பருவ காலத்தில் காதல் வந்து அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு, வயதான பால்யத்தில் அருகே இருப்பது தான் உண்மை காதல் என பொளேரென அறைந்து சொல்கிறது பிரெஞ்சு திரைப்படம் AMOUR( காதல் )
படத்தின் துவக்கத்தில் ஒரு அரங்கத்தில் பியானோ இசைக்கப் படுகிறது. அரங்கத்தின் மேடை காண்பிக்கப் படுவதில்லை. பார்வையாளர்கள் மட்டும் காட்டப் படுகிறார்கள்.அதன் பின்னே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் வீட்டுக்குள் நுழைகிறார்கள், எண்பதுகளில் தங்களது அந்திமத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆன் மற்றும் ஜார்ஜ் தம்பதியர். அன்று வாசித்தவன் ஆனின் மாணவன் ஆண்ட்ரே. அவனது வாசிப்பை பற்றி பெருமையாக கூறிக் கொண்டிருக்கும் ஆன் சிறிது நேரம் செயலற்று பொய் விட பதைபதைக்கும் கணவன் ஜார்ஜ் மருத்துவமனைக்கு தொலைபேசுகிறான். ஆனுக்கு ஸ்ட்ரோக் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்புகிறார். வீடு திரும்பியதும், ஜார்ஜிடம், தன்னை இனி எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லக்கூடாது என வாக்கு வாங்கி விடுகிறார் ஆன் .
அதன் பின்னே ஆனை குளிப்பாட்டுதல் முதல் உணவளிப்பது வரை அனைத்தும் செய்யும் தாயுமானவனாக ஜார்ஜ் பணிவிடை செய்கிறார்.அவர்களது ஒரே மகள் ஈவா லண்டனில் வசித்து வருகிறாள். அவ்வப்போது இவர்களை பாரிஸ் வந்து பார்த்து செல்கிறாள். அம்மாவின் நிலையை கண்டும், அப்பா அம்மாவுக்கு செய்யும் பணிவிடைகளை கண்டும், அப்பாவின் பாரம் குறைக்க அம்மாவை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு கூற, ஆனிடம் தான் கொடுத்த வாக்கு பற்றி கூறி, அதனை மறுக்கிறார் ஜார்ஜ்.
ஆனுக்கு பக்கவாத நோயும் தாக்க,நிலை குலைந்து பொய் விடுகிறார்கள் இருவரும். எனினும் ஆனை , தன காதல் மனைவியை சுமை தாங்கியாக நின்று தாங்குகிறார் ஜார்ஜ். தனது காதல் மனைவியின் வியாகுலத்தை பார்த்து தாங்க இயலாத ஜார்ஜ் இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.
ஒரு அடுக்குமாடி வீடு, அதில் வாழும் இரு மனிதர்கள் அவ்வப்போது வந்து செல்லும் மகள் இரண்டு செவிலியர், ஆனின் பியானோ மாணவன் இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். படம் முழுக்க ஒரே ஒரு வீட்டில் மட்டுமே கதை சொல்லப்படுகிறது . இசையால் நிரம்பி வழியும் அந்த வீடும் கூட இந்தப் படத்தின் ஒரு கதாப் பாத்திரமாக நடித்திருக்கிறது.
ஆரம்பத்தில் தனியாக ஜார்ஜ்ஜும் ஆனும் தாங்கள் ரசித்த அந்த பியானோ குறித்த உரையாடல், அவர்களுக்கிடையே நிகழும் அந்நியோன்யத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது. ஆன் துயரப்படும் போதெல்லாம் ஜார்ஜ் பேசும் ஆறுதல் மொழிகளும், ஆனுக்கு ஒவ்வொரு நாளும் சிறுகுழந்தைகளுக்கு வாசிப்பதை போல புத்தகம் வாசித்து காட்டும்போதும், ஜார்ஜ் ஆனுக்கு பணிவிடை செய்யும்போதும் ஆணின் மீது தனக்குண்டான காதலை, மொழியின் மூலம் புரிய வைக்காமல்,தனது செயலின் மூலம் புரியவைப்பது படத்தின் அடிப்படை ஆன் மற்றும் ஜார்ஜின் மகள் இவா , 'என் சிறுவயதில் நீங்கள் இருவரும் காதலுடன் தான் இருக்கிறீர்கள், என் நண்பர்களின் பெற்றோர் போல விவாகரத்து பெறமாட்டீர்கள் என்பதை, மேலே கேட்கும் கட்டில் சத்தத்தில் இருந்து புரிந்துக் கொள்வேன்' என்று சொல்லுமிடம் கவிதை!.
இந்தப் படம் திரைப்படம் பார்க்கும் உணர்வை தராமல் நேரிலேயே இரு மனிதர்களின் வாழ்க்கையை பார்ப்பது போல பதிவு செய்திருக்கும் எதார்த்தம் பிரம்மிப்பை உண்டு செய்கிறது. எண்பது வயதான இருவரை மட்டுமே திரைப்படம் முழுவதும் உலவவிட்டு, அவர்களது காதலை, வலியை கோவத்தை, அன்னியோன்யத்தை காண்பிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் அதனை நிகழ்த்தி ஆஸ்கார், கோல்டன் க்ளோப் , பாப்டா போன்ற உலகின் ஆகச்சிறந்த விருதுகளை இந்தத் திரைப்படம் பெற காரணமாக இருந்தவர் , இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கிய ஜெர்மனியத் திரைப்பட இயக்குனர் மைக்கேல் ஹானெகெ. படத்தில் இசை ஒன்று இரண்டு இடங்களில் மட்டுமே வருகிறது.அதுவும் பியானோ மட்டுமே. படத்தின் ஒவ்வொரு துளியுமே ஒளிபபதிவில் தாண்டவம் நடத்தி இருக்கிறது.
படத்தின் ஜார்ஜ் ஆக நடித்திருக்கும் ஜீன் லூயி மற்றும் ஆன் ஆக நடித்திருக்கும் இம்மனுவாலா ரீவா இருவரும் இந்தக் கதா பாத்திரங்களுக்கு அத்துணை பாந்தம். இம்மானுவாலா முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.. தனது எண்பதாவது வயதிலும், ஒரு தேவதையாக ஒளிர்கிறார். ஜார்ஜ் அந்த எண்பதாவது வயதிலும் தீராக் காதலுடன் இருப்பதற்கு இந்த அழகும் நியாயப் படுத்தப் படுகிறது.
படம் மிக மெதுவாக நகர்வது படத்தை பார்க்கும் சிலருக்கு பெரும் குறையாக இருக்கலாம். நிச்சயமாக இந்த திரைப்படம் நல்ல சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே.
கூட்டுக் குடும்பங்கள் குறைந்தும் பெரும்பாலும் மறைந்தே விட்ட இந்த சமூகச் சூழலில் , தங்கள் பிள்ளைகள் தங்கள் அருகே இல்லாத நிலையில் இருக்கும் பல பெற்றோர்களின் நிலையை இந்தத் திரைப்படம் உணர்த்துகிறது.
இத்திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும், தங்களது அந்திமக் காலத்தைக் குறித்து பயம் வரும், அந்த பயத்தை தம்பதியர் இருவரும் தங்களது தீராக் காதல் மூலம் வெல்ல முடியும் என இந்தத் திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.
அமோர் ஒரு அற்புதம்.