Wednesday, June 24, 2015

உலக சினிமா: வைல்ட் (WILD) ( அமெரிக்கா ) - ஆஸ்கார் திரைப்பட வரிசை-3


நன்றி விகடன். 
விகடனில் வெளியான பதிவு.




ஆண்களுக்கு உடலை வலிமையாக படைத்தக் கடவுள், பெண்களின் உடலையும் மனதையும் மென்மையாகப் படைத்து விட்டதாகக் கூறுவார்கள். எந்த ஒரு வலிமையான காரியத்தையும் ஆணின் அளவுக்கு பெண்ணால் முடிக்க முடியாது என்ற கருத்தே உலகம் முழுதும் முன்வைக்கப் படுகிறது. அந்த கருத்தை உடைக்கப் புறப்பட்ட ஒரு சாதனைப் பெண்ணின் உண்மை கதை தான் வைல்ட்திரைப்படத்தின் நாயகி ஷெரில் ஸ்ட்ரெய்ட் எந்த சாதனையையும் முறியடிக்கப் புறப்படவில்லை. யாருக்கும் போட்டியாக களமிறங்கவில்லை. அவளது வாழ்க்கையில் நடக்கும் துன்ப சம்பவங்கள் அவளது வாழ்கையை புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து மீள இயற்கையோடு அவள் கால் நடையாக ஆயிரம் மைல்கள் தன்னந்தனியாக நடந்து கடப்பது தான் கதை.

அமெரிக்காவின் தெற்க்கே மெக்ஸிகோ நாட்டின் எல்லையோரத்தில் ஆரம்பிக்கும் பசிபிக் க்ரெஸ்ட் ட்ரயல் (Pacific  Crest trail ) ஈராயிரம் மைல்கள் கடந்து கனடா எல்லையோரத்தில் இருக்கும் ஆஷ்லாந்து  என்ற இடத்தில் முடிகிறது.மலைகள், காடுகள், பாலைவனங்கள் , பனிமலைகள் என அனைத்தையும் கடந்து இலக்கை அடைவது, பயணத்தை ஆரம்பித்தவர்களில் ஐம்பது விழுக்கடுகளே.

ஒரு குன்றின் மீது அமர்ந்தபடி, ரத்தம் வழியும் காலுறையை கழட்டி பெயர்ந்து நிற்கும் தனது நகத்தை பிடுங்கி எறிவதில் துவங்குகிறது திரைப்படம். படத்தின் திரைக்கதையில், ஷெரிலின் கால் நடைப் பயணத்தினூடே அவளது முன்கதை சொல்லப்படுகிறது

அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளரும் ஷெரில், தன குடிகார அப்பாவின் கொடுமைக்கு ஆளாகும் அம்மாவைக் கண்டு அவள் மேல் மிகுதியாக பாசமும், தன்  தந்தையின் மேல் மிகுந்த துவேஷத்தையும் கொள்கிறாள். தனது தந்தை ஒரு நாள் இறந்தபின் மகிழும் ஷெரில்  அந்த நிகழ்வை கண்டு துக்கப் படும் தாயை கண்டு ஆச்சர்யம் அடைகிறாள்.

 'அவன் ஒரு குடிகாரன், அவனிடம் நீ அடி வாங்காத நாளே கிடையாது. அப்படியும் எப்படி உன்னால் அவனை வெறுக்க முடிவதில்லை?' 

அதற்க்கு அவள் தாய் பாபி இப்படி பதிலுரைக்கிறாள்.' அவன் குடிகாரனாக இருந்திருக்கலாம். என்னை அடித்து துன்புறுத்தி இருக்கலாம். என்றாலும். அவன் மூலமாகத்தான் உன்னையும் உன் தம்பியையும் கருவுற்றேன். அவன் இல்லையென்றால் நீங்கள் இல்லை. பின் எப்படி அவனை நான் வெறுக்க முடியும்?'. பெரும்பாலான தாய்மார்கள். எல்லா ஊரிலும் ஒரு மாதிரித்தான் இருப்பார்கள் போல.

அம்மாவின் மூளையில் கட்டி என்றும் அது புற்றுநோயாக மாறிவிட்டது என்றும் இன்னும் சிறிது காலம் தான் என்றும் மருத்துவர்கள் கைவிட, நொறுங்கிப் போகிறார்கள் ஷெரிலும்  அவளது தம்பி லியாமும். அம்மா சிறிது சிறிதாக சாவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு பின் ஒரு நாள் மொத்தமாக கண்களை மூடியபின்னர் ஷேரிலால் தான் இவ்வுலகிலேயே அதிகமாக நேசித்த தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிலிருந்து வெளிவர காமத்தையும் போதையையும் நாடுகிறாள். கட்டிய கணவன் இருக்க, அறிமுகம் இல்லாதவர்களிடம் எல்லாம் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள். ஹெராயின் என்ற போதை பழக்கத்துக்கு அடிமையாகும் ஷெரில், அதனை தன்னுடன் பகிர்ந்தவனோடு நிர்வாண நிலையில் இருக்கும்போது தனது கணவனால் மீட்கப் படுகிறாள்

