Thursday, December 30, 2010

உலக சினிமா: ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி (டென்மார்க்) 18+


டென்மார்க் ஒரு சிறிய நாடு. எனினும் பசுவுக்கும், பால் சம்மந்தப்பட்ட வெண்ணை, சீஸ்,தயிர் என அனைத்துக்கும் பெயர் போனது. டென்மார்க் நாட்டின் பிரதான மொழியான  டானிஷ் திரைப்படங்களிலும் சிறந்த திரைப்படங்கள் வெளிவந்து உலக சினிமா ரசிகர்களை அவ்வப்போது கொள்ளையிட்டு போவதுண்டு. லார்ஸ் வான் டயர் (ப்ரேகிங் தி வேவ்ஸ், டாக்வில் ),சுவீடனை சேர்ந்த லூகாஸ் மூடிசன்  போன்ற உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் இந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களே. ஹான்ஸ் ஓலே பெர்னடேல் என்ற டென்மார்க் இயக்குனர் த்ரில்லர் வகை திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர். அவர் இயக்கிய டானிஷ் திரைப்படமே ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி .

காக்க காக்க சூரியாவை போல மழையில் ஒருவன் விழுந்து கிடக்க...அன்புசெல்வனைப் போலவே கதையை சொல்ல ஆரம்பிக்கிறான் யோனாஸ். 'என்னை மழை நாளில் சுட்டு போட்டிருக்கிறார்கள், மர்மக்கதை என்றாலே ஒரு அழகிய பெண் வரவேண்டுமே',யோனாஸ் யோனாஸ் என ஒரு பெண் வந்து அவன் அருகே கதற..'இதோ வந்து விட்டாள்', எனத் துவங்குகிறது கதை.


ஒரு பெண் ஒருவனை கொலை செய்ய அவன் ரத்த குளம் கட்ட கீழே விழுகிறான். அத்துடன் யோனசின் கதை. மனைவி இரண்டு அழகு குழந்தைகள் என அளவான குடும்பம். அவனுடைய வேலை, கொலை செய்யப்பட பிணங்களை போலீசுக்காக போட்டோ எடுத்து கொடுப்பது. காலை எழுந்து மனைவி குழந்தைகளை, வேலையிலும் பள்ளியிலும் விட்டு விட்டு தனது அலுவலகத்துக்கு செல்லும் ஒரு சராசரி மனிதன் யோனாஸ். அன்றும் அப்படியே, தனது குடும்பத்துடன் வேலைக்கு புறப்பட, குடும்பமே அவனது காரை எள்ளி நகையாடுகிறது. அது ஓட்டை கார் என்றும் அதனை எப்போது தான் மாத்துவானோ எனவும் கிண்டல் செய்தபடி வர கார் அதற்கேற்றார்போல நடுரோட்டில் நின்றுவிடுகிறது. அப்போது அவன் ரியர் வியூவில் வேகமாக தன காரின் பின்னே வரும் இன்னொரு கார் தன காரின் பக்கவாட்டில் மோதியபடி கண்ட்ரோல் இழந்து எதிரில் வரும் வேறொரு காரில் மோதி குட்டிகாரணம் அடிக்க. அந்தக் காரில் இருந்து தூக்கி எறியப் படுகிறாள் அந்தப்பெண். யோனாஸ் ஓடி சென்று அந்த பெண்ணை காப்பாற்ற முயல, அவள் 'செபாஸ்தியன், செபாஸ்தியன் ' என முனகியபடி மயங்கி விழுகிறாள்.

தன்னால் தான் அந்த பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டது என்று மனசாட்சி உறுத்த அவளைக் காண மருத்துவமனைக்கு செல்கிறான் யோனாஸ். அவளது குடும்ப உறுப்பினர்கள் தவிர யாரையும் உள்ளே விட மருத்துவமனை ஊழியர் மறுக்க, தான் அவளது பாய் பிரெண்ட் என பொய் சொல்லி உள்ளே நுழைய, அவள் தான் அந்தப்பெண்ணின் பாய் பிரெண்ட் என அறிந்த அவளது சகோதரன் அவனை உள்ளே கூடி செல்கிறான். அங்கே அவளது குடும்பமே சோகத்தில் மூழ்கி இருக்க, யோனசை அந்தப்பெண் ஜூலியாவின் பாய் பிரெண்ட் என அறிமுகம் செய்து வைக்கிறான், அந்தப் பெண்ணின் சகோதரன்.

அப்போது தான் அந்தப் பெண்ணின் குடும்பம் ஒரு மிகப்பெரிய பணக்கார குடும்பம் என உணர்கிறான் யோனஸ். அவள் கோமாவில் இருப்பதாகவும், அவனால் மட்டுமே அவளை நினைவுக்கு கொண்டு வரமுடியும் என அவளது மருத்துவரும், அவளது குடும்பத்தாரும் நம்ப, அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு கிளம்பி விடுகிறான்.யோனஸ்.

ஜூலியாவின் சிதைந்து போன,  கார் இருக்கும் இடம் சென்று அவள் காரில் இருக்கும் ஒரு பெட்டியை எடுத்து அந்த குடும்பத்திடம் சென்று தான் அவளது காதலன் செபஸ்தியன் இல்லை என சொல்லிவிட தீர்மானித்தபடி மருத்துவமனைக்கு செல்ல, அங்கே அவளது குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறது. ஜூலியா கோமாவிலிருந்து கண் விழித்து விட்டாள். அதற்க்கு காரணம் செபஸ்தியன் என்கிற யோனஸ் தான் என நம்பும் அவர்களிடம் தான் அவன் இல்லை என அவன் சொல்ல, அவளது தந்தையோ, அவள் விபத்தில் உருக்குலைந்து போய் இருப்பதால் தான் அவன் அப்படி சொல்கிறான் என அவர் நினைத்து அவனிடம் ஒரு பிளான்க் செக்கை திணிக்கிறார். தனது பெண் மீண்டு வருவது அவனது கையில் தான் இருக்கிறது என அவனிடம் கெஞ்ச, அவனும் மனது கேட்காமல் சம்மதித்து செபாஸ்தியான் போல நடிக்கிறான்.

விபத்தில் பார்வை மங்கி, பழைய ஞாபகங்கள் அனைத்தும் மறந்து (அம்னிசியா) கிடக்கும் ஜூலியா விடம், அவள் தாய் லாந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் அவள் விபத்து நடந்ததை வைத்து, தாங்கள் தாய் லாந்தில் எப்படி எல்லாம் சந்தோஷமாக இருந்தோம் என அவளிடம் விவரிக்கையில் அவளும் அவன் செபஸ்தியன் என்றே நம்புகிறாள். இதற்கிடையில், தனது போலீஸ் நண்பர்களை வைத்து, செபஸ்தியன் இறந்ததை உறுதிப் படுத்திக் கொள்கிறான் யோனஸ்.  சிறிது சிறிதாக அவளை காதலிக்க ஆரம்பிக்கும் யோனசுக்கும் அவனது மனைவி மெட்டிக்கும் இடையே இடைவெளி விழ ஆரம்பிக்கிறது. இடை இடையே மருத்துவமனையில் உடம்பு முழுக்க பாண்டேஜ் போடப்பட்ட ஒரு உருவம் அவ்வப்போது காண்பிக்கப் படுகிறது.

ஜூலியாவை மிகவும் அக்கறையாக பார்த்துக் கொள்ளும் யோனஸ் ஒருமுறை அவள் உடம்பு முழுதும் கழுவி விடும் வேளையில் தங்களை மறந்து அவர்கள் கலவி கொள்கிறார்கள். சிலநாட்கள் கழித்து அவன் மருத்துவமனைக்கு வரும்போது ஜூலியாவின் குடும்பம் மகிழ்ச்சியுடன் அவள் கர்ப்பமானதை அவனிடம் பகிர்ந்து கொண்டாடுகிறார்கள். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறான். அவனை தனியே அழைத்து செல்லும் ஜூலியாவின் டாக்டர்  கோமாவில் இருக்கும்போது அவளை கர்ப்பமாக்கிய  அவனை கேட்ட வார்த்தையில் திட்டுகிறார்.அப்போது தான் அவள் கோமாவில் இருக்கும்போதே கர்ப்பமாகியுள்ள விஷயம் அவனுக்கு தெரிய அவன் அதிர்ச்சி அடைகிறான்.


இடையே தன ஒரு சோகமான நிகழ்வில் மனைவி குழந்தைகளை விட்டு அவன் பிரிய, ஜூலியா மருத்துவமனயிலிருந்து, விடுவிக்கப்பட, அனைவரும்  ஜூலியாவின் அந்த மிகப்பெரிய மாளிகையில் கூட, அங்கு ஜூலியாவுக்கும், செபஸ்தியன் என்கிற யோனசுக்கும் திருமண அறிவிப்பை பெருமையுடன் செய்கிறார் ஜூலியாவின் தந்தை. இருவரும் திருமணத்துக்கு முன் சேர்ந்திருக்க கடலோரத்தில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்க்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று இருவரும் இருக்கையில் ஒரு நாள் கதவு தட்டப்பட, கதவை திறக்கும் யோனஸ் அங்கு ஒரு மனிதன் நிற்க, அந்த மனிதன் 'தான் செபஸ்தியான்' என அறிமுகம் செய்ய, யோனசுடன் சேர்ந்து நாமும் அதிர்ச்சி அடைகிறோம். அதன் பின்னர் வருவது சில்லிடவைக்கும் கிளைமாக்ஸ்.

ஒரு வினாடி கூட தொய்வில்லாமல் படம் பறப்பதற்கு ஏதுவாக இருப்பது, இப்படத்தின் திரைக்கதை. படத்தில் பல முடிச்சிகள் கிளைமாக்சில் அவிழும்போது வாவ் போட வைக்கிறார் இயக்குனர். இரண்டுக்கும் சொந்தக்காரர் ஓலே பெர்டினால். 

அடுத்து படத்தின் மிக அற்புதமான ப்ளூ டோன் ஒளிப்பதிவு (டேன் லாச்த்சன் ) திரைக்கதையும் ஒளிப்பதிவுமே இப்படத்தின் ஹீரோக்கள்.

படத்தில் யோனசாக நடித்திருக்கும் அண்டெர்ஸ் பெர்தேல்சன் மனைவிக்கும் காதலிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். நினைவுகள் மழுங்கி, பார்வையில்லாமல் தவிக்கும் தவிப்பை ஜுலியாவாக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ரேபெக்கே ஹம்சே.

ஜெட் வேகத்தில் பறக்கும் இப்படம் நிச்சயம் தமிழ் படுத்த ஏதுவான படம்.
அம்னிசியா , பிளான்க் செக்கை நிரப்ப சொல்லுதல், காதல் என தமிழ் படத்தின் பல நிகழுவுகள் இப்படத்தில் வருகின்றன.
யாராவது கூடிய சீக்கிரம் இந்தப் படத்தை சுட்டு தமிழ் படுத்துவார்கள். ( கமலஹாசன், மிஷ்கின், கே எஸ் ரவிகுமார் கவனிக்க!).

சன்டான்ஸ் பிலிம் பெஸ்டிவல், ராபர்ட் பெஸ்டிவல், போடில் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது இத்திரைப்படம்.

ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி -ஜஸ்ட் கோ பார் இட்.

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி...




Wednesday, December 29, 2010

புகைப்படக் கவிதை- ஒரு விவாகரத்தை முன் வைத்து..!


நமக்குள்...
நடக்கும்
நிழல் யுத்தங்களில்..
முடிவுக்கு வந்தன,
முத்தங்கள்

நம்
கனவுகளை புதைத்து..
கல்லறைகள் கட்டிக் கொண்டோம்...

நம்
உறவுப் பாலத்தை தகர்க்க...
நம்
படுக்கை அறையில் நாமே,
வெடிகுண்டுகள் தயாரித்தோம்...

திருமணம் முன்
காத்துக் கிடந்தால்...
களவாடப்பட்டது இதயம்.
இப்போது..
காத்திருந்தால்...
களவாடப் படுகிறது
காலம்.

பறக்கும்
ஒவ்வொரு நிமிடங்களிலும்...
தொலைந்து கொண்டிருக்கிறது,
உனக்கும் எனக்குமான நொடிகள்...

மாற்றிக் கொண்ட மனங்கள்..
தேடிக் கொண்டிருக்கிறது
இளைப்பாற  இடங்கள்.

அன்று
ஒரு
குளிர்பானத்தில்
இரு குழல்களில்
உன்னை நானும்,
என்னை நீயும்
உறிஞ்சினோம்.

இன்று..
நம் கோப்பைகளில்
நிரம்பி இருப்பது..
நம் தாம்பத்ய கீறல்களில்
வழிந்த குருதி...


நீயும் நானும் சேரும்
புள்ளி
அழிந்துகொண்டிருக்கிறது..
நாம்
வேறு வேறு திசைகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்..!

