Friday, February 27, 2015

உலக சினிமா: ஈடா (போலந்து) ஆஸ்கார் 2015 திரைப்பட வரிசை.



கன்னியாஸ்த்திரி ஆவதற்காக படித்துக் கொண்டிருப்பவள் ஆன்னா.

சிறுவயதில், அனாதையாக யாராலோ அந்த ஆஸ்ரமத்தின் முன்னே விடப்பட்டவள். கன்னிகாஸ்திரி ஆவதற்கு முன்பு கடவுளின் முன்பு உறுதி மொழி எடுத்தால் தான் அவள் கன்னிகாஸ்திரி ஆக முடியும். அதற்க்கு முன்பு அவள் தனது வீட்டிற்கு சென்று வரலாம். உறுதி மொழி எடுத்தபின்னர் அவள் கடவுளுக்காக படைக்கப்பட்டவள்.கடவுளை சேவித்தே அவளது வாழ்வினி கழியும்.

தலைமை கன்னிகாஸ்திரி, ஆன்னாவுக்கு ஒரு தூரத்து அத்தை முறை உறவுப்பெண் இருப்பதாகக் கூறி அவளை சந்தித்து பிறகு வந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம் என்று அவளை சென்று வர அனுமதிக்கிறார்.

அந்த உறவுக்கார அத்தையின் விலாசம் தேடி கண்டு அவள் வீடு சேர்கிறாள் ஆன்னா. அவள் எதிர் கொள்வது ஒரு நடுத்தரவயது சதா புகைத்து கொண்டு கையில் மது போத்தலுடன் இரவு உடையில் ஒரு பெண்மணியை. அவள் சென்று சேரும் நேரத்தில் ஒரு ஆடவன் உடை அணிந்து கொண்டு அந்த வீட்டில் இருந்து விடை பெற்று செல்கிறான். 'நான் யார் என் தொழில் என்ன என்று உன்னிடம் சொல்லவில்லையா?' என கேட்கிறாள் அவள் அத்தை 'வாண்டா குருஸ் '. இதன் மூலம் அவள் தொழில் என்ன என்பதை பார்ப்பவரை தீர்மானிக்க வைக்கிறார் இயக்குனர்.

ஆன்னாவின் இயற் பெயர் ஈடா லிபென்ஸ்டைன்  என்றும் அவள் ஒரு யூத இனத்து குடும்பத்தை சார்ந்த பெண் என்றும் வாண்டா மூலம் அறிகிறாள் ஆன்னா. அவளது பெற்றோர் யார் என்பதை அறிந்து கொள்ள வாண்டாவும் ஆன்னாவும் சாலைப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்த பயணத்தின் ஊடே வாண்டா அவள் யூகித்தது போல அல்லாமல்  ஒரு நீதிபதி என்பதை அறிகிறாள் ஈடா. பயணத்தினூடே வாண்டா தண்ணி, புகை, ஆண்கள் என்று அனைத்து கேட்ட பழக்கங்களுடன் கூடிய ஒரு சாத்தானாகவும், ஆன்னாவை கன்னிகாஸ்திரி உடை அணிந்து கருணை உருவம் கொண்ட ஒரு தேவதையாகவும் காட்டப்படுகிறது. ( இதனை வசனமாகவும் வாண்டாவின் கதாபாத்திரம் பேசுகிறது).

இவர்களின் பயணத்தில் நடுவே ஒரு சாக்ஸ் இசைக்கும் இளைஞன் ஏறிக்கொள்ள அவனுக்கு ஆன்னாவின்  மீது ஈர்ப்பு ஏற்ப்படுகிறது. ஆன்னாவின் பெற்றோர் யார் என கண்டுபிடித்து அவர்கள் நிலையை அறிந்ததும் பெரும் அதிர்ச்சிக்குள்ளகிறார்கள் ஆன்னாவும் வாண்டாவும். வாண்டா மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள, ஆன்னா என்கிற ஈடா என்ன முடிவு எடுக்கிறாள் என்பது கிளைமாக்ஸ்.

