Monday, December 24, 2012

திரைச்சிற்பிகள் - 2 அலெஜாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரித்தோ


'Innocence can be more powerful than experience,
Too much knowledge and analysis can be paralysis."
-Alejandro Gonzalez Inarritu.

சென்ற வாரம் மஜீத் மஜிதி என்ற மனிதத்தின் மெல்லிய உணர்வுகளை ஊடுருவ வைக்கும் திரைசிற்பியை சிலாகித்தோம். இந்த வாரம் அதே போல மனிதத்தை சொல்லும் திரை காவியங்கள் படைத்த அலெஜாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரித்தோ என்ற மேசிக்கன் படைப்பாளியை பற்றி பேச போகிறோம். இவரது படங்கள் மஜீத்தின் படங்களை போல மனிதத்தின் மெல்லிய உணர்வுகளை தொடுவது அல்ல. மனிதத்தின் வக்கிரத்தை, வருத்தத்தை, போராட்டத்தை, தோல்விகளை இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்க்கிறது.

மெக்ஸிகோவிலிருந்து புறப்பட்ட மிகச் சிறந்த திரை மொழியாலர்களுள் ஒருவர் இன்னாரித்தோ  இவரது திரைப்படங்கள் ஒரு புதிய திரைமொழியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. என்றுமே பரீட்சார்த்த முயற்சிகளுக்கு இவர் தயங்கியதே இல்லை.இவரது படங்கள் அனைத்துமே நான் லீனியர் அல்லது பின் நவீனத்துவம் என சொல்லப்படும் வகையை சேர்ந்தவை. இவரது படங்கள் பெரும்பாலும் சோகமானவை. மிகவும் ஆழமானவை. இவரது ஒவ்வொரு படமும் நம்மை உலுக்கிப் போடும். வாழ்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் எதிர்கொள்ள வைக்கும்.

                                                   குவில்லர்மொ அர்ரியாகா

ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத கதைகளை திரையில் ஓடவிட்டு ஒரு மையப் புள்ளியில் இணைக்கும் திரைக்கதை இவரிடத்தில் இருந்தே முழுமையாக துவங்கியது. குவெண்டின் டரண்டினொ இந்த உத்தியை தனது உலகப் புகழ் பெற்ற திரைப்படமான பல்ப் பிக்ஷனில் தொட்டு சென்றிருப்பார். இன்னாரித்தோவும் தனது ஆஸ்தான திரைக்கதை ஆசிரியர் குவில்லர்மொ அர்ரியாகாவும் (Guillermo Arriaga)  இணைந்து செதுக்கிய திரை சிற்பங்கள் ஒவ்வொன்றும் திரைமொழியில் வேறு வேறு பரிமாணங்களை காட்டின.

1963 வருடத்தில் மெக்சிகோவின், மெக்சிகோ சிட்டியில் பிறந்த இன்னாரித்தோ ஒரு நடத்தற வாழ்கையை வாழ்ந்தவர். இசையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர், மெக்சிகோவில் ஒரு வானொலி நிலையத்தில், டீ ஜெ வாக சில காலம் பணியாற்றினார். அவரது இசையின் மீதுள்ள ஆர்வம் அவரை அந்த வானொலி நிலையத்தின் இயக்குனராக உயர்த்தியது. வேலையில் இருக்கும்போதே ஆறு மெக்சிகன் திரைப்படங்களுக்கு இசை அமைத்த அனுபவம் அவருக்கு உண்டு. அதனாலேயே, அவரது படங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதை காணலாம். அவரது பாபேல் திரைப்படம், இசைக்காக ஆஸ்கர் விருது வாங்கியது. இசையில் சிறந்த ஞானம் இருப்பினும், அவரது எந்த திரைப்படங்களுக்கும் அவர் இசை அமைத்ததில்லை. அவரது அனைத்து படங்களுக்கும் இசை அமைத்தவர், குஸ்தாவோ சந்தாவோலல்லா (Gustavo Santaolalla) என்ற அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த சிறந்த இசை அமைப்பாளர். இவர் Brokeback mountain படத்துக்காக 2006 மற்றும் பாபேல் படத்துக்காக 2007 ஆகிய இரண்டு வருடங்களுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருதை வென்றவர்.