--நிலா முகிலன்.
புகைப்படம்: நிர்மல்.
--

Tuesday, December 28, 2010

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் - 7


                                                      யுங்க்ப்ரவ்.(jungfraujoch)
யுங்க்ப்ரவ் ரயில் நிலையம் தான் ஐரோப்பாவின் உயர்ந்த ரயில் நிலையம். கடல் அளவிலிருந்து 3471 மீட்டர்களில் அமைந்துள்ளது. சுமார் 3571 மீட்டர்களில் ஸ்பிங்க்ஸ் என்ற மலை ஸ்தலம் உள்ளது. அங்கு ஒரு வானொலி தொடர்பு நிலையம் உண்டு. உலக தட்பவெட்ப நிலை  ஆராய்ச்சி நிறுவனமும் யுங்க்ப்ரவ் இல் உண்டு. மலையை குடைந்து ஏழு மைல்கள் சென்றால் தான் யுங்க்ப்ரவ் என்ற அந்த வெள்ளை சுவர்கத்தை அடைய முடியும். 1896 ஆம் ஆண்டு சூலை மாதத்தின் 27  ஆம் தியதி, மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது. கிட்டத்தட்ட 16  ஆண்டுகள் இந்த பணி நடைபெற்றது. பருவநிலை, விபத்துகள் என பலவாறு தடைகள் ஏற்பட்டபோதும், 1912 ஆண்டில் இந்த பணி யுங்க்ப்ரவ் வரை முடிக்கப்பட்டது. அதைவிட உயர்ந்த ஸ்தலமான ஸ்பிங்க்ஸ் வரை ரயில் பாதை அமைக்க இயலவில்லை. எனினும் இதுவே மனிதகுலத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்று என கருதப்பட ஏதுவாக இருந்தது. 

நான்கு ரயில்கள் மாறி யுங்க்ப்ரவ் சென்ற நாங்கள், பனி துகள்கள் பெய்வதால், வெளியே சென்று பனியில் நிற்க இயலாது என அறிவிப்பு செய்திருந்தனர்.  அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மிகுந்த பசி. அங்கே உணவு உண்ணலாம் என நினைத்த பொது பாலிவூட் என்ற நம்மூர் உணவகம் இருப்பதை கண்டு அடடா இந்த குளிருக்கு காரசாரமாய் சாப்பிடலாம் என பாய்ந்த எங்களுக்கு அங்கு வைத்திருந்த உணவுகளை பார்த்ததும், அப்படியே பின்னேறினோம். ஆமா சும்மா பருப்பு, நான் அப்புறம் ரெண்டு போரியல் ஒரு அளவு சாப்பாடு என வட இந்திய உணவு வகைகளுக்கு முப்பைதைந்து சுவிஸ் பிராங்குகள் என போட்டிருந்தது பகல் கொள்ளையாக இருந்தது. அங்கேயே இருந்த மற்றொரு சுவிஸ் உணவகத்தில் நூடுல்ஸ் வாங்கி உண்டு முடிக்கையில் அந்த அறிவிப்பு பலகையை எடுத்து விட்டு எங்கள் வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
இந்த மலையை குடைந்து தான் லிப்ட் மற்றும் ரெஸ்டாரண்டுகள் அமைத்துள்ளனர். இந்த மலையில் வலது புற அடியில் தெரியும் சிறு துவாரம் தான் இந்த வெள்ளை சுவர்கத்தின் நுழைவு வாயில்

அங்கிருந்த லிப்டின் மூலம் ஒரு இருநூறு அடி கீழ் நோக்கி சென்றதும் இறங்கி வெளியே வந்து பார்த்தால் ஒரு குகைக்குள் நின்று இருந்தோம். கடும் குளிர். நிச்சயம் இங்கு செல்லும்போது ஜாக்கெட் ஸ்வெட்டர் கை உறை எல்லாம் எடுத்து செல்வது நலம் இல்லையேல் எல்லாம் விறைத்து விடும் எச்சரிக்கை. கடும் உயரம் என்பதால், தலை கிறு கிறுத்தது. மூச்சு வாங்க ஒரு இருநூறு மீட்டார் நடந்திருப்போம். அந்த குகையில் வாயில் வர வெளியே வந்தோம்

எங்கும் பனி. வெள்ளை வெளேரென்று தரையும் தூரத்தில் தெரிந்த வெள்ளை மலைகளும் என அந்த காட்சியை நேரில் கண்டால் தான் அனுபவிக்க முடியும். பல படங்களின் பாடல்களை இங்கு ஷூட்டிங் எடுத்துள்ளனர் என்பதை உணர்ந்தோம். மக்கள் அனைவரும் அங்கு பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவி விளையாடிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவிலேயே பனி பிரதேசங்களை கண்டிருந்தாலும், இங்கு உள்ள அழகு அங்கு இல்லை. அதற்க்கு காரணம், மலைகள். மலைகள். நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது தான், அவ்வளவு நேரம் ஒரு மலையின் உள்ளே இருந்திருந்தோம் என உணர்ந்தோம்.

மலையை குடைந்து அதற்குள்,  குகை போல செய்து அதில் லிப்ட், பாதை எல்லாம் போட்டிருந்தார்கள். அங்கிருந்து ஒரு குழுவினர் நடந்தபடி இன்னோர் இடத்தில் இருந்த ஒரு ரேசொர்டுக்கு சென்று கொண்டிருந்தனர். நேரமின்மையால் எங்களால் செல்ல இயலவில்லை.
                                          ஐஸ் ம்யூசியம் செல்லும் வழி.
அங்கேயே ஐஸ் ம்யூசியம் ஒன்று இருக்கிறது. தரை சுவர் எல்லாமே ஐஸில் இருக்கும் அதனுள், ஐசிலேயே, பெங்குவின், கழுகு எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். அவை உருகிவிடாமல் இருக்க அதே தட்ப வெட்ப நிலையை அமைத்திருக்கிறார்கள்.  இந்த தரையில் ஸ்கேடிங் செய்து கொண்டே செல்லலாம். விழாமல் தப்பிப்பது உங்கள் சாமர்த்தியம்.

யுங்க்ப்ரவ் ஸ்தலத்தை அடைய இரு வழிகள் உண்டு. லாடேர்ப்ருண்ணன் வழியாக சென்றால், மலைகளையும், ஓடைகளையும் பார்த்தபடி செல்லலாம். க்லேண்டேல்வால்ட் என்ற இடம் வழியாக சென்றால் மலைகளில் தெரியும் வீடுகளையும், கன்ட்ரி சைட் எனப்படும் கிராமங்களையும் கண்டு களித்தபடி வரலாம். லாடர்ப்ருண்ணன் வழியாக யுங்க்ப்ரவ் அடைந்த நாங்கள், வரும் போது க்லேண்டேல்வால்ட் வழியாக கீழிறங்கினோம். வரும்போதும் பசுமையான மலைகளில் ஆங்காங்கே வீடுகள் அமைந்து காணும் கண்களை கொள்ளை கொண்டது.

                                                     க்லேண்டேல்வால்ட்

மீண்டும் கீழிறங்கி அன்று இரவு நாங்கள் சூரிக் சென்று சேர்ந்தோம். இருந்தாலும், எங்கள் நினைவுகள் மட்டும் யுங்க்ப்ரவ் விட்டு கீழிறங்கி வர மறுத்தன. 

(தொடரும்...)
--

Thursday, December 16, 2010

A.R. ரகுமான் என்ற ஆளுமை..!


அல்லா ரக்கா ரகுமான், தான் இந்த நிலை வரை வருவதற்கு காரணியான இளையராஜாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

எண்பதுகளின் இறுதியில், தமிழ் திரை உலகின், இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்,கே பாலச்சந்தரின் புது புது அர்த்தங்கள் திரைப்படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிய இளையராஜாவிற்கு  அந்தப் படத்திற்கு பின்னணி இசை வழங்க நேரமில்லை.  படம் வெளியீட்டு தேதியை அறிவித்தாகிவிட்டது. இளையராஜாவோ ஏகப்பட்ட படங்களில் பணி புரிந்து கொண்டிருந்ததால், இதற்க்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. பார்த்தார், கே பி. வேறொருவரை வைத்து பின்னணி இசை கோர்ப்பை முடித்து விட்டு சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டு விட்டனர். இதனை அறிந்த இளையராஜாவுக்கு கடும் கோபம். கலைஞனின் கர்வம் தலை தூக்க, இனி கவிதாலயாவிற்கோ கே பி கோ இசை அமைக்க போவதில்லை என முடிவெடுத்தார். கவிதாலயாவின் அடுத்தப் படத்தை மணிரத்னம் இயக்க முடிவாகி இருந்தது. அதுவரை தான் பணி புரிந்த இளையராஜாவின் இசை தன் புதிய படத்துக்கு இல்லை என்பதை உணர்ந்த மணிரத்னம், அவருக்கு இணையான ஒரு இசை அமைப்பாளர் அப்போது தமிழ் திரை உலகில் இல்லை என்பதால், ஒரு புதியவரை இறக்குமதி செய்ய முடிவு செய்தார்.  தனது நண்பனும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடம் இதை பற்றி சொல்ல, தனது விளம்பர படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருக்கும் திலீப் என்கிற அல்லா ரக்கா ரகுமானை பரிசோதித்து பார்க்குமாறு சொல்ல, மணி சின்ன சின்ன ஆசை பாடல் வரும் பகுதியை சொல்லி, அதற்க்கு ஒரு பாடல் இசை அமைத்து தருமாறு ரகுமானை பணிக்க, அரை நாளில் இசை அமைத்து மணி ரத்னத்திடம் ரகுமான் போட்டு காட்ட, சந்தோஷத்தில் அவரை அணைத்துக் கொண்ட மணி ரத்னம், அதன் பின் தான் நம்பிக்கையோடு தனது 'ரோஜா' திரைப்படத்தை இயக்க கிளம்பினார்.


அதன் பின்னர் நடந்ததெல்லாம்.. இசை உலக வரலாறு..
1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் பாடல்களை முணுமுணுக்காத தமிழ் உதடுகளே இல்லை எனலாம். அப்போது என் வீட்டுக்கு வந்த என் சகோதரனின் கல்லூரி தோழியான ஒரு யுகோஸ்லோவியா நாட்டுப் பெண்ணான கரீனா,' சின்ன சின்ன ஆசை ' என முழுதுமாக தனது மழலை தமிழில் பாடிக் காட்டியபோது, எனக்குள் உண்டான சிலிர்ப்புகளுக்கு சொந்தக் காரன் இந்த ரகுமான். தான் இதுவரை கேட்ட பாடல்களில் தனக்கு பிடித்த பாடலாக அவள் 'சின்ன சின்ன ஆசையை' கொண்டாடிய போது, ரகுமானை நினைத்து எனது மனமும் கொண்டாடியது.

ரோஜாவுக்கு பிறகு, புதிய முகம், ஜென்டில்மேன், காதலன் என அவர் கொடி தமிழில் பறந்துக் கொண்டிருந்தது .இந்த சமயத்தில் அவர் இசைமைத்த 'ரோஜா' இந்தியில் டப் செய்யப்பட்டு ஹிந்தியிலும் சக்கை போடு போட அவரை இந்திக்கு அழைத்து சென்றவர்கள் இருவர். ஒருவர் , ராம் கோபால் வர்மா, மற்றொருவர் சுபாஷ் காய். ராம் கோபால் வர்மாவின் 'ரங்கீலா'வும், சுபாஷ் காய் இன் 'தால்' லும் ரகுமானை இந்திய திரைப்பட உலகின் முதல் இலக்க எண்ணிக்கைக்கு அழைத்து சென்றது. அதன் பின் அவர் சேகர் கபூரால் ஹாலிவூடிற்கு அழைக்கப்பட்டு, பின்னர், அவர் தான் இங்கிலாந்தில் மிக சிறந்த இயக்குனர்களின் ஒருவரான டானி பாயில் லுக்கு ரகுமானை அறிமுகப்படுத்தி வைத்தார்.

டானி பாயில் 'ஸ்லம் டாக் மில்லியனர் ' என்ற இந்தியப் படத்தை உருவாக்க நினைத்தபோது , ஒரு இந்தியர் தான் அந்த படத்துக்கு இசைஅமைக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். தனது நண்பனான சேகர் கபூரிடம் ஆலோசனை கேட்டபோது, சேகர் கபூர் ஏ ஆர் ரகுமானை பரிந்துரைக்க, ரகுமானோ அந்த படத்தை ஒத்துக்கொள்ளலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்து விட்டார். காரணம் அவர் அப்போது அவ்வளவு பிசியாக இருந்தது தான். டானி தனக்கு ஒரு ஏழு இசை கோர்ப்புகள் மட்டும் வேண்டும் என கேட்டதும் ஒத்துக் கொண்டார் ரகுமான். ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் ஒரு கனமான திரைப்படம் என்பதால் படத்திற்கு அதிரடியான இசை வேண்டும் என்பது மட்டுமே டானியின் கோரிக்கை. மிகக் குறைந்த நாட்களில் இசை கோர்க்கப் பட்ட படம் அது. அது தனக்கு ஆஸ்கர் விருது வாங்கி தரும் என்றோ, அதன் மூலம் தனக்கும், தமிழகத்துக்கும், ஏன் இந்தியாவுமே பெருமைகள் கிடைக்கும் என்பதை அவர் அப்போது நினைத்து பார்த்திருக்கவில்லை.

இரண்டு ஆஸ்கார்களை அவர் வாங்கியதும் அவர் கூறிய வார்த்தைகள், அவரை மேலும் ஒரு சிறந்த மனிதராக காட்டியது.  முதல் விருதை வென்றதும், தமிழில் வழக்கம் போல 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்னது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தந்தது என்றால், இரண்டாம் விருதை வாங்கும் வேளையில், ' என் முன்னிருந்த அன்பு மற்றும் வெறுப்பு என இருந்த இரண்டு வாய்ப்புகளில், அன்பை தேர்ந்தெடுத்ததால் நான் இந்த மேடையில் இருக்கிறேன்' என்று சொன்னதும் இந்தியர்கள் அனைவருமே பெருமைப்பட்டனர்.