இருவரும் மனமொத்து விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்கள். அந்த சமயத்தில், ஷெரில்  தான் கர்ப்பமாக இருப்பதாக அறிகிறாள். தனது தோழி அய்மியிடம் அந்த குழந்தைக்கு தகப்பன்  யாரென்று தெரியாது என பிதற்றுகிறாள். அவள் வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கும் வேளையில், தனது தாய் பாபி வளர்த்த பெண் தான் இல்லை என உணர்கிறாள். தான் தனது அம்மாவின் மகளாக மாற ஒரு முடிவு எடுக்கிறாள். அது தான் இயற்கையோடு இயைந்த அந்த சாகசக்  கால்நடை பயணம்


இதற்க்கு முன்பு ட்ரெக்கிங் என்ற அந்த கால் நடைப்பயணம் பற்றி எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாதவளாய், தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறாள். பயணம் ஆரம்பிக்கும் இடங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகமும் பேனாவும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் நடைபயணம் மேற்கொள்பவர்கள் குறிப்புகள் எழுதி வைத்து சென்றால் பின்னே வருபவர்கள், முன்னே செல்லும் பயணிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். புத்தகங்கள் படிப்பதில் விருப்பமுள்ள ஷெரில் , வழிநெடுகிலும் பயணம் துவங்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் எமிலி டிக்கேன்சன், ப்ரோஸ்ட் ஆகியோரின் பொன் மொழிகளை எழுதி வைத்து அடியில் அவர்கள் பெயர்களை எழுதி, 'மற்றும் ஷெரில் ' என்று தனது பெயரை எழுதி வைத்துப் புறப்படுகிறாள்

முன் அனுபவம் இன்மையால் ஆரம்பத்தில் சில சங்கடங்களை எதிர்கொள்ளும் அவள் பின்னர் அதற்க்கு பழகிக் கொள்கிறாள். வழி நெடுகிலும் தென்படும் ஆண்களிடம் சந்தேகம் கொண்டு விலகியே இருக்கிறாள். ஒவ்வொரு  ஒரு குறிப்பிட்ட மைல்களை கடந்த பின்பு ஒரு ஸ்டேஷன் வருகிறது.அவளுக்கு ஐமியும் அவளுடைய முன்னாள் கணவனும் அவள் மேற்க்கொள்ளபோகும் மீதி பயணத்துக்கான பொருள், பணம் காலனி ஆகியவற்றை அனுப்பி வைக்கிறார்கள். பாலை, மலை,பனி பொழிவுகளை கடந்து  பலதரப்பட்ட மனிதர்களை கடந்து இலக்கை அடைகிறாள் ஷெரில் .

ஷெரில் ஸ்ட்ரைட் - மற்றும் ரீஸ் விதர்ஸ்பூன் ...நிஜமும் நிழலும்.!

ஷெரிலாக  ரீஸ் விதர்ஸ்பூன் (Reese Witherspoon).படம் முழுக்க ஒவ்வொரு காட்சியும் அவரே வியாபித்து நிறைகிறார். படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதோடு அவரே படத்தை தயாரித்தும் இருக்கிறார். தாயின் மீது தான் கொண்டுள்ள அன்பு, அவளது இழப்பை தாங்கி கொள்ள முடியாமல் போதை மற்றும் காமத்தில் உழன்று உடைந்துபோவது, பயணத்திற்கு தேவையானவற்றை சுமந்து செல்ல முடியாமல் தடுமாறுவது பின் ஒவ்வொரு இலக்கை அடையும்போதும் பரவசம் அடைவது, மலர்களினூடே, தாயை பற்றி பாடும் சிறுவனின் பாடலைக் கேட்டு உடைந்து அழுவது என பிரமாதப் படுத்தியிருக்கிறார்.

நாமும் ஷெரிலுடன்  பயணம் செய்த உணர்வை நமக்கு கடத்துகிறது இவெஸ் பெலன்கரின் (Yves Bélanger ) ஒளிப்பதிவு. பாலை நிலங்களிலும் காடுகளிலும் மழையிலும் மலையிலும் காமிரா அதகளம் செய்திருக்கிறது. படத்தின் தன்மைக்கேற்ப ஊடாடுகிறது துருத்தி தெரியாத இசை.

ரீஸ் விதர்ஸ்பூனுக்கு  சிறந்த நடிகை என்ற பிரிவில் ரீசின் தாயாக நடித்த லாரா டெர்ன் (Laura Dern )க்கு சிறந்த துணை நடிகைக்காகவும்ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது

படத்தில் சிற்சில வயது வந்தோருக்கான காட்சிகள் இருப்பதால், குழந்தைகளை தவிர்த்துவிட்டு இத்திரைப்படத்தை பாருங்கள். நீங்களே ட்ரெக்கிங் சென்று வந்த அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது.

வைல்ட் - வியப்பு. 


Friday, June 19, 2015

கவிதை: வாசனை.

செய்தி: மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது இரும்பு கம்பி கழன்று விழுந்து பைக்கில் சென்றவர் பலி


வாசனை.
---------------
தலைக்கவசம் தாண்டி

தெறித்த

ரத்தத் துளிகள்,

அந்தக் கண நேரத்தில் ..

அவனுக்கு ஞாபகப்படுத்தின,

பனித்துளிகள் சிதறிய

முன்னிரவின் தனிமையில்,

சிறகுகள் விரித்த காற்றுப் பறவையினிடையே,

கர்ப்பிணி மனைவியின்

வயிற்றில் காது வைத்து

கேட்கப்பட்ட

சிசுவின் ஒலியில்,

அவள் புன்னகையின்

வெளிச்சச் சூட்டில்

முகத்தில் கோடிட்ட

வியர்வைத் துளியின் வாசனையை ...!