ஈடா படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம் கண்களை விட்டு அகல மறுப்பதற்கு காரணம், படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கலை. படத்தின் முதல் காட்சியில், பனி பெய்து கொண்டிருக்கும் அந்த பகலில் ஏசுவின் சிலையை சுமந்து வரும் கன்னிகாஸ்திரிகளின் காட்சி முதலே அதகளம் ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொரு காமிரா கோணமும் மற்ற திரைப்படங்களில் இருந்து வேறுபட்டு தனித்து ஒரு ஓவியம் போல நிற்பதற்கு காரணம், Lukasz Zal,Ryszard Lenczewski என்ற இரட்டையர் தான். படத்தின் கதை நடக்கும் காலத்திற்கேற்ப கருப்பு வெள்ளையில் படம் பிடித்திருப்பது படத்தின் கதை காலத்திற்கு கூடுதல் நம்பகத் தன்மையை கொடுக்கிறது. ஒரு காட்சியின் பிரேம் முழுக்க வியாபித்திருக்கும் பின்னணி போருள்களிநூடே  ஒளியை பாய்ச்சி, பிரேமின் கீழ் பகுதியில் மட்டுமே கதாபாத்திரங்களின் முகங்களை காட்டும் அழகு, வேறு படங்களில் காணாதது. படத்தில் ஆன்னா என்கிற ஈடாவாக நடித்திருக்கும் அகதா (Agata Trzebuchowska) மிக அற்புத தேர்வு.  அவர் முகத்தில் இருக்கும் இன்னொசென்ஸ் மற்றும் தேஜஸ் ஒரு நிஜ கன்னிகாஸ்திரியின் பிரதிபலிப்பு.

வாண்டாவாக நடித்திருக்கும் அகதா (Agata Kulesza)  யாருமற்ற தனிமையில் குடியும் சிகரெட்டும் ஆண் நண்பர்களுமாக இருந்தும் டிப்ரஷனில் அவதிப்படும் கதாபாத்திரம். அதே சமயத்தில் ஈடாவின் மீதுள்ள அன்பு, என்று பிரமாதமாக கலந்து கட்டி நடித்திருக்கிறார்.

இயக்குனர் பாவல் பவ்ளிகொவ்ஸ்கி (Paweł Pawlikowski). ஈடாவின் திரை மொழியில், திரை உலக ஜாம்பாவான்  இங்கமார் பெர்க்மானின் சாயல் அதிகம் தெரிகிறது. படத்தின் மீதான ஒளிப்பதிவின் தாக்கத்தை அதிகரிக்க வைத்து எளிமையான திரைக்கதை அமைத்திருக்கிறார். படம் முழுதும் கொட்டிக் கொண்டிருக்கும் பனி மழை படத்தின் கதைக்கு ஏற்ப பயன்படுத்திருப்பது பார்வையாளனை கதைக்குள் இழுக்கும் தந்திரம்.

இசை, படத்தின் வெகு சில இடங்களில் மட்டுமே மெதுவாக ஒலிக்கிறது. மௌனத்தை கூட படத்தின் இசையாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறார் இசையமைப்பாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன்.

உலகின் பல்வேறு திரைப்பட விருதுகளை வென்றிருக்கும் இத்திரைப்படம், சிறந்த அயல்நாட்டு திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த அயல் நாட்டு திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது.

நல்ல திரைப்படங்களை தேடும் ரசிகர்களுக்கு விருந்து ஈடா.

ஈடா - அமைதிப் புயல்.

Thursday, February 26, 2015

மன்னிப்பு!

மன்னிப்பு
==========


மன்னிப்பு என்பது
வெறும்
வார்த்தையில்
தொக்கி நிற்கிறது!

மன்னிப்பு
கேட்கப்பட்ட
கணத்தைக் கடந்து
அந்த வார்த்தைக்கு
மதிப்பேதும்
இருப்பதில்லை.

மன்னிப்பு
வழங்கப்பட்ட நொடியில்
ஏற்படும் கர்வம்
சில நொடிகள் தாண்டி
நிலைப்பதில்லை!.

மன்னிப்பில்
பரிமாற்றப்படும்
கண்ணீர் துளிகளில்,
உப்புச்சுவை
தெரிவதில்லை!