நான்கு வயதில் பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் ஒன்பதாவது  வயதில் தனது தந்தையை இழந்ததால், குடும்ப பாரம் சுமக்க வேண்டிய நிலை. தனது பதினொன்றாவது வயதில், இளையராஜாவின் இசை குழுவில் சேர்ந்து பணி புரிய ஆரம்பித்தார். உலகின் தலை சிறந்த தபலா வித்துவானான சாகிர் உசேனுடன் சேர்ந்து பல நாடுகள் பயணித்தார். லண்டனின் ட்ரினிட்டி இசை பள்ளியில் இசையில் பட்டம் பெற்றார்.

இப்போது டானியின் அடுத்த திரைப்படமான 127 ஹவர்ஸ் என்ற திரைப்படத்துக்கும்  ரகுமான் தான் இசை. மலை ஏற்றத்தை பொழுதுபோக்காக கொண்ட ஒருவன் ஒரு மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கை ஒரு பொந்தினுள் மாட்டிக்கொள்ள... அவன் எப்படி நூற்றி இருபத்து ஏழு மணித் துளிகளை அவ்வாறு கழித்தான் என்பது கதை. கதையின் கடைசியில், பொந்தினுள் மாட்டிக்கொண்ட தனது கையை தானே வெட்டிக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை. அப்படி செய்தால் மட்டுமே அவன் பிழைக்க முடியும் என்கிற நிலையில் அவன் என்ன முடிவு எடுத்தான் என்பது தான் கதை. இப்படி ஒரு சிலிர்ப்பூட்டும் கதைக்கு தனது சிலிர்ப்பூட்டும் இசையை வழங்கிய ஏ ஆர் ரகுமான், இந்த ஆண்டும், ஆஸ்காருக்கு இணையான, கோல்டன் க்ளோப் என்ற விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கோல்டன் க்ளோபில் விருது வாங்குபவர்களே முக்கால் வாசி, ஆஸ்காரிலும் விருது வாங்குவார்கள். கோல்டன் க்ளோப் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதே மிகப்பெரிய காரியம். அதுவும் இவ்வளவு குறைந்த காலத்தில். .!

ரகுமான் அடுத்த உலக விருது பெரும் நாளை நினைத்து காத்திருக்கிறேன்.

பின் குறிப்பு: இசையை பற்றி எனக்கு அடிப்படை எதுவும் தெரியாது. இருந்தாலும் சமையல் ருசியாய் இருப்பதை சொல்ல சமையல் தெரிந்திருக்க தேவை இல்லை என்பதை போல, இசையை ரசிக்க, இசையின் அடிப்படை அறிவு தேவை இல்லை என்பது என் கருத்து. ஏ ஆர் ரகுமானின் அதிரடி இசை என்ன தான் அருமையாக இருந்தாலும், அந்த அந்த  காலக்கட்டங்களில்  மட்டுமே மனதில் தங்குகின்றன. இளையராஜாவின் மென்மையான மேலோடிகள் காலம் கடந்தபின்னும் மனதில் புகுந்து மயிலிறகால் வருடி  தாலாட்டுவதன் மர்மம் என்னவென்று எனக்கு இன்னமும் விளங்கவில்லை..!


--

Saturday, December 11, 2010

உண்மைத் தமிழன் சீமான்..!

சீமான்..!
தற்போதைக்கு ஈழ தமிழர்கள் தங்கள் விடிவெள்ளியாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர். சில எழுத்தாளர்களைத் தவிர்த்து பலரும் விடுதலைப் புலிகளின் மேலும் இலங்கை அரசின் மேலும் பழிகளைப் போட்டு ஈழத் தமிழர்களின் சாவுக்கு பரிதாபம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்த வேளையில்...ஈழத்தமிழர்களுக்காக ஓங்கி குரல் கொடுத்து இயக்குனர்களை ஒருங்கிணைத்து ராமேஸ்வரத்தில் தைரியமாக இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக உண்மைகளை போட்டு உடைக்க.. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஈழ மக்களை , தங்களுக்காக ஒருவர் பேசி சிறை சென்று இருக்கிறாரே என திரும்பி பார்க்க வைத்தார் சீமான்.

ஈழம் என்று ஒன்றை இருப்பதையே மறந்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள், பொதுத் தேர்தல் முடிந்த வேளையில்.. கொத்து கொத்தாக ஈழத்தில் மடிந்து கொண்டிருந்த தமிழர்களை நினைத்து பார்க்காமல், தன் குடும்பங்களின் வாரிசுகளுக்கு ஏற்ற துறையை வேண்டி சக்கர நாற்காலியில் தமிழர் தலைவராக கருதப்பட்டவர் டில்லியில் பேரம் பேசி கொண்டிருக்க, ஈழ போரில் இலங்கை அரசுக்கு உறுதுணையாக பல உதவிகளை செய்து கொண்டிருந்த இந்தியாவுக்கு எதிராக, தமிழனுக்கு ஆதரவாக  இவரும் இவரது ஆதரவாளர்களும் செய்த பிரச்சாரத்தில்... பல பெரிய காங்கிரஸ் தலைகள் மண்ணில் உருள காரணமாய் இருந்தவர்.

பல தமிழ் மீனவர்களை நிர்வாணப் படுத்தி, சித்திரவதைப்படுத்தி சின்னாபின்னமாக குத்துயிரும் குலை உயிருமாக அனுப்பிக் கொண்டிருந்தது சிங்கள ராணுவம். பலரின் உயிர்களையும் பறித்து கொண்டு வெறும் பிணங்களை திருப்பி படகில் அனுப்பி கொண்டிருக்க, அதனை எதிர்த்து  ஒரு தீர்மானம் கூட இயற்றாமல், பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார் தமிழக முதல்வர். அதனை கண்டித்தவர் சீமான்.  நீங்கள் எங்கள் மீனவர்களை அடித்தால், நாங்கள் உங்கள் மாணவரை அடிப்போம் என்று சொன்னதற்காக, சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், மீண்டும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பொதுத் தேர்தல் மிக அருகில் வருகிற நேரத்தில், இவரது பிரச்சாரத்தின் சூடு தாங்காமல் எங்கே தாங்கள் கவிழ்ந்து விடுவோமோ என எண்ணி சிறையில் அடைத்தவர்களின்  வாயில் மண். நீதி தேவதை இன்னமும் கண் விழித்துக் கொண்டிருப்பதால், சீமானை, தேசிய பாதுகாப்பின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது நீதி மன்றம்.

நம் தொப்புள் கோடி சொந்தங்களான இலங்கை தமிழர்கள் அங்கே சித்ரவதைப்படுத்தப்பட்டு , சீரழிக்கப்பட்டு கண்டந்துண்டமாய் கொந்தப்பட்டு கொல்லப்பட்டு கொண்டிருக்கையில், இங்கு முதல்வரின் சொந்தங்கள் பதவிக்காக அடித்துக் கொண்டிருந்ததை, தொலைபேசி உரையாடல்களை ஒலிபரப்பியதன் மூலம் புண்ணியம் கட்டிக் கொண்டன ஊடகங்கள். போர்குற்றங்களை இழைத்த ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து தமிழர்களின் ரோஷத்தில் ஒரு சதவிகிதம், நம் உள்ளூர் தமிழர்களுக்கு இருந்திருந்தால், இந்தியாவில் காலடி வைத்திருக்கமாட்டான் அந்த கொடுங்கோலன். கோவையில் ஒரு  சிங்கள அமைச்சர் விரட்டி அடிக்கப்பட்டார். அவரை இங்கிருந்து அழைத்தவர்களும் தமிழின துரோகிகளே. அவரையும் விரட்டி அடித்திருக்க வேண்டாமா..?

சானல் 4  போன்ற ஊடகத்துறைகள் இல்லாவிட்டால், இலங்கையில் அவர்கள் தமிழர்களுக்கெதிராக போட்ட பேயாட்டங்கள் வெளியே தெரியாமல் போய் இருக்கும். ஊடகத்துறை இல்லா விட்டால்.. பதவிக்காக எம் முதல்வரின் சொந்தங்கள் போட்ட ஆட்டங்களும் வெளியே தெரியாமல் போய் இருக்க கூடும். சில பத்திரிக்கைகளும் சில தொலைகாட்சிகளும் உண்மையாய் இருப்பதால் தான் திருவாளர் பொது ஜனம் சிறிது நம்பிக்கையோடு நடமாடிக் கொண்டிருக்கிறான்.

ஏழு மாதங்களுக்கு முன் நாம் தமிழர் என்ற இயக்கம் கண்ட சீமான் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அடுத்த பொது தேர்தலில் போட்டி இடப்போவதாய் சூளுரைத்திருக்கிறார். தன்னை சிறையில் இட்ட அரசுக்கு பழி வாங்குவதற்காக, பதட்டத்தில் திட்டங்கள் போடாமல், தமிழர்களுக்காக என திட்டங்கள் போட வேண்டும். அரசியலுக்கு வந்ததும்.. பதவிக்கு ஆசைபடாமல், இப்போது போலவே எப்போதும் போராட்ட குணத்தோடு தமிழர்களின் துணை நிற்கவேண்டும்.

இப்போது உலக தமிழர்கள் முழுமையாக நம்பி இருப்பது.. உங்களைத்தான் சீமான்!..
--

Saturday, December 4, 2010

பூலோக சுவர்க்கம் - 6 சுவிஸ் பயணம்.

                                                             இண்டர்லாகன் ஏரி
அன்றைய பொழுது இனியே விடிய.. நாங்கள் ஆவலுடன் காத்திருந்த யுங்க்ப்ரவ் பயணம் செல்ல வேண்டிய நாள் வந்தது. அன்றைய இரவு நாங்கள் சூரிச் செல்ல வேண்டி இருந்ததால், எங்கள் பெட்டி படுக்கைகளை உருட்டி கொண்டு பெர்ன நகர ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நமது பெட்டிகளின் அளவுகளுக்கேற்ப (விலையும் மாறுபடுகிறது) நிறைய லாக்கர்கள் இருக்கின்றன. இரண்டு லாக்கர்களில் எங்கள் பெட்டிகளை அடைத்து விட்டு எட்டு சுவிஸ் பிராங்குகளை உண்டியல் போன்ற துவாரத்தில் போட்டால், தானியங்கி இயந்திரம் மூலம் லாக்கர்களின் சாவிகள் வந்து விழுகின்றன. இருபத்து நான்கு மணி நேரத்துக்கு எட்டு சுவிஸ் பிராங்குகள் வாங்கப்படுகிறது.

யுங்க்ப்ரவ் க்கு பெர்நிலிருந்து இண்டர்லாகன் என்னும் ஒரு மிக அழகிய ஊர் வரை ரயில் செல்கிறது. அங்கிருந்து மலை ஏற மூன்று  ரயில்களை மாறி ஏற வேண்டும். பெர்நிலிருந்து இண்டர்லாகன் செல்லும் வழியில் இரண்டு அழகிய ஏரிகள் வருகின்றன. ஒன்று பிரியன்ஸ் ஏரி . மற்றொன்று துன் ஏரி. இரண்டு ஏரிகளும் இணையும் இடத்தை தான் இண்டர்லாகன் ஏரி என சொல்கிறார்கள். இண்டர்லாகன் என்றால் இரண்டு ஏரிகள் இணையும் இடம் என்று அர்த்தம்.
                                                             இண்டர்லாகன் ஏரி

ரயிலில் செல்ல செல்ல ஸ்பீஸ் என்ற ஏரியும் சேர்ந்துகொள்ள.. அப்படியே மலைகளும் நீல வண்ண நீர்பரப்பும்... பறந்து செல்லும் பறவைகளும்.. நீரில் நீந்தி செல்லும் ஓடைகளுமாக. இயற்க்கை காட்சிகள் விரிய விரிய.. கண்கள் விரிய பார்த்துக் கொண்டு வந்த நாங்கள்.. எங்களுக்கு அதனை காண கண்கள் இருந்தமைக்காக நன்றி சொல்லிக் கொண்டோம். அப்போது தான் கண் பார்வை இல்லாத நபர்களின் மேல் ஒரு மரியாதையும் பரிதாபமும் எங்களுடன் சேர்ந்து கொண்டது. அவர்களுக்கு சுவிஸ் நகரமும் ஒன்று தான்..சுண்டைக்காமுத்தூரும் ஒன்றுதானே என்ற உணர்வு மேலிட.. அந்த இயற்க்கை காட்சிகளை.. அவதார் படத்தின் பண்டோரா கிரகத்தை பார்ப்பதை போல ஐயோ.. வாவ் ஸ்ஸ் என்று குழந்தைகள் போல குதூகலித்தபடி நாங்கள் பார்த்து ரசித்ததை கண்டு.. எங்களோடு கூட வந்த சுவிஸ் மக்கள் எங்களை ரசித்தார்கள். பாதி மூடி இருந்த ஜன்னலை.. மேலும் முழுக்க திறந்து விட்டு.. 'என்ஜாய் யுவர் விஷன்' என்று உதவி புரிந்ததோடு மட்டுமல்லாது.. 'உங்களை புகைப்படம் எடுத்து தரட்டுமா   ?' என அவர்களே எங்கள் புகைப்பட கருவியை வாங்கி எங்களை சுட்டு தள்ளினார்கள்.

