Wednesday, December 30, 2009

மாத்ருபூமி - ஆண்களுக்கு எதிரான ஒரு மாற்று சினிமா.

இவ்வளவு அதிர்ச்சி அளிக்கும் ஒரு இந்திய திரைப்படத்தை இதற்குமுன் நான் பார்த்ததில்லை. உலக சினிமாக்களில், என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பல திரைப்படங்கள் உண்டு. உதாரணமாக பிரெஞ்ச் படமான இர்ரிவர்சிபிள்(irreversible). மாத்ருபூமி தணிக்கைக்கு பெயர் போன இந்தியாவிலிருந்து படைக்கப்பட்டிருப்பது தான் ஆச்சர்யம். படத்தின் கரு வன்புணர்ச்சி. இத்தகைய ஒரு கருவை ஆபாசமான காட்சிகள் இன்றி படமாக்கியது பெரிய விஷயம்.

வடக்கே ஒரு கிராமத்தில், பெண்கள் பிறந்தால் அதனை கொன்று விடுகிறார்கள். பெண்கள் பிறந்தால் அவர்களுக்கு வரதட்சணை தரவேண்டும் என. எனவே அந்த கிராமத்தில் வாழ்பவர்கள் முழுக்க முழுக்க ஆண்களே. அவர்களுக்கு காமம் அடங்காமல் தலை விரித்தாடுகிறது. நீல படம் பார்க்கிறார்கள். விழாவில் ஆண் பெண் வேடம் ஏற்று ஆடினாலும் அவர்கள் இச்சையுடன் நோக்குகிறார்கள். பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்ய அவர்களுக்கு தடை இல்லை.
அந்த கிராமத்தில், கல்யாணம் செய்வதற்கு கூட பெண் கிடைப்பதில்லை. இந்த சமயத்தில் ஒருவனுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட அனைத்து ஆண்களும் அவனை பொறாமையுடன் பார்க்கின்றனர். திருமணநாளில் மணமகனின் தந்தை மணமகளின் தந்தைக்கு ஒரு லட்சம் பணமும் ஒரு பசு மாடும் சீதனமாக கொடுத்து தனது மகனுக்கு மணம் முடிக்கப் பார்க்க, பூசாரியின் தயவால் மணமகள், பெண் இல்லை ஒரு ஆண் சிறுவன் என்றும் பணத்திற்காக அவனுடைய தந்தை தனது மகனுக்கு பெண் வேடமிட்டு அழைத்து வந்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
அந்த கிராமத்தில் ஒரு பணக்கார குடும்பம். ஒரு வயதான தந்தை. அவருக்கு ஐந்து மகன்கள். மூத்த மகன் தனக்கு ஒரு பெண் பார்க்க வக்கில்லாது போய்விட்ட தனது தந்தையை திட்டி தீர்க்கிறான். அந்த தந்தையோ, அந்த கிராமத்து பூசாரியிடம் தனது மகன்களுக்கு பெண் பார்க்குமாறு சொல்ல அந்த பூசாரி ஊரெல்லாம் சல்லடை போட்டு தேடுகிறான். அப்போது ஒரு நாள் கல்கி என்ற பெயருடைய ஒரு அழகான பெண் தனது பக்கத்து கிராமத்தில் இருப்பதை அறிய அந்த வீடு சென்று அந்த பெண்ணின் தந்தையிடம் பணத்தாசை காட்டி அந்த பெண்ணை அந்த குடும்பத்துக்கு கட்டிக் கொடுக்குமாறு கோருகிறான். பணத்தினால் கவரப்பட்ட அந்த பெண்ணின் தந்தை ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து பசுக்களுக்கு ஈடாக, அந்த குடும்பத்தின் ஐந்து மகன்களுக்கும் சேர்த்து கட்டி வைத்து விடுகிறான்.( ஒரு மகனுக்கு ஒரு லட்சம் மற்றும் ஒரு பசு.)

முதலிரவு அன்று மூத்த மகன் கல்கியை பங்கு போடுகிறான். முதல் நாள் எனக்கு மற்ற நாள் உனக்கு என.. ஐந்து நாட்களுக்கு ஐந்து பேரின் முறை. இதை கண்டு கோவம் கொள்கிறான் தந்தை. உங்களுக்காக நான் ஐந்து லட்சம் செலவு செய்திருக்கிறேன். எனக்கும் வேண்டும் என. அந்த பெண்ணை ஒவ்வொரு நாளும் ஒருத்தர் என பங்கு போட்டு வன்புணர்ச்சி செய்கிறார்கள். அதில் கடைசி மகன் மட்டும் அவளிடம் அன்பாய் இருக்கிறான். அவன் மேல் அவளுக்கு காதல் வருகிறது. அந்த வீட்டில் வேலை செய்யும் ரகு என்ற சிறுவன் அவளுடன் அன்பாய் இருக்கிறான்.அவளது கஷ்டத்தை உணர்ந்தவனாய் இருக்கிறான்.

ரகுவின் மூலம் தனது தந்தைக்கு கடிதம் எழுதுகிறாள் கல்கி. மகன்களுடன் சேர்ந்து தந்தையும் தன்னை வன்புணர்ச்சி செய்வதாக எழுதுகிறாள். அதனை அறிந்ததும் காரில் வந்து இறங்குகிறான் கல்கியின் தந்தை. செல்போன் சகிதம் உலா வரும் அவன், கல்கியிடம், 'அந்த கிழவன் உன்னோடு படுப்பதாக என்னிடம் முன்பு கூறவில்லை ஏமாற்றுக்காரன். நல்லவேளை இப்போது எனக்கு தெரிந்துவிட்டது அதனால் மேலும் ஒரு லட்சம் வாங்கி விட்டேன்' என சொல்லி பணம் வாங்கி செல்கிறான்.

இந்நிலையில், கல்கி கடைசி மகனுடன் மட்டும் காதலுடன் இருப்பது தந்தைக்கும் மற்ற மகன்களுக்கும் பொறுக்கவில்லை. ஒரு நாள் குறித்து அவனை கொன்று போடுகிறார்கள். அவன் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக போலிசிடம் சொல்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிணத்தை போஸ்ட் மோர்டம் செய்யாமல் சென்றுவிடுகிறது போலீஸ். தனக்கு ஒரே ஆறுதலாக இருந்தவனையும் கொன்றுபோட்ட அந்த குடும்பத்திடம் இருக்க பிடிக்காத கல்கி, வேலைக்கார சிறுவனிடம் தன்னை எப்படியாவது அந்த கிராமத்திலிருந்து தப்பிக்க வைக்கும்படி மன்றாடுகிறாள்.

அவள் மேல் இரக்கம் கொண்டு அவளை கூட்டிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறான் ரகு. அப்போது அதனை அறிந்து கொண்ட அந்த குடும்பம் அவர்களை சுற்றி வளைத்து, பின் தங்கிய சாதியை சேர்ந்த ரகுவை சுட்டு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்கின்றது. வேலைக்காரனோடு ஓடிப்போனவள் என அவளை தூற்றி மாட்டு தொழுவத்தில் போடுகிறார்கள் அவளை. ரகுவின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவனுடைய தந்தையுடன் சேர்ந்த தாழ்த்த சாதி கூட்டம் திட்டம் தீட்டுகிறது.

அந்த குடும்பத்தில் ரகுவின் மறைவுக்கு பிறகு புதிதாய் ஒரு சிறுவன் வேலைக்கு சேர்கிறான். மாட்டுத் தொழுவத்தில் மாட்டின் சாணி மற்றும் மூத்திரத்துக்கு மத்தியில் கிடக்கும் கல்கிக்கு தினமும் உணவு கொண்டு வந்து கொடுக்கிறான். ரகுவின் தந்தையும் அவனது கூட்டாளிகளும் பழிவாங்க வந்தவர்கள், மாட்டு தொழுவத்தில் சுய நினைவற்று கிடக்கும் கல்கியை பார்த்து கோவம் கொள்கிறார்கள். ரகுவின் மரணத்துக்கு காரணம் கல்கியே என அவளை வைத்தபடி ரகுவின் தந்தை அவளை வன்புணர்ச்சி செய்கிறான்.

கல்கி ஒரு நாள் கர்ப்பம் அடைய அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். மகன்கள் எல்லோரும் பிறக்கபோகும் குழந்தைக்கு தானே தகப்பன் என போட்டி போட அந்த மகன்களின் தந்தையோ தான் தான் முதலிரவில் அவளுடன் படுத்தவன் என்ற முறையில் தானே தந்தை என அறிவிக்கிறான். அப்போது திரளாக வந்த தாழ்ந்த சாதி கூட்டம், ரகுவின் தந்தையே அக்குழந்தைக்கு தகப்பன் என அறிவித்து அந்த பெண்ணை தங்களோட அனுப்பி வைக்குமாறு கோர, அந்த குடுமபத்தின் தந்தை துப்பாக்கியை கொண்டு வந்து அவர்களை விரட்டுகிறான். அந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு நான்கு மகன்களும் கல்கியை சொந்தம் கொண்டாட நினைத்த ரகுவின் தந்தையின் கிராமத்துக்கு சென்று அவனை சுட்டு கொலை செய்ய, கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நால்வரையும் படுகொலை செய்து போடுகிறது....

இதனிடையே அந்த குடும்பத்தின் தந்தை கல்கியை கொடுமை செய்ய.. அதனை காண சகியாமல் அந்த புதிய வேலைக்கார சிறுவன் அவனை கத்தியால் குத்தி கொன்று போடுகிறான். இதனிடையே கல்கிக்கு பிரசவ வலி எடுக்க அந்த ரத்த பூமியில் புதிதாய் ஜனிக்கிறது ஒரு பெண் குழந்தை ஒன்று. அதனை கண்டு ஆனந்த படுகிறார்கள் கல்கியும் அந்த வேலைக்கார சிறுவனும். அத்துடன் முடிவடைகிறது படம்.
படம் முழுக்க முழுக்க ஆணாதிக்கம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் அந்த வேலைக்கார சிறுவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கல்கியாக நடித்திருக்கும் துலிப் ஜோஷி இந்த பாத்திரத்தில் நடிக்க மிகுந்த தைரியம் வேண்டும். அழகு தேவதையாக இருக்கிறார். வசனங்களே அவருக்கு இல்லை. கண்களே எல்லாம் பேசி விடுகிறது. சலீம் சுலைமானின் இசை படத்தின் மூடுக்கு ஏற்றவாறு படத்தோடு இழையோடுகிறது.

இயக்குனர் மனிஷ் ஜா துணிச்சலாக படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் கதை இப்படி இருந்தாலும், ஆபாசமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. வசனங்களிலும், உருவக காட்சிகளிலும் மட்டுமே பல செய்திகள் நமக்கு சொல்லப்படுகின்றன.

2003 இல் வெளியான இத்திரைப்படம், வெனிஸ் திரைப்படவிழா மற்றும் தேச்சலோனிக்கி திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளி உள்ளது.

நிச்சயம் மென்மையான இதயங்களை உடையவர்களுக்கு மற்றும் பதினெட்டு வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு இந்த திரைப்படம் அல்ல.

-------------

Saturday, December 19, 2009

பிச்சைக்காரர்கள் இல்லா நகரம்- கோவை மாநகரில் புது முயற்சி


இல்லாதவர்களுக்கு உதவும் குணம் நம் தமிழருக்கு என்றும் உண்டு. பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படும் அதே வேளையில் அயல் நாட்டினரைக் கண்டால் அவர்களை சூழ்ந்து கொண்டு இருப்பவர்களும் பிச்சை கேட்பது, நமது நாட்டை அவர்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு வழி செய்து விடுகிறது. வெளிநாட்டில் இந்தியாவை பற்றி எந்த ஒரு நிகழ்ச்சி காட்டப்பட்டாலும், இந்தியாவின் வறுமையும், இந்தியாவில் இருக்கும் பிச்சைக் காரர்களும் அதில் நிச்சயமாக இடம் பெறுவார்கள். அழுக்கு துணியும் பல நாட்களாக வெட்டப்படாத தலை முடியும் பல நாட்களாக சவரம் செய்யப்படாத முகமும் இவர்களின் அடையாளங்கள். போக்குவரத்து சிகனல்களில் கை குழந்தைகளுடன் வண்டிகளில் செல்பவர்களின் சட்டையையும் கைகளையும் இழுத்து காசு கேட்கும் தாய் மார்களை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு காசு கொடுக்கும் நேரத்திற்குள் சிக்னல் பச்சை காட்டிவிட அவ்வப்போது சில விபத்துகளும் நிகழ்வதுண்டு.

இதனை எல்லாம் தடுத்து நிறுத்தும் திட்டம் ஒன்று கோவை மாநகரில் ஆரம்பிக்கப் பட உள்ளது. இந்த செய்தியினை தினமலர் நாளிதழில் படித்து ஆனந்தம். கோவை கலெக்டர் உமாநாத், காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி பிச்சைகாரர்களை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. டான் பாஸ்கோ தொண்டு நிறுவனம் இவர்களில் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முன் வந்துள்ளது. அவர்களுக்கு மன நல மருத்துவர்கள் கொண்டு ஆலோசனையும், அவர்களுக்கு மறுவாழ்வும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் இரண்டு சுகாதாரப் பணியாளர்கள், இரண்டு போலீஸ் காவலர்கள் மற்றும் நான்கு டான் பாஸ்கோ பணியாளர்களைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு டிசம்பர் 19 அன்று பிச்சைகாரர்களை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு, டவுன் ஹால், உக்கடம், ரயில் நிலையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள 320 பிச்சைகாரர்கள் பிடிக்கப்பட்டு வரதராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முடி வெட்டி சவரம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டு சோப்பு ஷாம்பூ அளிக்கப்பட்டு குளிக்க செய்து புத்தாடைகள் அளிக்கப்பட்டது. சுட சுட உணவு அளிக்கப்பட்டு, மன நல கவுன்சல்லிங் அளிக்கப்பட்டது அதன்படி ஒவ்வொருவருக்கும் பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ வழி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் பெயரளவில் மட்டும் அல்லாது , தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் பிச்சைக்காரர்கள் இல்லாத நகராக கோவை மாநகரம் மாறக்கூடும். தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய ஹை டெக் நகராக உருவாகி வரும் கோவை, பிச்சைக் காரர்களும் இல்லாத நகராக, உழைத்து வாழும் மக்கள் கொண்ட நகராக மாறினால், தமிழ் நாட்டின் மற்ற நகரங்களுக்கு ஒரு சிறந்த முன்னோடியாக மாறக்கூடும். மற்ற நகர்களின் கலெக்டர்களும் கோவை கலெக்டர் உமாநாத்தை போல திட்டம் தீட்டி பிச்சைக் காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்தால், பிச்சைகாரர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக திகழ கூடும். அரசியல்வாதிகளும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும் இந்த விஷயத்தில் உதவி, தமிழகம் தழைக்க வழி செய்தல் நலம்.

இதற்க்கு முயற்சி செய்த கோவை மாவட்ட கலெக்டர் திரு உமாநாததுக்கும், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்ப்படுத்த உதவிடும் டான் பாஸ்கோ தொண்டு நிறுவனத்துக்கும் நன்றிகள் பல.

Monday, December 14, 2009

வட்டம்


வட்டம்:
=======
தாயின் கருவறை,
சமுதாய வரையறை,
குழுவின் எல்லை,
மருந்து வில்லை...

பௌர்ணமி நிலவு...
மனிதனின் உறவு...
இதழ்களின் குவிப்பு.
குழந்தையின் சிரிப்பு ..

உலகின் வடிவம்.
கடிகாரப் படிவம்,
அலைகளின் எழுச்சி...
புயலின் சுழற்சி,

மங்கையின் வளையல்
மழைத்துளி சிதறல்
எண்களின் துவக்கம்,
அயர்ச்சியில் கிறக்கம்.

