்க, ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்தும் அவள் தனது படுக்கை அறை கதவை திறக்காமல் இருக்க, அவன் உடைத்து திறக்க,அவள் தரையில் விழுந்து கிடக்கிறாள். அவளை பரிசோதிக்கும் டாக்டர், அவள் கால் முற்றிலும் உருக்குலைந்து விட்டதால், காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட, டேனியல், கவலையுடன் ஜன்னலுக்கு வெளியே, வலேரியாவின் ஹோர்டிங் வெள்ளையடிக்கப் பட்டு ' போர் ரெண்ட்' என்ற வாசகத்தை பார்த்தபடி நிற்கிறான்.

கதை மூன்று: எல் சிவோ, குப்பை பொறுக்குபவன். சாலையில் நடக்கும் அந்த விபத்தை பார்கிறான், ஓடி சென்று அக்டோவியோவுக்கு உதவுபவன், அவனது பர்சை திருடிக் கொண்டு குண்டடி பட்டு கிடக்கும் அவனது நாய் கோபி யையும் அழைத்து கொண்டு சென்று விடுகிறான். அடிப்படையில் அவன் காசுக்கு கொலை செய்பவன். அவனிடம் ஒருவன் பணம் கொடுத்து தனது பிசினஸ் பார்ட்னரை தீர்த்துக் கட்ட சொல்ல, அவனை கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைப்பவன், தன்னை கொலை செய்ய சொன்னவனையும் வரவழைத்து அதே இடத்தில் கட்டி வைக்க, அப்போது தான் அவனுக்கு தெரிகிறது, அவர்கள் பிசினஸ் பார்ட்னர் மட்டுமல்ல அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று. இடையே அவனது வளர்ப்பு மகளை தேடி புறப்படுகிறான்.

இந்தத் திரைப்படம், இதுவரை ஐம்பத்தி ஐந்து விருதுகளை உலக அளவில் வென்றிருக்கிறது. ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டது.

21 கிராம்ஸ்.

பால், ஒரு செயின் ஸ்மோக்கர். சாவின் விளிம்பில் இருக்கும் அவனுக்கு ஒரே வாய்ப்பு மாற்று இருதயம். கிறிஸ்டினாவின் கணவனும் குழந்தைகளும் வாகிங் செல்லும்போது ஒரு கார் அவர்களை மோதிவிட, குழந்தைகள் இறந்துவிட, கோமாவில் இருக்கும் அவளது கணவனின் இதயம் பாலுக்கு பொறுத்த படுகிறது. பால் தனக்கு இதயம் தந்தவனின் குடும்பத்தை காண புறப்பட, குடும்பத்தை இழந்த தவிப்பில் இருக்கும் கிறிஸ்டீன உடன் இவனுக்கு தொடர்பு ஏற்படுகிறது அவளோ தன குடும்பத்தை குலைத்த அந்த கார் ஓட்டுனரை கொலை செய்ய வேண்டும் என உத்தரவிட, அவனைத் தேடி புறப்படுகிறான். கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியவன் ஜாக். முன்னாள் குற்றவாளி.இப்போது கிறித்துவ மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு மனம் மாறி தவறி போகும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவனாக வாழ்கிறான். இந்த விபத்து இவன் குடும்பத்தையும் புரட்டிப் போட, அவனே காவல் நிலையம் சென்று சர்ரண்டர் ஆகிறான். 21 கிராம்ஸ் என்பது, நாம் இறக்கும் தருவாயில், நமது உடலில் இருந்து குறைவாகும் நமது எடை. நமது ஆத்மாவின் அளவாக குறிப்பிடப் படுகிறது.

ஒவ்வொரு காட்சியும் வரிசையாக இல்லாமல், ஜம்புள் முறைப்படி வெவ்வேறு வரிசையில் அமர்ந்திருந்தாலும் படம் முடியும்போது மொத்த கதையும் நமக்கு புரியும்படி அமைந்த திரைக்கதையின் சிறப்பு.  இந்த படத்துக்கு க்ரிஸ்டீனா வாக அற்புதமாக நடித்த நவமி வாட்சுக்கும் ஜாக்காக நடித்த பெனிசியோ டெல் டோராவுக்கு சிறந்த துணை நடிகர் விருதுகாகவும் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டார்கள். இந்த படம் உலக அளவில் வாங்கிய மொத்த விருதுகள் 28.