தொன்னூறுகளில் ஜீட்டா பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு சினிமா கம்பெனி துவங்கி, தொலைக்காட்சி சானல்களுக்கு குறும்படங்கள் எடுத்து தள்ளி கொண்டிருந்தார். அச்சமயத்தில் தான் இவரது முதல் மூன்று படங்களில் திரைக்கதை ஆசிரியராக வேலை செய்த குவில்லியர்மோர் அர்ரியாகா வின் நட்பு இவருக்கு கிடைக்க, நமக்கு அமோறேஸ் பெர்ரோஸ் (Amores Perros) என்ற அற்புத திரைக்காவியம் கிடைத்தது.

இன்னாரித்தொவின் திரைச்சிற்பங்களை சிறிது பார்க்கலாம்.

அமோறேஸ் பெர்ரோஸ்(Amores Perros):






தனது திரைகதை ஆசிரியர் குவில்லர்மொ அர்ரியாகாவோடு சேர்ந்து மூன்று வருடங்கள் உழைத்து 36 முறை மாற்றி எழுதி உருவாகிய படம் தான் அமோறேஸ் பெர்ரோஸ். மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் கதை. ஒரு விபத்து என்ற மையப் புள்ளியில் இணைகிறது. எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? ஆம். நம்ம ஊரு மணிரத்னம் இதே ஸ்டைலை காபி செய்து தான் தனது ஆய்த எழுத்தை உருவாக்கினார். இந்த படத்தில் வரும் முதல் கதை, நாய் சண்டையை பற்றியது. மெக்ஸிகோ நகரத்தில் நாய் சண்டை நடக்கும் இந்த இடம், பாதுகாப்பற்றது. ஆனால் அந்த இடத்தில் தான் தனது படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பினார் இன்னாரித்தோ.முதல் நாளில், நாய் சண்டை நடக்கும் வீட்டின் வெளியே, அவரையும் அவரது படக்குழுவினரையும் சுற்றி வளைத்தது பதின்ம வயது இளைஞர் கும்பல் ஒன்று. அவர்கள் அனைவரும் போதை இருந்தனர். போலீசுக்கும் போக முடியாது. அவர்களையும் கொன்று பட குழுவினரையும் கொன்று விடுவார்கள். பணமும் அவர்களுக்கு தேவை இல்லை. பின் என்னதான் வேண்டும் அவர்களுக்கு. 'இது எங்க ஏரியா. எங்கள் இடத்தில் நீங்கள் படம் பிடிக்க வேண்டுமானால், எங்களை கேக்க வேண்டும். கேட்டார்கள், அவர்களும் விட்டார்கள். மட்டுமல்ல, இவர்கள் படப்பிடிப்பு முடியும் வரை அவர்களே படகுழுவினருக்கும் பாதுகாவலாய் இருந்தார்கள்.

கதை ஒன்று:
அக்டோவியோ, ராமிரோ இருவரும் சகோதரர்கள். ரோமிரோவின் மனைவி சூசனின் மீது அக்டோவியாவுக்கு காதல். ரோமிரோவின் நாயை நாய் சண்டைக்கு பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான பணம் வெல்கிறான் அக்டொவியோ. சூசனிடம். எல்லாவற்றையும் விட்டு விட்டு தன்னுடன் வந்து விடும்படி வேண்டுகிறான் அக்டோவியோ. சூசனோ, தான் ரோமிரோவை மட்டுமே விரும்புவதாகவும் அவனை விட்டு வர விருப்பம் இல்லை என்றும் சொல்லி விடுகிறாள். ரோமிரோவின் நாயிடம் தனது நாய்களை தோல்வியை தழுவ, கடைசியாக ஒரு நாய் சண்டைக்கு அழைப்பு விடுகிறான், ஜராக்கோ. அந்த சண்டையிலும் தனது நாயை குதறிப்போடும் அக்டோவியோவின் நாயை சுட்டுவிடுகிறான் ஜராகோ. அவனை கத்தியால் குத்திவிட்டு, நாயை எடுத்துக் கொண்டு ஒரு காரில் தனது நண்பனுடன் தப்பிக்கும் ஆக்டோவியோ அந்த கோரமான கார் விபத்தில் சிக்கிக் கொள்கிறான்.