சுமங்கலிக் குங்குமம்
நதிகளின் சங்கமம்,
மனிதத்தின் திட்டம்
வாழ்க்கையே வட்டம்.
---

Monday, December 7, 2009

உலக சினிமா: சென்ட்ரல் ஸ்டேஷன் (பிரேசில்)

ஐம்பதுகளில் இருக்கும் ஒரு கள்ளப் பெண்மணி, பதினோரு வயது சிறுவன், இவர்கள் இருவரின் பயணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் அளிக்கமுடியுமா? முடியும் என நிரூபித்திருக்கிறார், எனது மதிப்புக்குரிய இயக்குனர்களில் ஒருவரான பிரேசிலிய இயக்குனர் வால்ட்டர் சல்லஸ். அந்த திரைப்படம் தான் சென்ட்ரல் ஸ்டேஷன். சிறிது சிறிதாக படத்தினுள் நாம் இழுக்கப்பட்டு, டோரா மற்றும் ஜோஷுவா ஆகியோருடன் நாமும் பிரேசிலிய கிராமங்களில் பயணம் சென்று வந்த உணர்வு.

ஐம்பதுகளில் இருக்கும் டோரா தான் படத்தின் நாயகி. சிறுவயதில் தனக்கு நேர்ந்த அவமானங்களில் மனம் வெறுத்து தனது குடும்பத்தை பிரிந்து பிரேசிலின் தலை நகரான ரியோ தே ஜெனிரோவில் தனது தோழியுடன் வாழ்கிறாள். அவளுக்கு வேலை? ரியோவின் சென்ட்ரல் ஸ்டேஷன் இல் ஒரு பெஞ்சை போட்டு எழுத படிக்க தெரியாத மக்களுக்கு கடிதம் எழுதும் வேலை. ஒரு கடிதம் எழுத ஒரு பிரசிலிய ரியல். அதனை தபால் பெட்டியில் சேர்க்க ஒரு ரியல். என அவளது வாழ்க்கை ஓடுகிறது. பலரும் வந்து அவளிடம் கடிதம் எழுதி காசும் தருகிறார்கள். எல்லாவற்றையும் எழுதி தனது வீடு கொண்டு வந்து அவர்கள் எழுத சொன்னதை தனது தோழி ஐரீனுக்கு படித்துக்காட்டி இருவரும் சிரிக்கிறார்கள். பின்னர் பல கடிதங்களை கிழித்து போடுகிறாள். சில கடிதங்களை மட்டும் தனது மேசை டிராயரில்வைத்துக்கொள்கிறாள்.

ஒரு நாள் அனா என்ற ஒரு பெண்மணி சென்ட்ரல் ஸ்டேஷன் இல் தனது பதினோரு வயது மகனான ஜோஷுவாவை டோராவிடம் அழைத்து வருகிறாள். ஜோஷுவாவை பார்த்தவுடன் டோராவிற்கு பிடிக்காமல் போகிறது. அவனுக்கும். அவன் தனது பம்பரத்தை வைத்து டோராவின் மேசையை குடைகிறான். அவளோ அவனை அடிக்க கையை ஓங்கி விரட்டி விடுகிறாள். அனா தனது கணவனுக்கு டோராவை கடிதம் எழுத சொல்கிறாள். ஜோஷுவா நன்றாக வளர்ந்து விட்டான் என சொல்லி அவளது முகவரியை கூறி சந்திக்க வருமாறு அக்கடிதத்தில் எழுதுமாறு டோராவை கேட்க அவளும் அவ்வாறே எழுத ஜோஷுவாவின் புகைப்படமும் அக்கடிதத்துடன் இணைத்து அனுப்ப கோருகிறாள். அப்படியே செய்வதாக கூறி அவளிடம் பணம் வாங்கிகொண்டு தனது கடிதங்களில் ஒன்றாக வைத்துக்கொள்கிறாள் டோரா. 'இவள் கடிதம் எழுதுகிறாள் அனால் அதனை அவள் தபால் பெட்டியில் போடுவாள் என்பது என்ன நிச்சயம்?' என கேட்கிறான் ஜோஷுவா. அதனாலேயே டோராவிற்கு அவனை பிடிக்காமல் போய்விடுகிறது.

கடிதம் எழுதிவிட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ விட்டு வெளியே வந்து சாலையை கடக்க எத்தனிக்கையில் கட்டுக்கடங்காத வேகத்தில் வரும் ஒரு பஸ் மோதி, அதே இடத்தில் இறந்து போக, அந்த ஒரே ஒரு நொடியில் அநாதை ஆகிறான்ஜோஷுவா.
அவனுக்கு இப்போது உலகத்தில் தெரிந்த ஒரே முகம், டோரா. அவளிடம் வந்து கண்களில் நீர் வழிய தன தாய் எழுதிய கடிதத்தில் தனது தந்தையின் முகவரி இருக்கும் என்றும் அதனை தனக்கு தரவும் வேண்டுகிறான். டோரா அவன் மேல் உள்ள கடுப்பில் தர மறுத்து விட்டு வீடு சென்று விடுகிறாள். அவனது இரவு அன்று அந்த ரயில் நிலையத்தில் கழிகிறது. மறுநாள் வழக்கம் போல ஸ்டேஷன் வரும் டோரா, அங்கு படுத்திருக்கும் ஜோஷுவாவை கண்டு மனம் இறங்கி, அவனுக்கு உணவு வாங்கி தருகிறாள். அதனை அவன் மறுத்து விடுகிறான். அப்போது அந்த ஸ்டேஷன் இல் கடை வைத்துள்ள ஒருவன் ஜோஷுவாவை நெருங்க, அவனை வழி மரிக்கும் டோரா, அவன் தனக்கு வேண்டப்பட்ட பையன் என கூறியதும் அவளை தனியே அழைத்துப் போய் பேசுகிறான். திரும்பி வந்த டோரா, ஜோஷுவவிடம் பரிவுடன் பேசி அவனை தனது வீடு அழைத்து சென்று சாப்பாடு கொடுத்து தனது தோழிக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். சிறுவனின் சூட்டிப்பைக் கண்டு டோராவின் தோழி ஐரீனுக்கு அவனை மிகவும் பிடித்து விடுகிறது. அன்று இரவு ஜோஷுவாவுக்கு டோராவின் வீட்டில் கழிகிறது.

காலையில் ஜோஷுவாவை தூரமாக இருக்கும் ஒரு இடத்திருக்கு கூடி சென்று ஒரு குடும்பத்திடம் அவனை ஒப்படைக்கிறாள் டோரா. இனி உனக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்று சொல்லி அந்த குடும்பத்தாரிடம் 2000 ரியால் வாங்கிகொண்டு, ஸ்டேஷன் இல் இருந்தவுடன் ஆளுக்கு ஆயிரம் என பங்கு போடு கொண்டு வீட்டிற்கு ஒரு புது டிவி வாங்கி வருகிறாள். மாலையில் ஐரீன் டோராவிடம் ஜோசுவாவை பற்றி விசாரிக்க, அவன் வெளிநாட்டுக்கு தத்து கொடுக்கும் ஒரு குடும்பத்திடம் விட்டு விட்டதாகவும் அவனை ஐரோப்பியாவில் இருந்தோ அமெரிக்காவில் இருந்தோ பெரும் செல்வந்தர்கள் தத்தெடுத்துக் கொள்வார்கள் என்றும் சொல்ல... அவர்கள் குழந்தைகளை கொன்று அவர்களது உறுப்புகளை எடுத்து விற்கும் கூட்டம் என ஐரீன் சொல்கிறாள். தனது தவறை உணர்ந்த டோரா ஜோஷுவாவை அந்த குடும்பத்தில் இருந்து காப்பாற்றி அவனது தந்தை இருக்கும் ஊரை நோக்கி பயணமாகிறாள்.
அந்தப் பயணத்தில் டோராவிற்க்கும் ஜோஷுவாவிற்க்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய் விடுகிறது. இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்தாலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். வழியில் பணம் எல்லாம் இழந்து போக, ஒரு ட்ரக் ஓட்டுனர் அவர்களுக்கு உதவுகிறார். அவர் மேல் டோராவிற்கு காதல் வர அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை தனியே விட்டு சென்று விடுகிறார். எப்படியோ அவனது தந்தை இருக்கும் ஊர் வந்து சேரும் அவர்கள், அவனது தந்தை வீட்டை விட்டு வேறு ஒரு ஊருக்கு சென்று விட்டதை அவ்வீட்டில் குடி இருந்தவர்கள் கூறுகிறார். அந்த ஊறி திருவிழா ஆகையால், மிகுந்த நெரிசல். பணம் இன்றி பட்டினி கிடந்த டோரா மயங்கி விழுகிறாள். அவளை ஜோஷுவா மடியில் கிடத்தி தடவி கொடுத்து நன்றாக பார்த்து கொள்ள மனம் நெகிழ்கிறாள் டோரா.

அங்கு சாமிக்கு கடிதம் எழுத ஆள் இல்லாததை கண்ட ஜோஷுவா உடனே டோராவை அங்கு அமர வைத்து எழுதி கொடுக்க வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஒரு விடுதியில் அறையும் எடுக்கிறார்கள். அப்போது வழக்கம் போலஎழுதிய கடிதங்களை, ஜோஷுவா கிழிக்க போக அதனை தடுக்கும் டோரா மறுநாள் அதனை தபால் நிலையத்தில் சேர்த்து விடுகிறாள். பின்னர் அவனது தந்தை வீட்டிற்கு செல்லும் அவர்கள் ஜோஷுவாவின் சகோதரர்களை சந்திக்கிறார்கள். ஜோஷுவவின் தந்தை ஜோஷுவாவின் அன்னைக்காக காத்திருந்து காத்திருந்து கடிதம் வராமல், தண்ணி அடித்தே இறந்து போனதை சொல்கிறார்கள். தனது தம்பியை பாசத்துடன் ஏற்றுக் கொள்கிறார்கள். ஜோஷுவாவை சரியான இடத்தில் சேர்பித்து விட்டதால், நிம்மதி அடையும் டோரா, விடியும் முன் ஜோஷுவா தனக்கு வாங்கி தந்த ஆடை அணிந்து கொண்டு புறப்படுகிறாள். காலை எழுந்ததும் ஜோஷுவா ஓடி வந்து அவளை தேடுகிறான். அப்போது அவள் பஸ்ஸில் ஏறி வெகு தூரம் சென்று விட்டிருக்கிறாள். ஜோஷுவவுக்கு கண்ணீர் மல்க அவள் கடிதம் எழுதுகிறாள். அத்துடன் படம் முடிகிறது.

படத்தின் உயிர் நாடி ஜோஷுவாக நடித்துள்ள வ்நிசிஸ் தி ஒலிவேரா (Vinícius de Oliveira) மற்றும் டோராவாக நடித்துள்ள பெர்னாண்டோ மொண்டேநேக்ரோ ( Fernanda Montenegro) ஆகியோரின் நடிப்பு. ஒரு திரைப்படமாக அல்லாமல் நம் கண்முன்னே நடக்கும் கதை போல ஒரு தோற்றத்தை கொண்டு வந்த பெருமை இவர்களையே சேரும்.

வால்ட்டர் செலேசின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வால்ட்டர் கர்வால்ஹோ தான் இந்த படத்துக்கும். ட்ரைனை தொடர்ந்து சூரிய கதிர்கள் ஊடாக ஜோஷுவா ஓடி வரும் காட்சியும், அந்த கிராமத்தில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மேழுகுதிரிகளுகிடையே, டோரா ஜோஷுவாவை தேடி செல்லும் காட்சியும் கண்களுக்கு விஷூவல் விருந்து.
மனித நேயத்தை ஒரு வித்தியாச கோணத்தில் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார் வால்ட்டர் செலஸ்.

இத்திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பாப்டா மற்றும் பெர்லின் விருதுகள் இத்திரைப்படத்துக்கு கிடைத்தன.

அவசியம் சென்று சேர வேண்டிய இடம்... சென்ட்ரல் ஸ்டேஷன்.

----

Tuesday, December 1, 2009

அது ஒரு மழைக்காலம்!



இக்கவிதையை வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி.

அது ஒரு மழைக்காலம்!
------------------------------
அவள்...
என் வாழ்க்கை வானத்தில்
மின்னி மறைந்தாள்

மேகங்கள்
என்னை விலகி சென்றன...

என்
இதயத்தின் இடிமுழக்கம்
எனக்கு மட்டும் கேட்டது.

என்
கனவுத் துளிகள்,
மண்ணில்
விழுந்து தெறித்தது.

என் கண்களில்
புறப்பட்ட
வெள்ளம்
என்
இதழ் கடந்து மார்பை நனைத்தது.

என்
நம்பிக்கை மரங்கள்,
அறுந்து விழுந்தன.

மனதில் பாய்ந்த
மின்சாரத்தால்,
என்
காதல் மனிதர்கள்
மாண்டு போனார்கள்.

ஒளியை தொலைத்த
என்
வாழ்க்கை பிரதேசங்கள்...
இருட்டில் இளைத்தன.

இன்று....
மழை ஓய்ந்துவிட்டது

என்
இதயபூமி
காத்திருக்கிறது
அடுத்த மழையை
எதிர்பார்த்து....!

-நிலா முகிலன்
=============

Monday, November 30, 2009

ஆரோக்கியம்: வாழைப் பழத்தின் நன்மைகள்.







ஏழைகளின் கனி, முக்கனிகளில் ஒன்று என பல நூறாண்டுகளாக விரவி வரும் வாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. மேம்போக்காக, வாழை பழம் மலச்சிக்கல் தீர்க்க உதவும் என்பது தவிர வாழை பழத்தின் நன்மைகள் பல நாம் அறியாதது. வலைதளங்களில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட வாழைப்பழ நன்மைகள் இந்த பதிவில் தொகுக்கபடுகின்றன.

1. மனச்சோர்வு (Depression) குறையும்:
சமீபத்தில் மைன்ட் என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில், மன அழுத்தம் உடையவர்கள், வாழைப்பழம் உண்டபின் மிக இளைப்பாறுதல் தெரிவதாக அறிவித்துள்ளனர். அதற்க்கு காரணம், வாழைப்பழத்தில் உள்ள திர்ய்ப்டோபன் (tryptophan) என்ற புரத சத்து நமது மூடை மாற்றி, மகிழ்ச்சியாகவும் ரெலாக்சாகவும் வைக்க உதவுகிறது. இதன் மூலம் மனச்சோர்வு குறைவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
2.அனிமியா: இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் வாழைப்பழம், ரத்தத்தில் உள்ள ஹீமொக்லோபின்கள் அதிகரிக்க உதவி ரத்த சோகையை தீர்க்க உதவுகிறது.
3. இரத்த அழுத்தம்: வாழை பழத்தில் பொட்டசியம் அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் உள்ளதால், இரத்த அழுத்தம் தீர வழி வகுக்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கழகத்தின் சிபாரிசில், வாழைப்பழம் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புக்கு எதிரானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. புத்தி கூர்மை: வாழை பழத்தில் பொட்டசியம் சத்து அதிகம் இருப்பதால், புத்தி கூர்மைக்கு உதவுகிறது என சமீபத்தில் மிடில் செக்ஸ் என்ற பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

5. மலச்சிக்கல்: இது நாமனைவரும் அறிந்த ஒன்று தான். மலச்சிக்கல் உள்ளவர்களிடத்தில் நார் சத்து அதிகம் உள்ளதால், வாழைப்பழம், சிறந்த மலம் இளக்கியாக செயல்படுகிறது.

6. ஹாங் ஓவர்: நமது 'குடி' மகன்களுக்கானது. ஹாங் ஓவர் என்றால் என்னவென்று சொல்லி தெரியவேண்டியது இல்லை. வாழைபழ மில்க் ஷேக் இல் சிறிது தேனை ஊற்றி குடித்தால், ஹாங் ஓவர் தீரும் என்கிறார்கள்.

7. நெஞ்சரிப்பு: ஏதாவது காரமாக சாப்பிட்டுவிட்டு நெஞ்சரிப்பு என சொல்கிறவர்கள் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடவும். சாப்பாட்டு அமிலங்களை இளக்கி நெஞ்சரிப்பு தீர உதவும்.
8. கொசுக்கடி: வாழைபழ தோலின் உள் பக்கத்தை நமது தோலில் தேய்த்தால், கொசுக்கள் நம்மிடையே வராது என ஆய்வுகள் கூறுகின்றன.
9. நரம்புகள்: வைட்டமின் B சத்து மிகுதியாக இருப்பதால், வாழைப்பழம் நமது நரம்புகளுக்கு நல்லது.