                                                                லாட்டர்ப்ருன்னேன் 

பெர்நிலிருந்து இண்டர்லாகன் ரயில் நிலையத்தை அடைய நாற்பது நிமிடங்கள் ஆனது. முழு பயணத்திலும்.. மூன்று ஏரிகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கண்களில் நீர் வழிய பார்த்து ரசித்து கொண்டே வந்தோம். இண்டர்லாகனில் இருந்து அடுத்த ரயில் ஏறி லாடர் பருணன் (Lauterbrunnen) என்ற இடத்துக்கு சென்றோம். விலை மிக அதிகம் நூறு அமெரிக்கன் டாலர்கள் ஆனது.போகும் வழி எல்லாம் பக்காவாட்டில் தெளிந்த நீரோடைகளும், மலைகளில் இருந்து விழும் நீர் வீழ்ச்சிகளும் என அவ்வளவு அழகு. லாடேர்ப்ருன்னானில் இருந்து அடுத்த ரயில் பிடித்து க்ளைன்-ஷேடேக் (Kleine Scheidegg)  என்ற இடம் செல்லும்போது தான் பனி போர்த்திய மலைகள் நம் உடனே ஊடாடிக்  கொண்டு வருகிறது. மலை களின் வழியே பாதை ஏற்படுத்தி பலர் கைகளில் குச்சிகளை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர். இண்டர்லாகனில் இருந்து நடைபயனமாகவே மலையின் உச்சிக்கு வருபவர்கள் இருக்கிறார்கள் என்று பிறகு கேள்விப்பட்டேன். எனக்கும் நடந்து செல்ல ஆசை தான். ஆனால் குடும்பத்துடன் அது முடியாதே.. என எனது ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.
க்ளைன் ஷேடாக்


க்ளைன் வந்து சேர்ந்ததும் அதுவே சொர்கமாக இருந்தது. அங்கேயே அமர்ந்து தெரியும் பனி போர்த்திய மலை முகடுகளை பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது. அங்கிருந்து கிளம்ப மனம் வராமல் அங்கேயே ஒரு மணி நேரம் மலைகளை பார்த்தபடி அமர்ந்துவிட்டோம். பின்னர் ஆசுவாசப்படுத்தியபடி யுங்க்ப்ரவ் போகும் அடுத்த ரயிலில் ஏறினோம். அது தான் மலையின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. உச்சிக்கு போகும்போது வயிற்றை பிசைகிறது. மயக்கம் வருகிறது. யுங்க்ப்ரவ் செல்லும் அனைவரும் மாத்திரைகள் எடுத்து செல்வது நல்லது. அங்கு ஆக்சிஜன் அளவு குறைவதால்.. இந்த மயக்கம் ஏற்படுகிறது என அறிந்தேன்.

மலைகளை குடைந்து ரயில் பாதைகளை அமைத்து இருக்கிறார்கள். மிக மிக மெதுவாகவே ரயிலும் செல்கிறது. அந்த ரயில் பாதை தான், உலகிலேயே உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள ரயில் பாதையாகும். யுங்க்ப்ரவ் என்பது தான் ஐரோப்பாவின் உச்சி அதாவது 'டாப் ஆப் யுரோப்' என்கிறார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு நான்கு ரயில்கள் மாற்றி உச்சிக்கு சென்றதும், எங்களுக்கு அந்த அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது.

--

Saturday, November 27, 2010

உலக சினிமா: அம்ரீக்கா (அரபிக்)

ஒரு மதத்தை சார்ந்தவன் ஏதாவது ஒரு பயங்கரவாத செயலில் ஈடுபட்டால், அம்மதத்தை சார்ந்த அனைவருமே, பயங்கர வாதிகள் என முத்திரை குத்தப்படுவதும் அதனை அரசியல் சக்திகள் ஊதி ஊதி பெரியதாக்குவதும் நாம் அனைவரும் கண்ட ஒன்று. அதே மதத்தை சார்ந்த, குற்றங்கள் அறியாதவர்களும் பலிகடாக்கள் ஆக்க படுவதை நாம் காண்கிறோம். ஒசாமா என்ற ஒரு தீவிர வாதி ஒரு அரபிக் என்பதால், அனைத்து அரபியர்களும் தீவிரவாதிகள் என பார்க்கும் மனோபாவம் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. அரபியர்களோ இஸ்லாமியர்களோ தங்கள் நாடுகள் வரும்போது அவர்களை பரிசோதிக்க கூடுதல் கவனமும் இமிக்ராஷன் பகுதியில் எடுத்துக் கொள்ளப்படும்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஒரு வங்கியில் நல்ல வேலையில் இருப்பவள் முன்னா. அவளுடைய மகன் க்பாட்டி. முன்னா குண்டாக இருப்பதால், அவளை விவாகரத்து செய்துவிட்டு அழகான ஒரு யுவதியுடன் வாழ்க்கை நடத்துகிறான் அவள் கணவன். ஒவ்வொரு முறை தன அலுவலகத்தில் இருந்து இல்லம் திரும்பும்போது  ராணுவத்தின்  ஏகப்பட்ட பரிசோதனைகள். எங்கே தன மகனும் இந்த பாலைவனத்தில் கிடந்தே அல்லல் பட போகிறானோ என அவள் வருத்தமுற்று இருந்த சமயத்தில், அவள் எப்போதோ அமெரிக்க விசாவிற்கு மனு  போட்டிருக்க, அப்போது அவளுக்கு கிடைக்கிறது.. தாயும் மகனும் அம்ரீக்காவிற்கு பயணப்படுகிறார்கள்.(அரபிக்கில் அமெரிக்காவைத்தான் அம்ரீக்கா என சொல்கிறார்கள்)

மூன்று மணி நேர விசாரணை மற்றும் பரிசோதனைக்கு பின்னர், வெளியே வரும் அவர்களை, முன்னாவின் சகோதரி ரகதா மற்றும் அங்கு மருத்துவனாக இருக்கும் அவள் கணவன் நபீல், தங்களது மூன்று குழந்தைகளுடன் தங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றனர்.



தனது பத்து வருட வங்கி வேலை அனுபவத்தில் எளிதாக வேலை கிடைத்துவிடும் என கனவில் இருக்கும் முன்னாவிற்கு வைட் காசில் என்கிற ஒரு துரித உணவகத்தில் பணியாளர் வேலை மட்டுமே கிடைக்கிறது. தனது அறிவாளியான மகன் க்பாடியை அங்குள்ள ஒரு நல்ல பள்ளியில் சேர்க்கிறாள். க்பாடியோ பாலஸ்தீனத்தை சேர்ந்தவன் என்பதால், அவனை எல்லோரும் ஒசாமா என எள்ளி நகையாடுகிறார்கள். முன்னாவின், சகோதரி ரகதாவுக்கோ, அம்ரீக்காவில் இருக்க பிடிக்க வில்லை. தனது சொந்த ஊருக்கு போக அவள் துடிக்கிறாள். அப்போது அமெரிக்கா சதாம் உசேன் நாடாண்டு கொண்டிருந்த இராக்கின் மீது போர் தொடுக்கிறது. மருத்துவனான நபீல் ஒரு அரபியன் என்பதால் அவனிடம் நோயாளிகளின் வரவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் அந்த குடும்பத்தின் நிம்மதி குலைந்து போகிறது. க்பாட்டி அமெரிக்கனாக மாறி தனது அம்மாவை மதிக்க மறுக்கிறான். சக மாணவர்கள் தன்னை அன்னியமாக பார்ப்பதால் அவனுக்கு அவர்களிடம் பிணக்கு வருகிறது.நிம்மதியாக இருந்த பாலஸ்தீன வாழ்கையை விட... அமெரிக்காவில் தாங்கள் அகதிகளாக உணர்கிறார்கள்.
 


வேறொரு நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயரும் மக்களின் துயரை அருமையாக சொல்லி இருக்கிறது படம். முன்னாவாக நடித்திருக்கும் நிஸ் ரீன் பௌர், மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாள். தனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், மற்றவரிடம் அன்பை வெளிப்படுத்தும் இடங்களிலும், தனது மகன் சிறிது சிறிதாக தன்னை விட்டு விலகிப் போவதை கண்டு கண்ணீர் வடிப்பதும் என கலக்கி எடுத்திருக்கிறார். இது ஒரு அரபி படம் என்பதால் தான் அவருக்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என நான் நினைக்கிறேன்.

ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு, அதிக செலவு இல்லாமல், மனித உணர்வுகளுடன் விளையாடி இருக்கிறார், திரைக்கதை மற்றும் இயக்கத்தை கையாண்டிருக்கும் பெண் இயக்குனர் செரியன் டபிஸ். சோகத்தை கசக்கி பிழியாமல், படம் முழுவதும் கருப்பு நகைச்சுவையை இழையோட விட்டு, படம் ராக்கெட் வேகத்தில் பயணிப்பதற்கு இவரது இருகப்பற்றும் திரைக்கதையே முக்கிய காரணி. படத்தில் அமெரிக்காவை குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் அதன் பாசிடிவ் பக்கத்தையும் காட்டி, ஒரு அருமையான படத்தை அளித்த அவருக்கு ஒரு ராயல் சல்யுட்.

ரகதாவின் வீடு, அவள் குடும்பம், வைட் காஸ்டல் உணவகம், க்பாடின் பள்ளி. அவ்வளவுதான் படத்தின் கதை நடக்கும் இடங்கள் என அதிகம் செலவுக்கு வழி வகுக்காமல் குறைந்த செலவில் நிறைவான் படத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர்.

படத்தில், வேறொரு நாட்டில் இருந்து அமெரிக்கா வந்து வாழ்பவர்களை பற்றி ரகதா சொல்லும் அந்த வசனம் மிகவும் பிடித்தது.
'ஒரு மரத்தை ஒரு இடத்தில் இருந்து பிடுங்கி, இன்னொரு இடத்தில் நட்டு வைத்தால், அது முன்பை போலவே வளருமா.. அதன் வேர்களை தேடாதா?'.


மிக கௌரவமான  கான் திரைப்பட விருதுகள், சண் டான்ஸ் திரைப்பட விருதுகள்,  என அள்ளி குவித்துள்ளது இந்த திரைப்படம். 

வாழ்க்கையை பாசிடிவாக மாற்றி மற்றவர்களை மகிழ்விக்கும் முன்னாவின் புன்னகைக்காகவே இந்த திரைப்படத்தை இரண்டு முறை பார்த்தேன்.

அம்ரீக்கா--அருமை.

Thursday, November 18, 2010

பூலோக சுவர்க்கம் - 5 சுவிஸ் பயணம்.

                                                     லவ்சான் நகர தெரு ஒன்று...

ஜெனீவாவிலிருந்து லவ்சான் நகருக்கு ஒரு மணி நேரப் பயணம். லவ்சான் ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது புடவை கட்டிய ஒரு இந்தியப் பெண்ணை பார்த்தேன். சென்று பேசுவதற்குள் அவரது ஆண் நண்பரோ அல்லது கணவரோ உடன் வேகமாக சென்று விட்டார்.எதோ இந்தியப் பார்டிக்கு செல்லப்போகிறார் போலும் என நினைத்துக் கொண்டோம். அங்குள்ள அனைவரும் பிரெஞ்சு தான் பேசினார்கள். ஆங்கிலம் புரியவில்லை. பின்னர் நீண்ட நேரமாக முத்தமிட்டுக்  கொண்டிருந்த ஒரு ஜோடியை, அவர்கள் முடித்ததும் அணுகி வழி கேட்க.. அவர்கள் அங்கிருந்து ஒன்றரை மைல் தொலைவில் இருப்பதாக சொல்லி வழிகாட்டினார்கள். அசதியாக இருந்தாலும், காலையில் கண்ட காட்சி மனதில் நிழலாட, நடக்க ஆரம்பித்தோம். சுமார் இருபது நிமிட நடைக்கு பின்னர் அந்த ஏரி வந்தது அதன் பெயர் லேக் அவ்ச்சி என சொன்னார்கள். நாங்கள் ஏரிக்கு செல்லும் முன்னர் அங்கிருந்த பூங்காவின் நீர் எழுச்சி காட்சியை சிறிது நேரம் கண்டு கழித்து விட்டு ஏரிக்கு சென்றோம். சாலைகளில் உள்ள மேடுகளும் பள்ளங்களும் அது மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட நகரம் என்பதை உணர்த்தின.

ஓல்ட் டவுன் எனப்படும் பழைய நகரம் ஒரு பழங்கால அழகான பிரமாண்டமான தேவாலயத்தை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த தேவாலயத்திற்கு ஆயிரம் வயது என சொன்னார்கள்.

சுவிஸ், தான் ஒரு பூலோக சொர்க்கம் என நிரூபித்தது அங்கே. அந்த ஏரியும் தொலைவில் தெரியும் மலைகளும் அவ்வளவு அழகு.மூன்று தொடர் மலைகளின் மேலே லவ்சான் நகரம் அமைந்துள்ளது. அதன் பாதத்தில் ஜெனிவா ஏரி அமைந்து அந்த நகருக்கே அழகு சேர்க்கிறது.