எதிராளியின் இதயத்தில்
பாரத்தை ஏற்றிவிடும்
திருப்திக்காக
சிலசமயம்
மன்னிப்புகள்
கேட்கப்படுகின்றன

மன்னிப்பு
கேட்டுவிட்டதால்
தன மீதான குற்றச்சாயங்கள்
துடைக்கப்பட்டுவிட்டதாக
நம்பப்படுகின்றன .

தான்
மன்னிப்பு கேட்டுவிட்டதாக
பிறரிடம் சொல்லிக் கொள்ளும்
வாய்ப்புகளை
சில
மன்னிப்புகள் ஏற்ப்படுத்துகின்றன.

மன்னிப்பினால்
தற்காலிக நிம்மதி தவிர
ஆகக்கூடிய  காரியம்
வேறொன்றுமில்லை.

கேட்கப்பட்ட காலத்தை தாண்டிய
செயலில் இருக்கிறது,
உண்மையான மன்னிப்பின்
மதிப்பு .!

Wednesday, February 11, 2015

ஆம் ஆத்மி சுனாமி!




தூய்மை இந்தியா அமைப்பை தொடங்கியது பிரதமர் மோதி என்றாலும் அதனை செயல்படுத்தியது ஆம் ஆத்மி. ஆம் தில்லி சட்டபேரவை தேர்தலில் எழுபதுக்கு அறுபத்தேழு இடங்களை வென்று அரசியலின் மிகப் பெரும் திமிங்கலங்களான  காங்கிரஸ் மற்றும் பா ஜா கா கட்சி இடங்களை துடைத்தேறிந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மேல் இருந்த அதிருப்தியில் அப்போதைக்கு வலிமையாக இருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து மக்கள் பெரும் வெற்றி பெற வைத்தது மோதி அலைக்கு கிடைத்த வெற்றி என்று தப்பு கணக்கு போட்டு இறுமாப்போடு அலைந்ததில் இருந்து பா ஜா காவின் சரிவு துவங்கியது. பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து மோதி அரசு, தேர்தலுக்கு முந்தய தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது.மோதி தேசத்தின் பிரச்சனைகளை சமாளிப்பதில் ஆர்வம் காட்டாது, வெளிநாடுகளுக்கு பறந்து வெளிநாட்டு தலைவர்களோடு கை குலுக்கி படம் பிடித்து, தான் ஒரு உலக தலைவன் என காண்பிப்பதில் தான் முனைப்பாக இருந்தார். தனது தாய் மற்றும் சகோதர இயக்கங்களான ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவ இயக்கங்கள், சிறுபான்மை மதத்தினரை கண்டு 'இந்துக்கள் மட்டுமே, ராமரின் பிள்ளைகள், பிற மதத்தவர் முறை தவறி பிறந்தவர்கள்', 'கர் வாப்சி', இந்து ராஷ்டிரம், இந்துக்கள் ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், என்று உளறின உளறல்களை எல்லாம் கண்டும் காணதது போல இருந்து அவர்களின் உளறல்களை ஆமோதிப்பதை போல இருந்த செய்கைகள், உலகின் மாபெரும் ஜனநாயகத்தின் பிள்ளைகளான இந்திய குடிமகன்களை, பிரதமரின் மேல் எரிச்சல்பட வைத்தது.

பிரதமர் மோதியின்  மிகப்பெரும் சாதனையாக கருதப்பட்ட அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்  கொண்டு வந்த திட்டம். மன்மோகன் சிங்கின் கனவு திட்டம். அதற்காகத்தான் மன்மோகன் சிங் ஒபாமா வெற்றி பெற்றபின் அமெரிக்காவின்  ஸ்டேட் டின்னர் க்கு அழைக்கப் பட்டார். ஆனால் அது நிறைவேறாமல் போனதற்கு மன்மோகன் அரசு அறிவுபூர்வமாக வைத்த செக் தான் காரணம் என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீடு, அணு உலைகளை நிர்மாணிக்கும் அமெரிக்க கம்பனிகள் தான் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததால் அவரது காலத்தில் அந்த திட்டம் நிறைவேறாமல் போனது. இப்போது மோதியின் அரசு அமெரிக்க அரசுக்கு பணிந்து அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை அமெரிக்க அரசு தர வேண்டியது இல்லை என்ற ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டதாக தெரிய வருகிறது.