Friday, May 15, 2015

உலக சினிமா: Boyhood ( அமெரிக்கா ) ஆஸ்கார் திரைப்பட வரிசை 2.



இப்பதிவை வெளியிட்ட விகடனுக்கு நன்றி.

மனித மனங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை  அருகே இருந்து கவனிக்க ஆசைப்படும். அடுத்தவன் வீட்டில் ஏதாவது நடந்தால் எட்டிப் பார்க்கும் குழு மனநிலை நம் சமூகத்துக்கு ஏற்பட்டது இப்படித்தான்.

இதே மனநிலை பற்றி 'The Truman story' போன்ற பல  திரைப்படங்கள் வந்திருந்தாலும் boyhood  போல ஒரு முயற்சி இதுவரை உலக திரைப்பட வரலாற்றில் நடந்ததில்லை. ஒரு மனிதனின் ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரையிலான வாழ்கையை சொல்கிறது இத்திரைப்படம். இதிலென்ன புதுமை? இத்திரைப்படம் பனிரெண்டு வருடங்களாக அதே நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அந்தந்த வருடத்துக்கு ஏற்றவாறு அந்ததந்த நடிகர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அந்த வருடத்தின் கால மாற்றங்களுக்கேற்ப படமாக்கப்பட்டிருக்கிறது படம்.

மேசன் என்கிற ஆறு வயது சிறுவனின் ஊடாக சொல்லப்படுகிறது ஒரு பனிரெண்டு வருட வாழ்க்கை. மேசனின் பெற்றோர் பிரிந்துவிட தனது தாய் மற்றும் தனது சகோதரி சமந்தாவுடன்  ஒரு நடுத்தர வாழ்கையை வாழ்ந்து வருகிறான். பெற்றோர் பிரிந்துவிட்டதால், கோர்ட் விதிமுறைகளின்படி அவர்களது தந்தை அவ்வப்போது வந்து மேசனையும் சமந்தாவையும் அழைத்து கொண்டு வெளியில் செல்வது வாடிக்கையானது. அவர்களது தாய்க்கு திருமணங்கள்  நிலைப்பதில்லை.

அவர்களை, அவர்களது தாயின் தாய் அதாவது பாட்டி, தான் இருக்கும் டெக்சாசில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு அழைத்துக்  கொள்கிறாள். அதுவரை தாங்கள் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, நண்பர்கள் அனைவரையும் சோகத்துடன்  பிரிந்து செல்கிறார்கள் மேசனும் சமந்தாவும். அங்கே மேலே படிக்கும் மேசனின் தாய் தனக்கு பாடம் சொல்லித்தரும் பேராசிரியருடன் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ள. அவரின் மகள் மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் வாழத் துவங்குகிறார்கள் மேசனும் சமந்தாவும். எனினும் புதிதாகக் கிடைத்த சகோதர சகோதரியுடன் நட்பு பாராட்ட, குடிக்கு அடிமையான பேராசிரியரோ அவர்களிடம் ஒரு அதிகாரத் தோரணையுடன் நடந்து கொள்கிறார். ஒரு நாள் அவர்களது தாயை  தாக்கிவிட, அவ்விடம் இருந்து மேசனும் சமந்தாவும் தங்களது புதிய தந்தை, சகோதர சகோதரியை விட்டு பிரிந்து வேறிடத்துக்கு  குடி பெயருகிறார்கள்.

அவ்வப்போது வந்து சந்திக்கும் தந்தை அவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கிறார். அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார், பின்னே அவரும் வேறொரு பெண்ணை மணம் புரிந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார். அவர்களது அம்மா மீண்டும் ஒரு முன்னாள் ராணுவ வீரனை மணந்து கொள்ள, அதிலும் கசந்து வெளியேறுகிறாள். மேசனும் சமந்தாவும்  பதின்ம வயதில் பள்ளி மேற்படிப்பு முடித்து கல்லூரியில் சேருவதோடு  முடிகிறது படம்.

ஒரு அமெரிக்க வாழ்கையை தத்ரூபமாக கண் முன்னே நிறுத்துகிறது படம். நடிக்கும் கதாபாத்திரங்களின் வளர்ச்சி குறிப்பாக மேசன் மற்றும் சமந்தா  சிறுவயதில் இருந்து பதின்ம வயது வரை தோற்ற மாற்றங்கள் எந்த விதமான பூச்சும் இன்றி இயல்பாக கடந்து ஒரு உண்மையான வாழ்கையை திரையில் காணும் பிரம்மிப்பை உண்டு செய்கிறது. அமெரிக்க குழந்தைகள் கடந்து செல்லும் பிரச்சனைகளை இயல்பாக கவலையோடு உரையாடுகிறது படம். தாயின் திருமண தோல்விகள், அடிக்கடி இருப்பிடம் மாறுவதால் தொடர்பிழக்கும் நட்பு வட்டம், பிள்ளைகளின் மீதான பெற்றோரின் வன்முறை, பள்ளியில் சக மாணவர்களால் ஏற்படும் BULLYING  எனப்படும் ராகிங், காதல் தோல்விகள் என இங்கு குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை சொல்லி செல்லும் அதே வேளையில். மேசன், சமந்தாவின் தந்தை , மேசனின் ஆசிரியர் போன்றோரின் மூலம் அவர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கத்  தவறவில்லை.

