Saturday, October 31, 2009

திரைப்படம் - காஞ்சிவரம்.


எத்தனை நாளாகிவிட்டது...இப்படி ஒரு உயிர்ப்புள்ள ஒரு படம் பார்த்து!

1948 இல நடக்கிறது கதை.ஊருக்கெல்லாம் பட்டு நெய்யும் நெசவாளிகள் கூட்டம் தங்களின் மனைவிக்கோ மகளுக்கோ பட்டு சேலை கொடுத்து மகிழ்விக்க முடியாமல் தவிக்கிறது. வெளியே எண்ணூறு ரூபாய்க்கு விற்கப்படும் சேலையை நெய்யும் நேசவாளிக்கோ எட்டு ரூபாய் கூலி. நெசவாளி வேங்கடம், தான் கட்டிக்க போகும் பெண்ணுக்கு பட்டுடுத்தி வீட்டுக்கு கூடி வர நினைத்து அது முடியாமல் போக, தனது மகள் கல்யாணத்திற்கு எப்படியாவது பட்டு சேலை கட்டி மணவறையில் தனது மகளை அமர வைக்கவேண்டும் என அவருக்கு ஆசை. அதனை சபதமாக ஏற்கிறார்.

சபதம் எடுத்தாகிவிட்டது. பட்டு சேலை நெய்ய பட்டு நூலுக்கு எங்கே போவது?. தான் வேலை செய்யும் இடத்திலேயே, பைகள் மற்றும் உடைகள் சோதிக்கப்பட்டு வெளியனுப்ப படும் இடத்தில் வாயில் வைத்து நூலை கடத்தி வீட்டுக்கு வந்து மகளுக்கு சேலை நெய்கிறார். இடையே ரத்தவாந்தி எடுத்து தனது மனைவி இறந்து போனாலும் தனது லட்சியத்தை நோக்கிய அவரது பயணம் தொடர்கிறது. நெசவாளர்களின் துன்பம் கண்டு அங்கு எழுத்தாளராக வரும் கம்யூனிச தோழரிடம் நட்பு ஏற்பட்டு, அவரும் அவரது நண்பரான சாரதியும் சேர்ந்து தொழிற்சங்கம் அமைக்கிறார்கள். நெசவாளர்களை சுரண்டும் எஜமானனை எதிர்த்து கோரிக்கை வைக்கிறார்கள். ஆலை மூடப் படுகிறது. அவ்வமயம் தனது நண்பன் சாரதியின் மகனை தன மகள் தாமரைக்கு நிச்சயிக்க பட, சாரதியின் மகனோ பட்டாளத்தில் இருந்து விடுப்பில் வந்து செல்லுமுன் திருமணம் செய்யுமாறு கோர, தனது மகளுக்கு பட்டு சேலை நெயவதற்காக, வேலை நிறுத்தத்தை நிறுத்தி வேலைக்கு சென்று மீண்டும் பட்டு நூலை வாய்க்குள் வைத்து திருடி வெளி வரும்போது தனது நண்பனான சாரதியினாலேயே அவரது திருட்டு வெளி வந்து விட, அவரை அடித்து இழுத்து செல்கிறது போலீஸ். பரோலில் தனது மகளை பார்க்க வரும் அவர் என்ன ஆனார் என்பது உள்ளத்தை உருக்கும் கிளைமாக்ஸ்.

பிரகாஷ் ராஜ் என் மதிப்பிற்குரிய ஒரு நடிகர். அவர் ஏற்று நடிக்கும் பாத்திரம் எதுவானாலும் வெளுத்து வாங்கி விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சில படங்களில் ஓவர் ஆக்டிங் செய்தாலும் ரசிக்கவைக்க கூடிய நடிப்பு அவரது. காஞ்சிவரத்தில் பட்டு சேலை நெய்யும் நெசவாளி வேங்கடமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

பாத்திரம் உணர்ந்து ஆர்பாட்டம் இன்றி அமைதியான நடிப்பில் அண்டர்ப்ளே செய்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது கண்கள் பேசுகின்றன. இந்த படத்தில் நடித்ததற்கு அவர் சம்பளம் பெற்றுக் கொள்ள வில்லையாம். தேசிய விருது பெற தகுதியான நடிப்புதான்.

திருவின் ஒளிப்பதிவு மிக கச்சிதம். பீரியட் படத்திற்க்கேர்ப்ப அவரது ஒளி அமைப்பு நிஜத்தை கண் முன்னே காட்டுவது போல இருக்கிறது. M G ஸ்ரீகுமாரின் இசை படத்தின் காலத்திற்கேற்ற உணர்வுகளை கொண்டு வருகிறது.

இயக்குனர் ப்ரியதர்ஷன், மலையாளத்திலும் ஹிந்தியிலும் பொழுதுபோக்கு படங்களாக எடுத்து தள்ளியவர். தனது ஆத்மா திருப்திக்காக படம் நிச்சயம் ஓடாது என்று தெரிந்தும் இரண்டு கோடி செலவு செய்து இப்படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி இருக்கிறார்.

படத்தின் இறுதியில் வரும் அந்த அபரிதமான சோக காட்சிகள்.. அவார்டு படம் என்றாலே இப்படி தான் இருக்குமா என்ற ஒரு தேக்கத்தை ஏற்படுத்துகிறது.

காஞ்சிவரம் தமிழ் திரைக்கு ஒரு வரம்.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...