Wednesday, August 20, 2008

உலக சினிமா:- த வில்லோ ட்ரீ (The Willow Tree) - பாதை மாறிய பயணம்

உலகின் தலை சிறந்த இயக்குனர்களின் வரிசையில் கண்டிப்பாக இரானிய இயக்குனர் மஜித் மஜிதிக்கும் நிச்சயம் ஒரு அரியணை இருக்கும். அவருடைய அனைத்து திரைப்படங்களிலும் அடிப்படை அன்பு மட்டுமே. மற்றும் இவரது ஒவ்வொரு திரைபடங்களில் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல விரிகிறது.

நான் சமீபமாக பார்த்த இவரது திரைப்படம் 'த வில்லோ ட்ரீ'. (The willow Tree). நான் பார்த்த இவரது திரைப்படங்களில் இருந்து இந்த படம் மாறுபட்டது. ஒரு கண் பார்வையற்ற பேராசிரியரின் கதை இது. 'இந்த கோணத்தில் கூட சிந்திக்க முடியுமா ' என்ற ஆச்சர்யத்தை இப்படம் கண்டதும் எனக்கு உண்டானது.


கண் பார்வையற்ற பள்ளியில் பேராசிரியராக இருக்கிறார் நடுத்தர வயது யூசுப். படத்தின் ஆரம்பத்தில் அவர் தனது அன்பான மனைவி, அழகான பெண் குழந்தையுடன் தனது இல்லத்தில் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார். அவர் குழந்தையுடன் விளையாட அவரது மனைவி அவரது வேலையில் உதவி செய்ய எந்த குறையும் இல்லை யூசுப் க்கு. ஒரே ஒரு குறை, அவருக்கு கண் பார்வை இல்லை.


எல்லோரையும் போல அவருக்கும் தனக்கு கண் பார்வை வேண்டும்.. இந்த உலகத்தை பார்க்க வேண்டும்.. தனக்கு பிரியமான மனிதர்களை நோக்க வேண்டும் என்ற உந்துதல் அவருள் எழுகிறது.


தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் கண் பார்வைக்கான அறுவை சிகிச்சைக்காக தனது குடும்பம் அனுப்பி வைக்க...பிரான்ஸ் தேசம் புறப்படுகிறார் யூசுப். மருத்துவமனையில் தனது குழந்தை பேசி பதிவு செய்திருந்த ஒலி நாடாவை அடிக்கடி கேட்டு ஆறுதல் அடைந்து கொள்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிகிறது. மறுநாள் கட்டுகளை பிரிக்க போகிறார்கள். எனினும் அப்போதே அவருக்கு உலகை பார்க்க ஆவல் எழுகிறது. தனது கட்டுகளை தளர்த்தி நோக்குகிறார். அப்போது அவர் காணும் காட்சி.. ஒரு எறும்பு படாத பாடுபட்டு தனது இரையை சேமிக்க எடுத்து செல்கிறது. ஒரு குழந்தைக்குரிய குதூகலத்துடன் மருத்துவ மனை வளாகத்தில் குதித்து குதித்து நடை போடுகிறார்.( யுசுப்பாக நடித்திருக்கும் பர்விஸ் பரஸ்டுய் இந்த இடத்தில் பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்).


வீடு திரும்பும் பொது பாரிசின் அழகை ரசித்தபடி வரும் அவர் இரான் வந்து சேர்ந்ததும் தன்னை வரவேற்க காத்திருக்கும் மக்களில் தனது மனைவி மகளை தேடுகிறார். அனைவரும் சிரித்தபடி மகிழ்வோடு வரவேற்று கொண்டிருக்க..ஒரே ஒரு வயதான பெண் அவரைப் பார்த்து கண்ணீர் சிந்துகையில்..'அம்மா' என அவர் உணர்ந்து அழைக்கும் பொது நமக்கும் மேனி சிலிர்க்கிறது.


அதன் பின் தான் ஆரம்பிக்கிறது பிரச்சனை... புகை வண்டியில் செல்லும்போது ஒருவன் பிக் பாக்கெட் அடிப்பதை காண்கிறார். அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. மனைவியின் சொந்தக்கார பெண்மணியின் அழகில் மயங்கிப்போய் அவளுக்கு பூ வாங்கி செல்கையில் மனைவி அதை கண்டு அவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தாய் வீடு சென்று விடுகிறாள். தனது இளமையில் தான் காணமல் போன அழகை அப்பொழுது தான் அவருக்கு தரிசிக்க வாய்ப்பு கிடைக்கிறது.. அதுவும் மறுக்கப்பட அவர் ஏமாற்றம் அடைகிறார் .. அவரது தாயும் நோய் வாய்ப்பட..தனது தாயின், மனைவியின், மகளின் அன்பு மறுதலிக்கப்படும்போது தனக்கு எதற்காக இந்த கண் பார்வை கிடைத்தது என கதறுகிறார்...