காலத்தே  மாறும் செல் பேசி மாடல்கள், இராக் போர், ஹாரி பாட்டர் திரைப்பட வெளியீடு தினம்,ஒபாமா, மெக்கெய்ன்  போட்டியிட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் என கதை நடக்கும் காலத்தை குறிப்பிட்டு செல்லும் காட்சிகளின் குறியீடுகள் படம் நெடுக விரவிக் கிடக்கின்றன.
ரிச்சர்ட் லின்க்லேட்டார். தன மகள் லோரேலி லின்க்லேட்டர்  மற்றும் படத்தின் நாயகன் எல்லார் கோல்ட்ரேன்.

இயக்குனர், ரிச்சர்ட் லின்க்லேட்டர் (Richard Linklater ). இந்த படத்துக்காக ஒவ்வொரு வருடத்துக்குமாக சேர்த்து பனிரெண்டு திரைக்கதைகளை எழுதியதாக சொல்கிறார். படத்தின் வரைவை (outline ) முதலில் தீர்மானித்துவிட்டு பின்பு காலத்துக்கேற்றபடி திரைக்கதை அமைத்து அந்த வருடத்தைய சிறப்புகளை திரைக்கதையில் சேர்த்திருக்கிறார். தனது மகள் லோரேலி லின்க்லேட்டர் சிறுவயதில் செய்த சேட்டைகளை கண்டு, அவளையே படத்தில் மேசனின் சகோதரி சமந்தாவாக நடிக்க வைத்திருக்கிறார். மேசனாக செய்திருப்பவர் எல்லார் கோல்ட்ரேன் (Ellar Coltrane) படத்துக்காக தனது வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியாமல், முடி வெட்டுதலை கூட இயக்குனரின் அனுமதி பெற்றபின் தான் செய்ததாக புலம்பி இருக்கிறார்.

படத்தின் ஜீவன், மேசனின் தாயாக நடித்திருக்கும் பெற்றிசியா ஆர்க்வெட் (Patricia Arquette). தனது திருமணங்கள் தோல்வியில் முடியும் வேளையில்  மனம் ஓடிவதும், அதனால் தனது பிள்ளைகள் பாதிக்கபடுவதை கண்டு மனம் வெதும்புவதும்,   அனைவரும் தன்னை தனியே விட்டு விட்டு பிரிந்து செல்லும்போது உடைந்து அழுவதுமாக அதகளப் படுத்தி இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கான ஆஸ்கார் விருது மற்றும் கோல்டன் க்ளோப்  விருது என கை நிறைய விருதுகளை சம்பாதித்து கொடுத்தது இந்த கதாபாத்திரம்.

படத்தின் ஆன்மா இசை. கதை நடக்கும் ஒவ்வொரு காலகட்டத்தையும் உணர்த்துவதற்காக அந்ததந்த காலங்களை பிரதிபலிக்கிறது இசை. படமாக்குவதற்கு டிஜிட்டல் உட்பட பல்வேறு கருவிகள் வந்துவிட்ட போதிலும், கதை நடக்கும் காலங்களுக்கிடையே ஆன  தொடர்பு காட்சிகள் (continuity ) அறுபட்டு விடக் கூடாது என்பதற்காக 35 எம் எம் பிலிம் சுருளில் முழு படத்தையும் எடுத்ததாக கூறுகிறார் இயக்குனர் லின்க்லேட்டார்.

பாய்ஹூட் -வாழ்க்கை.

Friday, March 20, 2015

கவிதை: கடவுளிடம் சிறுமியின் சிறு கேள்விகள்...!


செய்தி : ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் http://www.ibtimes.co.uk/india-six-year-old-sexually-assaulted-4-foot-iron-rod-1491027

தெய்வம் நின்று கொல்லும்
என்றார்கள்.

நான் செய்த குற்றம் என்ன?

அப்பாவின் மடியில்
ஆழ்ந்துறங்கியதா?

அம்மாவிடம்
மிட்டாய் வாங்க காசு கேட்டதா?

தம்பியிடம்
பலப்பத்தை பிடுங்கி
சண்டை இட்டதா?

புல்லை
மான்களுக்கு
இரையாகப்  படைத்தாய்!

மான்களை
புலிகளுக்கிரையாகப்  படைத்தாய்!

என்னை,
மனிதர்களுக்கிரையாகப்
படைத்தாயா ?

பெண் என்றால்
பேயும் இரங்கும்  என்பார்களே!

கடவுளே !
உனக்கு
இரக்கம் இல்லையே
உன்னை
என்னவென்று சொல்வது?

பெண்களை
தெய்வமாக
வணங்கும் நாடு என்பதால்
தைரியமாகப் பிறந்தேன்.

பெண்களை சேதப்படுத்துபவர்கள்,
தெய்வங்களை
என்ன செய்வார்கள்?

பாலூட்டும் தாயையும்
பாலுணர்வுடன்  பார்க்கும்
பெண்களுக்கெதிரான தேசத்தில்...
ஆறும்
அறுபதும்
ஒன்றுதான்.

ஆக்குபவர்கள்
பெண்களாக இருந்தாலும்
இங்கே
அழிபவர்களும்
அவர்களாகவே இருக்கிறார்கள்.