லவ்சான் நகரின் அழகை இங்கிருக்கும் புகைப்படங்களே எடுத்து சொல்லும்.

எட்டரை மணிக்கு இருட்டும் நேரம் வரை லவ்சான் நகர ஏரியின் அழகை பருகிவிட்டு செல்ல மனம் இல்லாமல் கிளம்பி இரவு பத்து மணிக்கு பெர்ன் வந்து சேர்ந்தோம். அகோர பசி. அருகிருந்த பர்கர் கிங் உணவகத்தில் இரண்டு பர்கர்கள் வாங்கி கொண்டு எங்கள் அறைக்கு வந்து சேரும்போது மணி பதினொன்று.

மறுநாள் நாங்கள் செல்ல இருந்தது ஐரோப்பாவின் உச்சியான யுங் ப்ராவ் என்னும் வெள்ளை சொர்க்கம். அதன் கனவுகளிலேயே உறங்கிப்போனோம்.

Monday, November 15, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-6: வயசுப் பொண்ணு..!

ரு இருபது வயது வாலிபனையும் ஒரு வயது வந்த பெண்ணையும் ஒரு இரவில் தனியே மூன்று மணி நேரங்கள் விட்டு சென்றால், எவ்வளவு பிரச்சனை வரும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட என்னை வளர்த்தது என் அக்கா தான். அக்காவுக்கு ஒரு பெண் இருந்தாள். கிரிஜா என்பது பெயர். அவள் பிறந்த தினத்திலிருந்தே, இவன் தான் உன் தாய்மாமன் என என்னை காட்டி தான் வளர்த்தாள்.

இருந்தாலும் எனக்கும் கிரிஜாவுக்கும் பிடிக்காமல் போனது. அவளுக்கு வாய் பேச வரவில்லை. என்றாலும் என்னை அக்காவிடம் போட்டு கொடுக்க அவள் தயங்கியதில்லை. இப்படித்தான் ஒரு முறை, நான் திருட்டு தம் அடிக்க வைத்திருந்த ஒரு சிகரெட்டை அக்காவிடம் குடுத்து விட்டாள். இது பரவாயில்லையே.. நண்பர்கள் என்னிடம் கொடுத்து ஒளித்து வைக்க சொல்லியிருந்த மதுபுட்டியையும் நொண்டி எடுத்து உடைத்துப் போட அக்கா உடனே... 'உன்னை எப்படி எல்லாம் வளர்த்தேன்', என ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.அக்காவிடம் நான் எடுத்திருந்த நற்பெயர் தூள் தூளானது.

என்னை தேடி என் கல்லூரி நண்பர்கள் யாரேனும் வந்து விட்டாள் போதும், என் அறையிலேயே இங்கும் அங்கும் சுத்தி சுத்தி வருவாள். அவளுக்கு என் நண்பர்கள் கொடுக்கும் பறக்கும் முத்தங்களுக்கு வெக்கத்துடன் சிரிப்பதை கண்டு ஆத்திரமாக வரும் எனக்கு. என்னதான் இருபதாம் நூற்றாண்டு என்றாலும், என் வீடு முழுக்க அவள் குட்டை பாவாடையில் தான் வலம் வருவாள். என் அக்காவும் கண்டு கொள்வதில்லை.

அன்று அக்கா தயங்கி தயங்கி என்னிடம் வந்து நின்ற பொது அவள் மனதில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. மாமா வேறு அன்று சீக்கிரமே வந்து விட்டார்.
'இன்னிக்கு என்ன நாளு ன்னு நீ மறந்துட்ட சுந்தரேசா' என்று அக்கா சொன்னபோது கூட நான் யோசனை செய்து பார்த்து தோற்றுவிட்டதை ஒத்துக் கொண்டு...
' ஸாரிக்கா நேஜம்மாவே எனக்கு என்ன நாளுன்னு ஞாபகம் வரலை'

' அக்கா மேல பாசம் இருந்தா இதெல்லாம் மறப்பியா இன்னிக்கு என் கல்யாண நாள்..' எனக் கண்ணை கசக்க ஆரம்பித்து விட்டாள்.

' இல்லக்கா அது வந்து... ' என நான் சமாளிக்க ஆரம்பிக்க உடனே அக்கா கண்களை துடைத்துக் கொண்டு...( இந்த பொம்பளைங்க எப்டி தான் டக் னு அழுது டக் னு அழுகைய நிப்பாட்டிக்கறாங்களோ )

' வந்து... உன் மாமா என்னை இன்னிக்கு சினிமாக்கு கூட்டிட்டு போகனும்னு ஆசை படறார். நானும் சினிமா எல்லாம் பொய் ரொம்பா நாளாச்சா... வந்து இன்னிக்கு ஒரு மூணு மணி நேரம் நீ கிரிஜாக்கு தொணயா இருந்தின்னா நாங்க போய்ட்டு ஒடனே வந்துருவோம். அது என்னமோ அடல்ட் படமாம். கிரிஜாவ கூட்டிட்டு போகமுடியாது. அதனால...'

எனக்கு அந்த ஐடியா சுத்தமாக பிடிக்கவில்லை. நானாவது கிரிஜாவுடன் மூணு மணி நேரமாவது...என நினைத்தேன். என்றாலும் என் அக்காவை அழ வைத்து விட்டதால் உடனே சரி என்றேன்.

அக்காவும் மாமாவும் கிளம்பி சென்றதும், நான் கிரிஜாவிடம் இருந்து விலகியே இருந்தேன். இருந்தாலும்... அவள் மெல்ல என் அறைக்குள் நுழைந்தாள். புன்னகைகளையும் பார்வைகளையும் என்னால் சமாளிக்க முடியாமல், அவள் மேல் எனக்கிருந்த கோவம் எல்லாம் பொடிப் பொடியாக நான் அவளை மெல்ல நெருங்கினேன்...

மூன்று மணி நேரம் கழித்து படம் முடிந்து அக்காவும் அத்தானும் வீட்டில் நுழைந்தபோது, நான் கிரிஜாவை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருந்ததை பார்த்து அக்காவும் மாமாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

' எலியும் பூனையுமா இருந்த மாமனும் மருமகளும் எப்படி கொஞ்சிக்கறாங்க பாருங்க..' என அக்கா சொல்ல...
' என்ன மச்சான் ரொம்ப படுத்தினாளா' என என் மாமா வினவ...
' இல்லை மாமா இவள் ரொம்ப சமத்து. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருங்கின நண்பர்களா ஆய்டோம். உங்க ரெண்டு பேருக்கும் தான் நான் தேங்க்ஸ் சொல்லணும் ' என்றேன்.

என்ன புரிந்ததோ.. தனது பொக்கை வாய் திறந்து சிரித்தாள்.. ஒரு வயதே பூர்த்தி அடைந்த என் மருமகள் கிரிஜா!
--

Wednesday, November 10, 2010

திரைப்படம்: மம்மி அண்ட் மீ (மலையாளம்).


நாம் வளர்ந்து வரும் பிராயத்தில் டீன் ஏஜ் எனப்படும் பதின்ம வயதுப் பருவம், மிக மிக முக்கியமான ஒன்று. நமது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் வயதும் இந்த வயது தான். அந்த வயதில் வரும் அகங்காரம், கோவம், தான் செய்வது மட்டுமே சரி என தோன்றும் மனோபாவம், அனைத்தையும் உளவியல் ரீதியாக அலசுகிறது நான் சமீபத்தில் பார்த்த மலையாளத் திரைப்படம் 'மம்மி அண்ட் மீ'.

டீன் ஏஜ் பருவத்தை பற்றி சொல்கிறேன் என பாலியல் காட்சிகளை காட்டி கல்லா கட்ட நினைக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு குடும்ப படமாக எடுத்து பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நிலவி வரும் ஜெனரேஷன் கேப்பை ஓரளவு மூட பிரயத்தனம் செய்கிறது இந்த நல்லப் படம். தமிழ் மசாலா படங்களைப் பார்த்து கேட்டு போய்விட்ட மலையாள திரைப்படங்களில் இந்தத் திரைப்படம், எடுத்தக் கொண்ட களன், மற்றும் விறுவிறு திரைக்கதையால் தனித்து நிற்கிறது.


ஜுவல் கல்லூரியில் படிக்கும் பதின்ம வயதுப் பெண். அவள் இந்த உலகத்தில் முதல் எதிரியாக நினைப்பது, வீட்டுக்கு காலம் தாழ்த்தி வந்தாலோ, இறுக்கப் பிடிக்கும் உடை அணிந்தாலோ, தனது ஆண் நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடித்தாலோ, அதனை எதிர்த்து திட்டும் அம்மா கிளாரா தான். வங்கி அதிகாரியான அப்பா ஜோசெப் க்கு இவர்கள் இருவரின் சண்டையை தீர்த்து வைக்கவே நேரம் போதவில்லை. அவளுடைய தம்பி, அவள் திட்டு வாங்கும்போதெல்லாம் குதூகலிக்கும் சாப்பாட்டு பிரியன்.

இவர்களின் குடும்ப நண்பரின் மகன் ராகுல். இரு குடும்பங்களும் பரஸ்பர நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதால், ஜுவலுக்கு ராகுலுடனான நட்புக்கு இருவர் வீட்டிலும் பச்சை கோடி. ஜுவலும் ராகுலும் ஒரே கல்லூரியில் படிப்பதால், ஜுவல் ஆண் பிள்ளைகளிடம் சண்டை இடும் போதெல்லாம் அவளைக் காப்பது ராகுல் தான். ராகுலுக்கு ஜுவலின் மீது ஒருதலை காதல் இருந்தாலும், அதன் மூலம் இரு குடும்ப நட்பு களங்கப்பட்டு விடுமோ என தன காதலை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்கிறான்.



 கல்லூரியில் இருந்து நேரங்கழித்து வீடு திரும்புவதற்கு காரணம் கேட்டதற்கு, இன்டர்நெட் சாட் செய்வதால் சமயமாகிறது என காரணம் சொல்லும் ஜுவலுக்கு கிளாராவே பரிந்துரைத்து வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி தருகிறார் ஜோசெப். இன்டர்நெட் சாட்டில் நண்பனாகிறான் முகம் தெரியாத அமீர். அவனுடன் சாட் செய்ய செய்ய ஜுவலின் சுபாவம் மாறுகிறது. ஒருமுறை தனது தாயின் கண்டிப்பாய் பொறுக்க முடியாத ஜுவல் கத்தி கூப்பாடு போட்டு வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் உடைத்து மயங்கி விழுந்து விட, ஒரு மன நல மருத்துவரை அணுகுகிறார்கள் கிளாராவும் ஜோசெப்பும். அப்போது அவர் இன்றைய பதின்ம வயது இளைஞர்களின் மனோ நலத்தையும் பெற்றோர் எப்படி அவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் எனவும் விளக்குகிறார்.

உடைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியும் பேசி மாய்ந்து போகும் ஆண்ட்டிகள்  வரும் பார்ட்டிகளுக்கு ஜுவல் செல்ல விரும்புவதில்லை. ( அந்த பார்டிகளுக்கும் சுடிதார் அல்லது காக்ரா சோளி தான் அணிந்து வரவேண்டும் என்ற அன்னையின் கட்டுப்பாடு வேறு). அவள் பார்ட்டிக்கு செல்ல, ஒரு அழகான உடை தைத்து அனுப்பி வைக்கிறான் அமீர். அதனை அணிந்து அவள் பார்ட்டிக்கு செல்ல பார்ட்டியில் உள்ள அனைவரின் கண்ணும் ஜுவலின் மேல். தன அம்மாவிடம் அதனை தன தோழியுடன் சென்று கடையில் வாங்கியது என பொய் சொல்ல, அமீர் தாயிடம் தான் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டியது தானே. என கேட்க அப்போது தான் தான் மெல்ல அமீரை காதலிக்க துவங்கி இருப்பது புரிகிறது. இதனை ராகுலிடம் அவள் சொல்ல, ராகுலோ அவளது நலத்தில் அக்கறை கொண்டவனாய் இரு வீட்டாரின் பெற்றோரிடமும் சொல்ல, மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி அமீரை  வீட்டுக்கு அழைக்கிறார்கள் கிளாராவும் ஜோசெப்பும்.
ஜுவல் அவன் அனுப்பிய அந்த பார்ட்டிஉடை அணிந்தபடி மகிழ்ச்சியுடன் காத்திருக்க, ராகுலின் குடும்பமும் ஜுவலின் குடும்பமும், படம் பார்க்கும் நாமும் , நகம் கடித்தபடி காத்திருக்க, அமீர் வந்தானா? அமீர் யார்? ராகுலின் காதல் என்னவானது என்பதை சிறிது திருப்பத்துடன் சொல்கிறது படம்.

படத்தில் பட்டாசாக வெடித்திருப்பவர் ஊர்வசி. வயது வந்தப் பெண்ணை வைத்துள்ள ஒரு தாய்க்குரிய கண்டிப்பும் கரிசனமும் அவர் வெளிப்படுத்தும் இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார். முகேஷின் அலட்டல் இல்லாத நடிப்பும் அருமை. ஜுவல்லாக நடித்திருக்கும் அர்ச்சனா கவி கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார். மிகவும் சாதரணமாக செய்துள்ளார். ராகுலாக நடித்திருக்கும் குஞ்சாக்கோ போபனுக்கு படத்தில் அவ்வளவாக வேலை இல்லை.