10. உடல் பருமன்: இப்போதைய கால் சென்டர் மற்றும் ஐ டி மக்கள், தங்களது மூளையை கசக்கி வேலை செய்வதால், அவர்களுக்கு உடல் பயிற்சி இல்லாத காரணத்தால், நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால், அதிகம் பசி எடுத்து, அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வாழைபழம் உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவு சீராக இருக்கும். எனவே பசியும் குறைவாகவே இருக்கும்.

11. அல்சர் அல்லது வயிற்றுப் புண்: வயிற்றில் உள்ள பல வியாதிகளுக்கு வாழைபழம் அருமருந்து. அல்சர் வியாதி உள்ளவர்கள், வயிற்றின் ஓரத்தில் அமிலத்தின் சுவடுகள் ஒளிந்திருக்கும். வாழைப்பழம் அந்த அமிலத்தை சாந்தப்படுத்துவதால், வயிற்றின் அலறல்களில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.

12: புகைப்பழக்கம்: வாழைப்பழத்தில் பொட்டசியம் மற்றும் மக்நீசியம் ஆகிய தாதுபொருட்கள் இருப்பதால், புகைப்பழக்கத்தை நிறுத்த நினைப்பவர்களுக்கு வாழைப்பழம் உதவும்.
13, மன அழுத்தம் (Stress). வாழைப்பழத்தில் பொட்டசியம் தாதுப்பொருள் மிகுதியாக இருப்பதால், இதயத்துடிப்பை சீராக்குகிறது,ஆக்சிஜெனை மூளைக்கு அனுப்பி, நீர் அளவை நேரான அளவில் வைக்க உதவுகிறது. நம்மில் மன அழுத்தம் நேர்கிற போது நமது மெடபாலிக் அளவுகள் அதிகமாக, பொட்டசியம் அளவு குறைகிறது. அதனை அதிகரிக்க வைக்க வாழைப்பழம் உதவி மன அழுத்தத்தை குறைக்கிறது.
14. மாரடைப்பு: "The New England Journal of Medicine," என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில், வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், மாரடைப்பை நாற்ப்பது விழுக்காடுகள் குறைக்க இயலும் என கூறுகிறது.
வாழைப்பழம், நமது ஊரில் மலிவாக கிடைப்பது தான் நாம் அதனை விட்டு விலகிப்போக ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. வாழைப்பழத்தை கரகாட்டக்காரன்,காமடிக்கும் 'வாழைப்பழ சோம்பேறி' என திட்டுவதற்கும் பயன் படுத்தி வருகிறோம். உன்னிப்பாக கவனித்து பார்த்தால்தான் அதன் நன்மைகள் நமக்கு புலப்படுகின்றன.
வழக்கப்படுத்துவோம் வாழைப்பழத்தை!

Thursday, November 19, 2009

அன்றும் இன்றும்....யூத்புல் விகடனுக்கு நன்றி.


அன்று...
நாங்கள்
சீறும் சிங்கங்களாக
வீறு கொண்டு எழுந்த போது
எங்கள்
மயிர்க்கால்களை
மழித்து விட்டீர்கள்...

அன்று...
நாங்கள்
வானம்பாடிகளாக
விண்ணில் பறக்க முனைந்தபோது
எங்கள்
சிறகுகளை சிரைத்துவிட்டீர்கள்...

அன்று ....
நாங்கள்
அநீதி கண்டு பொங்கி
கோஷமிட்டபோது
எங்கள்
குரல் வளைகளை
அறுத்து எறிந்தீர்கள்...

இன்று...
புழுபூச்சிகள் தின்றுவிட்ட
எங்களின்,
புகைப்படங்களுக்கு
மாலைகள் அணிவித்து
'தியாகி' என ஒளி ஏற்றுகிறீர்கள்..!

-----

Wednesday, November 18, 2009

சுட்டிப்பெண் டோரா பிறந்த கதை.


உங்கள் வீடு, எங்கள் வீடு, அடுத்த வீடு, ஏன், உலகில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கொள்ளை கொண்ட சுட்டிப்பெண் தான் டோரா. தொலைக்காட்சி பெட்டிகள், வீட்டுக்கு வீடு முளைத்து விட்ட பின், தொலைக்காட்சி தொடர்கள், அருவருப்பான நடன அசைவுகள் கொண்ட சினிமா பாடல்கள் என வீட்டின் வரவேற்ப்பு அறைகளை ஆக்ரமித்த்துக் கொண்டு குட்டி குழந்தைகளை கலாசார சீரழிவுகளுக்கு இட்டு செல்லாமல் காப்பது, குழந்தைகளுக்கான சானல்கள்தான்.

கண்களை உருட்டி பார்க்கும் அந்த பெரிய விழிகளும், நேர்த்தியாக வாரப்பட்ட தலை முடியும், டோரா வின் கண்டுபிடிப்புகளும், சிறியவர்களை மட்டுமல்ல. பெரியவர்களையும் கட்டிபோட்ட சுதந்திரம் டோராவிற்க்கே உண்டு. இன்று மேற்கத்திய நாடுகளில் உள்ள குழந்தைகளிடம்,
'வருகிற பிறந்த நாளன்று என்ன வேண்டும்?' என கேட்டால், உடனே, 'டோரா பொம்மை, டோரா பை, டோரா பேனா' என டோராவை சம்பந்தப்படுத்தியே கோரிக்கைகள் வருகின்றன. டோரா பெண்ணாக இருப்பதால், டோராவை ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மிக அதிகமாக நேசிக்கிறார்கள். எனவே நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஆண் குழந்தைகளை கவர, டோராவிற்கு ஒரு ஒன்று விட்ட சகோதரன் டியாகோ என ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உலவ விட, அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் ஹிட்அடித்திருக்கிறது.

மூளையை மழுங்கடிக்க வைக்கும் மாயஜால கதைகள் இல்லை. அதிகப்ரசங்கித்தனமான வேலைகளை குழந்தைகளை இந்த தொடரில் செய்வது இல்லை. குழந்தைகள் என்ன செய்யுமோ அதையே தான் இந்த கார்டூன் கதாபாத்திரங்களும் செய்கின்றன. போகிற போக்கில், குழந்தைகளுக்கு எண்கள், வண்ணங்கள்,மலர்கள்,பழங்கள் என சொல்லி கொடுக்கிறார்கள். நற்பண்புகளை நாசூக்காக போதிக்கிறார்கள். கதையோடு கூடி டோரா கேள்விகள் கேட்கிறாள். அதற்க்கு, பதில்களை கூறுகிறார்கள், தொடரை பார்க்கும் குட்டிகள். உதாரணமாக, டோரா ஒரு ஆபிள் தோட்டத்தை கடந்து செல்கிறாள். அங்கு நான்கு மரங்கள் இருக்கின்றன. இந்த தோட்டத்தில் எவ்வளவு மரங்கள் இருக்கின்றன என கேட்கிறாள் டோரா. உடனே மரங்களை எண்ண தொடரை பார்க்கும் குட்டிகளிடையே போட்டி நடக்கிறது யார் முதலில் சொல்வதென்று. நான்கு என கூறவும் டோரா ஒவ்வொரு மரமாக எண்ணி காண்பிக்கிறாள். பெரியவர்களுக்கு இது போர் அடித்தாலும், குழந்தைகள் தொலைகாட்சியில் டோராவின் தொடரை பார்த்தே பல நல்ல விஷயங்கள் கத்துக்கொள்வது நன்மை தானே?.

சரி உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கொண்டாடும் டோரா எப்போது, எங்கே பிறந்தாள்?.


அதற்க்கு நாம் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி 1997 போகவேண்டும்.

1997 டிசம்பரில், அமெரிக்காவில் உள்ள நிகேலோடியன் என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிகாரிகள் ஒன்று கூடி, புதிதாக குழந்தைகளை கவரும்படி நிகச்சிகள் தயாரிக்கவேண்டும் என தனது சக நிர்வாகிகளின் படைப்பு திறனை சோதித்து பார்த்தனர். எவ்வளவோ பேர் சொன்ன கருத்துகள் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எல்லாம் ஏற்கனவே வந்தவையாக இருந்தன. அல்லது குழந்தைகளுக்கு போர் அடிக்கும் நிகழ்ச்சியாக இருந்தன. திரைப்பட கல்லூரியில் படித்து கொண்டு பகுதி நேரம் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்த்த வால்ஷ் என்ற பெண்மணி, தானும் இன்னொரு சக ஊழியனான க்றிஸ் கிப்போர்ட் இருவரும் சேர்ந்து, ஒரு சின்னப்பெண் கதாநாயகியாக நடிக்க குழந்தைகளுடன் நேருக்கு நேர் உரையாடும் வகையில்,குழந்தைகளின் மூளையை வேலை செய்ய வைக்க,அவர்களுடன் ஒவ்வொரு காட்சியிலும் பேசி நடிக்கும் ஒரு காதாபாத்திரம் கொண்ட ஒரு ஐடியா வைத்திருப்பதாக சொல்ல, ஆர்வமானது நிர்வாகம்.


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான இண்டராக்டிவ் தொடராக உருவாகும் எண்ணம் உருவானது. நிர்வாகிகளும், வால்ஷ் மற்றும் கிரீஸ் இருவரும் ஒரு சிறிய படம் ஒன்று எடுத்து தருமாறு பணித்தது.வால்ஷ் மற்றும் க்றிஸ் இருவரும் உக்காந்து யோசிக்க.... பின்வரும் திட்டங்களை உருவாக்கினர்.


1. டோரா எங்காவது பயணம் செய்தபடி இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கதையிலும் டோராவுக்கு ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கான நேருக்கு நேர் கேள்வி பதில் பாணியில் குழந்தைகள் தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்க வேண்டும்.

4. குழந்தைகளுக்கு அவரகளது கதையை நேரில் பார்ப்பதை போன்ற அனுபவம் வேண்டும். அவர்கள் அன்றாடும் சந்திக்கும் நிகழ்வுகள் காட்சிகளில் தெரிய வேண்டும்.

5. டோரா ஒரு திடமான, தைரியமான, அறிவான சுட்டி குழந்தையாக இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு விளம்பர ஓவியர் ஹெலேனாவிடம் இவர்கள் சொல்ல சொல்ல, அவர் தனது கணவனின் துணை கொண்டு நாம் இப்போது திரையில் பார்க்கும் டோராவை உருவாக்கினார். முதலில் எல் கே ஜி படித்து கொண்டிருந்த ஹெலேனாவின் குழந்தைக்கு டோராவை காட்ட அக்குழந்தைக்கு மிகவும் பிடித்துப் போனது. ஐந்து முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளை சோதித்து கடைசியில் கத்லீன் ஹீர்லிஸ் என்ற குட்டிபெண்ணின் குரல் டோராவின் குரலானது.1998 இல் டோராவின் குட்டி படம் தயாரானது. முதலில் நான்கு முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளை பிடித்து படத்தை பார்க்க வைத்தார்கள். அவர்கள் அனைவரும் குதூகலத்துடன் டோராவை கொண்டாட ஆரம்பித்தனர். அன்றே தெரிந்து விட்டது நிகேலோடியன் ஊழியர்களுக்கு. டோரா ஒரு மாபெரும் சக்தியாக வளரப் போகிறாள்என்று.ஏப்ரல் 1999 இல் டோரா முதன் முதலில் தொலைகாட்சியில் தோன்றினாள். டோராவை காட்டியே சாதம் ஊட்டிய தாய்மார் பலர். (நிலா காட்டி சோறு ஓடின காலம் எல்லாம் மலை ஏறி போச்சி.) தங்கள் குழந்தை போஷாக்காக வளர காரணம் டோரா என்றனர். டோராவின் பொம்மைகள், டோராவின் பள்ளி பைகள், டோராவின் உடை போல உடைகள், டோராவின் சிகை அலங்காரம், என பலரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர். டோரா பெண்ணாக இருக்கிறாள் ஆம்பிளை பசங்களான எங்களுக்கும் ஒரு கதாபாத்திரம் வேண்டும் என நினைத்த குட்டி பசங்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய, டியாகோ என்ற டோராவின் ஒன்று விட்ட சகோதரனின் பாத்திரம் உருவாக்கப் பட்டது. குழந்தைகளுக்கு நேரப்போக்கு மட்டும் அன்றி அறிவு வளர்ச்சிக்கும் டோரா தொடர் உத்தரவாதம் அளிப்பதால் தான், இன்றும் டாப்பில் இருக்கிறாள்டோரா.

இதில் நிகிலோடியன் எடுத்த முயற்சி பாரட்டத்தகும். எடுத்தேன் கவிழ்த்தேன் என குழந்தைகள் தொடரை வெறும் பூதம் மற்றும் அதிகப்ரசங்கிதனம் காட்டி தொடர் எடுக்கும் நம்மவர்கள், குழந்தைகளோடு குழந்தையாக இருந்து அவர்களின் உலகை புரிந்து கொண்டு ஆய்வு செய்து களத்தில் இறங்கினால் நல்ல குழந்தைகள் தொடர் தமிழிலும் உருவாக சாத்தியம்உண்டு.

Monday, November 16, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே...!


'ஆனந்த சுதந்திரம்... அடைந்து விட்டோம்...'
பாரதீ....!
நீ கண்ட கனவு
இன்னும் எங்களுக்கு கனவாகவே....

'நெஞ்சு பொறுக்குதில்லையே..
இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்துவிட்டால்...'
அன்றே தெரிந்துவிட்டது உனக்கு...
எங்களுக்கு...
இப்போது தான் புரியவே ஆரம்பித்திருக்கிறது.

புதுமை பெண்களை
படைக்கக் கோரினாய்...
புதிதாக பிறக்க கூட
நம் தேசத்து மன்னர்கள்
விட்டுவைப்பதில்லை.

ஜனிக்கும் கருப்பைகளே..
என் புதுமை பெண்களுக்கு...
கல்லறைகள்.

ஸ்கேனில் தப்பி விட்டால்...
இவர்கள்
முதலில் குடிப்பது
தாயின் முலைப்பாலை அல்ல...
கள்ளிச் செடியின் காம்புப் பாலை..

'தனி ஒருவனுக்கு உணவில்லையேல்..
ஜகத்தினை அழித்திடுவோம்...'
இங்கு ஜகமே தவிக்கிறது..
எதனை அழிப்பது?

'சாதி சண்டைகள் போச்சோ..சமய சண்டைகள் போச்சோ..'
எப்படி பாரதீ?
எங்கள் அரசியல்வாதிகளின் ஒட்டு வங்கியே
அதில் தானே இருக்கிறது?

எங்கள் அரசியல் வாதிகளின்
ஆதர்சன சத்தியகள் எல்லாம்..
அரியணை ஏறியதும்
ஆணி அடிக்கப்படும்.

எங்கள் தலைகள்
அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது
உலக வங்கியில்.

உன் புரட்சி உணர்வுகள்..
எங்கள் இளைஞர்களின் இதயங்களில்
புலரவே இல்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு
திட்டங்கள் தீட்டவேண்டியவர்கள்
பட்டங்களை சுமந்து கொண்டு
வீதிகளில்...
வேலைக்காய்....

'சிங்கள தீவினிற்கு ஒரு பாலம் அமைப்போம்'
அதனை செயல்பட துணிந்ததால்...
எங்களுக்கு கிட்டியது
பாலமல்ல..
மரண ஓலம்.

எங்கள் தேசத்தின் கால்களே
நசுக்கி போட்டது
எங்கள் தொப்புள் கோடி சொந்தங்களை...

இப்போதைக்கு
நம் பாரதத்துக்கு வேண்டியதெல்லாம்
ஒரு நல்ல தலைவன்.

பாரதீ..
மீண்டும்
இம்மண்ணில் பிறந்து விடு.
இறந்து கொண்டிருக்கும் இந்தியாவிற்கு
உயிர் கொடு.
உணர்வுகளை தொலைத்துகொண்டிருக்கும்
எம் நாட்டு இளைஞர்களை
உன் கவிதைகளால் உரமேற்று.
உன் மூலம்
நம் தேசம்...
ஒரு
புதிய விடியலை காணட்டும்.....