கதை இரண்டு:
டேனியல் தன்னை விட வயது குறைந்த வலேரியா என்ற ஒரு அழகான மாடலுக்காக, தனது மனைவி குழந்தையை விட்டு பிரிந்து வருகிறான். வலேரியாவுக்காக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி பரிசாக அளிக்கிறான். அந்த அப்பார்ட்மெண்டின் ஜன்னல் வழியே உள்ள ஹோர்டிங்கின்ல், தனது அழகான கால்கள் தெரிய வலேரியா புகைப்படம் தரித்த ஒரு விளம்பரம். அத்துடன் ஒரு அழாகான குட்டி நாயையும் பரிசாக அளிக்கிறான் டேனியல் அதனை அவள் கொஞ்சி தள்ளுகிறாள். இந்த அழகான நாளை கொண்டாட அவனுக்காக வைன் வாங்க செல்லும் வலேரியா அந்த விபத்தில் சிக்க அவளது கால் சிதைந்து விடுகிறது. அவளை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறான் டேனியல். அவளோ உந்து கட்டைகள் வைத்தபடி அப்பார்ட்மெண்டயெ  சுத்தி சுத்தி வருகிறாள். அவர்களது புதிய அபார்ட்மெண்டின் தரையில் இருக்கும் ஓட்டை வழியே அவளது நாய் ரிச்சி கீழே சென்று மாட்டிக்கொள்ள, டேனியல் வேலைக்கு சென்றதும், தனக்கு இருக்கும் ஒரே துணையான ரிச்சியை தேடி தருமாறு டேனியல்லை கேட்க அவனோ வேலை பளுவில் அதனை கவனிக்காமல் விட்டு விட, தன்னை உதாசீனப்படுத்துவதாக அவள் நினைக்க, அவனோ தனது பழைய மனைவியை தேடி போக நினைக்க, ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்தும் அவள் தனது படுக்கை அறை கதவை திறக்காமல் இருக்க, அவன் உடைத்து திறக்க,அவள் தரையில் விழுந்து கிடக்கிறாள். அவளை பரிசோதிக்கும் டாக்டர், அவள் கால் முற்றிலும் உருக்குலைந்து விட்டதால், காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட, டேனியல், கவலையுடன் ஜன்னலுக்கு வெளியே, வலேரியாவின் ஹோர்டிங் வெள்ளையடிக்கப் பட்டு ' போர் ரெண்ட்' என்ற வாசகத்தை பார்த்தபடி நிற்கிறான்.

கதை மூன்று: எல் சிவோ, குப்பை பொறுக்குபவன். சாலையில் நடக்கும் அந்த விபத்தை பார்கிறான், ஓடி சென்று அக்டோவியோவுக்கு உதவுபவன், அவனது பர்சை திருடிக் கொண்டு குண்டடி பட்டு கிடக்கும் அவனது நாய் கோபி யையும் அழைத்து கொண்டு சென்று விடுகிறான். அடிப்படையில் அவன் காசுக்கு கொலை செய்பவன். அவனிடம் ஒருவன் பணம் கொடுத்து தனது பிசினஸ் பார்ட்னரை தீர்த்துக் கட்ட சொல்ல, அவனை கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைப்பவன், தன்னை கொலை செய்ய சொன்னவனையும் வரவழைத்து அதே இடத்தில் கட்டி வைக்க, அப்போது தான் அவனுக்கு தெரிகிறது, அவர்கள் பிசினஸ் பார்ட்னர் மட்டுமல்ல அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று. இடையே அவனது வளர்ப்பு மகளை தேடி புறப்படுகிறான்.

இந்தத் திரைப்படம், இதுவரை ஐம்பத்தி ஐந்து விருதுகளை உலக அளவில் வென்றிருக்கிறது. ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டது.

21 கிராம்ஸ்.