படத்தின் மிகப்பெரும் பலம் திரைக்கதை மற்றும் இயக்கம். படத்தின் பலவீனம், நன்றாக இருந்தாலும் அவ்வப்போது சம்மந்தமில்லாமல் எட்டி பார்க்கும் பாடல்கள்.
தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவை விளக்கும்  மாலாகப் போல மகளே.. மிக மென்மையான பாடல். காட்சிபடுத்தலும் அருமை.

இருந்தாலும் தைரியமான கதைக் களனுக்காகவும் திரைக்கதைக்காகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.


மம்மி அண்ட் மீ - மேன்மை.



மாலாகப் போல மகளே..

Friday, November 5, 2010

பூலோக சுவர்க்கம் - 4 சுவிஸ் பயணம்.

                                                                  ஜெனீவா நகரம்.
காலையில் எங்கள் விடுதியிலேயே இலவச உணவு வழங்கப்பட்டது. சுவிஸ்சில் க்ரோசாந்த் எனப்படும் ஒருவித ரொட்டியும் கோதுமை ரொட்டியும் பிரதான உணவுகள். க்ரோசாந்தை நான் அமெரிக்காவிலேயே உண்டிருந்தாலும் இங்கு அதன் வடிவமும் சுவையும் மிக அருமையாக இருந்தது. பழ சாறுகள், அவித்த முட்டை, நறுக்கிய பழத்துண்டுகள், அவித்த உருளை கிழங்கு என அருமையாக இருந்தது. சுவிஸ் தேசத்தின் வெண்ணையும் சீஸும் மிக பிரசித்தி பெற்றது. பாலுக்கு பெயர் போன டென்மார்க்கிலிருந்து வருவதாக சொன்னார்கள்.

 நாங்கள் பெர்ன் நகர ரயில் நிலையத்தை அடைந்து ஜெனீவா செல்லும் ரயிலை பிடித்தோம். அங்கிருந்து இரண்டு மணி நேரப் பயணம். ரயில் பெட்டியில் இருந்த ஒவ்வொருவரும் வந்து என் மகனை கொஞ்ச ஆரம்பித்தார்கள். அவனும் அவர்களுக்கு டாடா காட்டியும் ஒளிந்து விளையாடியும் புன்னகைகளையும் தந்து வசீகரித்துக் கொண்டிருந்தான். வயதானவர்கள் வந்து எங்கள் இருக்கையின் அருகே நின்று எதுவுமே பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ஹலோ சொன்னதும் பதிலுக்கு ஹலோ சொல்லி விட்டு அவனையே கவனிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மனதில் அவர்களின் பேரன்கள் வந்து போயிருக்கக் கூடும்.

 ரயிலில் இரண்டு அடுக்குகள் இருந்தன. நமது ஊரைப் போல ஒரு பெட்டியில் சமையல் நடக்கிறது. அங்கு ரொட்டி, பழசாறு, தேநீர் பாஸ்தா என சகல ஐரோபிய உணவு வகைகளும் இருந்தன.  எனினும் விலையை கருதி நாங்கள் வாங்கவில்லை. கையோடு எடுத்து சென்றிருந்த தண்ணீர் பாட்டில்களையும் பழ சாறுகளையும்  காலி செய்தோம்.
ரயிலின் வெளியே தெரிந்த காட்சிகளில் நான் முன்பே சொன்னது போல அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு மிக அழகாக தெரியலாம்.ஆனால் அமெரிக்காவிலும் இதை போலவே பசுமை தெரியும் ஆதலால், அவ்வளவாக வேறுபாடு இன்றி தெரிந்தது. ஆங்காகே மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மிகவும் புஷ்டியாக இருந்தது. ஒரு மணி நேரப் பயணத்துக்கு பின் தான் அந்த பரவசமூட்டும் காட்சியை கண்டோம்.
பெர்நிலிருந்து ஜெனீவா செல்லும் வழியில் லவ்சான் நகர் இருக்கிறது. அதனை தாண்டி செல்லும் வேளையில், அந்த ஜெனீவா ஏரியின் அழகு.. அப்பா..சொல்லி மாளாது. (காண்க புகைப்படம்)

ஜெனீவா ஏரி லவ்சான் நகரத்திலிருந்து...
எந்த புகைப்பட காரனும் ஒரு நிமிடம் அந்த அழகு காட்சியை கண்டு ஸ்தம்பித்து தான் போய்விடுவான். அவ்வளவு அழகு. உண்மையாக சொல்கிறேன், அந்த காட்சியை காண எனக்கு கண்கள் இருந்ததற்காக அந்த ஒரு நொடி மிகவும் பெருமையாக இருந்தது. என்ன புகைப்படம் எடுத்தாலும், நேரில் காண்பது போல வராது. அப்போது தான் நான் சுவிஸ்சில் இருப்பதையே உணர்ந்தேன். சுவிஸ் ஒரு பூலோக சொர்க்கம் என மற்றவர்கள் கூறுவதை அப்போது தான் என் மனம் ஏற்றுக் கொண்டது.  என் மனைவியிடம் கூறினேன்.'சுவிஸ் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தினமும் இந்த அழகு காட்சிகளை அவர்கள் கண்டு கொண்டே இருக்கலாமே' என.ஜெனீவா பார்த்து திரும்பி செல்லும் வேளையில் நிச்சயமாக லவ்சான் நகருக்கு செல்ல வேண்டும் என பேசி கொண்டோம்.



                                                  ஜெனீவா ஏரியின் நீர் எழுச்சி...
ஜெனீவா சென்று இறங்கியதும் அது எங்களுக்கு வேறுவிதமான நகராக தெரிந்தது. மக்கள் அனைவரும் மெர்சி மெர்சி என பிரெஞ்சு பேசிக் கொண்டிருந்தார்கள். நிறைய மக்கள் தலைகள். சுவிஸ்சிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். (முதலாவது சூரிக்). டிராம்களும் பேருந்துகளும் தங்கள் ஹைட்ராலிக் பெருமூச்சோடு மக்களை உண்டும் துப்பிக்கொண்டும் இருந்தன.

ஜெனிவா என்று நினைத்தாலே நமக்கு ஐக்கிய நாடுகள் சபையும், செஞ்சிலுவை சங்கமும் தான் நினைவுக்கு வரும். ஆம். செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகமும், ஆஸ்திரியாவின் விஎன்னாவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமும் இங்கு தான் இயங்குகின்றன. பிரான்ஸ் தேசத்தின் எல்லையில் இருப்பதால், ஜேர்மன் மொழியே பிரதான மொழியாக இருந்தாலும், ஜெனிவாவில் அதிகமாக பிரெஞ்சு தான் பேசுகிறார்கள். நாங்கள் இன்போர்மஷன் சென்டர் சென்று ஜெனீவா டூர் என ஏதாவது பஸ் இருக்கிறதா எனக்கேட்க, அவளோ பிரெஞ்சில் பதில் கூறினாள். எனக்கு பிரெஞ்சு தெரியாது என்றாலும் அவளது உடல் மொழியிலும் அவள் கூறியதில் இருந்து நேரே சென்றால், ஜெனீவா ஏரியில் போட் டூர் இருக்கிறது என புரிந்து கொண்டேன். 

அந்த போட் டூர் சரியான மொக்கை. இருந்தாலும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கூறிய ஜெனீவா நகர வரலாறு பிடித்தமாக இருந்தது. படகில் இருந்தபடியே ' அதோ பார் ஐக்கிய நாடுகள் சபை, அதோ பார் பறவை' என்கிற ரேஞ்சில் இருந்தது.  ஏரியில் ஒரு ராட்சச நீர் எழுச்சி (அது தாங்க வாட்டர் பௌண்டன்)  இருந்தது. அது தான் உலகிலேயே மிக உயரமான வாட்டர் பவுண்டன் என சொன்னார்கள். ஒரு மணி நேரம் போட் அதனையே சுற்றி சுற்றி வந்தது. மக்கள் பலர் தாங்கள் சொந்தமாக வைத்திருந்த போட்டில் அந்த ஏரியில் பவனி வந்து கொண்டிருந்தனர். போட் டூர் முடிந்ததும் பசி எடுக்க அங்கிருந்த ஒரு லெபனான் தேசத்து உணவகத்தில் பலாபல்(falafal) ராப் உண்டோம். நம்ம ஊரு வடை போல இருக்கும் பலாபல். அனால் இதனை கொண்டைகடலை மசித்து செய்கிறார்கள். வடை போல செய்தது அதனை மசித்து சிறிது லேட்ட்யுஸ், தக்காளி, வெங்காயம் சிறிது தயிர் எல்லாம் வைத்து தருகிறார்கள்.  பக்கத்திலேயே இருந்த இந்திய உணவகத்தில் ஒரு பிரியாணி நாற்பது பிராங்குகள் என எழுதி இருந்ததை வயிற்றெரிச்சலோடு பார்த்து கொண்டே உண்டோம். பசிக்கு அமிர்தமாக இருந்தது. உங்கள் ஊரில் மெடிடரேனியன் அல்லது லெபனீஸ் உணவகம் இருந்தால் பலாபல்லை முயற்சித்து பாருங்கள்.


                                  மிகப் பழமையான கத்தோலிக்க தேவாலயம்.   

பின்னர் அங்கு சிறிது நேரம் சுற்றி விட்டு, லவ்சன் நகருக்கு செல்ல ஒரு பரவசத்தோடு காத்திருந்தோம். அன்றைய மாலை ஒரு மறக்கமுடியாத மாலையாக அமையப்போகிறது என்பதை நாங்கள் அப்போது உணர்ந்திருக்க வில்லை.

--

Tuesday, November 2, 2010

பூலோக சுவர்க்கம் - 3 சுவிஸ் பயணம்.

                                       ஆர் நதியின் அணைப்பில் பெர்ன் நகரம்.
சூரிக்கில் இருந்து ஒரு மணி நேர ரயில் பயணத்தில்,நாங்கள் பகல் இரண்டு மணிக்கு பெர்ன் சென்று சேர்ந்தபோது, அங்கு இருந்த கட்டடங்களும், சாலைகளும், அது ஒரு மிகப்பழமையான ஒரு நகரம் என்பதை உணர்ந்தேன். காண்டினெண்டல் என்ற விடுதியின் அறையை நான் முன்பே முன்பதிவு செய்திருந்தேன். இருவர் படுக்க கூடிய ஒரே ஒரு படுக்கை, ஒரு மேசை மற்றும் ஒரு சோபா என எட்டுக்கு எட்டு அளவில் இருந்த அறை. சிறிது ஓய்வு எடுத்து விட்டு பெர்ன நகரில் நடை பயணம் செய்தோம். பெர்ன நகரத்தின் தெருக்களை அடித்தபடி மேசை சேர்கள் போடப்பட்டு மக்கள் குடித்துக் கொண்டோ, உண்டு கொண்டோ இருந்தனர். நான் விசாரித்த பொது, வெயில் காலங்களில் மக்கள் வெளியில் மட்டுமே அமர்ந்து உண்ணவும் குடிக்கவும் விரும்புவர் என நான் அறிந்தேன். சாலை முழுவதும் நமது ஊரைப் போல தார் சாலையாக இல்லாமல் கற்களாக பதிக்கப் பட்டு இருந்தது. பெர்ன் நகரம் பழமையான நகரமாதலால் யுனெஸ்கோவின் பராமரிப்பின் கீழ் வருகிறது என உணர்ந்தேன். மக்கள் அனைவரும் நட்பாக புன்னகைத்தனர்.
                                            புராதனமான 'ட்சீட்கிலோக்' (Zytglogge)
வலை தளங்களை ஆய்வு செய்த பொது பெர்ன நகர வரலாறு, என்னை கி பி பனிரெண்டாம் நூற்றாண்டுகளுக்கு அழைத்து சென்றது.
  1196 ஆம் ஆண்டு பெர்தோல்ட் என்பவர் 'ஆர்' என்ற ஆற்றின் படுகையில் இந்த நகரை கண்டுபிடித்து தான் வேட்டையாடிய ஒரு கரடியின் நினைவாக 'பெர்ன் ' என இந்நகரை பெயரிட்டார். ஆர் என்ற அந்த ஆறு நகரின் குறுக்கே வளைந்து வளைந்து ஓடுகிறது. நகரின் மத்தியில் வீற்றிருக்கும் 'ட்சீட்கிலோக்' (Zytglogge) (அப்படித்தானே சொல்லவேண்டும்?) என்ற மணிகூண்டு க்கு வயது பனிரெண்டு நூற்றாண்டுகள்.
                                                  பெர்ன் நகர தெரு ஒன்றில்...
தடுக்கி விழுந்தால் வங்கிகள். டென்னர், கூப் என காய்கறி கடைகள். பெர்ன நகர தெருக்கள் எப்போதும் திருவிழா பூண்ட நகரமாகவே இருக்கின்றன. மக்கள் அனைவரும் கொண்டாட்டமாகவே இருக்கின்றனர். எவர் முகத்திலும் எந்த ஒரு கவலையோ, டென்ஷனோ பாக்க முடியவில்லை. அனைவரின் முகத்திலும் புன்னகை. உங்களுக்கு எப்போதும் அவர்களின் 'ஹலோ' உண்டு.