மிக எளிதான திரைக்கதை.. மிக அழகான காட்சிகள்... மிக இயல்பான மனிதர்கள்..அற்புதமான ஒளிப்பதிவு, மிக சிறந்த நடிப்பு என எல்லா வகையிலும் இத்திரைப்படம் ஒரு அற்புதம்.


இரானின் மத்திய தர குடும்பத்தை சேர்ந்த மஜித் மஜிதி..முதில் ஒரு நடிகராக தனது திரைப்பட வாழ்க்கையை துவக்கி.. கலர் ஆப் பாரடைஸ் சில்ட்ரென் பரம் ஹெவன் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கி உள்ள இவர் இதுவரை உலக அளவில் 32 விருதுகளை பெற்றுள்ளார்.
ஒரு பெண்ணின் கால் விரல்கள் காட்டினால் கூட குற்றம் என கூறும் இரானிலிருந்து உலக அளவில் விருதுகள் வாங்க கூடிய படங்கள் வெளி வரும் வேளையில்..கதா நாயகியின் இடுப்பையும் மார்பையும் நம்பித்தான் சூப்பர் ஸ்டாரின் படம் உட்பட நமது தமிழ் படங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. (சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் இதற்க்கு விதி விலக்கு).

11 comments:

Sridhar V said...

முகிலன்,

அறிமுகத்திற்கு நன்றி. சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக பார்க்கிறேன்.

இவருடைய பிரபலமான சில்ட்ரன் ஆஃப் த ஹெவன் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றியும் எழுதுங்களேன்.

NILAMUKILAN said...

ஸ்ரீதர்,
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. இதே இணையத்தில் நான் பதிவு செய்திருக்கும் 'தி வே ஹோம்' படத்தையும் பாருங்கள். மஜீத் மஜிதி இயக்கியுள்ள சில்ட்றேன் ஆப் ஹெவென் படம் எனது குறுந்தகட்டு கருவூலத்தில் உள்ளது. நிச்சயம் அதை பற்றி எழுதுவேன். அவருடைய 'கலர் அப் பரடைஸ்' மற்றும் 'பரன்' திரைப்படங்களும் பார்த்து அவரது விசிறியாகவே மாறிவிட்டேன்.

Anonymous said...

ungal cinema rasanaiyei paaraatigiren. indha review parthadhum enodaya to-see list il indha padathai serthuvitten ..

ஹேமா said...

//ஒரு பெண்ணின் கால் விரல்கள் காட்டினால் கூட குற்றம் என கூறும் இரானிலிருந்து உலக அளவில் விருதுகள் வாங்க கூடிய படங்கள் வெளி வரும் வேளையில்..கதா நாயகியின் இடுப்பையும் மார்பையும் நம்பித்தான் சூப்பர் ஸ்டாரின் படம் உட்பட நமது தமிழ் படங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.//

நல்ல நெத்தியடி முகிலன்.

பாத்தீர்களா கண் இல்லாத நேரம் ஒருவனுக்குக் கிடைத்த சந்தோஷம் கண் கிடைத்தபின் இல்லாமல் போகிறது.உண்மைதான் முகிலன்,
கண் பார்வை இல்லாதவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தாலும் அவர்கள்தான் நின்மதியாக இருக்கிறார்கள்.உலக அசிங்கங்களை அவலங்களைப் பார்க்காமல்.திரும்பவும் நல்ல ஒரு படம் பார்த்த திருப்தி.நன்றி முகிலன்.

NILAMUKILAN said...

நன்றி ஹேமா. பார்வையற்றவர்களை பற்றிய உங்கள் பார்வை முற்றிலும் உண்மை. இந்த திரைப்படத்தை பார்த்தே நான் அதை அறிந்துகொண்டேன்.

NILAMUKILAN said...

பெயரில்லாமல் பின்னூட்டமிட்டவருக்கு நன்றி.

geethappriyan said...

நண்பரே நீண்ட நாட்களாக நான் எப்படி உங்கள் பதிவை தவற விட்டேன்,?மிக அருமையான நடை,நிறைய கற்றுக்கொள்ளலாம் போல உள்ளது...மனமார்ந்த பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுதணும்,நான் தினமும் வருவேன்.
கார்த்திகேயன்
அமீரகம்

NILAMUKILAN said...

நன்றி கார்த்திகேயன். அடிக்கடி வாருங்கள். உங்கள் விமரிசனங்களை தாருங்கள்.

asker said...

arumaiyana vimarsanam sirantha ulaga cinema thiraipadangaluku thodarbu kolga 9940492960

மதுரை சரவணன் said...

நல்ல அறிமுகம்.. உங்கள் எழுத்து நடை எளிமையாகவும் , விறு விறுப்பாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்

NILAMUKILAN said...

நன்றி சரவணன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...