கடவுளே !
நீ
பெண்ணாக இருந்தால் !
இங்கே
பிறந்துவிடாதே!

நீ
நிர்பயாவாக  மாறுவாய்
அல்லது
இதே கவிதையை
எழுதிக் கொண்டிருப்பாய்..!

Friday, February 27, 2015

உலக சினிமா: ஈடா (போலந்து) ஆஸ்கார் 2015 திரைப்பட வரிசை.



கன்னியாஸ்த்திரி ஆவதற்காக படித்துக் கொண்டிருப்பவள் ஆன்னா.

சிறுவயதில், அனாதையாக யாராலோ அந்த ஆஸ்ரமத்தின் முன்னே விடப்பட்டவள். கன்னிகாஸ்திரி ஆவதற்கு முன்பு கடவுளின் முன்பு உறுதி மொழி எடுத்தால் தான் அவள் கன்னிகாஸ்திரி ஆக முடியும். அதற்க்கு முன்பு அவள் தனது வீட்டிற்கு சென்று வரலாம். உறுதி மொழி எடுத்தபின்னர் அவள் கடவுளுக்காக படைக்கப்பட்டவள்.கடவுளை சேவித்தே அவளது வாழ்வினி கழியும்.

தலைமை கன்னிகாஸ்திரி, ஆன்னாவுக்கு ஒரு தூரத்து அத்தை முறை உறவுப்பெண் இருப்பதாகக் கூறி அவளை சந்தித்து பிறகு வந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம் என்று அவளை சென்று வர அனுமதிக்கிறார்.

அந்த உறவுக்கார அத்தையின் விலாசம் தேடி கண்டு அவள் வீடு சேர்கிறாள் ஆன்னா. அவள் எதிர் கொள்வது ஒரு நடுத்தரவயது சதா புகைத்து கொண்டு கையில் மது போத்தலுடன் இரவு உடையில் ஒரு பெண்மணியை. அவள் சென்று சேரும் நேரத்தில் ஒரு ஆடவன் உடை அணிந்து கொண்டு அந்த வீட்டில் இருந்து விடை பெற்று செல்கிறான். 'நான் யார் என் தொழில் என்ன என்று உன்னிடம் சொல்லவில்லையா?' என கேட்கிறாள் அவள் அத்தை 'வாண்டா குருஸ் '. இதன் மூலம் அவள் தொழில் என்ன என்பதை பார்ப்பவரை தீர்மானிக்க வைக்கிறார் இயக்குனர்.

ஆன்னாவின் இயற் பெயர் ஈடா லிபென்ஸ்டைன்  என்றும் அவள் ஒரு யூத இனத்து குடும்பத்தை சார்ந்த பெண் என்றும் வாண்டா மூலம் அறிகிறாள் ஆன்னா. அவளது பெற்றோர் யார் என்பதை அறிந்து கொள்ள வாண்டாவும் ஆன்னாவும் சாலைப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்த பயணத்தின் ஊடே வாண்டா அவள் யூகித்தது போல அல்லாமல்  ஒரு நீதிபதி என்பதை அறிகிறாள் ஈடா. பயணத்தினூடே வாண்டா தண்ணி, புகை, ஆண்கள் என்று அனைத்து கேட்ட பழக்கங்களுடன் கூடிய ஒரு சாத்தானாகவும், ஆன்னாவை கன்னிகாஸ்திரி உடை அணிந்து கருணை உருவம் கொண்ட ஒரு தேவதையாகவும் காட்டப்படுகிறது. ( இதனை வசனமாகவும் வாண்டாவின் கதாபாத்திரம் பேசுகிறது).

இவர்களின் பயணத்தில் நடுவே ஒரு சாக்ஸ் இசைக்கும் இளைஞன் ஏறிக்கொள்ள அவனுக்கு ஆன்னாவின்  மீது ஈர்ப்பு ஏற்ப்படுகிறது. ஆன்னாவின் பெற்றோர் யார் என கண்டுபிடித்து அவர்கள் நிலையை அறிந்ததும் பெரும் அதிர்ச்சிக்குள்ளகிறார்கள் ஆன்னாவும் வாண்டாவும். வாண்டா மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள, ஆன்னா என்கிற ஈடா என்ன முடிவு எடுக்கிறாள் என்பது கிளைமாக்ஸ்.

ஈடா படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம் கண்களை விட்டு அகல மறுப்பதற்கு காரணம், படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கலை. படத்தின் முதல் காட்சியில், பனி பெய்து கொண்டிருக்கும் அந்த பகலில் ஏசுவின் சிலையை சுமந்து வரும் கன்னிகாஸ்திரிகளின் காட்சி முதலே அதகளம் ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொரு காமிரா கோணமும் மற்ற திரைப்படங்களில் இருந்து வேறுபட்டு தனித்து ஒரு ஓவியம் போல நிற்பதற்கு காரணம், Lukasz Zal,Ryszard Lenczewski என்ற இரட்டையர் தான். படத்தின் கதை நடக்கும் காலத்திற்கேற்ப கருப்பு வெள்ளையில் படம் பிடித்திருப்பது படத்தின் கதை காலத்திற்கு கூடுதல் நம்பகத் தன்மையை கொடுக்கிறது. ஒரு காட்சியின் பிரேம் முழுக்க வியாபித்திருக்கும் பின்னணி போருள்களிநூடே  ஒளியை பாய்ச்சி, பிரேமின் கீழ் பகுதியில் மட்டுமே கதாபாத்திரங்களின் முகங்களை காட்டும் அழகு, வேறு படங்களில் காணாதது. படத்தில் ஆன்னா என்கிற ஈடாவாக நடித்திருக்கும் அகதா (Agata Trzebuchowska) மிக அற்புத தேர்வு.  அவர் முகத்தில் இருக்கும் இன்னொசென்ஸ் மற்றும் தேஜஸ் ஒரு நிஜ கன்னிகாஸ்திரியின் பிரதிபலிப்பு.