பாபேல்.

ஒரு ஆடு இடையன், தனது ஆடுகளை தின்று விடும் ஓநாய்களை விரட்ட, ஒரு துப்பாக்கியை ஒரு மொரோக்கோ நாட்டை சேர்ந்தவனிடம் இருந்து வாங்குகிறான் அதனை தனது ஆடுகளை கவனித்து கொள்ளும் தனது மகன்களிடம் கொடுக்கிறான். துப்பாகியால் உந்தப்பட்ட இளைய மகன், சும்மா குறி இல்லாமல் சுடுகிறான். அப்போது அங்கு வந்து கொண்டிருக்கும் ஒரு டூரிஸ்ட் பஸ்சின் கண்ணாடியை உடைத்து கொண்டு ஒரு தொட்ட பாய்ந்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க தம்பதியில் மனைவியை பதம் பார்க்கிறது. அவர்கள் ஆபிரிக்காவில் சுற்றுபயம் மேற்கொண்டிருக்க, அவர்களது குழந்தைகளை கவனித்து கொள்கிறாள், ஒரு மெக்சிக்கன் ஆயா.அந்த துப்பாக்கி, ஒரு ஜப்பாநியனிடம் இருந்து வாங்கப்பட்டதாக அறியப்படுகிறது. இப்படத்தில், அந்த ஆட்டு இடையனின் குடும்பம், அமெரிக்க தம்பதிகள், அவர்கள் குழந்தையை கவனித்துக் கொள்ளும் மேசிக்கன் ஆயா, அந்த துப்பாக்கியை அளித்த ஜப்பானியனின் வாய் பேச முடியாத மகள் என நான்கு கதைகள், முன்னும் பின்னும் பொய் வருகிறது. மிக அற்புதமான பின் நவீனத்துவ திரைக்கதை மாறும் சிறந்த இயக்கத்துடன் வந்த இந்த திரைப்படம், இசைக்கு ஆஸ்கார் விருது பெற்றதுடன், உலக அரங்கில் 37 விருதுகளை  வென்றுள்ளது.
பியுட்டிபுள்

பாபேல் படத்தின்போது ஏற்பட்ட மனஸ்தாபத்தால், தனது ஆஸ்தான திரைக்கதை எழுத்தாளர் அறியகாவை விட்டு பிரிந்து, நிகோலஸ் மற்றும் அர்மண்டோவுடன் எழுதிய திரைக்கதை தான் பியுடிபுள். பராஸ்டேட்  கான்சரால் அவதி படும் உக்ஸ்பாலுக்கு போதைக்கு அடிமையான மனைவி மற்றும் இரு குழந்தைகள். மனைவியால் தனது குழந்தைகளை கவனிக்க முடியாது என்று அறிந்து கொண்ட உக்ஸ்பால், செனெகல் நாட்டில் இருந்து தனது வீட்டில் வேலை செய்யும் ஏகே விடம் தனது பணம் அனைத்தையும் கொடுத்து தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள சொல்கிறான். இன்னாரித்தோ எடுத்த திரைப்படங்களிலேயே, இந்த திரைப்படம் மட்டுமே சிக்கலில்லாத நேர் கோட்டில் பயணிக்கிற திரைக்கதையை கொண்டது. அறியாகவின் பிரிவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.இப்படத்தில் உக்ஸ்பல்லாக நடித்திருக்கும் ஆவியே பார்தேம் (javier Bardem), கான்செர் நோயாளியாக கலக்கி இருக்கிறார். இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப் பட்டது. இந்த படத்துக்கு உலக அளவில் மொத்தம், பதினைந்து விருதுகள் கிடைத்தன.


