Sunday, January 23, 2011

திரைப்படம்: ஆடுகளம்.



தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து அற்புதமான திரைப்படங்கள் வெளி வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. உலக சினிமாவை நோக்கிய பயணத்தை அடுத்த களத்துக்கு எடுத்து செல்லும் திரைப்படம் தற்போது வெளி வந்துள்ள வெற்றிமாறனின் ஆடுகளம். இந்தத் திரைப்படத்தை தனுஷின் திரைப்படம் என சொல்வதை விட, வெற்றிமாறனின் ஆடுகளம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். படத்தில் வணிகத் தன்மைகளின் ஆதிக்கங்களை குறைத்து, தமிழுக்கு புதிய களமான சேவல் சண்டையை மையப் படுத்தி, மனித மகிழ்வுகளையும் வக்கிரங்களையும் ஒன்று சேர பதிவு செய்து ஒரு நல்ல சினிமாவை படைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

சிலர் இதனை இஸ்பானியல்  சினிமாவான அமோறேஸ் பெர்ரோசின்  காபி என சொல்கின்றார்கள். அமோறேஸ் பெரோசின் கதை வடிவத்தை தான் மணிரத்னம் ஆயுத எழுத்து படத்தில் கையாண்டார். அமோறேஸ் பெரோஸில் வரும் மூன்று கிளை கதைகளில் ஒன்று நாய் சண்டையை பற்றியது, ஆடுகளம் சேவல் சண்டையை பற்றியது என்ற ஒரே ஒரு சிறிய ஒற்றுமை தவிர, இரண்டும் வேறு வேறு களங்கள், வேறு வேறு கதைகள். எனவே ஆடுகளம் என்ற ஒரு நல்ல முயற்சியை பிரதி என குறுக்கிட வேண்டாம்.

கதை?
மதுரையில் சேவல் சண்டைக்கு பெயர் போனவர் பேட்டைக்காரன். அவரை எதிர்த்து ஒவ்வொரு முறையும் மண்ணை கவ்வுகிறார், சேவல் சண்டைக்கு பெயர்போன குடும்பத்திலிருந்து வந்த காவல் அதிகாரியான இரத்தின சாமி. அது தனது கௌரவத்தை பாதித்தால், மீண்டும் ஒரு முறை பந்தயம் வைத்து பெட்டைகாரனை வெற்றிகொள்ள முடிவு செய்கிறார்.

பேட்டைகாரனிடம் வேலை செய்த தொரை, பார் வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்க, பேட்டைகாரனின் மற்றொரு சிஷ்யன், கருப்பு. ஒவ்வொரு முறை சேவல் தோற்றபோதும் அதனை அறுத்து போட சொல்வது பேட்டைகாரனின் வழக்கம். கருப்பு வளர்த்த ஒரு சேவலை அறுத்து போட சொல்ல, கருப்புக்கு மனம் கேட்காமல், அதனை எடுத்து சென்று தனது வீட்டினில் வளர்க்கிறான். அதற்க்கு, சேவல் சண்டைக்கு தேவையான பயிற்சியும் கொடுத்தபடி வருகிறான்.

சேவல் சண்டையில் ஈடுபடும்படி ரத்தினசாமி இன் சவாலை ஏற்று கொள்ளும் பேட்டைக்காரன், தோற்ப்பவன் மீசை மழித்து மொட்டை அடித்து சண்டையை விட்டே ஒதுங்கி விட வேண்டும் என்ற சவாலுடன் களத்தில் இறங்க சிலிர்ப்பூட்டும் சேவல் சண்டைகள் அந்த ஆடுகளத்தில் அரங்கேற, பேட்டைகாரனின் சேவல்கள், ரதினசாம்யின் தந்திரங்களுடன் களத்தில் இறக்கப்பட்ட சேவல்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல் சுணங்க, பேட்டைகாரனின் எதிர்ப்புக் கிடையே, தான் வளர்த்து வரும் சேவலை களம் இறக்கும் சேவல் வெற்றி வாகை சூட, இறுமாப்பில் பேட்டைகாரனுக்கு தனுஷின் மேல் பகையும் வஞ்சமும் வளர இடை வேளை. அதன் பின்னர் தான் உண்மையான ஆடுகளம்.