--மகா கவியின் நூற்றி இருபத்தி ஏழாம் பிறந்த தினத்தை முன்னிட்டு....

-நிலா முகிலன்.
-----

Friday, November 6, 2009

நகைச்சுவை குற்றங்கள் - 5


தன தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்ட கதை.

அமெரிக்காவில் எந்த ஒரு ஆபத்தில் இருந்தாலும் , மக்கள் உடனே தொலைபேசியில் அழைப்பது 911 என்ற எண்ணை. தொலைபேசியில் நமது விவரம், நம்மை சூழ்ந்துள்ள ஆபத்து, நமது முகவரி எல்லாம் சொல்லி விட்டால் ( சொல்லாவிட்டாலும் நமது எண்ணை வைத்து அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்), எண்ணி ஏழு நிமிடத்திற்குள் காவலர்கள் நமது வீட்டுக்கதவை தட்டுவார்கள்.

அப்படித்தான் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தில் உள்ள கைன்ச்வில் பகுதியை சேர்ந்த வான் போவெல் என்ற 22 வயது வாலிபனிடம் இருந்து வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. அவனுடைய அழைப்பின் காரணம் தான் கொள்ளை அடிக்கப்பட்டது தான்.
"சரி எங்கிருந்து அழைக்கிறீர்கள் உங்கள் முகவரி என்ன? "என கேட்கப்பட்டதும் மறுமுனையில் ஒரு சத்தமும் இல்லை. காரணம் அழைத்தவன் தனது முகவரியை மறந்து விட்டிருந்தான். எனினும் அவன் அழைத்த எண்ணை வைத்து அவனது வீட்டை கண்டுபிடித்து அவனிடம் விசாரணை மேற்க்கொண்ட போலீஸ் கடைசியில் அவனையே கைது செய்தது தான் வேடிக்கை. தான் வைத்திருந்த மரிவானா என்ற போதை பொருள் மூட்டையை இருநபர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்துவிட்டது. போதையில் இருந்ததால், 911 எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடிந்த அவனால் தனது முகவரியை சொல்ல முடியவில்லை. சட்டத்துக்கு விரோதமாக போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக அவன் கைது செய்யபட்டான். அவனிடம் போதை மூட்டையை கொள்ளை அடித்த அந்த இருவரை காவல்துறை தேடி வருகிறது.

நேரம் சரி இல்லை.

ஆளற்ற ஒரு கட்டிடத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடி விற்று காசு பார்க்க திட்டம் இட்டனர், கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜெம்ஸ் ஆயர் மற்றும் பிரேட்ரிச்க் கில்லீ. அவர்கள் அதற்க்கு தேர்ந்தெடுத்த நேரம் சரி இல்லாமல் பொய் விட்டது.

ஆம் அவர்கள் உள்ளே புகுந்து திருடி கொண்டிருந்த சமயம், காவல் துறையினரின் ஒரு படையணியினரின் பயிற்சி முகாம் அங்கு அன்று நடத்த திட்டமிட்டிருந்தது அவர்களுக்கு தெரியாமல் போயிற்று. கட்டிடத்தின் உள்ளே ஒரு காவலதிகாரி பதுங்கி கொண்டு காவல் நாய் தன்னை கண்டுபிடிக்கிறதா என பார்ப்பதற்காக எப்போதும் உள்ள வழக்கமாக... ஒலிபெருக்கியில், காவல் நாய் கட்டிடத்தினுள் வருகிறது என்றும் உள்ளிருப்பவர்கள் உடனே வெளியேறாவிட்டால் நாயினால் கடி வாங்கப்படும் சாத்தியம் உண்டு என்றும் கூற, பதுங்கி இருந்த ஜெம்ஸ் ஆயர் தன்னை காவல் துறை கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி நடுங்கி கொண்டே வெளியே வந்து சரணடைந்தான். திடுக்கிட்ட அந்த அதிகாரி அவனை மேலும் விசாரிக்க தான் திருட வந்ததை ஒத்துக்கொண்டு தனது நண்பன் கில்லியையும் போட்டு கொடுக்க..இப்போது இருவரும் சிறையில்.

Wednesday, November 4, 2009

முக்தர் மயி - ஒரு பழங்குடிப் பெண் போராளி.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மலை கிராமம் மீர்வாலா. மச்தோய் பலோச் என்ற பழங்குடியினர் அதிகமாக வாழும் கிராமம். 2002 ஆம் வருடம். தனது பதினாலு வயது தம்பி எதிரி குடியினரின் பெண்ணுடன் சுத்துவதாக கிளம்பிய வதந்தியால் பஞ்சாயத்து கூடப்படுவதை கண்டு மனம் பதை பதைத்து பஞ்சாயத்துக் கூடத்துக்கு ஓடி வருகிறாள் அந்த முப்பது வயதுப்பெண் முக்தர் மாய். தன தம்பி ஒரு பாவமும் அறியாதவன் என்றும் அவனை விட்டு விடுமாறும் பஞ்சாயத்தினர் முன் கெஞ்சி கதறி அழுகிறாள். பஞ்சாயத்தினரோ,
'உனது தம்பி நமது குடிக்கு கேடு விளைவித்துவிட்டான். அவனை மன்னிக்கவேண்டுமென்றால் நீ அதற்க்கு பரிகாரம் செய்யவேண்டும் செய்வாயா?' என கேட்கிறது.

தனது தம்பி மேலுள்ள பாசத்தினால் வரப்போகும் ஆபத்தை அறியாத அந்த அபலைப் பெண் சரி என்பதாக தலையை ஆடுகிறாள். பஞ்சாயத்தினர் நிரூபிக்கப்படாத அந்த வதந்திக்கு அந்த அதிர்ச்சியான அபாயமான அதிரடியான தீர்ப்பை வழங்குகிறார்கள்.

'இந்த பெண்ணின் சகோதரன் தனது நடத்தையினால் நமது குடிக்கு அபகீர்த்தி விளைவித்துவிட்டான். இந்த பெண்ணின் வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ஒரு ஞாயமான தீர்ப்பை வழங்குகிறது. இந்த பெண்ணின் சகோதரனால் நம் குடிக்கு ஏற்ப்பட்ட அவமானம் மொத்தமும் இந்த குடும்பத்துக்கே செரக்கடவது எனவே நம் குடியில் உள்ள நால்வர் இந்த பெண்ணை நம் கிராமத்து மக்கள் அனைவரின் முன்னிலையில் வன்புணர்ச்சி செய்யவேண்டும். அதன் பின்னர் இந்த குடும்பத்தினர் அனைவரும் அதனை நினைத்து நினைத்து வெட்கி வாழ்நாள் முழுதும் வாழவேண்டும்.'

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண்ணின் தந்தை பஞ்சாயத்தின் முன் கீழே விழுந்து அழுது புரள்கிறான். அவனை உதாசீனப்படுத்திவிட்டு கிராமத்தின் முன்னிலையில் அந்த அக்கிரமம் அந்த பெண்ணின் கதறலில் அரங்கேறுகிறது. ஒட்டு மொத்த கிராமமும் அந்த அட்டூழியத்தை கண்டு அமைதியாக இருக்கிறது. அந்த நால்வரும் அந்த பெண்ணை சின்னாபின்னாபடுத்தி போடுகிறார்கள். கந்தலாக கிடந்த அந்த பெண்ணை அவளது தந்தை தன பெண்ணின் நிலையை எண்ணி கதறியபடி ஒரு ஆடையை கொண்டு போர்த்தி வீட்டுக்கு தூக்கி போகிறான்.

தனக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணி எண்ணி முக்தர் அழுது தற்கொலைக்கு முயன்று தோற்க்கிறாள். அவள் தனது குடும்பத்தின் துணையோடும் நண்பர்களின் ஆதரவுடனும் உடல் நிலையிலும் மன வலிமையிலும் தேர்ச்சி பெறுகிறாள். அவளுடைய பால்ய தோழிகளான நஸ்ரீன் அக்தர்,நசீம் அக்பர் மற்றும் ஜமில் அஞ்சும் அவளுக்கு உறுதுணையாக இருந்து தோள் கொடுக்க ஒரு இஸ்லாமிய இமாமின் துணை கொண்டு காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அநீதியை அரக்க செயலை புகாராக கொடுக்கிறாள். அந்த புகார் முதலில் ஏற்றுக் கொள்ள படவில்லை. தான் கற்பழிக்கப்பட்டவள் என வெளிப்படுத்திக்கொள்ள எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டாள் என்கிற தைரியத்தில் அவளது கிராமத்து பஞ்சாயத்து மனிதர்கள் இருக்க, தனது தோழர்களுடன் அந்த இஸ்லாமிய இமாமின் உதவியுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்களின் வாயிலாக உலகுக்கு தெரிவிக்கிறாள்.

இந்த அநீதி உலகெங்கும் பறைசாற்றப்பட, பாகிஸ்தானின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு அவளுக்கு தண்டனை அளித்த கொடியவர்கள் கைது செய்யபடுகிறார்கள். நீதி மன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் மகிழ்வடைந்த முக்தர் இப்படி சொல்கிறாள்.
'இது எனக்கு உண்டான தீர்ப்பு அல்ல. இது போன்ற தீர்ப்பு எழுதும் பஞ்சாயத்தருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு. கல்வி அறிவும் உலக அறிவும் இல்லாத பெண்களை கொடுமை செய்யும் உலகத்தினருக்கு எதிரான தீர்ப்பு'
என முழங்கினாள்

அவளுக்கு அரசாங்கத்தின் பேரில் நாலு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இஸ்லாமாபாத்தின் முக்கிய இடத்தில் முக்தர் தன குடும்பத்துடன் வசிக்க ஒரு பெரிய வீடும் கொடுக்கப்பட்டது. அதனை மறுத்துவிட்ட முக்தர், அரசு தனக்கு அளித்த நாலு லட்சத்தில் தனது கிராமமான மீர்வாலாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்றை துவக்கினாள்.அவளும் அவளது தோழிகளும் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்க துவங்கினார்கள். சமுதாயத்தைச் எதிர்கொள்ளும் பக்குவம் அங்கு பெண்களுக்கு போதிக்க படுகிறது.
தானும் ஒரு மாணவியாய் அந்த பள்ளியில் கல்வி கற்றார் முக்தர். தனது பள்ளியில் மற்ற மாணவியரோடு தானும் மாணவியாய்....

அறியாமையே பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணம் என்பது முக்தர் மயி யின் முழக்கம். அந்த அறியாமை இருளை இன்றைய இளம்பெண்களிடம் இருந்து அகற்றவே அவர் பள்ளிகள் துவங்கி உள்ளார்.
உலகம் முழுதும் அவர் வரவேற்கப்படுகிறார். பல விருதுகள் அவரை தேடி வருகிறது.
அவற்றில் சில.

ஆகஸ்ட் 2 2005 பாகிஸ்தான் அரசாங்கத்தின் வீர தீர செயல்களுக்கான பாத்திமா ஜின்னா தங்க பதக்கம்.
நவம்பர் 2 2005 அமெரிக்க இதழான கிளாமர் 'இந்த வருடத்தின் சிறந்த பெண்' (woman of the year) என கெளரவம்.
ஜனவரி 2006 - அவரது கதை ஜெர்மனி இல ஜேர்மன் மொழியில் மற்றும் பாரிசிலிருந்து ப்ரென்ச் மொழியிலும் புத்தகமாக வெளி வந்தது. அதனை வெளியிட அவர் பாரிசுக்கு அழைக்கப்பட்டு அரசாங்க மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.
2 மே 2006 இல நியூ யோர்க்கின் ஐ நா சபையில் அவர் பேட்டி காணப்பட்டு அது ஒளிபரப்பானது. அவர் அங்கு சொன்னது..'தனது நீதிக்காகவும் தனது அடுத்த தலைமுறையின் நீதிக்காகவும் தான் பாடு பட போவதாக சொன்னார்'
மார்ச் 2007 இல வடக்கு தெற்கு விருது ஐரோப்பா ஒன்றியத்தால் வழங்கப்பட்டது.

பெண் இன கொடுமைகளால் மனம் புழுங்கி உள்ளுக்குள்ளேயே தவித்திருக்கும் பெண்களுக்கு மத்தியில் முக்தர் மயி ஒரு எடுத்துக்காட்டு. அவரது கல்வி பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி. தகவல் உதவி விக்கிபீடியா

Monday, November 2, 2009

உலகின் மிகப்பெரிய கப்பல் - ஓயாசிஸ் ஒப் தி சீஸ்



மனிதனின் ஆசைக்கு எல்லை ஏது. ஒன்றை ஒன்று மிஞ்ச வேண்டும் என முனைப்புடன்,மனிதத்தின் சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதோ உலகத்தின் மாபெரும் கப்பலான 'ஓயாசிஸ் ஆப தி சீஸ்' தனது பயணத்தை துவக்கி உள்ளது. கப்பலின் படங்களையும் செய்திகளையும் பார்த்தால் ஒரு சிறு ஊரையே கப்பலில் உள்ளடக்கி உள்ளார்கள் போல தெரிகிறது.

-கப்பலின் எடை இரண்டு லட்சத்தி இருபதாயிரம் டன்.
-150 மைல்கள் நீளமுள்ள பைப்புகளை பயன்படுத்தி உள்ளனர்.
-3,300 மைல்கள் நீளமுள்ள மின்சார ஒயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-2,300 டன் தண்ணீர் இதிலுள்ள 21 நீச்சல்குளங்கள் மற்றும் ஜக்குசிகளில் பயன்படுத்தப்படுகிறது .
-இந்த கப்பலில் உள்ள சென்ட்ரல் பார்க் தான் உலகிலேயே கப்பலில் கட்டப்பட்டுள்ள உண்மையான பூங்கா. மொத்தம் 12,275 செடிகளும் 56 மரங்கள் மற்றும் மூங்கில்கள் உள்ளது. சென்ட்ரல் பார்க் கப்பலில் உள்ள ஒரு அறை

-5400 பேர் ஒரே சமயத்தில் இதில் பயணம் செய்யலாம்.
-கப்பலில் பதினாறு மாடிகள் உள்ளன..(அம்மாடீ...)
-ஏழு குறு நகர்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
-இரண்டாயிரத்து எழுநூறு அறைகள் உள்ளன.
அக்வா திறந்த வெளி அரங்கம்.

-திறந்த வெளி அரங்கம் உண்டு (கடலலைகளை கேட்டவாறு டைட்டானிக் -திரைப்படம் பார்த்தால் ஒரு பய பயப்படாம இருக்கமாட்டான்.)
-பதினோரு விடுதிகளும் ஏழு நீச்சல் குளங்களும் உண்டு.
குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்.

அதெல்லாம் சரி.. விலை எவ்வளவுன்னு கேக்கறிங்களா...? நம்மால முடிஞ்சது படத்த பாத்து பெருமூச்சி விடுவது தான். அத நான் செஞ்சிட்டேன். அப்ப நீங்க......?
-----

Saturday, October 31, 2009

திரைப்படம் - காஞ்சிவரம்.


எத்தனை நாளாகிவிட்டது...இப்படி ஒரு உயிர்ப்புள்ள ஒரு படம் பார்த்து!

1948 இல நடக்கிறது கதை.ஊருக்கெல்லாம் பட்டு நெய்யும் நெசவாளிகள் கூட்டம் தங்களின் மனைவிக்கோ மகளுக்கோ பட்டு சேலை கொடுத்து மகிழ்விக்க முடியாமல் தவிக்கிறது. வெளியே எண்ணூறு ரூபாய்க்கு விற்கப்படும் சேலையை நெய்யும் நேசவாளிக்கோ எட்டு ரூபாய் கூலி. நெசவாளி வேங்கடம், தான் கட்டிக்க போகும் பெண்ணுக்கு பட்டுடுத்தி வீட்டுக்கு கூடி வர நினைத்து அது முடியாமல் போக, தனது மகள் கல்யாணத்திற்கு எப்படியாவது பட்டு சேலை கட்டி மணவறையில் தனது மகளை அமர வைக்கவேண்டும் என அவருக்கு ஆசை. அதனை சபதமாக ஏற்கிறார்.