இன்னாரித்தோ இதுவரை இயக்கியுள்ள படங்கள் நாலுதான். அவரது படங்கள் மொத்தமாக குவித்த விருதுகளோ நூற்றி ஐம்பதுக்கும் மேல். அவருடைய ஒவ்வொரு படமும், மனித வலியை பதிகிறது. இதயத்தின் அடியாளம் வரை சென்று அமர்ந்து கொள்ளும் உணர்வுகளை இவரது படம் தருகிறது. பாலியலை அதன் அழகியலோடும் இவரது திரைப்படம் முன்வைப்பதால், இவரது படங்கள் அவைகளை எளிதாக கலந்து போகிறது. இவரது படத்தின் திரைக்கதைகள் எளிதானதல்ல. குவெண்டின் டொரொண்டினொவை போல, கிறிஸ்டோபர் நோலனை போல ஒவ்வொரு படைப்பும் பார்வையாளனை சிந்திக்க வைக்கிறது. இவரது படத்தினை சிலாகிக்கவும் வைக்கிறது.  ஒவ்வொரு படமும் நம்மை கனக்க வைப்பது நிச்சயம். அதுவே அவரது வெற்றி எனவும் நான் நினைக்கிறேன். 

இவர் உலக அரங்கில் பேசப்படும் இயக்குனராக இருந்து கொண்டிருப்பதற்கு பின் வரும் காரணத்தை கூறுகிறார். அதுவே அவரது வெற்றிக்கும் காரணமாக இருக்கிறது. 

I think that in order to be a film director, one has to be a warrior who shouldn't be defeated by the daily onslaught of problems. We are all hanging by threads and are the mercy of various elements, if one fails the whole flight could come crashing down, and like a good warrior I'm not going to break down.

-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்



Saturday, December 15, 2012

திரைச்சிற்பிகள் -1 (மஜீத் மஜிதி )



பனிரெண்டு வயதில் நாடகத்தின் மேல், நடிப்பின் மேல், எனக்கு ஈர்ப்பு வந்தது.  ஒரு கட்டத்தில், என் முதல் படம் இயக்க சந்தர்ப்பம் வாய்த்த போது, அந்த அனுபவங்களை பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு மிகவும் கடினமாக இருந்தது எனது முதல் படம் தான். என்றாலும், ஒரு இயக்குனரின் சிறந்த படம் தான், அவனது முதல் படமாக கொள்ள வேண்டும். எவ்வளவு தடைகளை  தாண்டி வந்தாலும்,ஒரு மோசமான படத்துக்கு எந்தக் காரணிகளும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடாது.
-- மஜீத் மஜிதி.
 
உலக சினிமா என்றாலே, முதலில் நம் நினைவுக்கு வருவது இரானிய சினிமாக்களே!. அப்பாஸ் க்ரியோஸ்தமி,மோசென் மக்மல்பாப் , அபோல்பாசில் ஜலிலி போன்ற ஜாம்பாவான்கள், காலத்தில் அழியா காவியங்கள் படைத்து உலக சினிமா வரைபடத்தில், இரானை அழுத்தமாக காலூன்ற செய்தவர்கள்.  
இவர்களின் வரிசையில், மறுக்கவோ மறக்கவோ முடியாத ஒரு திரை சிற்பி மஜீத் மஜிதி. அவரது திரைப்படங்களை தேடி தேடி சென்று பார்த்த அனுபவத்தில், அவரது ஒவ்வொரு படைப்பும், இன்றைய புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு பாடப் புத்தகமாக வைக்கலாம். இன்றைக்கும் யாரவது ஒரு குழந்தைக்கு காலனி அணிவித்துக் கொண்டிருந்தால் , எனக்கு மஜீத்தின்  'சில்றன் ஆப் ஹெவென் ' திரைப்படம் தான் மனத்திரையில் மின்னி மறையும்.
 
எம் ஜி ஆரையும் , சிவாஜியையும், ரஜினி, கமலையும் பார்த்து சலித்த எனது தாய், அமெரிக்காவில் சில்றன் ஆப்  ஹெவனை பார்த்துவிட்டு, மறுபடி மறுபடி ஐந்து முறை அவரை   பார்க்கவைத்தது, படத்தில் இருந்த பாடல்களோ, நாட்டியமோ உருக வைக்கும் காட்சிகளோ அல்ல. அப்படத்தின் குழந்தைகள், தன்  குழந்தைகளை அவளுக்கு ஞாபகப் படுத்தி இருக்கலாம். உலக சினிமாவை பற்றிய எந்த அறிவும் இல்லாத, தனக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத ஒரு நாட்டின், தனக்கு என்னவென்றே தெரியாத பாரசீக மொழியில் அமைந்த அந்த திரைப்படம் அவளை அவ்வளவு தூரம் பாதித்ததேன்றால், அந்த திரைமொழி எந்த வடிவத்தில் இருந்திருக்க வேண்டும்? 
 
