Thursday, August 7, 2008

உருவம் தொலைத்த நிழல்கள்..


என் மகளின்
புத்தகத்தினுள் கிடைத்த
ஒற்றை சிறகு...


சாயங்கால மேகங்களுக்கு..
நடுவே தெரியும்
பிறை நிலவு...


என் வீட்டுக்கூரையின்
காலியான
புறா கூடு...


விடுமுறை நாட்களின் பிற்பகலில்..
காற்றில் கசியும்...
'அன்னக்கிளியே உன்னை தேடுது...'


தண்ணீர் தொட்டியில்
என் மகன் விடும்
காகித கப்பல்கள்..


அலுவலகத்துக்கு செல்லும் வழியில்
நான் கடந்து போகும்...
பிள்ளையார் கோயில்...


கடற்கரையில்
காலை நனைத்து காத்திருக்கையில்..
அலைகளில் வந்து விழுந்த ஒற்றை செருப்பு...


எதாவது ஒன்று..
இன்னமும் உன்னை..
ஞாபகபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது...


9 comments:

லேகா said...

அருமையான கவிதை!!

NILAMUKILAN said...

நன்றி லேகா..

Swineflu tracker said...

Mikka arumai ...Mikka Arumai...
Keep itup

Unknown said...

Don't mistake me as prude... தமிழில் கவிதை அல்லது “ஆத்மார்த்தமான” படைப்பு என்றால் எல்லாமே நஷ்டப்படுவிட்ட கடந்த காலத்தை மட்டுமே பேசுகின்றன. எப்படி தமிழ் சினிமா என்றால் காதல் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறதோ, அதுபோல கவிதை எழுதுபவர்கள் எல்லோருமே சோகங்களை மட்டுமே glorify / romantisice செய்கிறார்கள். முன்பெல்லாம் காதல் தோல்வி குறித்து கவிதை எழுதுவது ஃபேஷனாக இருந்தது, இப்போது software engineers ஒரு யதார்த்த வாழ்க்கையை குறித்து ஏங்கி எழுதுவது வாடிக்கையாகிவிட்டது. சிலகாலம் முன்பு “எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்” தொகுப்பு படிக்க ஆரம்பித்தபோது 100% சோகம், நஷ்டப்படுபோன இளமைக்காலம் என நெஞ்சை கசக்குவதே குறி என்று தொகுக்கப்பட்டு இருப்பதாக தோன்றியது. நிலா ரசிகனாக எனக்கு அறிமுகமான நிலா முகிலனுக்கு என் வேண்டுகோள்... ஃபேஷனபிலாக சோக கவிதை எழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்கள் என்று நினைத்துக்கொண்டு பினாற்றும் கூட்டத்தில் வேடிக்கைக்கு கூட கலந்துவிடாதீர்கள். இது தேவதாஸ்-த்தனம்... யாருக்கும் பிரயோஜனமில்லை. நாம் மாறுபட்டு நிற்போமே! நம் இந்தியர்களின் apathy பற்றி கோபப்படுங்கள், நம்மை சுற்றியுள்ள சிறு சிறு அழகான அம்சங்களை ரசிப்பீர்களே அதை குறித்து எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்.. யார் படித்தால் என்ன படிக்கா விட்டால் என்ன என்று உங்களுக்கு உண்மையான்வற்றை மட்டும் எழுதுங்கள்...

NILAMUKILAN said...

மகேஷ்வரன், தங்களது கருத்துக்கு நன்றி. மகிழ்வுகளும் கோவங்களும் மட்டும் அன்றி.. சோகங்களும் நமது வாழ்வின் ஒரு அங்கம் தான். நீங்கள் சமீப காலத்தில் நிறைய காதல் கவிதைகள் படித்து பொறுமை இழந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். கவிதைகள் என்றால், காதலும் நிச்சயம் அதில் ஒரு பங்கு வகிக்கும். எனது இணையத்தில் உள்ள புகைப்பட கவிதைகளை படித்து தங்களது கருத்துக்களை பின்னூட்டமிட வேண்டுகிறேன். எனது இணையத்தில் நான் பதிந்திருக்கும் முதல் காதல் கவிதையும் இதுவே என தெளிவு படுத்த விரும்புகிறேன். காதல் கவிதைகள் மட்டும் எழுதாத ஒரு கிறுக்கனாக, ஆனால் காதலையும் கவிதையில் சொல்லும் ஒரு கவிஞனாக இருக்க ஆசைப்படுகிறேன். உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கிறேன். நன்றி.

ஹேமா said...

முகிலன்,நீறாகிக் கிடக்கும் நினைவுச் சின்னங்கள்.அழகு.

NILAMUKILAN said...

நன்றி ஹேமா...

தமிழ் said...

அருமை

NILAMUKILAN said...

நன்றி திகழ்மிளிர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...