சபதம் எடுத்தாகிவிட்டது. பட்டு சேலை நெய்ய பட்டு நூலுக்கு எங்கே போவது?. தான் வேலை செய்யும் இடத்திலேயே, பைகள் மற்றும் உடைகள் சோதிக்கப்பட்டு வெளியனுப்ப படும் இடத்தில் வாயில் வைத்து நூலை கடத்தி வீட்டுக்கு வந்து மகளுக்கு சேலை நெய்கிறார். இடையே ரத்தவாந்தி எடுத்து தனது மனைவி இறந்து போனாலும் தனது லட்சியத்தை நோக்கிய அவரது பயணம் தொடர்கிறது. நெசவாளர்களின் துன்பம் கண்டு அங்கு எழுத்தாளராக வரும் கம்யூனிச தோழரிடம் நட்பு ஏற்பட்டு, அவரும் அவரது நண்பரான சாரதியும் சேர்ந்து தொழிற்சங்கம் அமைக்கிறார்கள். நெசவாளர்களை சுரண்டும் எஜமானனை எதிர்த்து கோரிக்கை வைக்கிறார்கள். ஆலை மூடப் படுகிறது. அவ்வமயம் தனது நண்பன் சாரதியின் மகனை தன மகள் தாமரைக்கு நிச்சயிக்க பட, சாரதியின் மகனோ பட்டாளத்தில் இருந்து விடுப்பில் வந்து செல்லுமுன் திருமணம் செய்யுமாறு கோர, தனது மகளுக்கு பட்டு சேலை நெயவதற்காக, வேலை நிறுத்தத்தை நிறுத்தி வேலைக்கு சென்று மீண்டும் பட்டு நூலை வாய்க்குள் வைத்து திருடி வெளி வரும்போது தனது நண்பனான சாரதியினாலேயே அவரது திருட்டு வெளி வந்து விட, அவரை அடித்து இழுத்து செல்கிறது போலீஸ். பரோலில் தனது மகளை பார்க்க வரும் அவர் என்ன ஆனார் என்பது உள்ளத்தை உருக்கும் கிளைமாக்ஸ்.

பிரகாஷ் ராஜ் என் மதிப்பிற்குரிய ஒரு நடிகர். அவர் ஏற்று நடிக்கும் பாத்திரம் எதுவானாலும் வெளுத்து வாங்கி விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சில படங்களில் ஓவர் ஆக்டிங் செய்தாலும் ரசிக்கவைக்க கூடிய நடிப்பு அவரது. காஞ்சிவரத்தில் பட்டு சேலை நெய்யும் நெசவாளி வேங்கடமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

பாத்திரம் உணர்ந்து ஆர்பாட்டம் இன்றி அமைதியான நடிப்பில் அண்டர்ப்ளே செய்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது கண்கள் பேசுகின்றன. இந்த படத்தில் நடித்ததற்கு அவர் சம்பளம் பெற்றுக் கொள்ள வில்லையாம். தேசிய விருது பெற தகுதியான நடிப்புதான்.

திருவின் ஒளிப்பதிவு மிக கச்சிதம். பீரியட் படத்திற்க்கேர்ப்ப அவரது ஒளி அமைப்பு நிஜத்தை கண் முன்னே காட்டுவது போல இருக்கிறது. M G ஸ்ரீகுமாரின் இசை படத்தின் காலத்திற்கேற்ற உணர்வுகளை கொண்டு வருகிறது.

இயக்குனர் ப்ரியதர்ஷன், மலையாளத்திலும் ஹிந்தியிலும் பொழுதுபோக்கு படங்களாக எடுத்து தள்ளியவர். தனது ஆத்மா திருப்திக்காக படம் நிச்சயம் ஓடாது என்று தெரிந்தும் இரண்டு கோடி செலவு செய்து இப்படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி இருக்கிறார்.

படத்தின் இறுதியில் வரும் அந்த அபரிதமான சோக காட்சிகள்.. அவார்டு படம் என்றாலே இப்படி தான் இருக்குமா என்ற ஒரு தேக்கத்தை ஏற்படுத்துகிறது.

காஞ்சிவரம் தமிழ் திரைக்கு ஒரு வரம்.

Friday, October 30, 2009

ஆவிகளின் உலகம்..!


எல்லோருக்கும் வணக்கம். கடுமையான வேலை பளு காரணமாக என்னால் கடந்த சில நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை. (யாரு உன்னை கேட்டா ? என்று சிலர் சொல்வது எனக்கு கேட்கிறது...). அக்டோபர் முப்பது ஆவிகளின் தினம் என்பதால்..இதோ ஆவிகளை பற்றிய ஒரு கட்டுரையுடன் இதோ வந்து விட்டேன்.(போச்சுடா..)

ஆவிகள் உலகத்தில் இருக்கின்றனவா என கேட்டால்...பகுத்தறிவாளர்கள் சிரிப்பார்கள். நான் இது வரை எந்த ஆவியையும் (இட்லி சுடும்போது வரும் ஆவி மற்றும் கொட்டாவி தவிர...) நேரில் கண்டதில்லை. எனவே இதில் எனது கருத்தும் பகுத்தறிவாளர்களின் கருத்து தான். எனினும் ஆவிகளைப் பற்றிய கதைகளை கண்டும் கேட்டும் அதிசயித்திருக்கிறேன். ஆனால் எனக்கு கூறப்பட்ட சம்பவங்களின் நம்பகத்தன்மை எனக்கு இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது.

எனக்கு தெரிந்த சிலர் விளக்கணைத்து,மெழுகுவர்த்தி பொருத்தி (அப்போது தான் ஆவி வருமாம்.) கட்டங்கள் போட்டு ஆங்கில எழுத்துக்கள் எழுதி, நாணயத்தை கட்டத்தின் நடுவில் வைத்து ஆவிகளுடன் பேசியதாக கூறியுள்ளனர். எனது சகோதரனே எனது இறந்து போன பெரியம்மாவின் ஆவியுடன் பேசியதாக கூறி உள்ளான். அந்த ஆவி பெயரை மட்டும் கூறியது பின்னர் சத்தம் கேட்டவுடன் சென்றுவிட்டது என கூறினான். மறுநாள் தூங்கி எழுந்ததும் பேய் அறைந்தது போல இருந்தான். என்ன வென கேட்டபோது இரவில் தனக்கு பயங்கர கேட்ட கனவுகள் வந்தது என்றும் இனி தான் ஆவிகளுடன் பேசப்போவது இல்லை எனவுக் கூறினான். சிலர் ஆவியை அழைத்தபோது அது 'டூ நாட் டிஸ்டர்ப் ' என கூறியதாக சொன்னார்கள்.

வாஷிங்டன் டி சி வானொலியில் நேற்று ஒரு நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தேன். மன நல மருத்துவர்களுடன் நேயர்களின், தொலைபேசி மூலம் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.

அப்போது ஒரு மைக் என்ற ஒரு தகப்பன் நடுங்கும் குரலில் சொல்கிறான்...
'எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். வயது 8. அவளுக்கு,அவளுக்கு மட்டும் சில பிம்பங்கள் தெரிகின்றன.அவள், அவளது அறையில் சில உருவங்களை பார்ப்பதாக சொல்கிறாள். அவளை தவிர மற்றவர்களுக்கு அவை புலப்படுவதில்லை. அந்த உருவங்கள் அவளை பயமுறுத்துவதில்லை.அந்த உருவங்களை அவள் அதற்க்கு முன்பு பார்த்தும் இல்லை.அவள் நார்மலாகத்தான் இருக்கிறாளா?'

இதற்க்கு மருத்துவர்கள் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கிறார்கள். அவள் பள்ளியில் எப்படி இருக்கிறாள்? சந்தோஷமாக இருக்கிறாளா? உங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கிறது.அவள் சோர்வாக காண படுகிறாளா,உங்கள் வேலை எப்படி இருக்கிறது என.

எனக்கு மணவாழ்க்கை போன வருடம் முடிந்தது விவாகரத்து பெற்றுவிட்டேன். என பதில் வருகிறது.

அந்தப் பெண் உங்களது கவனத்தை பெறுவதற்காக அல்லது உங்கள் மணமுறிவுக்கு ஒரு வடிகாலாக அப்படி சொல்ல வாய்ப்பு உண்டு. அவளை மன நல மருத்துவரிடம் காட்டுவது நல்லது.

என் கேள்வி எல்லாம்...நிஜமாகவே அந்த பெண் உருவங்களை பார்த்திருப்பாளோ? மனோவியாதி என அதற்க்கு முடிவு கட்டப் படுகிறதோ என்பது தான்.

மனோ நல அகராதிகளை புரட்டிப் பார்த்தால் , இல்லாத உருவங்களை காண்பது ஒருவித மனோவ்யாதி என சொல்கிறது. அதற்க்கு சீசோபெறேன்யா (Schizophrenia) என நாமகரணமும் சூட்டியுள்ளது. இதைப்பற்றி எ பியுடிபுல் மைன்ட்(a beautiful mind) என திரைப்படமும் வந்து ஆஸ்கார் விருதுகள் வாங்கியுள்ளது.

ஜான் நாஷ் என்ற ஒரு பேராசிரியரின் கதையே அது. அவர் இன்னமும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யுனிவர்சிடி இல பேராசிரியராக இருக்கிறார்.( அவர் மாணவர்களை கண்டாலே எரிந்து எரிந்து விழுவார் என அங்கு பி எச் டி செய்த என் தோழி சொல்லி இருக்கிறாள்).

1999 இல தி ப்ளைர்விச் ப்ராஜெக்ட்(The Blair Witch project) என்ற உண்மை பதிவுகள் அமைந்த திரைப்படம் வெளியாகி அமெரிக்காவையே அலற வைத்தது.(இந்தியாவில் இந்த படம் வெளியானதா என தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்).

மூன்று திரைப்பட மாணவர்கள், இரண்டு ஆண்கள் ஒரு பெண், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பர்கித்ச்வில் என்ற இடத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் வாழும் ப்ளைர்விச் என்ற ஒரு சூனிய கிழவியை பற்றி தங்கள் பாடத்தின் ஒரு பகுதியான படம் எடுத்தல் என்ற பாடத்திற்காக சென்றனர். அவர்கள் கையோடு எடுத்து சென்ற வீடியோ கேமரா மற்றும் பிலிம் கமெராவில் பதியப்பட்ட காட்சிகள் இப்படத்தில் வருவது. அவர்கள் மூவரும் என்னவானார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. அவர்களால் எடுக்கப்பட்ட பிலிம் சுருள் மற்றும் வீடியோ கேமரா மட்டும் ஒருவருடம் கழித்து காட்டில் கண்டெடுக்கப் பட்டது. அப்படத்தில் காட்டின் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட வினோதமான மணிகள், கிலி ஏற்படுத்துவதாக இருந்தது. அவர்கள் தங்கி இருந்த கூடாரத்தின் முன்னே போடப்பட்ட ரத்தம் தோய்ந்த சதை துணுக்குகள் எல்லாவற்றையும் படம் பிடித்துள்ளனர். அவர்கள் பேய்களால் கொல்லப்பட்டனரா அல்லது வேறு மனிதர்களால் கொல்லப்பட்டனரா என இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.(படத்தின் இறுதியில் எஞ்சி இருக்கும் பெண்ணின் அலறல் கேட்க காமெராவை தூக்கி கொண்டு ஓடும் ஆண் தாக்கப்படுவதொடு கேமரா கீழே விழுந்து 'விர்ர்' சத்தத்தோடு படம் முடிவடைகிறது. பேயையோ ஆவியையோ காட்டாமலும், கத்துக்குட்டி ஒளிப்பதிவில் (வீடியோ கமெராவில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆடிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு காட்சியும்) எடுக்கப்பட்டிருந்தாலும் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுக்கு அந்த உண்மை காட்சிகளே காரணமாக சொல்லப்பட்டது.

நிஜ பிசாசுகள் ஆவிகள் இருக்கின்றனவா என தெரியவில்லை நான் கண்டதில்லை . ஆனால் மனித உருவத்தில் உள்ள பிசாசுகளை கண்டு இருக்கிறேன். சமீபத்தில் கூட..இலங்கையில்....

உங்களுக்கு எதாவது ஆவிகள் தொடர்பான அனுபவங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். ஆவிகள் பற்றிய எனது அறிவு விருத்தி அடைய உதவும்.

இனிய பிசாசுகள் தின வாழ்த்துக்கள்...(Happy Haloween..)
...

Saturday, October 3, 2009

நகைச்சுவை குற்றங்கள் -3


திருடன் போலீஸ் !!!!
====================

சிறையில் இருந்து விடுதலையான நியூயோர்க்கை சேர்ந்த ஜெரமி வாஷிங்டன் என்ற முப்பத்தி மூன்று வயது மனிதன், தனது வயிற்றுப்பாட்டிற்க்காக மீண்டும் கொள்ளையடிக்க முடிவு செய்தான். ஒரு பொம்மை கடையில் சென்று,சிறையில் சம்பாரித்த பணம் கொண்டு ஒரு பொம்மை ரிவால்வரை வாங்கினான். (சென்ற முறையும் பொம்மை துப்பாக்கியை காட்டியே கொள்ளை அடித்திருந்தான். பின்னர் மாட்டிக் கொண்டான்.) நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் கூட்டம் குறைவாக இருக்கும் மாலை ஏழு மணி அளவில் ஒரு மரத்தின் பின் மறைந்து தூரத்தில் வரும் இரண்டு மனிதர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தான். அருகில் வந்ததும் பொம்மை துப்பாக்கியை காட்டியபடி படாரென அவர்கள் முன் குதித்து அவர்களின் மணி பர்சகளை கேட்டு மிரட்ட, ஒரு வினாடி அதிர்ந்து போன அவர்களின் கையில் டக்கென முளைத்தது துப்பாக்கிகள். இதனை எதிர்பார்க்காத ஜெரமி அவர்களை முழுமையாக பார்த்தபின் தான் அவர்கள் கையில் இருப்பது தன்னை போல அல்லாமல் நிஜமான துப்பாக்கிகள் என புரிந்து கொண்டு தனது துப்பாக்கியை கீழே போட்டு தன்னை நொந்து கொண்டு அழ ஆரம்பித்தான். ஆம் அவர்கள் இருவரும் நியூயார்க் போலீசை சேர்ந்த காவலதிகாரிகள்.மாலை நடை பயிற்சியை சென்ட்ரல் பார்க்கில் மேற்கொண்டிருந்தார்கள்.

சளிபிடித்தால் சனி பிடிக்கும்.
=======================

இங்கிலாந்தில் உள்ள புர்ந்லேயில் மிச்சேல் ரொபின்சன் தனது மகளுடன் ஒரு நாள் இரவு கதவை தாழ் போட்டுவிட்டு மாடியில் உள்ள படுக்கை அறையில் உறங்கப் போனார். அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்த மிச்சேல் தண்ணி தாகம் எடுக்க கீழே வந்து கிட்செனில் தண்ணீர் குடிக்க வந்தவர், தனது சோபாவில் யாரோ ஒரு புதிய மனிதன் தனது குளிர் கோட்டை மாட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு பயந்து போலிசுக்கு போன் பண்ண, உடனே வந்த போலீஸ் அவன் ஒரு திருடன் என கண்டு பிடித்தனர். அவன் பெயர் மைகேல் ஆர்தர் போல்டேன்.அவனது பையினுள் மிச்சேல் உடைய தங்க நகைகளும் மற்றொரு பையில் அவருடைய ப்ரிட்சில் இருந்த சில இனிப்புகளும் வைத்திருந்தான். போலீஸ் விசாரணையில் தான் திருடன் என்பதை ஒத்துக்கொண்டான். திருட கிளம்பும் முன் தனக்கு மிகவும் சளி பிடித்திருந்ததால், சளி மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். அந்த மாத்திரை தூக்கத்துக்கு உண்டானது. கிட்சேன் ஜன்னலை உடைத்து உள்ளே வந்தவன் நகையையும் இனிப்பையும் மிச்செலின் கோட்டையும் திருடிய பின்னர் தூக்கம் தொடர்ந்து வர அவனையும் அறியாமல் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி இருக்கிறான். போலீசில் மாட்டிக்கொண்டான்.
----------

Tuesday, September 29, 2009

வீரப்பெண் ருக்க்ஷானா


என்னவென்று சொல்வது... புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்பெண் என்ற காலம் பொய், பயங்கரவாதியை துப்பாக்கியால் கொன்று மீதமுள்ள பயங்கரவாதிகளை ஓட ஓட விரட்டிய காஷ்மீரிப் பெண் என்று காலம் வெகுவாக முன்னேறிவிட்டது.