மஜீத், இரானிய சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல, மெகா பட்ஜெட்டை தேடி ஓடவில்லை. சூப்பர் ஹீரோக்களை தனது படத்தில் நடிக்க வைக்கவில்லை. பயங்கரமான கதைக் களங்கள்  அவரது படத்தில் இல்லை. அவர் தனது முற்றத்தில் இருக்கும் கதைகளை, தனது கிராமங்களில், தான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து தான் கதைகளை எடுத்துக் கொண்டார். மெல்லிய மனித உணர்வுகளை, நமக்கே தெரியாமல் நமக்குள் புதைந்திருக்கும் மனித தருணங்களை வெளியே கொண்டு வந்தார். மேற்கத்தைய  உலகின் திரைகள் தொலைத்துவிட்ட மனிதத்தை, இரானிய திரைப்படங்களின் மூலம் ஞாபகமூட்டிக் கொண்டிருந்தன அவரது திரைப் படங்கள்.
 
மேற்கத்தைய நாடுகளின் திரைப்படங்கள் தொலைத்துவிட்ட மனிதத்தை திரையில் காட்டும் உங்களுக்கு  உங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையா? என கேட்ட ஒரு நிருபரிடம் இப்படி பதில் அளிக்கிறார் மஜீதி.

'இரான் கலாசாரத்துக்கு பெயர் போன ஒரு பழம் பெரும் நாடு. 'ஹபீஸ்,சாடி ரூமி போன்ற இலக்கியவாதிகளை உலகத்துக்கு தந்த நாடு. அவர்களின் கவிதைகளில், மனிதம் மேலாக இருக்கும்.  எனக்கு எனது கலாசாரம் மட்டுமே தெரியும். மேற்க்கத்திய உலகம் தனது கலாசாரத்தை தொலைத்துவிட்டு புதிய உலகம் நோக்கி நடைபோடுகிறது. மனிதம் பிணைந்த கலாசாரத்தில் வாழும் நாங்கள், அதனை சார்ந்து தான் எங்கள் திரைப்படங்களும் இயங்கி கொண்டிருக்கிறது. எங்களது கலாசாரம் அப்படி. என்னால் எனது நாட்டினை விட்டு வெளியே சென்று படம் எடுக்க முடியாது.'
 
திறமை சாலிகள் பலரை கொண்டிருக்கும் தமிழ் சினிமா ஏன்  இன்னமும் உலக அளவில் கவனிக்கப் படவில்லை என இப்போது புரிகிறதா? நாம் மேற்கத்திய கலாசாரம் தான் உயர்ந்தது என நினைத்து நாம் நமது மதிப்பீடுகளை விட்டு விட்டு அவர்களுக்கு தகுந்தமாதிரி தானே படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நமது பண்பாட்டையும் கலையையும் கலாசாரத்தையும் உலகத்துக்கு காடக் கூடிய திரைப்படங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்.
 
மஜீதின் சில திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
 
சில்றன் ஆப ஹெவென்:

 தங்கையின் அறுந்து போன ஷூவை தைத்து வருவதற்காக அண்ணன், அதனை தொலைத்து விட, குடும்ப கஷ்டத்தில் இருக்கும் அப்பாவை சங்கடபடுத்த வேண்டாம் என்று அண்ணனும் தங்கையும் தாங்கள் வேறு வேறு நேரங்களில் பள்ளி செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.காலையில் பள்ளி செல்லும் தங்கை, அண்ணனின் ஷூவை அணிந்து செல்கிறாள். மதியம் வகுப்புகளுக்கு செல்லும் அண்ணன் பாதி வழியில் தங்கையிடம் இருந்து ஷூவை அணிந்து பள்ளிக்கு செல்கிறான். இடையே அண்ணனது பள்ளியில் ஓட்டபந்தயம் வைக்கப்பட அந்த பந்தயத்தில் மூன்றாம் பரிசு அழகிய ஷூக்கள் என்று அறிவிக்கப் பட, அண்ணன் தனது இத்துப்போன ஷூவை வைத்து ஓடி மூன்றாம் பரிசு வென்று அந்த ஷூவை தன தங்கைக்கு அளிக்க நினைத்து பந்தயத்தில் கலந்து கொள்கிறான். கதை சிம்பிளாக இருந்தாலும் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்ல உதவி இருக்கும் திரைக்கதை அபாரம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த அண்ணன் தங்கையை தனது வீட்டு மாந்தர்கள் போல உணருவதால் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