சுவிஸ்சிலேயே பெரிய நகரங்களாக ஜுரிச் மற்றும் ஜெனீவா இருந்தாலும் பெர்ன் நகர் தான் தலைநகரம். பெர்ன சிறிய நகரமாக இருந்தாலும், கனஅளவில் இங்கு மக்கள் பெருக்கம் அதிகம்.பெர்ன நகர தெருக்களில் மக்கள் முழங்கால் உயர செஸ் காய்களுடன், செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். டூரிஸ்டுகள் மிக அதிகமாக காணப்பட்டனர். சுவிஸ் தேசத்தின்  பாராளுமன்றம் இங்கு தான் உள்ளது( காண்க படம்.).
                                           சுவிஸ் தேசத்தின் பாராளுமன்றம்.
எங்கள் பயண அட்டவணைப்படி நாங்கள் செல்ல இருந்த நகரங்களான ஜெனீவா மற்றும் இண்டர்லாகன் பெர்னின் அருகே இருந்ததால், இந்த நகரில் தங்கினோம்.  மாலை பெர்ன நகரம் சுற்றி வந்தந்தால் அகோரப் பசி. அங்கே இருந்த ஒரு தென் தமிழ் உணவகம் கண்டு பிடித்து இட்லி சாம்பார் உண்டோம் .இட்லி குளிர் பதன பெட்டியில் இருந்து வந்ததால், சுவை குறைந்திருந்தாலும், விமானத்திலிருந்து சரியான உணவு எங்களுக்கு இல்லாததால், அமிர்தமாக இருந்தது சாம்பார். அனால் விலை எவ்வளவு தெரியுமா?. நான்கு இட்லி பதினைந்து சுவிஸ் பிராங்குகள். நமது இந்திய மதிப்பின் படி எழுநூறு ருபாய். இருந்தாலும் பசியில் விலை பெரிதாக தெரியவில்லை. ( அமெரிக்காவில் நான்கு இட்லி ஐந்து டாலர். சுவிஸ்சில் அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம். பயண அசதியையும் பொருட் படுத்தாது பெர்ன் நகரை நடை வலம் வந்து அறையில் அடைந்தோம்.



                    ஆறு மணிக்கெல்லாம் உறங்கிவிடும் பெர்ன் நகர தெருக்கள்...
இரவு எட்டு மணி வரை வெளிச்சம் இருந்தாலும்,சுவிஸ் தெருக்கள் மாலை ஆறு மணிக்கெல்லாம் அமைதி ஆகி விடுகிறது. ஏழு மணிக்கு பிறகு திறந்திருப்பது உணவகங்களும் பார்களும் தான். சரியான சோம்பல் நகரம் என நாங்கள் பேசிக் கொண்டோம்.

வெளியே தெருவில் இரவு ஒரு மணி வரி லியோபாலத் என்ற பாரிலிருந்து திடும் திடும் என இசையும் கேளிக்கையும் நடந்து கொண்டிருந்ததை அரை தூக்கத்தில் கவனித்தவாறே உறங்கிப் போனோம்.

மறுநாள், ஜெனீவாவை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது.


பயணம் தொடரும்...
--

Friday, October 29, 2010

உலக சினிமா: அப் இன் தி ஏர் (Up in the Air).




உலகில் பல தொழில்களில் ஒன்று ஆலோசகர் எனப்படும் கன்சல்டன்ட் தொழில். கன்சல்டன்ட்கள் ஐ டி தொழிலில் மட்டும் அல்ல. பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வருடத்தில் பாதி நாட்கள் விமானங்களில் பறந்து கொண்டே இருப்பார்கள். இவர்களது வாழ்க்கையை பெட்டி வாழ்க்கை (Box Life) என சொல்லலாம். எப்போதும் பெட்டியில் துணிகளை வைத்து எங்கும் கிளம்ப தயாராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கன்சல்டன்ட் வாழ்கையை சிறிது நகைச்சுவை, மேலோட்டமான செண்டிமெண்ட்ஸ் கலந்து வாழ்கையை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் திரைப்படமாக 'அப் இன் தி ஏர்' திரைப் படத்தை படைத்திருக்கிறார் கனடா நாட்டு இயக்குனர் ஜேசன் ரேயத்மான்.

அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தின் ஒமஹா நகரில் இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறான் நடுத்தரவயது ரயான் பிங்கம். அவனது வேலை, வேலைநீக்கம் செய்யும் ஒரு ஆலோசகன். ஒவ்வொரு நகரத்தில் இருக்கும் கம்பனிகளுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதே அவனது வேலை. வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களை அவர்களின் கவலைகளை குறைத்து அவர்களுக்கு இருக்கும் எதிர்காலத்தை விளக்கி ஒரு மனோதத்துவ நிபுணன் போல அவர்களது சுமைகளை தாங்கி கொண்டு அவர்களுக்கு பணி நீக்கம் தருவதே அவனது சவாலான வேலை.

வருடத்தில் 290 நாட்கள் விமானங்களில் பறந்து பறந்து வேறு வேறு ஊர்களுக்கு சென்று பணி நீக்கம் செய்யும் வேலை அவனுக்கு பிடித்திருந்தது. எஞ்சி இருந்த 75 நாட்களை அவன் வெறுத்தான். ஏனென்றால் தனியாக அவனது அபார்ட்மெண்டில் வாழ வேண்டும்.

அமெரிக்காவில் பிரீகுவன்ட் பிளையர் மைல்ஸ் என ஒன்று உண்டு. ஒரே விமானத்தில் பறந்து கொண்டே இருந்தால், அதற்குண்டான அட்டையை கொடுப்பார்கள்.நீங்கள் பறக்கும் தூரத்திற்கு உள்ள மைல்கள் பாயிண்டுகளாக அந்த அட்டையில் ஏறும். சில குறிப்பிட்ட பாயிண்டுகள் சேர்ந்ததும் உங்களுக்கு அந்த விமானத்தில் இலவசமாக அந்த பாயிண்டுகளுக்கு ஏற்ற தொலைவுக்கு அந்த விமானத்தில் பறந்து கொள்ளலாம். (இப்போது இந்தியாவிலும் இது இருக்கிறது). ரயான்னுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற அந்த விமான அட்டையில் ஒரு மில்லியன் பாய்ண்டுகள் சேர்க்கவேண்டும் என்பது கனவு.


நாடலி என்ற புதிதாக பட்டபடிப்பை முடித்து அவனது கம்பெனியில் சேரும் பெண்ணினால் அவனது கனவுக்கு தடை வருகிறது. அவனது கம்பனியின் செலவை குறைக்க அவள் புதிய ஒரு யோசனையோடு வருகிறாள். பணி நீக்கம் செய்வதற்கு நேரில் செல்லாமல், இன்டர்நெட் மூலமாகவே வீடியோ கோன்பெரேன்சிங் முறையில் நேர்முகம் நடத்திக் கொண்டால் விமான செலவுகள் மற்றும் தங்கும் செலவுகள் கம்பனிக்கு மிஞ்சும் என்ற அவளது யோசனையை அந்த கம்பெனி எம் டீ ஏற்றுக்கொள்ள ரயான் அதனை எதிர்க்கிறான். பணி நீக்கம் செய்யப்படும் மக்களின் குறைகளை நேரில் சென்று அறியாமல் அவர்களை திருப்தி படுத்த முடியாது என்ற அவனது வாதம் எடுபடவில்லை.

எனினும் பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் மன நிலையை நேரில் அறிய ரயான், நாடலீயையும் தன்னுடன் கூட்டி செல்ல வேண்டி இருக்கிறது. இருவரும் சேர்ந்தபடி பணி நீக்கம் செய்ய ஆரம்பிக்கும்போது, பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் துக்கமான மன நிலை நாடலீக்கு மெல்ல புரிகிறது. அவளது பாய் அவளை விட்டு பிரிய, அவளால் பணி நீக்கம் செய்யப்பட ஒரு பெண்மணி தற்கொலை செய்து கொள்ள நாடலி தனது வேலையே ராஜினமா செய்து விடுகிறாள். இதற்கிடையே... ஒரு விமான நிலையத்தில், ரயான் போலவே ஒரு கன்சல்டண்டாக பறந்து கொண்டே இருக்கும் அலெக்ஸ் என்ற நடுத்தரவயது பெண்ணின் காதலும் கலவியும் கிடைக்க, பின்னர் அவளை மனதிற்குள் காதலிக்க ஆரம்பிக்கிறான் ரயான்.

ரயான்னுக்கு ஒரு தங்கை இருக்க அவனது குடும்பத்தின் மீது அவனுக்கு பிடிப்பில்லாமல் இருக்கிறது. எனினும் அவனது தங்கையின் திருமணத்துக்கு கட்டாயம் வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட அவன் அந்த திருமணத்துக்கு சென்றானா.. அவனது மன நிலை என்ன என்பதை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்கள்.


படம் மூன்றே மூன்று கதாபாத்திரங்களை சுற்றி சுழல்கிறது. ரயான்னின் தனிமையின் கொண்டாட்டம் பின்னர் அந்த தனிமையே அவனை வாட்டுகிறது. ரயான்னை வெறும் நட்புக்காகவும் கலவிக்காகவும் மட்டும் ஏற்றுக் கொள்ளும் அலெக்ஸ், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்துடன் வரும் நாடலி. ஒவ்வொருவரின் கதையும் படத்துடன் பின்னி பிணைந்து நமக்கு முன்னே நடப்பதை போல காட்சிகள் விரிவது இயக்குனரின் திறமை.

ரயான்னாக வரும் ஜார்ஜ் க்ளூனியின் நடிப்பு அபாரம். தனிமையை தான் நேசிக்கும் தருணங்களுக்கும் தனிமையை வெறுக்கும் தருணங்களுக்கும் வேறுபட்ட முகபாவத்தை காட்டி கைத்தட்டல் அள்ளிக் கொள்கிறார். ஆஸ்காருக்கு இவரது நடிப்பு பரிந்துரைக்கப் பட்டது மிகை அல்ல. நாடலியாக நடித்திருக்கும் ஆனா கெண்ட்ரிக்கும் எதுவும் தெரியும் என்ற திமிர் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை அற்புதமாக காட்டி இருக்கிறார்.

வால்ட்டர் கிம்மின் புத்தகத்தை திரைக்கதையாக்கி கருப்பு நகைச்சுவை படம் நெடுக தூவி, ஒப்பாரி காட்சிகளோ உருக்கமான காட்சிகளோ இன்றியும் கூட நம் இதயத்தை கனக்க வைக்கிறார் இயக்குனர் ஜேசன் ரேயத்மான். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், அமெரிக்கர்கள் தங்களை திரையில் பார்ப்பதே. அமெரிக்காவில் நடக்கும் பணி நீக்கங்களும் பலரின் பெட்டி வாழ்க்கைகளும் படத்தில் துல்லியமாக காண்பிக்கப் பட்டிருக்கிறது.

அப் இன் தி ஏர் ---தம்ஸ் அப்.



திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி... 



Wednesday, October 20, 2010

பூலோக சுவர்க்கம்: சுவிஸ் பயணம்-2( படங்களுடன்...)

                                                                  ஜூரிச் ஏர்போர்ட்.

சுவிஸ் சென்று இறங்கியதும், அமெரிக்கன் டாலரை சுவிஸ் பிராங்க்ஸ் ஆக மாற்ற வேண்டுமே..!. நாங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பும்போது சுவிஸ் பிராங்கை விட அதிகமாக இருந்த அமெரிக்க டாலர், நாங்கள் சுவிசில் இறங்கி பணத்தை மாற்றும்போது சுவிஸ் பிராங்கை விட மதிப்பு குறைவாக இருந்தது.  ஒரே இரவில் நடந்த இந்த மாற்றம் எங்களின் முதல் ஆச்சர்யம்.

உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் ஆகையால், ஒரு பிரம்மாண்டமான விமான நிலையத்தை எதிர்பார்த்து போன எங்களுக்கு அந்த சிறிய விமான நிலையம் இரண்டாவது ஆச்சர்யம்.

அமெரிக்காவை விட ஐரோப்பா தான் சுத்தமானது என பலரும் கூற கேட்டு இருந்த எங்களுக்கு, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், கால் வைக்க கூட இடமின்றி எங்கெங்கு காணினும் சிகரெட் துண்டுகள். யாரை பார்த்தாலும் சிகரட் புகைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இது எங்களுக்கு மூன்றாம் ஆச்சர்யம்.

                                                                   சுவிஸ் ரயில்
விமான நிலையத்தின் முன்னாடியே ரயில் நிலையம் இருக்கிறது. சுவிசில் எந்த ரயில் நிலையம் சென்றாலும் தகவல் தரும் அலுவலகம் உள்ளது. நல்ல உதவியாக இருக்கிறார்கள். நாம் எங்கு செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும் என்பதை அவர்கள் எளிதாக விளக்குகிறார்கள்.