வாண்டாவாக நடித்திருக்கும் அகதா (Agata Kulesza)  யாருமற்ற தனிமையில் குடியும் சிகரெட்டும் ஆண் நண்பர்களுமாக இருந்தும் டிப்ரஷனில் அவதிப்படும் கதாபாத்திரம். அதே சமயத்தில் ஈடாவின் மீதுள்ள அன்பு, என்று பிரமாதமாக கலந்து கட்டி நடித்திருக்கிறார்.

இயக்குனர் பாவல் பவ்ளிகொவ்ஸ்கி (Paweł Pawlikowski). ஈடாவின் திரை மொழியில், திரை உலக ஜாம்பாவான்  இங்கமார் பெர்க்மானின் சாயல் அதிகம் தெரிகிறது. படத்தின் மீதான ஒளிப்பதிவின் தாக்கத்தை அதிகரிக்க வைத்து எளிமையான திரைக்கதை அமைத்திருக்கிறார். படம் முழுதும் கொட்டிக் கொண்டிருக்கும் பனி மழை படத்தின் கதைக்கு ஏற்ப பயன்படுத்திருப்பது பார்வையாளனை கதைக்குள் இழுக்கும் தந்திரம்.

இசை, படத்தின் வெகு சில இடங்களில் மட்டுமே மெதுவாக ஒலிக்கிறது. மௌனத்தை கூட படத்தின் இசையாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறார் இசையமைப்பாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன்.

உலகின் பல்வேறு திரைப்பட விருதுகளை வென்றிருக்கும் இத்திரைப்படம், சிறந்த அயல்நாட்டு திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த அயல் நாட்டு திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது.

நல்ல திரைப்படங்களை தேடும் ரசிகர்களுக்கு விருந்து ஈடா.

ஈடா - அமைதிப் புயல்.

Thursday, February 26, 2015

மன்னிப்பு!

மன்னிப்பு
==========


மன்னிப்பு என்பது
வெறும்
வார்த்தையில்
தொக்கி நிற்கிறது!

மன்னிப்பு
கேட்கப்பட்ட
கணத்தைக் கடந்து
அந்த வார்த்தைக்கு
மதிப்பேதும்
இருப்பதில்லை.

மன்னிப்பு
வழங்கப்பட்ட நொடியில்
ஏற்படும் கர்வம்
சில நொடிகள் தாண்டி
நிலைப்பதில்லை!.

மன்னிப்பில்
பரிமாற்றப்படும்
கண்ணீர் துளிகளில்,
உப்புச்சுவை
தெரிவதில்லை!

எதிராளியின் இதயத்தில்
பாரத்தை ஏற்றிவிடும்
திருப்திக்காக
சிலசமயம்
மன்னிப்புகள்
கேட்கப்படுகின்றன

மன்னிப்பு
கேட்டுவிட்டதால்
தன மீதான குற்றச்சாயங்கள்
துடைக்கப்பட்டுவிட்டதாக
நம்பப்படுகின்றன .

தான்
மன்னிப்பு கேட்டுவிட்டதாக
பிறரிடம் சொல்லிக் கொள்ளும்
வாய்ப்புகளை
சில
மன்னிப்புகள் ஏற்ப்படுத்துகின்றன.

மன்னிப்பினால்
தற்காலிக நிம்மதி தவிர
ஆகக்கூடிய  காரியம்
வேறொன்றுமில்லை.

கேட்கப்பட்ட காலத்தை தாண்டிய
செயலில் இருக்கிறது,
உண்மையான மன்னிப்பின்
மதிப்பு .!

Wednesday, February 11, 2015

ஆம் ஆத்மி சுனாமி!