 கருப்பு வாக வாழ்ந்திருக்கும் தனுஷுக்கு இது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். அசல் மதுரைக்காரனாக வாழ்ந்திருக்கிறார். அம்மாவை இழந்து அழுகை வராமல் அன்று இரவு அம்மாவை பற்றி தனது ஆங்கிலோ இந்தியன் காதலியான டாப்சீயிடம் புலம்பி கதறி உடைந்து போகுமிடத்தில் கலக்குகிறார். பேட்டைகாரனாக நடித்திருக்கும் ஈழத்துக் கவிஞயர் செயபாலன் ஒரு ரேவெலேஷன். அந்த பெரிய மீசைக்குள்ளிருந்து வரும் உறுமலும், குரோதம் கொண்ட பார்வையுமாக அற்புதமாக நடித்திருக்கும் அவருடன் சேர்ந்து , டப்பிங்கில் ராதாரவியின் குரல் மாடுலேஷங்களும் சேர்ந்து நடிக்கிறது.

தனது முதல் படமான பொல்லாதவனில் கவனத்தை ஈர்த்த வெற்றிமாறன், ஆடுகளத்துக்காக, சேவல் சண்டையின் அடிப்படையிலிருந்து அனைத்தையும் கற்று தேர்ந்து வெளிப்படுத்தியதில் அவரது கடின உழைப்பு தெரிகிறது. வித்தியாசமான களமும்,கதையும், விறுவிறு திரைக்கதையுமாக  நம்மை ஆரம்பம் முதலே கட்டிபோட்டு உட்கார வைத்து விடுகிறார்.

அந்த விறு விறு திரைக்கதைக்கு வேகமூட்டுகிறது சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து புறப்படும் வேல்ராஜின் ஒளிப்பதிவும், சிலிர்ப்பூட்டும் ஜி வியின்  பின்னணி இசையும். இவரது இசையின் 'யாத்தே யாத்தே' மற்றும் 'அய்யயோ நெஞ்சி அலையுதடி',  இரண்டும் தாளமிட வைக்கின்றன..

தனுஷ் தனது அந்த ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்துக் கொண்டு அத்துணை பேரிடமும் மல்லுக்கு நின்று சண்டை இடுவது, மற்றும் கதைக்கு அழுத்தம் கூட்டாத டாப்சீயின் காதல் காட்சிகளும் படத்தின் சீரான திரைக்கதைக்கு உறுத்தலாக இருந்தாலும், ஆடுகளம், தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்புகளில் ஒன்று.

ஆடுகளம்...அதகளம்.
--

10 comments:

Chitra said...

Super review!

Philosophy Prabhakaran said...

நல்லா எழுதியிருக்கீங்க... naan இன்னும் படம் பார்க்கலை....

சும்மா.. டைம் பாஸ் said...

I also thought this could be a copy of Amores Perros with initial reviews before seeing this movie but its totally different from that. yes as you said love scenes did not blend with movie, it gives the feeling of our regular Tamil masala movies formula of forcefully inserting the comedy or duet songs in between the story. other than that all the characters and scenes are perfect fit to the story.

ARV Loshan said...

அருமை. நான் ஆடுகளம் பற்றி எழுதியதிலும் உங்கள் கருத்துக்களை ஒத்திருக்கிறேன் :)
LOSHAN
www.arvloshan.com

NILAMUKILAN said...

நன்றி சித்ரா!

NILAMUKILAN said...

நன்றி பிரபாகரன். கண்டிப்பா பாருங்க.

NILAMUKILAN said...

நன்றி டைம் பாஸ். சினிமாத்தனங்கள் குறைத்து எடுக்கப்பட்ட படமாதலால் தான் மனதில் நிற்கிறது.

NILAMUKILAN said...

நன்றி. ஆம் உண்மை தான் லோஷன்.

புன்னகை said...

ஆழமான கண்ணோட்டம்…வாழ்த்துக்கள் நிலா முகிலன்!

சேக்காளி said...

இத்தனை திறமையான இயக்குநர் தனது முதல் படத்திற்கு ஏன் பொல்லாதவன் என்று ஏற்கனவே வெளியான ரஜினி படத்தின் பெயரை வைத்தார்?.ரஜினி மேல் உள்ள அபிமானத்தினால் இருக்குமோ?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...