செய்தியை படித்தபோது உடம்பெல்லாம் புல்லரித்தது. அந்த பெண் இருக்கும் திசை நோக்கி கைகள் கூப்பி நின்றது. அவளது வீரம் நிச்சயமாக வணக்கத்திற்க்குரியது.

காஷ்மீர் மாநிலத்தில் 27 செப்டம்பர் இரவு ஒன்பதரை மணியளவில் ஜம்முவின் ரசூரி மாவட்டத்தில் உள்ள கிராமமான தனமண்டி கிராமத்தின் ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது.
வெளியில் மூன்று தீவிரவாதிகள், ஏ கே ரக ஆயுதங்களுடன், ருக்க்ஷானாவை வீட்டின் வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டது அவர்கள் குரல். ருக்ஷானாவின் பெற்றோர் அவளை மறைத்து வைத்துவிட்டு அவர்களுடன் அனுப்ப மறுக்க, அவர்களை தாக ஆரம்பித்தனர் தீவிரவாதிகள். ருக்ஷானாவின் தம்பி தங்கள் பெற்றோரை காக அவர்களை நோக்கி ஒரு கோடாலி எடுத்து வீச தடுமாறி விழுந்த தீவிரவாதியின் ஏ கே ரக துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி சுட்டாள் ருக்க்ஷானா. அங்கு வந்த குழுவின் தலைவனான அவன் அதே இடத்தில் மாண்டு போனான். எஞ்சி இருந்தவர்களை நோக்கி சுட்டு அவர்களை காயமுற செய்து அவர்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு ஓட ஓட விரட்டி உள்ளனர், ருக்ஷனாவும் அவளது குடும்பத்தினரும். இறந்து போன தீவிரவாதி லஸ்கர் எ தோய்பா குழுவை சேர்ந்த பாகிஸ்தானை சேர்ந்த உஸப்ப ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிராம பாதுகாப்பு குழு தந்த பயிற்சியே தனக்கு துப்பாக்கியை இயக்க மிகவும் உதவியது என கூறி இருக்கிறார் ருக்ஷானா. அவருக்கும் அவரது தம்பிக்கும் அவர்களது தைரியத்தை மெச்சி போலீஸ் வேலை தர உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாம். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளதாம். இது போதாது . தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டி மற்ற காஷ்மீரி மக்களுக்கு, உதாரண பெண்மணியான ருக்ஷனாவுக்கு மேலும் விருதுகள் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் மற்ற மக்களுக்கும் கிராம பாதுகாப்பு குழுவின் பயிற்ச்சி அவசியம். மக்கள் வெகுண்டெழுந்தால், தீவிரவாதம் தலை தூக்காது. ஏன் எந்த எதிரி நாடும் நம்மிடையே வாலாட்ட துணியாது.

பயங்கரவாதிகளை கண்டு நடுங்கும் நமக்கு முன்னால் ஒரு உதாரண பெண்மணியாக, தைரிய லட்சுமியாக விளங்கும் ருக்ஷானாவையும் அவளது குடும்பத்தையும் இருகரம் குவித்து வாழ்த்தி வணங்குகிறேன்.
-----

Tuesday, September 15, 2009

ஒரு தாயின் தாகம்!


குழந்தை பிறந்தால் போதும்.நமது பெண்களுக்கு கவனம் எல்லாம் குழந்தையின் மீது. தங்களது கடந்தகால சாதனைகளை மறந்து விடுவார்கள். உடல் மேல் அக்கறை இல்லாமல் பெருத்து விடுவார்கள். தாங்கள் பெரிய நடன கலைஞராக இருப்பார்கள். பெரிய விளையாட்டு வீராங்கனையாக இருப்பார்கள். அலுவலகங்களில் மேலதிகாரியாக இருப்பார்கள்.ஆனால் குழந்தை பிறந்ததும் அனைத்தும் குழந்தைக்காக என தங்களது வாழ்கையை, சிந்தனையை அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்கையையே மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.அத்துடன் அவர்களது லட்சியம் எல்லாம் தொலைந்து விடும்.

2005 இல யு எஸ் ஓபன் சாம்பியன். உலக டென்னிஸ் தரப்பட்டியலில் முதலிடம் என இருந்த பெல்ஜியத்தின் கிம் க்ளைட்ஜெர் முதுகு வலி மற்றும் காயம் காரணமாக டென்னிஸ் இலிருந்து ஓய்வு பெற்றார். ஜூலை 2007 இல் அமெரிக்காவின் கூடைபந்து வீரரான ப்ரியன் லிஞ்சை மனம் முடித்த கிம் 2008 பிப்ரவரியில் ஜடா எல்லீ என்ற பெண் பெற்றெடுத்தார்.
மணக்கோலத்தில் கிம்.

டென்னிஸ் விளையாட்டின் மேல் உள்ள காதலும், மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் உந்தி தள்ள, தன கணவனின் ஊக்குவிப்புடன் மீண்டும் டென்னில் விளையாட்டு பயிற்சிகளை ஆரம்பித்தார். ஜனவரி 2009 இல் தனது தந்தையை இழந்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு வெறியுடன் போராடினார். தரபட்டியலில் இல்லாத ஒரு வீராங்கனையான கிம் கிளைட்ஜெர்ஸ் நிச்சயம் இறுதி போட்டி வரை தாக்குபிடிக்க கூடும் என்றே டென்னிஸ் வல்லுனர்கள் யாரும் நினைக்க வில்லை.

டென்னிசில் அசைக்க முடியாத சக்தியான வில்லியம்ஸ் சகோதரிகள் நேர் செட் கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். டென்னிஸ் தரப் பட்டியலில் பத்தாவதாக இருந்த டென்மார்க்கை சேர்ந்த வோஜ்நியாகியை புலி போல எதிர் கொண்டார்.ஆடுகளத்தின் ஓரங்களுக்கு ஓடி ஓடி இவர் பந்தெடுத்து அடித்து ஆடிய விதம் வோஜ்நிஆகியை திண்டாட செய்தது. கிம்மின் புலி பாய்ச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பதினேழு வயதான வோஜ்நியாகி அந்த இருபத்தி ஆறு வயது தாயிடம் தோற்றுப் போனார்.
ஜடா மற்றும் வெற்றிக் கோப்பையுடன் கிம்.


அந்த முழு போட்டியையும் தனது கணவன் மற்றும் தன் குழந்தையும் பார்க்கதான் ஆடி வெற்றி கொண்டார். போட்டியின் வெற்றி கோப்பையை அவர் கையில் வாங்கும்போது தனது குழந்தை ஜடாவையும் அழைத்து அந்த கோப்பையை அவளிடம் கொடுத்து அக்குழந்தை அந்த கோப்பையை வைத்து விளையாடியது ரசிக்கத்தகுந்த காட்சி.

இறுதியில் அவர் தொலைக்காட்சி நிருபருக்கு பதில் அளிக்கையில் அவர் கூறியது.....

'என் குழந்தை ஜடாவுடன் நான் முழுக்க நேரம் செலவு செய்து நாட்காளாகிவிட்டது.இனி வரும் சில மாதங்கள் எனது நேரம் அவளுக்கும் எனது கணவனுக்கும் மட்டும் தான்.'

சாதனைகள் செய்யத்துடிக்கும் தாய்மார்களுக்கு கிம் கிளைட்ஜெர்ஸ் ஒரு முன்னோடி.

வாழ்த்துக்கள் கிம்!

-----------

Friday, September 11, 2009

உலக சினிமா: பிஹைன்ட் தி சன் (Behind the sun)

பிரேசில் இயக்குனரான வால்டேர் செலஸ் எனது அபிமான இயக்குனர்களில் ஒருவர். அவருடைய சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற அதி அற்புதமான திரைப்படத்தை பார்த்ததில் இருந்து நான் அவரது ரசிகனாகிவிட்டேன். ( அந்த திரைப்படத்தை பற்றி விரைவில் பதிய இருக்கிறேன்.). அவரது படங்களை தேடித் பார்க்கும் ஆர்வத்தை அந்த திரைப்படம் தான் என்னை வளர்த்துவிட்டது. அவ்வாறு தேடியதில் கிடைத்தது தான் இந்த திரைப்படம். இஸ்பானிய மொழியில் இந்த திரைப்படம் இருந்தாலும் கலைக்கு மொழி இல்லையே!.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. ரோடு மற்றும் மின்சாரம் இல்லாத கிராமம் அது. கரும்பை விளைவித்து அதிலிருந்து வெள்ளம் தயாரிக்கும் குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பத்துக்கும் உள்ள நில தகராறு தான் கதையின் மய்யப் பிரச்சினை. பக்கு என்ற சிறுவன் தான் படத்தின் மய்யப் புள்ளி.
பரம்பரை நில தகராறில் இரு குடும்பங்களுக்கும் பெரும் இழப்புகள். தன் அண்ணனை கொல்கையில் அவரது சட்டையில் இருக்கும் ரத்தக்கறை, சூரிய சூட்டில் மஞ்சள் ஆகும்வரை காத்திருந்து, பழி வாங்க புறப்படுகிறான் டோனியோ. தனக்கு வன்முறையில் விருப்பம் இல்லை என்றாலும் குடும்ப பாரம்பரிய கவுரவத்தை காக்க அவன் அந்த எதிரி குடும்பத்தின் மூத்த மகனை கொன்றே ஆகவேண்டும். அதன்படியே செய்துவிட்டு அந்த குடும்பத்தின் மூத்தவரான கண் தெரியாதவரின் அருகே தன் தந்தையுடன் சென்று ஆறுதல் சொல்லி, இத்துடன் முடித்து கொள்ளுமாறு மன்றாடுகிறான். அவரோ அவனது கையில் மரணக் கயிற்றை கட்டி, தன் மகனின் ரத்தம் சூட்டில் மஞ்சளாகும்வரை மட்டுமே அவனுக்கு நேரமிருக்கிறது என்றும், அடுத்த பௌர்நமியில் அவனது உயிர் அவனது உடலில் இருக்காது என்றும் கூறி அவனை அனுப்பி விடுகிறார்.( கொல்வதில் கூட ஒரு ஞாயம்.). அண்ணனின் வருகைக்காக காத்திருக்கிறான் சிறுவன் பக்கு. அண்ணன் வந்ததும் அவனுக்கு அளவில்லாத சந்தோசம். அவனது அன்னைக்கும் தான். எனினும் அவனது தந்தை டோனயோ அடுத்த பௌர்நமியில் பழி வாங்கப் படுவான் என சொன்னதும், அவர்கள் மகிழ்ச்சி வடிகிறது. வழக்கம் போல அடங்கிப் போகும் அம்மா.


அவர்கள் ஊருக்கு வித்தை காட்ட வரும் கிளாரா மற்றும் சலுச்டிநோவால் அவர்கள் வாழ்கை புரட்டிப் போட படுகிறது. கிளாரா பக்குவிர்க்கு ஒரு புத்தகம் பரிசளிக்க, படிக்க தெரியாத பக்கு அந்த புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்தே கதையை புனைந்து தனக்கு தானே கதை சொல்லிகொள்கிறான். அந்த புத்தகத்தில் இருக்கும் கடல் தேவதையாக கிளாரவை உருவகப்படுத்திக் கொள்கிறான். வெல்லம் விற்க நகரத்திற்கு செல்லும் டோனயோ கிளாரவை கண்டு காதல் கொள்ள, அவர்களது வித்தையை பார்க்க ஆவலாய் உள்ள சிறுவன் பக்குவை இரவு அப்பாவிற்கு தெரியாமல் கூட்டி சென்று காட்டி பக்குவை மகிழ்விக்கிறான். இதன் மூலம் தனது தந்தையின் கௌரவ பறம்பார்யாத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறான். அதற்க்கு பக்கு உடந்தையாய் இருக்கிறான். பக்குவிற்கு தனது சகோதரன் டோனயோ மேல் உயிர்.

புத்தகத்தின் படி கடல் தேவதையும் கதாநாயகனும் கடலில் சென்று மகிழ்வாய் வாழ்வதாய் கதை முடிகிறது. பக்கு அந்த கதாநாயகனாய் டோநியோவையும் கடல் தேவதையாய் கிளாராவையும் உருவாக படுத்தி பார்க்கிறான். எனினும் வழமை போல டோனயோ மறு பௌர்ணமிக்குள் கொல்லப்பட்டால் கதை முட்ட்ருபெறாது என உணர்ந்து அடுத்த பௌர்ணமையில் கிளாராவும் டோநியோவும் தனிமையில் லயித்து இருக்க, மழை பொழிய டோநியோவின் உடைகளையும் தொப்பியும் போட்டுக் கொண்டு டோநியோவை கொல்ல வரும் எதிரி குடும்பத்தின் வாரிசுக்குத் தானே டோனியோ என காட்டி கொல்லப்பட்டு இறந்து போகிறான். பக்குவின் தாய் தந்தையர் கதறி அழ,பக்குவின் ஆசைப்படி டோனயோ தன் குடும்பத்தை விட்டு பாரம்பரிய பழிவாங்கலை விட்டுவிட்டு கடற்கரை சென்று கிளாராவிற்காக காத்திருப்பதாக படம் முடிகிறது.


படத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல படம் பிடித்திருக்கும் வால்டேர் கார்வலோ வின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியும் அள்ளிக் கொண்டு போகிறது. பதின் வயது சிறுவனாக நடித்திருக்கும் பக்குவின் நடிப்பும் அபாரம்.

ஆறே ஆறு கதாபாத்திரங்களை வைத்து வன்முறைக்கெதிராக இப்படத்தை செதுக்கி இருக்கிறார் வால்டேர் செலஸ்.

2001 இல் வெளியான இப்படம் கோல்டன் க்ளோப் பரிந்துரை உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறது.
-----------

Friday, September 4, 2009

நகைச்சுவை குற்றங்கள் - 2



சில குற்றங்களை எப்படி கையாள்வது என காவல் துறை தலையை பியித்து கொள்ளும். சிலர் எதிர்பாராமல் மாட்டுவார்கள்.

அவ்வகையான சில குற்றங்களை இப்பதிவில் காணலாம். இவை முழுக்க முழுக்க உண்மையாக நடந்தது செய்தித்தாள்களில் வெளியானது.

1. நாயும் கறியும்.
===============
மசாசுசெட்ஸ் மாகனத்தின் பிர்மிங்காம் நகரில் ஒரு பாலசரக்கு கடையில் ஆயுதத்தை காட்டி பணத்தை எல்லாம் அள்ளிவிட்டு ஓடி இருக்கிறான் ஒருத்தன். கடை முதலாளியும் அந்த திருடனை பார்த்திருக்கிறார்.காவல் நிலையத்திற்கு சொல்லப்பட்டு காவலதிகாரிகள் ஒரு மோப்ப நாயுடன் வந்து விட்டனர். மோப்பம் பிடித்துவிட்டே சென்ற நாய் திடீரென ஒரு ஆளின் கைய்யை கவ்வி இருக்கிறது. கடைக்கரரோ சரியான முட்டாள் நாயை கூட்டி வந்துவிட்டார்களே என நொந்தபடி இந்த ஆள் இல்லை வேறொருத்தன். அவன் கருப்பன்.இவனோ வெள்ளயன்.உங்கள் நாய்க்கு இது கூட தெரியவில்லை போங்கடா போங்க என சொல்லாத குறையாய் விரட்டி இருக்கிறார். இருந்தாலும் ஒரு பொறி தட்ட எட்வர்ட் பிரவுன் என்ற அந்த அந்த வெள்ளை காரனை சோதனையிட அவர் தனது ஜட்டிக்குள் 67$ பெறுமானமுள்ள பன்றிக் கறியை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது. நல்லவேளை புத்திசாலி நாய் கைய்யை கடித்தது. பன்றி கறி இருக்கும் இடத்தை கடித்திருந்தால்.......?!!!!!!