கலர் ஆப் பாரடைஸ்:

 பார்வை இழந்த சிறுவனை, மனைவியை இழந்த அவன் தந்தை நிராகரிக்கிறான். அந்த சிறுவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவனுடைய பாட்டியும் அவனது சகோதரிகளும். அவனது தந்தைக்கு வேறொரு பெண்ணை மணம் முடிக்க ஆசை. ஆனால் பார்வை இழந்த மகனை உடைய அவனை மணக்க, பெண்ணின் வீட்டில் சம்மதிக்க வில்லை. எனவே அவன் தனது மகனை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் தன வாழ்கையை பாழ்படுத்திய தனது மகனையே கொல்ல நினைக்கிறான். இந்த படம் பார்ப்பவர்களின் உள்ளத்தை உருக்கி விடும். அந்த சிறுவன் முகம்மது ஆகா நடித்திருக்கும் சிறுவன் மொஹ்சென் ராமெசானி க்கு நிஜ வாழ்விலும் கண் பார்வை கிடையாது. படத்தின் வசனங்கள் மிகவும் அருமை. படத்தில் வரும் ஒரு வசனம் :'எனது டீச்சர், கடவுள் பார்வை அற்றவர்களை மிகவும் விரும்புவார் என சொல்ல, நான் பதிலளித்தேன், கடவுள் என்னை விரும்பினால் என்னை ஏன் பார்வையற்றவனாக படைக்க வேண்டும். எனக்கு பார்வை இருந்தால் நான் இறைவனை காண முடியுமே. அதற்க்கு டீச்சர் சொன்னார், கடவுள் எங்கும் இருக்கிறார், உன் விரல் நுனியில் கூட அவனை நீ காணலாம். நான் என் கைகளை வைத்து தேடிக் கொண்டே இருக்கிறேன் அவன் அகப்படவே இல்லை.' இந்த வசனம் கூறும்போது காற்றில் அலை பாயும் முகம்மதுவின் கரங்களை கண்டு நம் கண்கள் கசிவது நிச்சயம்.

பாரான்:

ஆப்கன் அகதியான லதீப் இரானில் கட்டிட வேலை செய்யும் நபர்களுக்கு டீ யும் உணவும் தயார் செய்யம் வேலை செய்கிறான். எந்த குறையும் இல்லாத ஒரு மகிழ்வான வாழ்வு வாழும் லதீபுக்கு, சுகவீனமான நஜாப் கட்டிட வேலை செய்ய முடியாததால் தனது மகன் ரஹைம்மத்தை வேலைக்கு அனுப்ப, பலகீனமான ரஹைம்மத்தால் கடுமையான கட்டிட வேலைகள் செய்ய இயலாமல் போக, லத்தீபை அந்த பணிக்கு அமர்த்திவிட்டு ரஹைம்மத்துக்கு லத்தீப்பின் வேலை கொடுக்கப்பட, அவன் மீது வெறுப்புடன் அலைகிறான் லத்தீப். ஒரு சமயத்தில் ரஹைம்மத் ஒரு பெண் என அறிந்து கொள்ளும் லத்தீப், அவள் மீது ஒரு ஈர்ப்புடன் அலைகிறான். அவள் மேல் அவனுக்கு காதல் என்பதை அவனது முகபாவனைகளை வைத்தே உணர்த்தும் யுக்தியும், ரஹஅம்மத் ஒரு பெண் என்பதை அவளது தலை முடி வைத்து காட்டும் யுக்தியும் அருமை. ஒரு மெல்லிய காதல் கதை, ஒரு பறவையின் சிறகை போல மெல்ல வருடுகிறது.