பால், ஒரு செயின் ஸ்மோக்கர். சாவின் விளிம்பில் இருக்கும் அவனுக்கு ஒரே வாய்ப்பு மாற்று இருதயம். கிறிஸ்டினாவின் கணவனும் குழந்தைகளும் வாகிங் செல்லும்போது ஒரு கார் அவர்களை மோதிவிட, குழந்தைகள் இறந்துவிட, கோமாவில் இருக்கும் அவளது கணவனின் இதயம் பாலுக்கு பொறுத்த படுகிறது. பால் தனக்கு இதயம் தந்தவனின் குடும்பத்தை காண புறப்பட, குடும்பத்தை இழந்த தவிப்பில் இருக்கும் கிறிஸ்டீன உடன் இவனுக்கு தொடர்பு ஏற்படுகிறது அவளோ தன குடும்பத்தை குலைத்த அந்த கார் ஓட்டுனரை கொலை செய்ய வேண்டும் என உத்தரவிட, அவனைத் தேடி புறப்படுகிறான். கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியவன் ஜாக். முன்னாள் குற்றவாளி.இப்போது கிறித்துவ மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு மனம் மாறி தவறி போகும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவனாக வாழ்கிறான். இந்த விபத்து இவன் குடும்பத்தையும் புரட்டிப் போட, அவனே காவல் நிலையம் சென்று சர்ரண்டர் ஆகிறான். 21 கிராம்ஸ் என்பது, நாம் இறக்கும் தருவாயில், நமது உடலில் இருந்து குறைவாகும் நமது எடை. நமது ஆத்மாவின் அளவாக குறிப்பிடப் படுகிறது.

ஒவ்வொரு காட்சியும் வரிசையாக இல்லாமல், ஜம்புள் முறைப்படி வெவ்வேறு வரிசையில் அமர்ந்திருந்தாலும் படம் முடியும்போது மொத்த கதையும் நமக்கு புரியும்படி அமைந்த திரைக்கதையின் சிறப்பு.  இந்த படத்துக்கு க்ரிஸ்டீனா வாக அற்புதமாக நடித்த நவமி வாட்சுக்கும் ஜாக்காக நடித்த பெனிசியோ டெல் டோராவுக்கு சிறந்த துணை நடிகர் விருதுகாகவும் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டார்கள். இந்த படம் உலக அளவில் வாங்கிய மொத்த விருதுகள் 28.

பாபேல்.

ஒரு ஆடு இடையன், தனது ஆடுகளை தின்று விடும் ஓநாய்களை விரட்ட, ஒரு துப்பாக்கியை ஒரு மொரோக்கோ நாட்டை சேர்ந்தவனிடம் இருந்து வாங்குகிறான் அதனை தனது ஆடுகளை கவனித்து கொள்ளும் தனது மகன்களிடம் கொடுக்கிறான். துப்பாகியால் உந்தப்பட்ட இளைய மகன், சும்மா குறி இல்லாமல் சுடுகிறான். அப்போது அங்கு வந்து கொண்டிருக்கும் ஒரு டூரிஸ்ட் பஸ்சின் கண்ணாடியை உடைத்து கொண்டு ஒரு தொட்ட பாய்ந்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க தம்பதியில் மனைவியை பதம் பார்க்கிறது. அவர்கள் ஆபிரிக்காவில் சுற்றுபயம் மேற்கொண்டிருக்க, அவர்களது குழந்தைகளை கவனித்து கொள்கிறாள், ஒரு மெக்சிக்கன் ஆயா.அந்த துப்பாக்கி, ஒரு ஜப்பாநியனிடம் இருந்து வாங்கப்பட்டதாக அறியப்படுகிறது. இப்படத்தில், அந்த ஆட்டு இடையனின் குடும்பம், அமெரிக்க தம்பதிகள், அவர்கள் குழந்தையை கவனித்துக் கொள்ளும் மேசிக்கன் ஆயா, அந்த துப்பாக்கியை அளித்த ஜப்பானியனின் வாய் பேச முடியாத மகள் என நான்கு கதைகள், முன்னும் பின்னும் பொய் வருகிறது. மிக அற்புதமான பின் நவீனத்துவ திரைக்கதை மாறும் சிறந்த இயக்கத்துடன் வந்த இந்த திரைப்படம், இசைக்கு ஆஸ்கார் விருது பெற்றதுடன், உலக அரங்கில் 37 விருதுகளை  வென்றுள்ளது.
பியுட்டிபுள்