2. நாயினால் கடித்த வடு...
=====================
அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தில் இருக்கும் பாயோட்டேச்வில் என்ற நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி வந்தது. என்னவென்றால் அங்குள்ள க்ளோரியா பாஸ் என்ற பெண்மணியின் மகள் மிதிவண்டியில் செல்லும்போது ஒரு நாய் துரத்துவதாக.( நம்மூரில் வண்டியில் செல்லும் ரோமியோக்களை போல அல்ல. இது நிஜமான நாய்). இதற்க்கெல்லாம் பொய் விசாரிக்க வேண்டி இருக்கிறதே என அந்த வீட்டிற்கு காரில் சென்றார் காவலதிகாரி. காரை அவர்கள் வீட்டில் நிறுத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்தி இருக்கிறார். கதவை திறந்துள்ளார் க்ளோரியா பாஸ். அவரை தாண்டி அவரது வீட்டிலிருந்து குதித்த பாக்சர் இன நாய் பாய்ந்து சென்று காவலர் வந்த வண்டியின் அனைத்து டயர்களையும் கடித்து குதறிப்போட்டது. சும்மனாச்சுக்கும் எல்லாம் அமெரிக்காவில் நாய்களை சுட்டுவிட முடியாது. க்ளோரியா பாசினால் நாயை கட்டுப்படுத்த முடியவில்லை. அனைத்தும் முடியும் வரை காவல் அதிகாரி பார்த்துகொண்டிருந்தார். பின்னர் டயர்களை மாற்றுவதற்காக ஐந்நூறு டாலர் க்ளோரியா பாஸ்க்கு பைன் போட்டுவிட்டு வேறு காரில் ஏறி சென்றார்.

நன்றி The Examiner.

Monday, August 31, 2009

குட்டிக் கவிதை -7

மழை
=====

மேகக் காதலன் கைவிட்டதால்....

நீர்த் துளியின்

தற்கொலை...

.....

Wednesday, August 26, 2009

ஐ டி மக்களும் அவர்களை குறித்து சமுதாயத்தின் பார்வையும்.


அதென்னவோ தெரியவில்லை, ஐ டி துறையில் வேலை பார்ப்பவர்கள் தான் ஒட்டுமொத்த தமிழ் கலாசாரத்தையே அழிக்க வந்த கிங்கரர்கள் என பலரின் மனதில் எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. எதோ டை கட்டிக் கொண்டு ஏ சி ரூமில் அமர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு, ப்லாகுகள் எழுதிக் கொண்டு, வலைத்தளங்களை மேய்ந்துகொண்டு வருவதற்கு அவர்களுக்கு லட்சம் ருபாய் சம்பளம் தருகிறது அவரது அலுவலகங்கள் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை நான் சக பதிவர்களின் பதிவுகளில் இருந்தும், திரைப் படங்களிலும் பார்த்து அடைந்த கவலையின் விளைவே இந்த பதிவு.

சரி ஐ டி மக்களின் மேல் அப்படி என்ன இவர்களுக்கு இருக்கும் கோவம்.

1. அதிகம் சம்பாதிக்கிறார்கள்.நோகாமல் நுங்கு தின்கிறார்கள்.(அதிகம் வேலை செய்யாமல் சம்பாதிக்கிறார்கள்).
2. தண்ணி அடிக்கிறார்கள்.
3. நம் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள்.
4. உள்ளூரில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள்.
5. விலைவாசியை உயர்த்துகிறார்கள்.

இந்திய பொருளாதாரம் இன்று உயர்ந்துள்ளதற்கு யார் அல்லது எது காரணம் என நினைக்கிறீர்கள்? அந்நிய செலாவணி தானே? அதனை இப்போது அதிகமாக ஈட்டிக் கொடுப்பது ஐ டி தானே. இந்தியா இன்று உலக வரைப்படத்தில் ஒரு தவிர்க்க முடியாத பங்கு சந்தையாக வளர்ந்து நிற்பதற்கு காரணம் என்ன? இந்தியா ஒளிர்கிறது மற்றும் ஜெய் ஹோ என மாறி மாறி அரசியல் கட்சிகள் தேர்தல் முழக்கம் செய்வதற்கு காரணம் என்ன? ஐ டி என்ற கணினி பொறியாளர்களால், மென்பொருட்கள் புனையப்பட்டு ஏற்றுமதி செய்யபடுவதால் தானே? அவர்கள் அதிகம் சம்பாதிக்க காரணம் என்ன? அவர்கள் புனைந்த மென்பொருட்கள் அதிகம் விலைக்கு உலக சந்தையில் விலை போவதால் தானே? சரக்குக்கு ஏற்ற கூலி. அல்லது வருமானத்துக்கு ஏற்ற கூலி.

மக்களின் வருமானம் சுழற்சி முறையில் தான் தீர்மானிக்கப் படுகிறது. முதலில் ஆடிட்டர்கள் சம்பாதித்து தீர்த்தார்கள், பின்பு வக்கீல், பின்னர் பெற்றோர்கள், தங்கள் பிள்ளை எஞ்சினியராகவோ அல்லது ஒரு டாக்டராகவோ ஆக்க ஆசைப்பட்டார்கள். அதில் வருமானமும் கௌரவமும் அதிகம் இருந்தது. இப்போது கணினி. எதிர்காலத்தில் வேறொன்று வரலாம்.

உழைப்பவர்கள் தங்கள் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்பட, ஐ டி பொறியாளர்கள் தங்கள் மூளையை மூலதனமாக கொண்டு செயல்படுகிறார்கள்.

சும்மா உக்கர்ந்திருந்து பணம் சம்பாதிப்பது எந்த ஒரு தொழிலும் இயலாத காரியம்.அப்படி ஒரு நிலைமை ஐ டி கம்பெனிகளில் இருந்தது. அதை பெஞ்ச் பீரியட் என சொல்வார்கள். மாடு மாதிரி ஒரு ப்ரொஜெக்டில் உழைத்து முடித்திருப்பான்.அடுத்த ப்ராஜெக்ட் வரும்வரை அவனுக்கு சம்பளம் கொடுத்து காத்திருக்க வைப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு.ப்ராஜெக்ட் முடிந்தால் அடுத்த நாளே அவனுக்கு வேலை பொய் விடும்.

மன உளைச்சல் மன உளைச்சல் என ஒரு எழுத்தாளன் சொல்கிறான் என்றால், அதற்க்கு காரணம் அவன் எழுத்திலேயே மூழ்கி அதை பற்றியே சிந்தித்து அதிலேயே உழன்று திரிவதால் வருகிறது. ஒரு ஐ டி பொறியாளனும் அவ்வாறே. தாது ப்ரோஜெக்ட்க்கு எவ்வாறு ப்ரோகராம் எழுதினால் சரியாக வரும் என அதிலேயே உழன்று குறித்த நாட்களுக்குள் அதனை முடிக்க வேண்டும் என்ற டெட் லைனுக்காக இரவும் பகலும் பாடுபட்டு மன உளைச்சல் அடைய்கிறான். ஒரு புத்தகம் எழுதி முடித்துவிட்டு ஒரு எழுத்தாளன் அடைகிற அதேவிதமான மகிழ்வும் நிம்மதியும் ஒரு ப்ரோக்ராம் முடித்ததும் ஒரு கணிப்பொறி போறியாளனுக்கு ஏற்ப்படுகிறது. எழுத்துக்களை படைக்கு படைப்பாளியான ஒரு எழுத்தாளன் தான் படைப்பதால் கடவுள் என சொல்லிக் கொண்டால், ஒரு ப்ரோக்ராமை படைக்கும் ஒரு கணினி பொறியாளனும் கடவுள் தானே.

தனது மன உளைச்சலை ஒரு எழுத்தாளன் கஞ்சா அல்லது தண்ணி என தீர்த்துக் கொள்கிறான். தனது கணினி பொறியாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களே தண்ணி வாங்கி தருகிறது. இது ஒரு உருவகம் மட்டுமே அனைத்து கம்பனிகளும் தனது தொழிலாளர்களுக்கு தண்ணி வாங்கி கொடுப்பது இல்லை. அனைத்து கணினி பொறியாளர்களும் தண்ணி அடிப்பதும் இல்லை. ப்ராஜெக்ட் முடிந்த பார்ட்டி என்றால் தண்ணி பார்ட்டி சில பெரிய கம்பனிகளில் உண்டு என நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அது ஐ டி கம்பெனிகளில் மட்டும் என்று இல்லை. ஐ டி அல்லாத கம்பெனிகளிலும் உண்டு என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஐ டி மக்களை மட்டும் இந்த அளவிற்கு மட்டம் தட்டுவது ஏன்? அவர்கள் அதிகம் சம்பாதிப்பது தான் இவர்களை உறுத்துகிறதோ?

கலாசாரம் என்றால் என்ன? ஐ டி தொழில் வருவதற்கு முன்னர் கலாசாரம் எப்படி இருந்தது இப்போது சீரழிந்து போவதற்கு. எப்போது கேபிள் டி வீ நமது வரவேற்பறைகளை அலங்கரிக்க ஆரம்பித்ததோ அப்போதே நமது காலாசாரம் சீர்கெட ஆரம்பித்து விட்டது. இன்று கல்லூரிகளிலேயே பல அத்துமீறல்கள் நடக்கின்றன. இன்று செய்தி தாள்களை பிரித்தால் தினந்தோறும் கள்ளக் காதல் கொலைகள்... அவர்கள் எல்லோரும் ஐ டீயில் வேலை பார்பவர்களா?. ஐ டீயில் உள்ள பெண்கள் தண்ணி அடிக்கிறார்கள் என்பது ஒரு குற்றசாட்டு. மலம் அல்லும் தொழிலாளிகளும் சித்தாள் வேலை பார்ப்பவர்களும் தான் தண்ணி அடிக்கிறார்கள். அதற்காக நான் அதனை ஞாயப் படுத்தவில்லை. அதற்க்கு ஒரு காரணம் இருக்கிற்து.

ஐ டி கம்பெனிகள் உருவாக துவங்கியதும், உலகமயமாக்கள் துவங்கிவிட்டது. வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் உள்ள கம்பெனிகளிலும் தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் உள்ள கம்பெனிகளிலும் வேலைக்கு சேர்வது சகஜமானது. வடக்கில் உள்ள பல பெண்கள் தண்ணி அடிப்பதும் சேர்ந்து வாழ்வதும் சகஜமானது. அவர்கள் தெற்கிலும் வந்து அதையே தொடர்ந்தால் கலாசாரம் கேட்டுவிட்டது என ஒட்டுமொத்த ஐ டி மக்கள் அனைவரையும் சாடுவது எந்த விதத்தில் ஞாயம். நிச்சயமாக கலாசார அதிர்வுகள் ஏற்பட்டிருப்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

ஆனால் அது எல்லா துறைகளிலும் உண்டு. எப்படி ஒரு நடிகை காதலித்தால் அது பூதாகாரமாக பார்க்கப்பட்டு செய்தி ஆகிறதோ அதே போல் தான் ஐ டி மக்களின் நிலைமையும். ஒரு முஸ்லிம் தீவிரவாதி குண்டு வைப்பதால், அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பது எவ்வளவு முட்டாள் தனமானதோ அதே அளவு முட்டாள் தனமானது தான் ஒரு சில ஐ டி மக்களின் நடவடிக்கைகளை பார்த்து அனைத்து ஐ டி மக்களும் அப்படி தான் இருப்பார்கள் என முடிவு செய்வது.

உள்ளூரில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வது நமது தாத்தா காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. நமது தாத்தா காலத்தில் ரங்கூன் சென்று சம்பாதித்து கொண்டிருந்தார்கள். நமது அப்பா காலத்தில் வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர் மலேசியா சென்று சம்பாதித்து கொண்டிருந்தார்கள். இப்போது அந்த எல்லைகள் விரிந்து அமெரிக்கா ஐரோப்பா என்று உலகெங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்.

இன்றைய மத்தியதர மக்களின் வாழ்க்கை உயர்ந்திருப்பதற்கு காரணம் ஐ டி துறையே என்பதை மத்தியதர மக்கள் சொல்வார்கள். இது நாள் வரை விமானங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மக்கள் இன்று அதில் ஏறி பயணித்து உலகம் சுற்றும் வாய்ப்பு அவர்களது ஐ டி துறை சார்ந்த மகனாலோ அல்லது மகளாலோ என்பதை அவர்கள் மறுக்க மாட்டார்கள்.

எனக்கு தெரிந்த நண்பர் சொன்னார். தனக்கு பத்தாவது படிக்கும் வயதில் இருந்து அமெரிக்க சென்று வாழவேண்டும் என்ற எண்ணம் என்று. இவரைப் போல சிலரை தவிர அமெரிக்காவிலோ அல்லது இங்க்லாந்திலோ உள்ள பல இந்தியர்களின் கனவு, நன்று சம்பாதித்து விட்டு இந்தியாவில் ஒரு வீடு வாங்கி வந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே.

இந்தியாவில் வேலை செய்தாலும், அயல் நாட்டில் வேலை செய்தாலும் வேலை செய்வதென்னவோ அயல் நாட்டின் ப்ரோஜெக்ட்களுக்காக தானே. இந்தியர்கள் அனைவருக்கும் அரசாங்க உத்தியோகம் கிடைத்துவிடுகிறதா என்ன? இதில் அயல் நாடு சென்று வேலை செய்தால் என்ன இந்தியாவில் இருந்து வேலை செய்தால் என்ன? ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்க வேண்டும் நல்லபடியாக செட்டில் ஆக வேண்டும் என்பது தானே. வைப்புள்ளவன் சம்பாதித்துக் கொள்கிறான். வாய்ப்பில்லாதவன் பழி போடுகிறான்.

சனல் ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முன்னணி வகிக்கிறது. கணிப்பொருள் ஏற்றுமதியும் அவ்வாறுதானே. பொருள் மட்டும் தானே வேறு. பின் எப்படி ஐ டி மக்கள் மட்டும் அந்நிய நாட்டுக்கு சோரம் போவதாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்?

விலைவாசியின் ஏற்றத்துக்கு காரணம் அரசியல் வாதிகளின் திட்டங்கள் மட்டுமே. வீடு வாங்குவதிலும் மனைகள் வாங்குவதிலும் சரியான திட்டங்கள் இல்லாமையே வீடு விலை உயர்வுக்கு காரணம். விலை ஏற்றத்திற்கு சரியான நிர்ணயம் இல்லாமையே வீடுகளின் உயர்வுக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

நிற்க...
பணத்தை அள்ளிக் கொடுப்பதால், பணத்தின் மதிப்பு ஐ டி மக்களிடையே குறைந்து வருத்வது தெளிவாகிறது. எதிர்காலத்துக்கு சிறிதும் சேமிக்காமல், இருக்கும் காசை செலவு செய்ய துடிக்கும் இளைய சமுதாயத்தில் சிலர் பார்ட்டி கல்செரில் சிக்கி அல்லாடுவது தெரிகிறது.
மற்றும் வேறு ஊர்களில் வந்து வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கையில் காசு இருக்கும் சுதந்திரத்தால், யார் நம்மை பார்க்க அல்லது கேட்க போகிறார்கள் என்ற நினைவில் லிவிங் டுகெதர் என்ற சேர்ந்து வாழும் கலாசாரம் தனி மனித ஒழுக்கத்தை சீரழித்து வருகிறது.

இதனையே சமூகம் கலாசாரம் கேட்டுவிட்டது என கூப்பாடு போடுகிறது. வாழ்க்கையில மன உளைச்சலை தீர்க்க எவ்வளவோ வழிகள் உண்டு. மதுவிலும் மாதுவிலும் மட்டும் மன அமைதி தேடுவது வாழ்கையை சின்னாபின்னமாக்கிப் போடும்.