தி வில்லோ ட்ரீ :
கண் பார்வையற்ற ஒரு பேராசிரியருக்கு நல்ல மனைவி குழந்தை என்ற அழகான குடும்பம்.அவனுக்கு பார்வை திரும்ப சாத்தியம் இருக்கிறது என அறிந்து பிரான்ஸ் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள, அவனுக்கு பார்வை திரும்புகிறது. பார்வை திரும்பியதால் அவன் சில தீய எண்ணங்களால் உந்தப்பட்டு, பார்வை இல்லாமல் இருந்தபோது அவனுக்கு கிடைத்த நிம்மதியை இழந்து நிற்கிறான். படத்தில் சிலிர்ப்பூட்டும் ஒரு காட்சி, அவன் கண் பார்வை பெற்று திரும்பியவுடன், விமான நிலையத்தில் காத்திருக்கும்,அவனை கண்டதும் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில், யார் யார் எவர் என தெரியாமல் முழித்தபடி, கூட்டத்தில் அனைவரும் சிரித்தபடி அவனுக்கு கை ஆட, ஒரே ஒரு பெண் ஓரமாக அவனை பார்த்தபடி அழுது கொண்டிருப்பதை கண்டதும் 'அம்மா' என்று சொல்லும் காட்சியை வைக்க, மஜீத்துக்கு மட்டும் தான் தெரியும்.

இன்னமும், நெருப்புக் கோழி வளர்க்கும் பண்ணையில் வேலை பார்க்கும் கரீம், ஒரு சந்தர்பத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நெருப்புக் கோழிகளில் ஒன்று தப்பித்துவிட, தனது மகளின் காத்து கேட்கும் கருவியை வாங்க முடியாது அல்லாடும் தகப்பனின் கதையான 'தி சாங்க்ஸ் ஆப் ஸ்பர்ரோவ்ஸ்' மற்றும் தகப்பனை இழந்த மேஹரோல்லா, மறுமணம் செய்து கொள்ளும் தாயை வெறுக்கும் பாதர் கதையும் இன்னமும் பார்க்க கிடக்கின்றன.

உங்கள் படங்களில் குழந்தைகளை அதிகமாக காண முடிகிறதே, என்ற கேள்விக்கு மஜித்தின் பதில், 'நானும் குழந்தை ப்ராயத்துக்காக ஏங்குபவன் தான். எனது சிறுவயது பிராயங்களில் நடந்த சில சம்பவங்களையும் எனது படங்களில் தொகுக்க முயல்கிறேன். இந்த பிராயம் தான், குழந்தை பருவத்தையும், பதின்ம பருவத்தையும் இணைக்கிறது'. தனது பல படங்களில் பல தருணங்களில், நடிகர்களுக்கு தெரியாத இடத்தை காமராக்களை வைத்து விடுவது இவரது பாணி. அதன் மூலம் இயற்கையான நடிப்பை அவர்களிடம் இருந்து வரவழைக்க முடியும் என நம்புகிறார்.

 அவரது ஒவ்வொரு படங்களையும், ஒரு கலை சிற்பி போல செதுக்கி எடுக்கிறார். அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு உருவகத்தை உபயோகபடுத்தி இருப்பார். சில்றன் ஆப் ஹெவனில் 'ஷூ', 'கலர் ஆப் பாரடைசில்' வண்ணத்து பூச்சி, 'தி வில்லோ ட்ரீயில்' கட்டெறும்பு, பாரானில் மழை என அவைகளையும் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டிருப்பார். இரானின் கலாச்சாரமும், இந்திய கலாச்சாரமும் ஒன்றுகொன்று பின்னி பிணைந்து கிடப்பதால், நம்மால் அவரது படத்தோடு ஒன்ற முடிகிறது.

இரானை, குறையுள்ள நாடாக காட்டக் கூடாது , பெண்களை ஆடை குறைத்துக் காட்டக்கூடாது, என பலபல கட்டுபாடுகள் உள்ள இரானிலிருந்து தான் இது போன்ற உலகத்தரமான படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. வியாபார நோக்கத்தை பொருட்படுத்தாது கலையை கலையாகவே காட்ட மஜீத் மஜிதி தவறியதில்லை.அதற்காக அவர் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. இதற்காகவே, அவரது படங்களை தேடி தேடி பார்த்து புல்லரித்துக் கொண்டிருக்கிறேன். அவரது படங்கள் தரும் உணர்வுகளை நான் ரசித்துக் கொண்டே இருக்கிறேன்.
-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...