சூரிச் விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் சென்று தகவல் தரும் நிலையத்திற்கு சென்று நான்கு நாள் பாஸ் வாங்கி கொண்டோம். மிக அதிகம் தான். ஒரு ஆளுக்கு இரண்டாம் வகுப்பு பாஸ், இருநூற்று இருபது சுவிஸ் பிராங்குகள். நான்கு நாட்களுக்கு எந்த ரயிலில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். சுவிஸ் ஒரு சிறிய நாடு என்பதாலும், நான்கு மணி நேர பயணத்தில், சுவிசின் கிழக்கு ஓரத்தில் இருந்து மேற்கின் ஓரத்துக்கு சென்று விட முடியும் என்பதால் நான்கு நாட்களுக்கு பாஸ் எடுத்துக் கொண்டோம். இந்த பாசின் வசதி என்னவென்றால் ரயில்கள்  மட்டும் அல்லாது, டிராம்கள், பேருந்துகள், படகுகள், என அனைத்திலும் கட்டணம் இன்றி அந்த நான்கு நாட்களில் பயணம் செய்து கொள்ளலாம். தனி தனியாக பயண சீட்டு எடுக்கவேண்டுமென்றால், நமது சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.
                                                                    ரயிலின் உள்ளே..!
நாங்கள் சென்று சேர்ந்த நாளின் மறுநாளில் இருந்து நான்கு நாட்களுக்கு பாஸ் எடுத்து வைத்துக் கொண்டோம். ரயில் நிலையம் சுத்தமாக இருந்தது என்றாலும் அமெரிக்க ரயில் நிலையங்களின் பளபளப்பு இங்கு இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் சூரிச் நகரில் தங்கும் அறை முன்பதிவு செய்யும் போது, எனக்கு செப்டம்பர் மூன்றில் இருந்து தான் கிடைத்தது. நாங்கள் சூரிச் சென்று சேர்ந்த நாளோ செப்டம்பர் ஒன்று. எனவே முதல் இரண்டு நாட்களுக்கு சுவிஸ் நகரின் தலை நகரான பெர்ன் நகரில் அறை முன் பதிவு செய்திருந்தோம். நாங்கள் மறுநாள் செல்ல திட்டமிட்டிருந்த ஜெனீவா நகரம் சூரிச்சிலிருந்து மூன்று மணி நேரம். அனால் பெர்நிலிருந்து இரண்டு மணி நேரம். மற்றும் இண்டர்லாகன் என்ற நகரம் நாற்பது நிமிடங்கள் மட்டுமே என்பதால், பெர்னில் அறை எடுத்திருந்தோம்.

நான் முன்பே கூறியதை போல சுவிஸ் நாட்டில் எல்லாவற்றிற்கும் விலை மிக மிக அதிகம். பெர்ன் நகரத்தில் நாங்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை நூற்றி ஐம்பது டாலர்கள். அது தான் அங்கு இருந்ததிலே மிகவும் குறைவு. (ஹாஸ்டல்கள் உண்டு என்றாலும், குடும்பத்துடன் அங்கு சென்று தங்க வசதிப்படாது. முக்கியமாக அங்கு பொதுக்கழிப்பிடங்கள் தான் உண்டு. மற்றும் குழந்தையுடன் சென்றால் அங்கு தங்குவது மிகவும் கடினம். தனியாக செல்பவர்களுக்கு ஐம்பது சுவிஸ் பிராங்குகளுக்கு ஹாஸ்டல்கள் உண்டு.)
                                                                   சூரிச் ரயில் நிலையம்.
சூரிச்சிலிருந்து பெர்ன் நகருக்கு அன்று தனியாக டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறி எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். ரயில் மிக சுத்தமாக அழகாக இருந்தது. விமானத்தில் இருக்கும் இருக்கைகளை விட மிக வசதியாக இருந்தது.

அங்குள்ள ரயில் நிலையங்களை பான்ஹோப்ப் (bahnhoff) என்றும் விமான நிலையங்களை ப்லாகபான்(flughafan) என்றும் சொல்கிறார்கள். அவர்கள் பேசுவது சுவிஸ் என்ற மொழி. ஜேர்மன் மொழிக்கும் சுவிஸ் மொழிக்கும் ஒற்றுமைகள் உண்டு என்றாலும் பல வேறுபாடுகள் உண்டு என்பதை பின்னாளில் எனக்கு நண்பனான பீட்டர் பக்மான் என்ற எனது சுவிஸ் வாழ் நண்பனின் மூலம் தெரிந்து கொண்டேன்.

சூரிச்சிலிருந்து பெர்ன் செல்ல ஒன்னேகால் மணி நேரம் ஆனது. ஒரு ஆளுக்கு அறுபத்தியொரு அமெரிக்க டாலர்கள். வழக்கமாக ரயில் பயணங்களில் சுவிஸ் மிக அழகாக இருக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் எங்களுக்கு அமெரிக்காவுக்கும் சுவிஸ் நாட்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை.  சுவிஸ் மிக அழகு என்று சொல்கிறார்கள் ஆனால் அமெரிக்காவும் இப்படித்தானே இருக்கிறது என பேசிக் கொண்டோம்.

சுவிஸ் எங்களுக்கு ஆச்சர்யங்களையும் அதிசயங்களையும் காட்டவில்லை, மறுநாள் மாலை வரை. அதற்க்கு அப்புறம் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

(பயணம் தொடரும்).
--

Monday, October 18, 2010

அண்டத்தின் அடியில் அறுபத்து ஏழு நாட்கள்....!

                                                     அந்த முப்பத்து மூன்று பேர்..!

உலகம் முழுக்க பிரார்த்தனையோடு, மூச்சை பிடித்தபடி காத்திருக்க.. அந்த சுரங்கத்தின் அடியில் இருந்து முதல் ஆள் வெளியே வர கர  கோஷங்களும் வாழ்த்துகளும், கண்ணீர் துளிகளும், சந்தோஷங்களும் கொண்டாடங்களுமாய் நிறைந்தது அந்த சிலி நாட்டின் கிராமத்தில். முப்பத்து மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் பூமிக்கு அடியில்  சுமார் ஒரு மைல் தொலைவில் மண் சரிவில் மாட்டிக்கொள்ள அறுபத்தி ஏழு நாட்கள் கழித்து அந்த முப்பத்து மூன்று சுரங்கத் தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டிருக்கிறது சிலி அரசு.
                                                             அந்தச் சுரங்கம்..!

ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி   ஒரு வெடி விபத்தில், அந்த சுரங்கத்தின் வாயில்கள் நசுங்கி மூடிக் கொள்ள, உள்ளே இருந்த முப்பத்து மூன்று சுரங்க தொழிலாளர்கள், உயிரிழந்திருப்பர் என சிலி நாட்டின் நாளிதழ்கள் கதறத் துவங்கின. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என கருதிக் கொண்டிருந்த வேளையில்.. அவர்களை தேட அந்த மலையில் ஆழ்துளை போடப்பட, அந்த டிரில்லர் முனைப்பகுதி  இரண்டாயிரம் அடிகள் இறங்கியப்பின் தட்டப்பட, அவசர அவசரமாக அதனை வெளியே இழுத்து பார்க்கையில், அதன் முனையில் ஒரு தாளில் சிவப்பு மையில் இருந்த வாசகம் உலகத்தையே பரபரக்க வைத்தது. ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பினரா அவசர அவசரமாக பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்பினார். மீடியாவின் முன்னிலையில் நாட்டின் அதிபர் செபஸ்டின் பினரா, கரங்கள் நடுங்க குரல் தழுதழுக்க வாசித்தார்...' நாங்கள் முப்பத்து மூன்று பேரும் நலமாக உயிருடன் உள்ளோம்'. சிலி நாட்டு
மக்கள் சந்தோஷ கூத்தாடினர். எதோ தங்களின் சொந்த சகோதரர்கள் பற்றி நற்செய்தி வந்த உற்சாகத்தில் துள்ளினர்.  எனினும் அவர்களை உயிருடன் மீட்பது எப்படி?
செபஸ்டியன் பிநேரா நிச்சயமாக அவர்களை உயிருடன் மீட்க என்னாலான அனைத்தும் செய்வேன் என சொன்னதோடு மட்டுமல்லாது அவர் செயல்படுத்தியும் காட்டினார்.
                                சுரங்கத்தின் உள்ளே...மனம் தளரா... வீரர்கள்..

 அண்டை நாட்டின் உதவிகளை நாடினார். பல உலக நாடுகளும் அவருக்கு உதவிக்கு வந்தன. முதலில் ஒரு சிறிய துளை போடப்பட்டு அதன் மூலம் உணவும் மருந்தும் அனுப்பி வைக்கப் பட்டது. ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து இருநூறு கலோரிகள் கொண்ட உணவே அனுப்பப்பட்டது. அவர்கள் உடல் மெலிய வேண்டும் என்பதே அதற்க்கு காரணம் அப்போது தான் அவர்களால் சிறிய துளையிலும் வெளியே வர முடியும்.

ஒரு பைபர் ஒப்டிக் லைன் ஒன்று உள்ளே அனுப்பப்பட்டு அதன் மூலம் அவர்கள் வெளியே தொலைபேசி கொள்ளவும், வீடியோ கோன்பிரேன்சிங் மூலம் தொடர்பும் ஏற்ப்படுத்தப் பட்டது. ஐயாயிரம் வாட் மின்சார கம்பியும் மின் விளக்கும் அனுப்பப்பட்டன. உள்ளிருப்பவர்களுக்கு பகலும் இரவும் வேறுபாடு அறிய இரவு நேரத்தில் தானாக விளக்குமங்கி போகுமாறு அமைக்கப் பட்டது. சுரங்க தொழிலாளர்கள், உள்ளே இருக்கும் அமிலங்களை வைத்து ஒரு ரசாயன கழிவறையை உருவாகினர். மல ஜலங்கள் ரசாயனத்தில் கரைந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.

அவர்கள் மன நலம் குன்றி போகாமல் இருக்க அவர்களுக்கு ஐபோட், ஒரு சிறிய ப்ரொஜெக்டர் அதில் அவர்கள் பேரும் கால்பந்தாட்ட பிரியர்களாக இருந்ததால், சிலி நாடு, உக்ரைனோடு விளையாடிய கால்பந்தாட்ட போட்டி டி வீ டி என அனுப்பி வைக்கப்பட்டது. 

ஒரு பெரிய துளை போடும் கருவி கொண்டு வரப்பட்டு, உள்ளே துளை போட, உள்ளிருந்த சுரங்க தொழிலாளர்கள், ஒவ்வொருவராக நேரம் பிரித்துக் கொண்டு துளையால் விழும் மண் மற்றும் கல்லின் துகள்கள் ஆகியவற்றை அப்புறப் படுத்தினர்.

குழுவில் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள், பல நகைச்சுவை துணுக்குகள் சொல்லி உள்ளிருக்கும் மற்றவர்கள் மனம் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்படி ஒவ்வொருவராக ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
                                                                              காப்ஸ்யூல்.

இதற்குள் துளை போடும் வேலை முடிவுக்கு வர, காப்ஸ்யூல் போன்ற ஒரு சாதனத்தை ஒரு காப்பாற்றும் வீரர் மற்றும் ஒரு சுரங்க தொழிலாளி ஆகியோர் மட்டுமே வர கூடிய அந்த கருவியை மோட்டாரின் துணை கொண்டு உள்ளே இறக்க முதல் தொழிலாளி வெளியே வர, காத்திருந்த சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பெரேரா கட்டி தழுவி முத்தமிட்டு வரவேற்ற போது உலகமே ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தது. அறுபத்து ஏழு நாட்கள் இருட்டையே கண்டவர்களுக்கு, வெளிச்சம் கண்களை பாதிக்கும் என்பதால்... பகல் நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு குளிர் கண்ணாடி கொடுக்கப்பட்டது.
 உலக தலைவர்களின் முன்னோடி..சிலி அதிபர் செபஸ்டியன் பெரேரா.

இவை அனைத்தும் நடந்து முடிக்கும் வரை, செபஸ்டியன் பெரேரா ஒரு டெண்டில் இருந்து கொண்டு முழுவதுமாக உடனிருந்தார். எப்பாடு பட்டாவது தனது மக்களை காப்பேன் என்று அவர் கொண்ட உறுதியை பூர்த்தி செய்தார். உலகம் முழுமைக்கும் தான் ஒரு மாதிரி தலைவனாக இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார். சிலி என்ற தென் அமெரிக்க சிறிய தேசம் இன்று உலகம் முழுதும் புகழ் பெற காரணமாக அந்த சுரங்க நிகழ்ச்சி அமைந்து விட்டது.
                ஒரு சுரங்கத் தொழிலாளியை சிலி அதிபர் வரவேற்கும் காட்சி.
                                                        புகைப்படம்: நன்றி All voices

இந்த வெற்றிக்கு காரணம், காப்பாற்றும் வீரர்களின் சாதுர்யமான யோசனைகள், அதற்கும் மேலே, தன நாடு மக்களை காப்பாற்ற அந்த மாபெரும் தலைவன் செபஸ்டியன் பெரராவின் முயற்சி, அதற்கும் மேலே அந்த முப்பத்து மூன்று பேரின் ஒற்றுமை மற்றும் மன உறுதி.

இன்னொன்றையும் சிலி வாசிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சுரங்கத்தின் அடியில் மாட்டிக் கொண்டபின்  முதல் முதலில் சுரங்க தொழிலாளர்களிடம் பேசிய அதிபர்
 'எவ்வளவு பேர் இருக்கிறீர்கள்?' என வினவ...
'முப்பத்து நான்கு பேர் ' என பதில் வந்திருக்கிறது.
'முப்பத்து மூன்று பெயர்கள் என்னிடம் உள்ளது. அந்த முப்பத்து நான்காவது ஆளின் பெயர் என்ன'

'கடவுள்'.

--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...