எதிலும் ஒரு அளவு வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். மேலும் கணவனும் மனைவியும் வேலைக்கு செல்ல ப்ரோஜெக்ட்களும் டெட் லைன்களும் குடும்பங்களின் மேல் உள்ள கவனத்தை குறைப்பதால் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் டே கேர் களிலும் வளர வேண்டிய சூழல் வரலாம். இதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
குடும்பத்திற்கென்று குறித்த நேரம் ஒதுக்க வேண்டும். ப்ராஜெக்ட் இல்லையென்றால் அடுத்த நாளே வேலையே விட்டு உங்கள் கம்பெனி தூக்கி விடலாம். உங்கள் குடும்பம் மட்டுமே கடைசி வரும் உங்கள் கூட வரும். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் நேரம் குடும்பம் உங்களுடன் இருக்காது.

இது மற்ற வேலைகளிலும் உண்டு என்றாலும், அதற்கும் இந்த சமூகம் ஐ டி மக்கள் மேல் தான் பழி போடும்.
-----------------------------------------

Wednesday, August 19, 2009

குட்டிக் கவிதை -6

மரணம்...!
========
மனித
வாக்கியத்தின்...
முற்றுப்புள்ளி
-------------------

Monday, August 17, 2009

உலக சினிமா: தி கியூ ரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (The Curious case of Benjamin Button)




அயல் மொழி திரைப்படங்களை பார்க்கும்போதெல்லாம்.. எப்படி இப்படி வித்யாசமாக சிந்திக்கிறார்கள், ஏன் நமது தமிழ் மொழி படைப்பாளர்கள் இப்படி சிந்திப்பதில்லை என நான் நினைப்பதுண்டு. Irreversible என்ற பிரெஞ்சு படம் தலைகீழாக ஓடும். அதாவது முதலில் படத்தின் முடிவும், படம் முடியும் தருவாயில் படத்தின் துவக்கமும் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த இஸ்பஞொல் இயக்குனரான அலெஜாண்ட்ரோ கோன்ழேலஸ் இன்னரிட்டுவின் படைப்புகள் 'இப்படித்தான்' என அனுமானிக்க முடியாதது போல வழமையான திரைக்கதை அமைப்பை கட்டுடைத்தன. அந்த வரிசையில் வருவது தான் பெஞ்சமின் பட்டன்.

ஒரு வித்யாசமான கரு உடைய ஒரு சிறுகதையை இந்த அளவுக்கு ஒரு அற்புதமான திரைக்கதை நேர்த்தியுடன் திரைப்படம் ஆக்க முடியுமா? என எனக்குள் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய படம் தான் பெஞ்சமின் பட்டன்.

ஸ்காட் பிட்ஸ் ஜெரால்ட் எழுதிய சிறுகதையே, எரிக் ரோத்தின் திரை கதை ஆக்கத்தால் டேவிட் பின்ச்செரின் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படம் ஆனது.

ஒரு குழந்தை முதியவனாக பிறந்து வளர வளர இளமைக்கு திரும்பி, வயதாகும்போது கைக்குழந்தை ஆவது தான் கதை.

முதல் உலகப்போர் முடிந்திருந்த நேரம், அமெரிக்கா தனது வெற்றியை ஊரெங்கும் கொண்டாடி கொண்டிருக்க, தாமஸ் பட்டன் என்ற பட்டன் கம்பெனி முதலாளி கொண்டாடும் கூட்டத்துக்குள் புகுந்து ஓடி தனது வீட்டை அடைகிறான். அங்கு ஒரு அவனது மனைவி ஒரு குரூபியான குழந்தையாய் பெற்றுவிட்டு இறந்து போய்விடுகிறாள்.குழந்தையின் அவலட்சண முகம் அவனை தாக்குகிறது. அது ஒரு பிசாசு என நினைக்கிறான். டாக்டேர்களோ அக்குழந்தைக்கு கண்களில் காடராக்ட் என்றும் மூட்டு வலி என்கிற ஆர்திரிடீஸ் என்றும் கூறி அதிக நாள் தாங்காது என கூறுகின்றனர்.

மனைவியின் இழப்பு, மிக மிக வயதானதாக சுருக்கமான தோலுடன் தோற்றமளிக்கும் அவலட்சண குழந்தையின் மேல் அவனது கோவம் பாய்கிறது. அதனை நதியில் போட்டுக் கொல்ல தூக்கி கொண்டு ஓடுகிறான். போலீஸ் அதனை கண்டு அவனை துரத்த, ஒரு முதியோர் இல்லத்தின் வாசலில் குழந்தையாய் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.

அந்த முதியோர் இல்லத்தை நடத்துபவள் அன்பும் ஆதுரமும் கொண்ட ஒரு கறுப்பின பெண். அவனது கணவன் தடுத்தாலும் அவளது தாயுள்ளம் அந்த அவலட்சணமான குழந்தையை வளர்க்க தூண்டுகிறது. அக்குழந்தையை முத்தமிட்டு பெஞ்சமின் என பெயரிடுகிறாள்.அவளது பராமரிப்பில் அந்த குழந்தையும் வளர்கிறது. மற்ற குழந்தைகளிடம் இருந்து மாறாக அக்குழந்தைக்கு ஒரு எண்பது வயது தாத்தாவின் தோற்றம். ஆனால் மனதில் குழந்தையின் வயதுக்கேற்ற மனது. மற்ற குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்க பெஞ்சமினோ முதியவர்களின் மத்தியில் தானும் ஒரு முதியவனாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்.அவனுக்கு இருக்கும் வ்யாதியை பற்றி தெரியாமல், அவனையும் ஒரு முதியவன் என்றே கருதி தங்களது கதைகளை பகிர்ந்துகொள்கின்றனர் அந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை தன பாட்டியை காண அவ்விடுதிக்கு வருகிறாள் டெய்சி. அவளுக்கு பெஞ்சமின் மீது அவனது வயதான தோற்றத்தையும் மீறி ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. தனது தோற்றம் கண்டு தன்னை ஒதுக்காமல் தன்னுடன் விளையாடும் அந்த பெண் மீது பெஞ்சமினுக்கும் ஒரு பாசம் ஏற்ப்படுகிறது. இருவரும் நட்பாக பழகுகிறார்கள். பெஞ்சமின் நாளடைவில் சற்கர நாற்காலியை விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறான்.( அவன் இளமை ஆகிக்கொண்டு போவதை அற்புதமாக காட்சிக்கு காட்சி செதுக்கி இருக்கிறார்கள்). ஒரு கப்பலில் வேலைக்கு சேர்கிறான்.

அமெரிக்க வழக்கப்படி அவனுக்கு பதினேழு வயது ஆனா போது வீட்டை விட்டு வெளியேறுகிறான்.அந்த கப்பலில் வேலை செய்தவாறு அலைகிறான். எனினும் அவர்களுக்குள்ளான உடன்படிக்கையின்படி டெய்சிக்கு எங்கு இருந்தாலும் ஒரு போஸ்ட் கார்ட் அனுப்பிவிடுவான் பெஞ்சமின். பனிகாலத்தில் கப்பலை ஓட்ட முடியாததால் ஓரிடத்தில் ஹோடேலில் தாங்கும் பெஞ்சமினுக்கும் அங்கு தங்கி இருக்கும் மற்றொரு பயணி எலிசபெத்துடன் தொடர்பு ஏற்ப்படுகிறது. எனினும் ஒரு நாள் அவனை விட்டு விலகி போகிறாள் எலிசபெத். பேர்ல் ஹார்பர் குண்டினால் தாக்கப்பட்ட சமயம் பெஞ்சமினின் கப்பலும் போரில் ஈடுபட பெஞ்சமின் சகாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றனர்.
போர் முடிந்து வீடுதிரும்பும் பெஞ்சமின் அழகான இளைஞனாக உருமாறி இருப்பதை கண்டு ஆனந்தப்படுகிறாள் அவனது வளர்ப்புத் தாய் குயினி. அப்போது மீண்டும் டெய்ஸியை தேடி கண்டுபிடிக்கிறான். அவள் அழகான யுவதியாக ஒரு பாலே டான்செராக உருபெற்று இருக்கிறாள். இருவரும் காதல் கொண்டு மனம் செய்து கொள்கின்றனர். டெய்சி ஒரு பெண் குழந்தையை கருத்தரிக்கிறாள். பெஞ்சமினுக்கு பயம். எங்கே அவளும் தன்னை போல பிறந்துவிடுவாளோ என்று. நல்லவேளையாக அவள் எல்லோரையும் போல ஆரோக்கியமான குழந்தையாக பிறக்கிறாள்.
பெஞ்சமின் டெய்ஸியை உயிராய் காதலிக்கிறான். அதனாலேயே அவளை விட்டு விலகி போக தீர்மானிக்கிறான். தன இளமை திரும்ப திரும்ப அவன் விரைவில் தான் குழந்தையாக போக போகிறோம் என அவனுக்கு புரிந்து டெய்சிக்கு தொந்தரவு தர அவன் விரும்ப வில்லை.

அவளை வேறொரு மணம் புரிந்து தனது குழைந்தைக்கு ஒரு நார்மல் மனிதன் தகப்பனாக இருக்க வேண்டும் என அவளிடம் சொல்லி அவளிடம் இருந்து விடைபெற்று உலகமெங்கும் சுற்றி திரிகிறான். பல வருடங்கள் கழித்து டெய்ஸியை சந்திக்கும்போது அவனுடைய குழந்தை பனிரெண்டு வயது சிறுமியாக வளர்ந்து நிற்கிறாள். டெய்சி மனைவி இழந்தவனை மணம் செய்து இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் விலகுகிறான். அவனுடைய வளர்ப்பு தாய் இறந்ததும் அந்த முதியோர் விடுதியை அவளுடைய மகள் நடத்துகிறாள். அங்கு வந்து சேர்கிறான் பெஞ்சமின் அப்போது அவன் சின்னஞ்சிறு சிறுவனாக இருக்கிறான். அவனுக்கு பலதும் மறந்துவிடுகிறது என கூறுகிறார்கள்( அவனுக்கு வயது ஆகிவிட்டதை அப்படி தெரிவிக்கப் படுகிறது).டெய்சி அந்த சிறுவனை தத்தெடுத்துக் கொள்கிறாள். அந்த சிறுவன் பின்னர் கைகுழந்தைஆகி வயதான டெய்சி இன் கைகளில் அவளை பார்த்தபடியே உயிரை விடுகிறது.

படத்தில் எனக்கு பிடித்த வசனம், பெஞ்சமின் தன வளர்ப்பு தாய் குயினி இடம் கேட்கிறான். 'எதற்கு எல்லாரும் செத்து செத்து போகிறார்கள்?'அதற்க்கு அவள் பதில்,'மகனே, உயிருடன் இருப்பவர்களின் மதிப்பு நமக்கு தெரியாது. இறந்தபின்பு தான் அவர்கள் நமக்கு முக்கியமானவர்கள் என நமக்கு புரியும் நமக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என காட்டவே அவர்கள் இறந்து போகிறார்கள்.'

படத்தில் பிரம்மிக்க வைக்கும் விடயம் படத்தின் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்ப மாறும் படத்தின் உடைகள், கலை இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு. பெஞ்சமினுக்கு வயது குறைந்து கொண்டு வருவதை ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கி வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மற்றும் பெஞ்சமினாக நடித்திருக்கும் பிராட் பிட் மற்றும் டேய்சியாக நடித்திருக்கும் கேட் ப்லன்செத்தின் நடிப்பு அற்புதம். அந்த வயதுக்கேற்ற முகபாவங்களை அனாயசமாக கொண்டு வருகிறார் பிராட். தனது கணவனின் வினோத வ்யாதியை தாங்கி கொண்டும் தங்கி கொள்ள முடியாமலும் என பின்னி எடுத்திருக்கிறார் கேட்.

படத்தின் நீளம் சில சமயங்களில் ஆயாசத்தை கொடுக்கிறது. பெஞ்சமின் போருக்கு செல்வதும் போர் காட்சிகளும் படத்தின் ஓட்டத்துக்கு ஒரு தடை கல்.

இத்திரைப்படம் பதிமூன்று பிரிவுகளில் ஆஸ்கார் க்கு பரிந்துரைக்கப்பட்டு ஸ்லம்டொக் மில்லியனர் எட்டு விருதுகள் அள்ளிக் கொள்ள, பெஞ்சமினுக்கு கிடைத்த விருதுகள் மூன்று. கலை இயக்கம், மேக் அப் மற்றும் விசுவல் எப்பெக்ட்.

படத்தை இழைத்து இழைத்து கொடுத்திருக்கிறார்கள். அற்புதமான படைப்பு.
---------------------------

Thursday, August 13, 2009

இன்று..!


(இது ஒரு மீள் பதிவு...
விகடன் 63 ஆம் சுதந்திர தின சிறப்பு பக்கத்திற்காக எழுதப்பட்டது.)

http://youthful.vikatan.com/youth/india63/Nilamukilan15082009.asp

வலது தோள்பட்டை
தீயில் பட்டது போல்
சுடுகிறது...
வலி,
இதயத்தில் நுழைந்து
முளையில் விழுகிறது.
எதிரி நாட்டு தோட்டா துளைத்திருகிறது.

தரையில்
விழுந்து கிடக்கிறேன் நான்...
பனி நிறைந்த வெள்ளை நிலம்
என்
ரத்தத்தால்
சிவபபாகிக்கொண்டிருகிறது...

என்னை
நாட்டின் ராணுவத்துக்கு
அர்ப்பணித்த
என்
தாய் தந்தைக்கு
முதல் வணக்கம்....

இன்று
எங்காவது ஒரு குழந்தை
பிறந்த நாள் கேக்கை
வெட்டிக்கொண்டிருக்கும்....

இன்று
எங்காவது ஒரு அரசியல் வாதி
யாரிடமாவது
லஞ்சம்
வாங்கிக்கொண்டிருப்பார்..

இன்று
எங்காவது
ஒரு கற்பழிப்பு
நடந்து கொண்டிருக்கும்...

இன்று
பிறந்த
பெண் குழந்தையை கொல்ல
யாராவது கள்ளிப்பாலை
அதன் வாயில்
ஊற்றிக்கொண்டிருப்பர்கள்.

இன்று
எதாவது ஒரு விடுதியில்
ஆணும் பெண்ணும்
பணத்துக்காகவும்,
உடல் பசிக்காகவும்
இணைந்து கொண்டிருப்பார்கள்..

இன்று
வரதட்சணைக்காக
ஏதாவது ஒரு வீட்டில்
ஸ்டவ் வெடித்திருக்கும்..

இன்று
திருமணமான ஏதாவது ஒரு ஜோடி
விவாகரத்துக்காக
கோர்ட் படி ஏறி கொண்டிருக்கும்...

இன்று
எதோ மதத்தை சேர்ந்த
சாமியார்
எதற்காகவோ கைது செய்யப்பட்டிருப்பார்.

இன்று
ஏதாவது ஒரு நடிகன்...
'அன்பான ரசிகனே' என
மூளை சலவை செய்ய ஆரம்பித்திருப்பார்.

இன்று
எங்காவது சாதி மோதலில்
பல உயிர்கள் மடிந்திருக்கும்...

இன்று
மதத்துக்காக
'மதம்' பிடித்த மனிதர்கள்
எங்காவது
மோதிக்கொண்டிருப்பர்கள்...

இன்று
எதாவது இளைஞன்
வேலைக்காக
எதாவது ஒரு அலுவலகத்தின்
கதவை
தட்டிக்கொண்டிருப்பான்...


இன்று
எதாவது ஒரு சினிமா நடிகனின்
முதல் நாள் காட்சியில்
அவன் கட் அவுட் மேலிருந்து
கீழே விழுந்த ரசிகன்
உயிரை விட்டிருப்பான்...

எனினும்,
நாட்டுக்காக துடித்து கொண்டிருக்கும்
இதயங்களுடன்
எனது இதயமும் துடிக்கட்டும்...

அருகில் இருக்கும் கம்பத்தில்
என் பையில் இருக்கும் கொடியை கட்டி
சர சர வென ஏற்றுகிறேன்.

நொறுங்கிப்போன எலும்புகளுடன்
வலக்கையை உயர்த்தி
கொடி வணக்கம் செய்து
செத்து மடிகிறேன்......

சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...