ஒபாமாவின் வருகையில், மோதி, எகிப்து அரசின் கொடுங்கோலனான ஹோஸ்னி முபாரக் பாணியில்  பத்து லட்சத்துக்கு உடை அணிந்து வந்ததை அவரது கட்சிக்காரர்களே விரும்ப வில்லை. டீ விற்றவன் பிரதமராகக் கூடாதா என கேட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்ததும் அவரது கடந்த வாழ்க்கையை மறந்து விட்டதை மறக்கவில்லை மக்கள். தில்லியின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பா ஜா காவின் கூடாரத்தில் திகில் கிளம்பி விட்டது. ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியானதை அறிந்ததும், தில்லியில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற முனைப்பில், ஆம் ஆத்மியிலிருந்து  கிரண் பேடியை அழைத்து வந்து குறைந்த நாட்களின் இடைவெளியில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்தியதை, பா ஜா காவின் வளர்ச்சிக்கு காலம் காலமாக பாடுபட்ட பலரை வருத்தத்தில் ஆழ்த்தியது. தனது மத்திய அரசாங்க செயல்பாடுகளை ஸ்தம்பிக்கும் அளவுக்கு பல மந்திரிகளை பல எம் பிக்களை களத்தில் இறக்கிய பா ஜா கா கடைசியில் மோதியையும் களத்தில் இறக்கியது.

பத்து கோடிக்கும் அதிகமாக பத்திரிகைகளின் முகப்பு பக்கங்களில் விளம்பரங்கள் செய்த பாஜாகா, ஆம் ஆத்மியின் பண வரத்து குறித்து கேள்வி எழுப்பியது ஆச்சர்யமான விஷயம். அவாம் என்ற ஆம் ஆத்மியின் முன்னாள் கிளையில் உள்ளவர்களை ஏவி அவர்கள் கனடாவில் இருந்து  ஜாஸ்ப்ரீத் மான் என்பவர் ஆம் ஆத்மியின் கட்சியின் மேல் உள்ள பிடிப்பால் ஆயிரம் கனடிய டாலர்களை அனுப்பியதை குறித்து கேள்வி எழுப்பி, ஆம் ஆத்மியை திருடனாக விளித்தார்  பா ஜா காவின் நிர்மலா சீதாராமன். பின்னர் ஜாஸ்ப்ரீத் மான் அவர்களே தொலைக்காட்சி நேரலையில் தோன்றி தான் பணம் அனுப்பியது எந்த சட்ட விரோதனமான வழியும் அல்ல  அல்ல என்று சொன்னதும் அவாமின் நேர்மை முகம் கிழிந்து தொங்கியது. அவர்கள் காட்டிய காசோலை பொய்யான ஒரு மோசடி என்றும் பாஜாகாவின் வேலை இது என்றும் வெளியே தெரிந்தது. அரவிந்தை நக்சலாக சித்தரித்தார் மோதி.அரவிந்தின் குடும்பம், அன்ன அசாரே,  அரவிந்தின் கோத்திரம் அனைத்தும் பாஜாகாவின்  கேலி சித்திரங்களில் கேவலப் படுத்தப்பட்டன.தனிநபர் தாக்குதல் அதிகம் நடந்ததை அரசியல் விமர்சகர்கள் மற்றும் மக்கள் ரசிக்கவில்லை.