பாபேல் படத்தின்போது ஏற்பட்ட மனஸ்தாபத்தால், தனது ஆஸ்தான திரைக்கதை எழுத்தாளர் அறியகாவை விட்டு பிரிந்து, நிகோலஸ் மற்றும் அர்மண்டோவுடன் எழுதிய திரைக்கதை தான் பியுடிபுள். பராஸ்டேட்  கான்சரால் அவதி படும் உக்ஸ்பாலுக்கு போதைக்கு அடிமையான மனைவி மற்றும் இரு குழந்தைகள். மனைவியால் தனது குழந்தைகளை கவனிக்க முடியாது என்று அறிந்து கொண்ட உக்ஸ்பால், செனெகல் நாட்டில் இருந்து தனது வீட்டில் வேலை செய்யும் ஏகே விடம் தனது பணம் அனைத்தையும் கொடுத்து தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள சொல்கிறான். இன்னாரித்தோ எடுத்த திரைப்படங்களிலேயே, இந்த திரைப்படம் மட்டுமே சிக்கலில்லாத நேர் கோட்டில் பயணிக்கிற திரைக்கதையை கொண்டது. அறியாகவின் பிரிவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.இப்படத்தில் உக்ஸ்பல்லாக நடித்திருக்கும் ஆவியே பார்தேம் (javier Bardem), கான்செர் நோயாளியாக கலக்கி இருக்கிறார். இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப் பட்டது. இந்த படத்துக்கு உலக அளவில் மொத்தம், பதினைந்து விருதுகள் கிடைத்தன.


இன்னாரித்தோ இதுவரை இயக்கியுள்ள படங்கள் நாலுதான். அவரது படங்கள் மொத்தமாக குவித்த விருதுகளோ நூற்றி ஐம்பதுக்கும் மேல். அவருடைய ஒவ்வொரு படமும், மனித வலியை பதிகிறது. இதயத்தின் அடியாளம் வரை சென்று அமர்ந்து கொள்ளும் உணர்வுகளை இவரது படம் தருகிறது. பாலியலை அதன் அழகியலோடும் இவரது திரைப்படம் முன்வைப்பதால், இவரது படங்கள் அவைகளை எளிதாக கலந்து போகிறது. இவரது படத்தின் திரைக்கதைகள் எளிதானதல்ல. குவெண்டின் டொரொண்டினொவை போல, கிறிஸ்டோபர் நோலனை போல ஒவ்வொரு படைப்பும் பார்வையாளனை சிந்திக்க வைக்கிறது. இவரது படத்தினை சிலாகிக்கவும் வைக்கிறது.  ஒவ்வொரு படமும் நம்மை கனக்க வைப்பது நிச்சயம். அதுவே அவரது வெற்றி எனவும் நான் நினைக்கிறேன். 

இவர் உலக அரங்கில் பேசப்படும் இயக்குனராக இருந்து கொண்டிருப்பதற்கு பின் வரும் காரணத்தை கூறுகிறார். அதுவே அவரது வெற்றிக்கும் காரணமாக இருக்கிறது. 

I think that in order to be a film director, one has to be a warrior who shouldn't be defeated by the daily onslaught of problems. We are all hanging by threads and are the mercy of various elements, if one fails the whole flight could come crashing down, and like a good warrior I'm not going to break down.

-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்



3 comments:

Thava said...

சமீபத்தில் வாசித்த சிறந்த திரைப்பதிவுகளில் இதுவும் ஒன்று..அற்ப்புதமாக எழுதி இருக்கீங்க..தொடருங்கள்..மிக்க நன்றி.

NILAMUKILAN said...

நன்றி தவ குமரன்.

Anonymous said...

'death trilogy' and 'biutiful' . he is great. your writing fantastic.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...