தூய்மை இந்தியா அமைப்பை தொடங்கியது பிரதமர் மோதி என்றாலும் அதனை செயல்படுத்தியது ஆம் ஆத்மி. ஆம் தில்லி சட்டபேரவை தேர்தலில் எழுபதுக்கு அறுபத்தேழு இடங்களை வென்று அரசியலின் மிகப் பெரும் திமிங்கலங்களான  காங்கிரஸ் மற்றும் பா ஜா கா கட்சி இடங்களை துடைத்தேறிந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மேல் இருந்த அதிருப்தியில் அப்போதைக்கு வலிமையாக இருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து மக்கள் பெரும் வெற்றி பெற வைத்தது மோதி அலைக்கு கிடைத்த வெற்றி என்று தப்பு கணக்கு போட்டு இறுமாப்போடு அலைந்ததில் இருந்து பா ஜா காவின் சரிவு துவங்கியது. பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து மோதி அரசு, தேர்தலுக்கு முந்தய தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது.மோதி தேசத்தின் பிரச்சனைகளை சமாளிப்பதில் ஆர்வம் காட்டாது, வெளிநாடுகளுக்கு பறந்து வெளிநாட்டு தலைவர்களோடு கை குலுக்கி படம் பிடித்து, தான் ஒரு உலக தலைவன் என காண்பிப்பதில் தான் முனைப்பாக இருந்தார். தனது தாய் மற்றும் சகோதர இயக்கங்களான ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவ இயக்கங்கள், சிறுபான்மை மதத்தினரை கண்டு 'இந்துக்கள் மட்டுமே, ராமரின் பிள்ளைகள், பிற மதத்தவர் முறை தவறி பிறந்தவர்கள்', 'கர் வாப்சி', இந்து ராஷ்டிரம், இந்துக்கள் ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், என்று உளறின உளறல்களை எல்லாம் கண்டும் காணதது போல இருந்து அவர்களின் உளறல்களை ஆமோதிப்பதை போல இருந்த செய்கைகள், உலகின் மாபெரும் ஜனநாயகத்தின் பிள்ளைகளான இந்திய குடிமகன்களை, பிரதமரின் மேல் எரிச்சல்பட வைத்தது.

பிரதமர் மோதியின்  மிகப்பெரும் சாதனையாக கருதப்பட்ட அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்  கொண்டு வந்த திட்டம். மன்மோகன் சிங்கின் கனவு திட்டம். அதற்காகத்தான் மன்மோகன் சிங் ஒபாமா வெற்றி பெற்றபின் அமெரிக்காவின்  ஸ்டேட் டின்னர் க்கு அழைக்கப் பட்டார். ஆனால் அது நிறைவேறாமல் போனதற்கு மன்மோகன் அரசு அறிவுபூர்வமாக வைத்த செக் தான் காரணம் என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீடு, அணு உலைகளை நிர்மாணிக்கும் அமெரிக்க கம்பனிகள் தான் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததால் அவரது காலத்தில் அந்த திட்டம் நிறைவேறாமல் போனது. இப்போது மோதியின் அரசு அமெரிக்க அரசுக்கு பணிந்து அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை அமெரிக்க அரசு தர வேண்டியது இல்லை என்ற ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டதாக தெரிய வருகிறது.

ஒபாமாவின் வருகையில், மோதி, எகிப்து அரசின் கொடுங்கோலனான ஹோஸ்னி முபாரக் பாணியில்  பத்து லட்சத்துக்கு உடை அணிந்து வந்ததை அவரது கட்சிக்காரர்களே விரும்ப வில்லை. டீ விற்றவன் பிரதமராகக் கூடாதா என கேட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்ததும் அவரது கடந்த வாழ்க்கையை மறந்து விட்டதை மறக்கவில்லை மக்கள். தில்லியின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பா ஜா காவின் கூடாரத்தில் திகில் கிளம்பி விட்டது. ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியானதை அறிந்ததும், தில்லியில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற முனைப்பில், ஆம் ஆத்மியிலிருந்து  கிரண் பேடியை அழைத்து வந்து குறைந்த நாட்களின் இடைவெளியில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்தியதை, பா ஜா காவின் வளர்ச்சிக்கு காலம் காலமாக பாடுபட்ட பலரை வருத்தத்தில் ஆழ்த்தியது. தனது மத்திய அரசாங்க செயல்பாடுகளை ஸ்தம்பிக்கும் அளவுக்கு பல மந்திரிகளை பல எம் பிக்களை களத்தில் இறக்கிய பா ஜா கா கடைசியில் மோதியையும் களத்தில் இறக்கியது.

பத்து கோடிக்கும் அதிகமாக பத்திரிகைகளின் முகப்பு பக்கங்களில் விளம்பரங்கள் செய்த பாஜாகா, ஆம் ஆத்மியின் பண வரத்து குறித்து கேள்வி எழுப்பியது ஆச்சர்யமான விஷயம். அவாம் என்ற ஆம் ஆத்மியின் முன்னாள் கிளையில் உள்ளவர்களை ஏவி அவர்கள் கனடாவில் இருந்து  ஜாஸ்ப்ரீத் மான் என்பவர் ஆம் ஆத்மியின் கட்சியின் மேல் உள்ள பிடிப்பால் ஆயிரம் கனடிய டாலர்களை அனுப்பியதை குறித்து கேள்வி எழுப்பி, ஆம் ஆத்மியை திருடனாக விளித்தார்  பா ஜா காவின் நிர்மலா சீதாராமன். பின்னர் ஜாஸ்ப்ரீத் மான் அவர்களே தொலைக்காட்சி நேரலையில் தோன்றி தான் பணம் அனுப்பியது எந்த சட்ட விரோதனமான வழியும் அல்ல  அல்ல என்று சொன்னதும் அவாமின் நேர்மை முகம் கிழிந்து தொங்கியது. அவர்கள் காட்டிய காசோலை பொய்யான ஒரு மோசடி என்றும் பாஜாகாவின் வேலை இது என்றும் வெளியே தெரிந்தது. அரவிந்தை நக்சலாக சித்தரித்தார் மோதி.அரவிந்தின் குடும்பம், அன்ன அசாரே,  அரவிந்தின் கோத்திரம் அனைத்தும் பாஜாகாவின்  கேலி சித்திரங்களில் கேவலப் படுத்தப்பட்டன.தனிநபர் தாக்குதல் அதிகம் நடந்ததை அரசியல் விமர்சகர்கள் மற்றும் மக்கள் ரசிக்கவில்லை.