ஆம் ஆத்மி தேர்தல் தேதி அறிவிக்கப் படும் முன்னரே தேர்தலுக்கான அடித்தள வேலைகளை துவக்கி விட்டது. நாடெங்கும் புரையோடிப் போன லஞ்சத்தை எதிர்த்த போராட்டத்தை முன் வைத்ததே ஆம் ஆத்மியின் மிகப் பெரிய பலம்.லஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள் ஆம் ஆத்மி கட்சி முழுக்க பரவி இருந்தார்கள். ஐ டி இளைஞர்கள் மாணவர்கள்  அனைவரும் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆதரித்தார்கள். தங்களது சொந்த வேலைகளில் இருந்து விடுப்பு  எடுத்துக் கொண்டு வந்து கட்சியின் வெற்றிக்காக  உழைத்தார்கள். ப்ளாஷ் மாப் என்ற நடனத்தை ஆங்காங்கே நடத்தி ஓட்டு  சேகரித்தார்கள். விஷால் டட்லாணி என்ற பாடகரின் 'பாஞ்ச் சால் கேஜ்ரிவால் ' (ஐந்து வருடங்களும் கேஜ்ரிவால்) ஆம் ஆத்மியின் டெல்லி கீதமானது. அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகிவிட அந்த பாடலை பாடியும் நடனம் ஆடியும், அடித்தட்டு மக்களிடம் இருந்து தங்கள் பிரச்சாரத்தை  ஆரம்பித்தனர். படித்தவர்கள், தேச நலனில் அக்கறை கொண்டவர்கள், லஞ்சத்தை வெறுப்பவர்கள் அனைவரும் ஆம் ஆத்மியில் இணைந்து ஒரு விடுதலை போரைப் போல  ஆம் ஆத்மியின் பிரச்சாரத்தை கடைக் கோடி டெல்லி வாசி வரை கொண்டு சேர்த்தனர். டில்லியில் வாழும் தமிழர்களின் ஓட்டை சேகரிக்க தமிழகத்தில் இருந்து முப்பது பேர் கொண்ட ஆம் ஆத்மி குழு ஒன்று புறப்பட்டு சென்று தமிழில் பிரச்சாரம் செய்து ஓட்டு  சேகரித்தனர்.


மீடியாக்களில்  ஆம் ஆத்மியின் ராகவ் சட்டா மற்றும் ஆஷிஷ் கைத்தான் ஆகியோர் ஆம் ஆத்மியின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களை மிக நாகரிகமாக எதிர்கொண்டனர். தன்னை எதிர்த்து அரசியல் செய்யும் தனது முன்னாள் தோழியான கிரண் பேடியை எதிர்த்து எதுவுமே அரவிந்த் சொல்லவில்லை.' அவர் ஒரு நல்ல பெண்மணி. அவர் மனம் புண்படும்படி தான் எதுவும் பேசப் போவதில்லை ' என்று ஒவ்வொரு முறை கிரனைப் பற்றி கேட்கும்போதும் சொன்னார்.

ஆம் ஆத்மி இப்படியாக திறமையாக வகுத்த வியூகங்களின் படி மக்கள் ஆம் ஆத்மியின் மீதான தங்களது அபிரிதமான நம்பிக்கையை எழுபதுக்கு அறுபத்தேழு என்ற கணக்கில் காட்டி உள்ளனர். எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு பத்து விழுக்காடுகள் இடங்களை எதிர்க்கட்சி வென்றிருக்க வேண்டும். பா ஜா கா மூன்று இடங்களை வென்றிருந்த போதிலும் பா ஜா கா வுக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை தர விழைந்திருக்கிறது ஆம் ஆத்மி. பாஜாகா பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை காங்கிரஸ் அரசுக்கு தராமல் வெற்றிடமாகவே இதுவரை வைத்திருப்பதை குறிப்பிடவேண்டி உள்ளது.

ஆம் ஆத்மி இனிதான் அரசியல் சதுரங்கத்தின் கடும் சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆம் ஆத்மி பொதுமக்களுக்கு வாக்களித்த லஞ்ச ஊழலற்ற நிர்வாகம், மின்சாரம், தண்ணீர், பெண்கள் பாதுகாப்பு, தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அனைத்தும் அத்துனை  எளிதான விடயங்கள் அல்ல. மத்திய அரசின் ஒத்துழைப்பும் இதில் முழுமையாக தேவைப்படுகிறது. பெரும்பான்மை பெற்று விட்டதால் அகம்பாவத்தில் ஆடாமல், சுய துதிபாடிகளை  அனுமதிக்காமல்,மக்கள் பிரச்சனையை எதிர்கொண்டு தீர்வு கண்டு ஒரு முன் மாதிரியான அரசாக தில்லி அரசாங்கம் திகழ்ந்தால், காங்கிரஸ் மற்றும் பாஜாவின், ஊழலான மதவாத அரசுக்கு எதிரான  ஒரு நல்ல மாற்றாக ஆம் ஆத்மி மற்ற மாநிலங்களிலும் பரவி இந்தியா ஊழலற்ற நாடாக மாற வாய்ப்புண்டு. ஆம் ஆத்மி அரசின் நேர்மை ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...