ஆம் ஆத்மி தேர்தல் தேதி அறிவிக்கப் படும் முன்னரே தேர்தலுக்கான அடித்தள வேலைகளை துவக்கி விட்டது. நாடெங்கும் புரையோடிப் போன லஞ்சத்தை எதிர்த்த போராட்டத்தை முன் வைத்ததே ஆம் ஆத்மியின் மிகப் பெரிய பலம்.லஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள் ஆம் ஆத்மி கட்சி முழுக்க பரவி இருந்தார்கள். ஐ டி இளைஞர்கள் மாணவர்கள்  அனைவரும் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆதரித்தார்கள். தங்களது சொந்த வேலைகளில் இருந்து விடுப்பு  எடுத்துக் கொண்டு வந்து கட்சியின் வெற்றிக்காக  உழைத்தார்கள். ப்ளாஷ் மாப் என்ற நடனத்தை ஆங்காங்கே நடத்தி ஓட்டு  சேகரித்தார்கள். விஷால் டட்லாணி என்ற பாடகரின் 'பாஞ்ச் சால் கேஜ்ரிவால் ' (ஐந்து வருடங்களும் கேஜ்ரிவால்) ஆம் ஆத்மியின் டெல்லி கீதமானது. அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகிவிட அந்த பாடலை பாடியும் நடனம் ஆடியும், அடித்தட்டு மக்களிடம் இருந்து தங்கள் பிரச்சாரத்தை  ஆரம்பித்தனர். படித்தவர்கள், தேச நலனில் அக்கறை கொண்டவர்கள், லஞ்சத்தை வெறுப்பவர்கள் அனைவரும் ஆம் ஆத்மியில் இணைந்து ஒரு விடுதலை போரைப் போல  ஆம் ஆத்மியின் பிரச்சாரத்தை கடைக் கோடி டெல்லி வாசி வரை கொண்டு சேர்த்தனர். டில்லியில் வாழும் தமிழர்களின் ஓட்டை சேகரிக்க தமிழகத்தில் இருந்து முப்பது பேர் கொண்ட ஆம் ஆத்மி குழு ஒன்று புறப்பட்டு சென்று தமிழில் பிரச்சாரம் செய்து ஓட்டு  சேகரித்தனர்.


மீடியாக்களில்  ஆம் ஆத்மியின் ராகவ் சட்டா மற்றும் ஆஷிஷ் கைத்தான் ஆகியோர் ஆம் ஆத்மியின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களை மிக நாகரிகமாக எதிர்கொண்டனர். தன்னை எதிர்த்து அரசியல் செய்யும் தனது முன்னாள் தோழியான கிரண் பேடியை எதிர்த்து எதுவுமே அரவிந்த் சொல்லவில்லை.' அவர் ஒரு நல்ல பெண்மணி. அவர் மனம் புண்படும்படி தான் எதுவும் பேசப் போவதில்லை ' என்று ஒவ்வொரு முறை கிரனைப் பற்றி கேட்கும்போதும் சொன்னார்.

ஆம் ஆத்மி இப்படியாக திறமையாக வகுத்த வியூகங்களின் படி மக்கள் ஆம் ஆத்மியின் மீதான தங்களது அபிரிதமான நம்பிக்கையை எழுபதுக்கு அறுபத்தேழு என்ற கணக்கில் காட்டி உள்ளனர். எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு பத்து விழுக்காடுகள் இடங்களை எதிர்க்கட்சி வென்றிருக்க வேண்டும். பா ஜா கா மூன்று இடங்களை வென்றிருந்த போதிலும் பா ஜா கா வுக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை தர விழைந்திருக்கிறது ஆம் ஆத்மி. பாஜாகா பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை காங்கிரஸ் அரசுக்கு தராமல் வெற்றிடமாகவே இதுவரை வைத்திருப்பதை குறிப்பிடவேண்டி உள்ளது.

ஆம் ஆத்மி இனிதான் அரசியல் சதுரங்கத்தின் கடும் சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆம் ஆத்மி பொதுமக்களுக்கு வாக்களித்த லஞ்ச ஊழலற்ற நிர்வாகம், மின்சாரம், தண்ணீர், பெண்கள் பாதுகாப்பு, தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அனைத்தும் அத்துனை  எளிதான விடயங்கள் அல்ல. மத்திய அரசின் ஒத்துழைப்பும் இதில் முழுமையாக தேவைப்படுகிறது. பெரும்பான்மை பெற்று விட்டதால் அகம்பாவத்தில் ஆடாமல், சுய துதிபாடிகளை  அனுமதிக்காமல்,மக்கள் பிரச்சனையை எதிர்கொண்டு தீர்வு கண்டு ஒரு முன் மாதிரியான அரசாக தில்லி அரசாங்கம் திகழ்ந்தால், காங்கிரஸ் மற்றும் பாஜாவின், ஊழலான மதவாத அரசுக்கு எதிரான  ஒரு நல்ல மாற்றாக ஆம் ஆத்மி மற்ற மாநிலங்களிலும் பரவி இந்தியா ஊழலற்ற நாடாக மாற வாய்ப்புண்டு. ஆம் ஆத்மி அரசின் நேர்மை ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...